புதன், 22 ஜூன், 2022

 இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி இராமகிருஷ்ண விஜயம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றச் சிறுகதை 

                                          


                                   
திருவோலை

                                                                     -நெய்வேலி பாரதிக்குமார்

     திருமலையின் காற்று தெய்வீக மணம் கமழ்ந்து மூச்சை நிறைத்தது. மூலிகைகளின் அத்துணை சாரங்களையும் கவர்ந்து வந்த தென்றலை எம்பார்  கண்மூடி உள்ளிழுத்தபடியே ஆச்சார்யாரைக் காணச் சென்று கொண்டிருந்தார். திருமலைக்கு இராமனுஜருடன் அவரது சீடர்கள் சகிதமாக வந்து சில தினங்கள்தான்  ஆயின. அதற்குள்ளாக இராமானுஜரின் கீர்த்தி பரவி அவரிடம் ஆசி பெற அன்றாடம் கூட்டம் திரண்டபடி இருந்தது. பாதங்களில் பட்ட சருகுகளை விலக்கியபடி நடந்து கொண்டிருந்தார் எம்பார். பட்சிகளின் பரிபாஷை ரம்மியமாக செவிகளில் தேன் போல பாய்ந்து கொண்டிருந்தது.

     வேங்கடத்தானே கதி என அவன் ஆலயம் அருகே  வாழ்ந்து கொண்டிருக்கும் வைணவப் பெருந்தகை பெரிய திருமலை, இராமாயண இதிகாசத்தில் கரை கண்டவர். ஆழ்ந்த ஞானமும் அளவற்ற பக்தியும் கொண்ட பெரிய திருமலையின் திருவாயால்  இராமாயண அப்பியாசம் பெற்று வருவதென்பதுதான் திட்டம். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை ஆச்சாரியார் இன்னமும் மலை மீது செல்ல ஒரு ஆயத்தமும் இல்லாமல் தாமதித்து அடிவாரத்திலேயே தங்கியிருக்கிறார். தமையனார்தான் என்றாலும் கூட அவர் ஆச்சாரியார் அல்லவோ... அவராகத்  திருவுளம் திறக்காமல் எப்படிக் கேட்பது என்று தயங்கியவாறே இருக்கிறார் எம்பார்.

     இராமானுஜர் கைகளை பின்புறம் கட்டியபடி முன்னும் பின்னுமாக நடை பயின்று கொண்டிருந்தார், அவரது முகக் குறிப்புகள் அவரது சிந்தனை பலநோக்கில் இருப்பதைக் காட்டின. எம்பார் அவரருகே சென்று அவரையே உற்றுப் பார்த்தார். எம்பாரின் இதழ்க்கடையில் புன்னகை ஒன்று ஓடியது.

     பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்

மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை

கொடி கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்

அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே”

என்று உரத்தக் குரலில் பாடினார் எம்பார்.

இராமனுஜரின் கண்கள் மிளிர்ந்தன. அப்படியே அவரை இருகரங்களால் அணைத்துக் கொண்டார் இராமானுஜர். “கோவிந்தரே.. என்ன மந்திரம் வைத்திருக்கிறீர் அப்படியே என் மனதில் ஓடிய அந்த தெய்வ மொழிகளைப்பாடி எம் அகம் குளிர வைத்தீரே..”

இளையாழ்வாரே.. எத்தனை வருடம் உம்மோடு இந்தத் திருவாய்மொழியின் திரு வாசகங்களை பாடியிருப்பேன்..? எந்தத் தருணத்தில் எந்தப் பாசுரத்தை உங்கள் மனம் விரும்பும் என்பதை அறியாதவனா.. இதற்கு எதற்கு மந்திரம்..? அதுவும் எளியவன் எனக்கு தங்களைத் தவிர வேறு என்ன தெரியும்?”

இராமானுஜர் பெருமிதத்துடன் அவரது கரங்களை அழுத்திப்பிடித்துக் கொண்டார்.

“என் உயிரையே எடுக்கத்துணிந்த மாபதகர்களிடமிருந்து எம்மைக் காப்பாற்றிய பெரும் பணி செய்து எம் மனம் கனிந்த பெருந்தகை அல்லவா நீங்கள்” 

“அது இருக்கட்டும்.. என்னவோ ஒரு விஷயம் தொண்டையில் சிக்கிய நெல்லி விதையைப் போல உங்களை நெருடிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.”

“ஆமாம் கோவிந்தரே... இரண்டு பிழைகள் நிகழ்ந்துவிட்டன.. அவை என் நெஞ்சில் எதையும் சிந்திக்க விடாமல் என்னை அறுத்துக்கொண்டிருக்கின்றன.”

“எம்பெருமானே திருவுரு கொண்டு இங்கு எழுந்தருளி இருப்பது போலத் தோன்றும் உங்களிடம் பிழையா! நம்ப மனம் மறுக்கின்றதே ஆச்சாரியாரே”

மெல்லிய புன்னகையுடன் அவரருகே வந்த இராமானுஜர் ”அடியேன் சிறியன்...  அடியேன் சிறியன்.. என்று ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. இதில் என்னை  எம்பெருமானுடனா..? கோவிந்தரே.. இன்று உஞ்சவிருத்திக்காக கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தேன்.. என் உதடுகள் ஆண்டாளின் திருப்பாவையை உச்சரித்துக் கொண்டிருந்தன..மனமோ வேங்கடனிடத்தில்.. அப்படியே அத்துழாயின் இல்லத்திற்கு சென்றுவிட்டேன் போலும்...

     “உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்

பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்

பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.”

  

 

என்று பாடியபடியே சென்றேன் போலும்.. எப்பொழுது அத்துழாய் கதவைத் திறந்தாளோ அதுவும் தெரியாது..அப்படியே வாயிலின் படியிலேயே விழுந்ததும் தெரியாது.. மூர்ச்சையானதும் தெரியாது..”

“நப்பின்னையே வந்து தாழ் திறந்துவிட்டாள் போலும் என்று உங்கள் திருவுளம் கருதியிருக்கும்..”

“அட... பின்னிருந்து வந்த பெரிய நம்பியும் என் முகத்தில் நீர் தெளித்து என்னை எழுப்பிய பின்னர் இதைத்தான் சொன்னார்.. அத்துழை எனக்கு என்னவோ என்று பதறியவள், அவர் சொன்ன பிறகுதான் ஆசுவாசமானாள்”

“எப்பொழுதும் எம்பிரானை எண்ணத்தில் இருத்தி இருக்கும் உங்களைப் பற்றி தெரியாதா என்ன.. இதில் உங்கள் பிழை என்ன இருக்கிறது.. மயக்கும் மொழியில் திருப்பாவை பாடிய ஆண்டாளின் பிழையன்றோ?”

“அது சரி ... தமிழின் பிழையென்றும் சொல்லாமல் போனீரே...”

“அதை விடுங்கள்..அடுத்து..?”

“அந்த நிகழ்ச்சியை நினைத்தால் என் நெஞ்சம் நடுங்குகிறது.. கால்கள் துவளுகின்றன.. அடியேன் எவ்வளவு சிறியவன்,,!”

எம்பார் எதுவும் புரியாமல் அவரையே பார்த்தார்.

“பெரிய திருமலை நம்மைத் தேடி இங்கேயே வந்துவிட்டார்..அதுவும் எப்படித் தெரியுமா? ஒரு கையில் இறைவனின் பிரசாதம் மறுகையில் துளசி தீர்த்தம்.. கூடவே பெருமானின் கழுத்தில் சூட்டிய மாலை... எந்த அடியவரிடம் நான் இராமாயணம் கற்க வந்தேனோ அவரே என்னைத் தேடி மலையிலிருந்து நெடுதூரம் கால்கடுக்க நடந்து வந்து சந்திக்க வந்துவிட்டார்.. எங்கேயாவது ஒரு ஆச்சாரியார் தனது மாணவனைக் காண இத்தனை சிரமங்களோடு வந்ததைக் கேள்விப் பட்டிருப்பீரா?”

“என்னே பாக்கியம்... என்னே பெருவுளம்... சற்று ஊர்ப்பக்கம் சென்று வர எண்ணி, தங்களை விட்டுச் சென்ற  நாழிகையில் இத்தனை நடந்து விட்டனவா!”

“அதையும் விட அவர் சொன்ன வாக்கியங்கள்தான் என் அகவிழியில் நீர் நிறைக்க வைத்துவிட்டன.. பெரிய திருமலையாரே... நீங்களே இத்தனையையும் சுமந்து வரவேண்டுமா? இந்த சிறியவனைக் காணத் தங்களினும் சிறியவனை அனுப்பி இருக்கலாமே... என்று கேட்டேன்... அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?”

“என்ன சொன்னார்?”

”இந்தத் திருமலை எங்கும் இருப்பவரை யோசித்துப் பார்த்தேன் என்னிலும் சிறியவர் எவரும் இலர்... ஆகையினால் நானே வந்தேன்” என்றார்...

“ஆஹா... ஆஹா... எத்தனை பெரிய உள்ளம்! இந்த மலை அளவு உயர்ந்திருக்கிறதே... வந்த வேகத்திலேயே தனது பாடத்தைத் துவங்கிவிட்டாரே...!

“ஏன் இன்னும் திருமலைக்கு வர யோசிக்கின்றீர்” என்று கேட்டார்... பெருமாள் வாசம் கொண்ட இந்த மலை மீது எளியோனின் பாதங்கள் படக் கூசுகின்றன... அதுதான் காரணம் என்றேன்...

அவரோ இறைவன் இல்லாத இடம் ஒன்றும் இருக்கின்றதா நம் பாதங்கள் பட எனக்கேட்டு என்னை சிந்திக்க வைத்துவிட்டார்”

“அப்படியானால், திருமலைக்கு கிளம்புவதற்கான  ஆயத்தங்களைத் துவங்க வேண்டியதுதான். அதற்குமுன் .உங்களைக் காண இந்த ஊரின் பெருமதிப்பிற்குரியவர்கள் வெளியே வந்தவண்ணம் இருக்கிறார்கள் அவர்களைச் சந்தித்துவிட்டு வரலாமா?”

“என் மனம் இந்த நிகழ்வுகளால் சற்றே சஞ்சலத்துடன் இருக்கிறது... இந்தச் சூழலில் அவர்களை சந்திக்கும் போது இயல்பாக உரையாட முடியுமா? அவர்களின் ஐயங்களை என்னால் நிவர்த்திக்க முடியுமா?”

“எப்பொழுது உங்கள் மனம் இறுகினாலும் சந்தை சொல்லுதல்தனே நம் வழக்கம்.. பாசுரங்களை நம் சீடர்களுடன் பாடும்பொழுது உங்கள் மனம் பாகாய் உருகிவிடுமே..என்ன, பெரும்பாலும் இரவு உணவு முடிந்து அந்த நிலவின் அழகில் மயங்கியபடியே பாடுவோம் ..இப்பொழுது பகலவனின் ஆட்சி காலம் என்றாலும் அத்தனை வெப்பம் ஒன்றும் இல்லை மலையன்னை குளிர்ச்சியாகவே இருக்கிறாள்.”

இராமானுஜர் அருவி கண்ட பட்சியைப் போல ஆனந்தம் கொண்டார்..

“உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்” என்று முதல் அடியை இராமானுஜர் பாட அவர் திருவுளம் அறிந்து சீடர்களின் ஒரு பகுதியினர் இரண்டாம் அடியான

“மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்” என்று பாட,

இராமானுஜர் முகம் மெல்ல கதிரவனைக் கண்ட அல்லியைப் போல மலர்ந்தது...

அடுத்த பகுதியினர்,

“அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்” என்று பாட இராமானுஜரின் கண்களில் இருந்து காவிரி கரை புரண்டு கட்டுடைத்து வெள்ளமெனப் பெருகியது...

“துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே” என அடுத்த அடியை எல்லோரும் சேர்ந்து பாட அவரது உள்ளம் உருகி முகமெங்கும் தீட்சண்யம் ஒரு ஜோதியைப் போல பிரகாசித்தது...

தாயாரின் ஆன்மா திருமாலின் மலரடி சேர்ந்த போதும், இல்லாள் தஞ்சம்மாவை விட்டுப் பிரிந்து துறவு நிலையை கைகொண்டபோதும் கூட அவரது கண்களில் நீர்த்துளிப் பெருகியது இல்லை... பாசுரங்களின் மூன்றாவது வரியை அடைந்தாலே அவரது ஜீவன் பெருமானின் திருக்கரங்களைப்  பற்றியது போலப் பரவாசமாகிவிடும்... ஒவ்வொரு சந்தை சொல்லுதல் நிகழ்வும்  சொல்லும் செய்தி அது.

பாசுரம் முடிந்து எல்லோரும் மெய் மறந்து அமர்ந்திருக்கையில் “மோரு.. மோரு... நீர்மோரு. இந்தத் .திருமலையிலேயே எங்கும் கிடைக்காத தேவாமிர்தம் எங்க நீர்மோரு“ என்ற குரல் அவர்களை இவ்வுலகுக்கு கொணர்ந்தது.

“சாமி, வெய்யிலுக்கு இதமான நீர்மோரு சாப்புடுங்க சாமி... சாப்பிட்டப்புறம் நிதானமா பேசிட்டு இருங்க சாமி” என்றாள் அந்த மூதாட்டி.

”தேவாமிர்தம் கொண்டு வந்த தேவதை எந்த ஊரு?” என்று விளையாட்டாகக் கேட்டார் இராமானுஜம்.

“ஆமா, வயசு எழுபது ஆச்சு... பெருமாளு இன்னிக்கு கூப்பிடுவாரோ... நாளைக்கு கூப்பிடுவாரோ தெரியலை... நீங்க வேற சாமி...” என்றபடியே தனது பானையை கிழே இறக்கி வைத்த மூதாட்டி கையோடு ஒரு குடுவையில் மோரை முகர்ந்து ஒரு சீடனின் கையில் தந்தும்விட்டாள்... தாகத்தின் கூறு அதனை வாங்கிக் கொண்டான் அந்த சீடன்... என்ன நினைத்தானோ “எனக்கு வேணாம். எதுக்கு என்கிட்டே கொடுத்தே?” என்று பதறிப்போய் திருப்பி அவள் கையில் குடுவையைக் கொடுத்தான்.

இராமானுஜர் அவனை நோக்கி “ம்... கூடாது. வணிகத்தில் கையில் பெற்ற பிறகு திருப்பித் தருதல் தர்மமாகாது... எல்லோருக்கும் ஒரு குவளை கொடு தாயே”

அனைவரும் ஆசையோடு வாங்கிப் பருகினர்.. தேவாமிர்தம்தான். பருகிய வேகத்தில் எம்பார்,

மாயக் கூத்தா வாமனா வினையோன் கண்ணா கண்கை கால்

தூய செய்ய மலர்களா?  சோதிச் செவ்வாய் முகிழ்தா?

சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா? தாமரை நீள்

வாசத்தடம்போல் வருவானே ஒருநாள் காண வாராயே!

என்று மகிழ்ந்து பாட, கூடவே சீடர்களும் பொருத்தமாக தாகம் தீர்த்த தடாகம் போல மாயக்கண்ணன் வருவானோ என்று உடன் கூத்தாடிப் பாடினர்.

இராமானுஜர் சிறிது நேரம் தன்னையே மறந்தார். “தாகம் தீர்த்த தாயே ..உமக்குத் தரவேண்டிய தொகையைச் சொல்லம்மா.”

“உங்களை எல்லாம் பார்த்தப்புறம்... நீங்க பாடுனதை எல்லாம் கேட்டப்புறம் நீங்க எல்லாம் பெருமாளோட அடியார்னு தெரியுது... சாமி எனக்கு பணம் எதுவும் வேணாம். உங்க ஆசிர்வாதம் போதும்.”

“அம்மா, இந்தத் திருமலையில எல்லோரும் பெரியவர்களாகவே காட்சியளிக்கிறீர்களே... ஒருத்தரை மிஞ்ச இன்னொருத்தர் எவ்வளவு போட்டி... எம்பெருமானே.. அம்மா உமக்கு எம் ஆசிகள்.. வேறு பொருளாகத் தர ஒன்றுமில்லையே அம்மா”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சாமி... எனக்கு நீங்க ஒரே ஒரு உதவி பண்ணனும்”

“சொல்லுங்க அம்மா. இந்த ஏழையாலே என்ன பண்ணமுடியுமோ அதைச் செய்யறோம்.”

“சாமி, எனக்கு மோட்சம் கிட்டனும். அதையே பிச்சையா தாங்க சாமி.”

அவ்வளவுதான் சீடர்கள் விழுந்து விழுந்து வயிற்றைப்பிடித்துக் கொண்டு சிரித்தார்கள். இராமானுஜர் அவர்களைக் கண்களால் அடக்கினார்.

“அம்மா நீங்க நிச்சயம் மோட்சம் செல்வீர்கள். ஆனால் அதை அருளுகின்ற தகுதி எனக்கு இல்லையே அம்மா.”

“பார்க்க அந்த பெருமாள் மாதிரியே இருக்கீங்க. சரஸ்வதியும்  முகத்துல குடியிருக்கா. உங்களால முடியாம வேற யாரால முடியும்? நான் ஏழை. அதுவுமில்லாம கீழ்சாதி. அதான் யோசனை பண்ணுறீங்க.”

அதுவரை குறுக்கிடாமல் இருந்த எம்பார், “இதோ பாரும்மா உனக்கு உரிய தொகையை வாங்கிட்டு இடத்தைக் காலி பண்ணும்மா. எதோ ஆச்சார்யார் போனா போறதுன்னு இவ்வளவு நாழி உன் கிட்ட  பேசிண்டு இருந்தா, என்னன்னவோ பேசிண்டே போறியே.”

இராமானுஜர் அவரைக் கையமர்த்தினார். “அம்மா எல்லாம் வல்ல எம்பெருமான் திருமலை ஆளும் தெய்வம் இங்கதான் மலை மேல வாசம் பண்றார். அவர்கிட்ட மனம் உருகி வேண்டிக்கோ. அவர் நிச்சயம் உனக்கு மோட்சம் தருவார்.”

“அவர்கிட்டப் போக பட்டர் வழிவிடனுமே சாமி! நீங்க பெரிய மனசு  பண்ணி ஒரு சிபாரிசு ஓலையைக் கொடுங்க நான் பட்டர்கிட்ட கொடுத்து என் பிரார்த்தனையை பெருமாள் கிட்ட சொல்றேன்.”

சீடர்கள் மீண்டும் சிரமப்பட்டு தங்கள் சிரிப்பை அடக்கினர்.

இராமானுஜரோ எதுவும் யோசிக்காமல் தனது உடைமைகளிடமிருந்து ஓலைச்சுவடியை எடுத்தார். தனது கைப்பட விறுவிறுவென எழுதி அவளது கைகளிலே அந்த ஓலையைத் தந்தார்..

“அம்மா... பெருமாளுக்கே மடல் எழுத வைத்த உன்னை இந்த மானிட சமூகம் ஒரு போதும் மறக்காது.. இது நீ தந்த மோருக்காக இல்லை. பெருமாள் மீதும் என் மீதும் கொண்ட நம்பிக்கைக்காக... ஆயுஷ்மான் பவ...!” என்று ஆசீர்வதித்து அருளினார்.

மோர்க்கார அம்மா முகமெல்லாம் பூரிப்பாக அதனை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு பகவானை வணங்கி பின் ஆச்சாரியாரின் பாதம் பணிந்து அந்த ஓலையை தன் மார்போடு அணைத்துக்கொண்டு நகர்ந்தாள்.

எம்பார் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு ஒரு கணம் மெய்மறந்து நின்றார். அன்றாடம் அற்புதங்கள் செய்வதும் அதிசயங்கள் நிகழ்த்துவதும் மகான்களின் இயல்புதான். என்றாலும் இராமானுஜரின் அற்புதங்கள் இந்த மானிட சமூகத்தின், எளிய ஜனத்திரளின் உள்ளக்கிடக்கை உணர்ந்து அவர்களை உய்விப்பதில் தன்னிகரற்று விளங்குவதை கணம்தோறும் கண்டுகளித்தவர் எம்பார். திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் உச்சியில் நின்று அஷ்டாக்ஷர மந்திரத்தை ஊர் அறிய உரக்கச் சொன்ன போதும், இளம் சிறார்கள் மணல் கோயில் கட்டி மண்ணையே பிரசாதமாகத் தந்தபோது பக்திப் பரவசத்துடன் வணங்கி அதை திருமண் போல நெற்றியில் பூசிக்கொண்ட போதும் எளியார் உள்ளம் பூரிக்க வைத்த பெருமகனார்தானே அவர்! அதனால்தானே அவர் உடையார் என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறார்! இன்றும் கூட  அந்த மூதாட்டிக்கு  உடையவரானார்.

கண்களை மூடி ஒருகணம் பெருமாளை நெஞ்சில் நிறுத்தி அந்த மூதாட்டியின் மனம் போல் மோட்சம் கிடைக்கட்டும் என்று உள்ளார்ந்து பிரார்த்தித்தார் எம்பார். வானில் புஷ்பக விமானத்தில் தேவர்கள் சூழ அம்மூதாட்டி மேகக்கூட்டத்தின் வழியே செல்வது போல ஒரு காட்சி மின்னியது. சட்டென  இருண்ட வானம் ஒரு மின்னலை திருவோலை போல வானில் வரைந்து சென்றது. மேகக் கூட்டத்திலிருந்து பிரிந்த  ஒரு நீர்த்துளி திறந்திருந்த எம்பாரின் விரல்களில் வந்து விழுந்தது. நொடியில் குளிர்ந்தது அவர் உள்ளம்.   

-நெய்வேலி பாரதிக்குமார். 

 

 

  

 

 

  

 

 

   

      

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...