வெள்ளி, 17 ஜூன், 2022

 

                     வாசிக்கப்படாத கடிதம்

-    நெய்வேலி பாரதிக்குமார்

 


1. வந்தனம் தந்தனம் இங்ஙனம்

     யாராலும் வாசிக்கப்படாத அந்தக் கடிதம் மேஜை மீது ஒரு கண்ணாடிக் கூட்டின் கிழே தன் குமுறல்களை, ஆசைகளை, நினைவுகளை பகிர்ந்தபடி, காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது...  

மிர்தம் அக்கா தன் பழைய வீட்டுக் கதவைத் திறக்க பூட்டோடு போராடிக் கொண்டிருந்தபொழுது மிகச்சரியாக பார்வதி கை நிறைய கடிதங்களோடு அவளை நோக்கி வந்தாள். ஏற்கனவே உளுத்துப் போயிருந்த கதவு, வேகமாக பூட்டை இழுக்கையில் கையோடு வந்துவிடுமோ என்று அச்சமாக இருந்தது.

“அம்மாம் பெரிய கோர்ட் கதவையே தட்டித் தொறந்துட்டே.. இத்துப்போன இந்தக் கதவு ஒனக்கு எம்மாத்திரம் “

“இது நான் பணம் போட்டு செஞ்ச கதவில்லே கொஞ்சம் பதனமாத்தான் இழுக்கணும்.. அதுவுமில்லாம என் வீட்டு பூட்டு என்னை மாறியே பிடிவாதமா இருக்கு” என்றாள் சிரித்தபடியே அமிர்தம் அக்கா.

கூடப் பொறந்தவங்க யாருமில்லேன்னாலும் அமிர்தம் ஊருக்கே அக்காதான். வயசு கூடியவர்களும்  கூட அக்கான்னுதான் கூப்பிடுவார்கள்...

“எம்மா நாளாச்சு ஒன்னைப் பாத்து.. கேசை செயிக்காம வாசப்படி மிதிக்கிறதில்லேன்னு மெலட்டூர்லேயே தங்கிட்டே.. எப்படிக்கா இருக்கே?”

ஒரு வழியாக பூட்டு திறக்க.. உள்ளிருந்த வவ்வால்கள் சட சடவென பறந்து வந்து அவர்கள் முகத்தில் அடிப்பது போல போக்கு காட்டிவிட்டு கடந்து சென்றன. ஒரு நிமிடம் திடுக்கிட்ட பார்வதி “அய்யோ சாமி.. செத்த நேரத்துல நெஞ்சு நின்னு போச்சு“என்றபடி அமிர்தத்தைப் பார்த்தவள், அவள் எந்த சலனமும் இல்லாமல் வீட்டை நிதானமாக ஒரு சுற்று பார்ப்பதைக் கவனித்து அதிசயித்துப் போனாள்.

“ஆனாலும் மதுரை வீரன் மாறி ஒனக்கு நெஞ்சுரம் சாஸ்தி” பார்வதிக்கு இங்கிதமும் சமயோசிதமும் அதிகம். இதே கிணறு வெட்டுகிற வீரய்யனாக இருந்தால் பாறைக் கணக்கா என்று உதாரணம் சொல்லுவாள். கூத்து கட்டுகிற பெண் அமிர்தம் என்பதால் மதுரை வீரன் என்று சொல்லிவிட்டாள்..

அமிர்தம் உதட்டோரம் ஒரு புன்னகையை சிதறவிட்டுவிட்டு ”ஆமா கையிலே என்ன லெட்டர்? கத்தையா வச்சிருக்கே”

“அம்புட்டும் ஒனக்கு வந்ததுதான். நீதான் இந்த ஊர் பக்கமே வரலை.. வாரத்துக்கு ரெண்டு கடுதாசியாச்சும் வந்துடும் ஒன் ஃபோனு என்னாச்சுக்கா?”

“நம்பரை மாத்திட்டேன்.”

“கூட கூத்தாடறவங்க கிட்ட கூட சொல்லலை போல.. எல்லாம் லெட்டர் போட்டுகிட்டே இருக்காங்க” அவளிடம் தபால்களைத் தந்தாள்.

அமிர்தம் ஒரு கணம் அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

“அய்யே.. எதையும் பிரிச்சு படிக்கலை யக்கா.. பின்னாடி அட்ரஸ் எழுதி இருக்குதுக,... அதுல பாத்தேன்”

“வீடு டஞ்சனா இருக்கு.. என் கூட கொஞ்சம்  இருக்கியா பாரு?.. ஒண்டியா அவ்வளவையும் சுத்தம் பண்ண முடியாது”

“என்னக்கா .. இப்படி கேட்டுட்டே? அவங்கவங்க மொகத்தைப்  பாத்தே ஒதவி செய்யுற ஆளு நீ .. ஒனக்கு ஒண்ணுன்னா வர மாட்டோம்?” சேலையைத் தூக்கி கட்டிக்கொண்டு அங்கிருந்த விளக்குமாற்றை எடுத்துப் பெருக்கி அள்ளி கொட்டத் துவங்கினாள்.

கடிதங்களை பத்திரமாக ஓரிடத்தில் வைத்துவிட்டு அமிர்தமும் வீட்டை சுத்தம் செய்ய முனைந்தாள். மெலட்டூரில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து தாராளமாக செலவு செய்து பழக்கமானவள் அமிர்தம். நல்லுசாமியை திருமணம் செய்து இங்கு கூடப்பாக்கம் வந்த பிறகும் அவள் கை நிற்கவில்லை. யாருக்கு என்ன தேவை என்றாலும் தன்னிடம் உள்ளதில்  எவ்வளவுத் தொகை தேவைப்பட்டாலும் தயங்காமல் கொடுத்து உதவுவாள். இந்த வீடு கூட அவள் அப்பா அவளுக்கு தந்த பணத்தில் கட்டியதுதான். நல்லுசாமிக்கு நிரந்தரமான உத்தியோகம் இல்லை ஆனால் தரகு வியாபாரத்தில் கெட்டிக்காரன். வீடு போக்கியத்துக்கு பிடித்து கொடுப்பது, விற்றுத் தருவது மனைகளை சதவிகிதக் கமிஷன் கணக்கில் தள்ளிவிடுவது என்று வாய்ஜாலக்காரன். மாசத்துல பத்துநாள் வேலை செய்தாலும் ஐம்பது அறுபதாயிரம் சம்பாதித்து விடுவான். பக்கத்தில் இருக்கற வில்லியனூர் ‘பார்.இல் மீதி இருபது நாளில் குடித்தே கரைப்பான்.

அமிர்தம் அவனோடு மன்றாடுவதே இல்லை. ‘நிதானத்துல இருக்கியா சரி போட்டதை தின்னுட்டு போ... இல்லை குடிச்சிட்டு மெதப்பா வர்றியா சரி கவுந்தடிச்சு தூங்கு’ என்று விட்டுவிடுவாள். அப்பா அவள் பெயருக்கு தஞ்சாவூரில் எழுதி வைத்த இரண்டு வீட்டு வாடகை மாசமானால் டாணென்று வந்துவிடும். ஊரில் விளைகின்ற அரிசி பருப்பு புளி கடலை எல்லாம் குறைவில்லாமல் வந்துவிடும். நல்லுசாமியிடம் எதற்கும் அவள் கையேந்தி நிற்பதே இல்லை.

அமிர்தம் செய்த பெரும் புண்ணியம் மெலட்டூரில் கூத்து கட்டும் குடும்பங்கள் நிறைய இருக்கும். அவர்கள் கூடவே பழகியதில் இவளுக்கும் கூத்தின் மீது பெரும் ஆர்வம் இயல்பாகவே வந்துவிட்டது சிறு வயதில் கூத்தில் சிறு வேஷங்களில் ஆட ஆரம்பித்தவளுக்கு கூடப்பாக்கத்திலும் கூத்துக் குடும்பங்கள் இருந்தது எல்லை இல்லாத சந்தோஷத்தை தந்தது.

இருவத்தி இரண்டு வருஷங்களுக்கு முன் இங்கு வந்த போது இராசாங்கம் வாத்தியின் செந்தமிழ் கூத்துக் குழுவும் ராமசாமி வாத்தியின் கலைமகள் கூத்துக் குழுவும் சுற்று வட்டாரம் எங்கும் பிரசித்தம். மாசி துவங்கி ஆடி வரை இரண்டு குரூப் ஆட்களுக்கும் நிற்க நேரம் இருக்காது. அய்யனார் கோவில் துவங்கி அம்மன் கோயில் வரை திருவிழாவுக்கும் பஞ்சம் இருக்காது கூத்துக்கும் குறைவிருக்காது. அமிர்தம் முதன்முதலாக ராசாங்கத்தை பார்த்து தானும் கூத்தில் சேர்வதாக கேட்டபொழுது இளக்காரமாக சிரித்தார்.

“தெருக்கூத்துல பொம்பளைங்களை எல்லாம் சேர்த்துக்கறதில்லே ..எந்த ஊர்ல பொம்பளை ஆடி இருக்கா?”

“மெலட்டூர்ல”

“மெலட்டூரா.. யாரு குரூப்பு?”

“கந்தசாமி குரூப்... வள்ளித் திருமணம் கந்தசாமி”

“ஓ.. அவரு குரூப்பா.. சேட்டைக்காரனாச்சே அவன் எல்லாம் பண்ணுவான். எட்டுக்கட்டை கொரலு. தஞ்சாவூர்ல பாடுனா தின்னவேலியில கேக்கும். ஏன்யா பொன்னுசாமி, அவன் குரூப்புல பொம்பளை ஆளு கூத்து கட்டி இருக்கு?”

“ஒரு தரம் ஒரு அலியைவே ஆட வச்சிருக்காரு அவரு.. இதென்ன பிரமாதம்.. அவரு செய்வாரு அண்ணே” என்றான் பொன்னுசாமி. அவன்தான் ராசாங்கம் குழுவில் தகவல் களஞ்சியம் என்று பிற்பாடு தெரிந்தது.  “அப்ப சரி.. கந்தசாமி குரூப் ஆளுன்னா கேள்விக்கே இடமில்லே.. ஆனா எங்க கூத்து வேற மாதிரி இருக்கும் ரெண்டு நாளு வா... வந்து ஒத்திகை நடக்கறப்ப பாரு.. புடிச்சிருந்தா அப்புறம் பேசிக்கலாம்” என்று சொல்ல அப்படியாக குழுவில் இணைந்தாள் அமிர்தம்.

“யக்கா .. ஒரு வழியா பங்குடு பண்ணியாச்சு.. அடுப்பை பத்த வைக்காதே ஒனக்கும் சேர்த்துதான் அரிசி போட்டுருக்கேன் ஆக்குனதும் எடுத்தாறேன் நீ செத்த அக்கடான்னு படு .. இப்ப வந்துடுறேன் “ என்று கிளம்பினாள் பார்வதி.

“ஒரு நிமிஷம் இரு பூஜை அறையிலே வெள்ளி விளக்கே இல்லைன்னு சொன்னில்லே.. இந்தா காமாட்சி விளக்கு.. வச்சிக்க  நானே சமைச்சிக்கறேன்  பாரு.. ஒனக்கு ஏன் செரமம். நான் பார்த்துக்கறேன். “

“எனக்கு வைக்கிற அரிசியில ஒரு பிடி சேர்த்து வைக்கறேன் .. இதுலே என்ன செரமம்?” சொல்லியபடியே விளக்கை வாங்கியவள் “காசு ரொம்ப ஆகி இருக்கும் போல.. என்றாள்

“அப்பா வீட்டுலே யூஸ் ஆகாம  கிடந்ததுதான் நீ பணம் தரவேணாம் சும்மா  வச்சிக்க “ என்று அமிர்தம் சொன்னதும் சந்தோஷமாக முகமெல்லாம் பல்லாக வெளியேறினாள் பார்வதி. அமிர்தத்துக்கு பிள்ளை இல்லாதது போலவே அவளுக்கும் இல்லை. புருஷன் செத்து பல வருஷங்கள் ஆயிற்று. ஆனால் பொருள்கள், ஆபரணங்கள் மேல் கொள்ளை ஆசை..

கடிதங்களை எடுத்து வரிசைப் படுத்தினாள். பெரும்பாலும்  கூத்துக்கரர்கள் போட்ட கடிதங்கள்தான். நல்லுசாமி அடித்து உதைத்து ‘வீட்டை விட்டு வெளியே போ’ என்று விரட்டியபின் மெலட்டூர் சென்றவள் கோர்ட்டில் விவாகரத்தையும் இந்த வீட்டையும் வாங்கியபிறகுதான் எல்லோர் முகத்திலும் விழிப்பது என்கிற வைராக்கியத்தில் இருந்துவிட்டாள். உண்மையில் ஃபோனை நல்லுசாமி குடி போதையில் உடைத்துவிட்டான். எல்லோருடைய எண்களும் அந்த ஃபோனோடு போய்விட்டது. சண்டை முற்றி அடி உதை என்று கை மீறி தெருவில் அசிங்கப்பட்டது அமிர்தத்துக்கு அவமானமாகிவிட்டது. யாரையும் திரும்பத் தொடர்பு கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை ஆகவே தொலைந்து போன போனில் இருந்த எண்களை அவள் மறுபடி தேடவே இல்லை.

இனி சொந்தக்கால் , சொந்த வீடு என்ற நிலை வந்தால்தான் மறுபடி கூடப்பாக்கம் என்ற முடிவோடுதான் மெலட்டூர் சென்றாள். இப்பொழுது கூட அப்பா ‘இனிமே அங்க என்ன இருக்கு? இங்கேயே இருந்துடு’ என்று ஆனமட்டும் சொல்லிப் பார்த்தார். ஆனால் அமிர்தம் கேட்கவில்லை. ‘இங்கு வந்து வாழ்ந்து காண்பிக்க வேண்டும். எந்தத் தெருவில் அடி தின்று கீழே விழுந்து புரண்டேனோ அந்தத் தெருவில்தான் என் பிணம் வாண வேடிக்கைகளோடு போகவேண்டும்’ என்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டுத்தான் கிளம்பி வந்தாள்.

பொன்னுசாமியின் கடிதத்தைத்தான் முதலில் பிரிக்க வேண்டும் என்று தோன்றியது.  பொன்னுசாமிதான் பிள்ளையார்  முகம் போட்டுக்கொண்டு கணபதி பாட்டு பாடி கூத்தைத் துவங்குபவன். குழுவின் கோமாளியும் அவன்தான். அவனுக்கென்று அப்பொழுதெல்லாம் ஊருக்கு ஊர் அறிவிக்கப்படாத  ரசிகர் மன்றங்களே இருக்கும்  

கணபதி வந்தனம்.. சுந்தர கணபதி வந்தனம்..
வந்தனம் தந்தனம் இங்ஙனம் சுந்தர கணபதி வந்தனம்.

கணபதி வந்தனம் செல்வ கணபதி வந்தனம் \

வந்தனம் தந்தனம் சபைக்கு செந்தமிழ் குழு வந்தனம் தந்தனம்

 

என்று தொப்பையைத் தடவியபடி தலையை ஆட்டி ஆட்டி அவன் சபையில் நுழைந்தால் கூத்து துவங்கிவிட்ட சந்தோஷத்தில் கைத்தட்டல் விண்ணைப் பிளக்கும்.

அன்புமிக்க அக்கா

நாங்கள் இங்கு சென்னையில் உள்ள பாடிக்கு வந்துவிட்டோம். வரதராசுதான் எங்களை இங்க கூட்டி வந்து லேத் பட்டறையில் வேலைக்கு சேர்த்துவிட்டான். எல்லா ஃபேக்டரிக்கும் இரும்புச் சாமான்கள் செய்து நாங்கள்தான் அனுப்புகிறோம்... பாடிப் பாடி பொழைப்பை ஓட்டுனதால பாடியிலேயே எங்களுக்கு வேலை கிடைச்சிடுச்சு. எப்பூடி?. சரி அதை விடுக்கா... எங்களை எல்லாம் பாக்காம.., பேசாம.. எப்படிக்கா உன்னால இருக்க முடியுது? ஆனா இப்ப மட்டும் என்னைப் பார்த்தே அசந்துடுவே.. என் தொப்பை எல்லாம் வடிஞ்சு சப்பை ஆயிட்டேன் இனிமே பிள்ளையார் வேஷம் எனக்கு செட் ஆவாது. வேணும்னா நாரதர் வேஷம் ஒகே ஆகும்.

ஒரு வேளையும் ரெண்டு வேளையும் தின்னுட்டு கெடந்தா அப்புறம் தொப்பை எங்க இருக்கும்.? என்கூடத்தான் ஆறுமுகம், கல்லாப்பெட்டி, துரைராசு, மூஞ்சூறு அப்புறம் ஆர்மோனியம் அந்தோணி எல்லாம் இருக்கானுங்க.. ஆறுமுகத்துக்கு என்ன வேலை தெரியுமில்லே இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி வளைக்கறது.. சம்பூர்ண இராமாயணத்துல வில்லை ஒடைப்பானே அதே ஆறுமுகம்தான்.

பார்த்தின்னா ஒரே தமாசா இருக்கும் கையில கிளவுஸை மாட்டிகிட்டு அரை சுத்து சுத்துனா இரும்புக் கம்பி ரெண்டு இன்ச் வளையும் ஒரு நாளைக்கு அம்பது அறுவது சுத்தணும். “விடாதே ராமா.. விடாதே உப்பரிகையில் இருந்து சீதா தேவியார் பார்த்துக் கொண்டிருக்கிறார். நன்றாக வளை நாற்பத்தி அஞ்சு டிகிரியில் வளை’ அப்படின்னு பின்னாடி நின்னு கத்துவேன் அவன் கண்ணு வழியா அனல் பறக்கும். விடாம நானும் “டேய் ஆர்மோனியம் ஒரு அழுத்து அழுத்துடா” அப்படின்னு சொன்ன உடனே அந்தோணி

“தசரத ராஜகுமாரன் இதோ வந்தாரே

தனுசுவை வளைக்க வந்தாரே

     ஜனகனின் மகளும் இமைக்காம நின்றாளே

           எங்கள் ராஜகுமாரன் மயங்கி நின்றானே

அப்படின்னு அஞ்சு கட்டையில பாடுவான். ஆறுமுகம் அடிக்க தொரத்துவான். இங்கேயும் ஒரே கூத்துதான் அக்கா... என்ன கைத்தட்ட கூட்டம் கிடையாது.. அலங்காரம் பண்ணத் தேவை கிடையாது. கூத்துக்காரனுங்களுக்கு தொண்டையில இருக்குதுக்கா கலை.. மேடை, மேக்கப்பு, ஜனம், லாந்தரு இதெல்லாம் இருந்தாத்தான் கூத்து வருமா? மரத்தடியோ, மெக்கானிக் ஷாப்போ கண்ணை மூடிகிட்டு, கால் மேல கால் போட்டுக்கிட்டு எடுத்து விட்டா எதுக்க ஒருத்தனும் இல்லைன்னாலும் பாட முடியும். இல்லியாக்கா?

ராவணன் வேஷம் கட்டுற துரைராசு.. ஞாபகம் இருக்காக்கா? அன்னிக்கு நம்ம அபிஷேகப்பாக்கம் அம்மன் கோயில் அரசமரத்தடியில கூத்து.... இராவணன் நிராயுதபாணியா போர்க்களத்துல நின்னப்ப இராமபிரான் ‘இன்று போய் நாளை வாராய்‘ அப்படின்னு சொன்னதால இடிஞ்சு போன ராவணன் சோகமா பாட்டெடுத்து விடனும்

‘யாரவன் என்னைப் பார்த்து நாளை வரச்சொன்னவன்?’ அப்படின்னு ஆக்ரோஷமா பாடனும் அந்த நேரம் பார்த்தா அரச மரக்கிளை ஒண்ணு முறிஞ்சு துரைராசு தலை மேல விழனும்?

விழுந்த வலி தங்காம “அய்யோ’ ன்னு கத்துன துரைராசு சட்டுன்னு சமாளிச்சு

“அய்யோ அய்யோ இது அடுக்குமா? பத்து தலை ராவணனை ஒத்த தலை ராமன் போய்வரச் சொல்வதோ? ஒத்தை தலை மேலே இடியே விழுந்தாலும் இலங்கை வேந்தன் கலங்கி விடுவானோ”ன்னு அப்படின்னு இட்டுக் கட்டி பாடுனானே பாக்கலாம்..

(இந்த இடத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் அமிர்தம். மறக்க முடியுமா? அந்த சம்பவத்தை...?கூத்து முடிஞ்சு எலுமிச்சங்காய் அளவு வீங்கிப் போன அந்த இடத்தை பார்த்து மரத்தமிழன்னு பட்டம் தந்த பொன்னுசாமியை எப்பொழுது நினைத்தாலும் அடக்கமாட்டாமல் சிரிப்பு வரும்)

அதைப் பார்த்த கூட்டம் மெய் சிலிர்த்துப் போச்சே.. கலைஞன் அக்கா அவன் கலைஞன்.. இப்ப வாளியில நெருப்பு துண்டத்தை முக்கி முக்கி அணைச்சுக்கிட்டு இருக்கான் அவனுக்குள்ள இருக்கற கலை அணைஞ்சு போகுமா?

ஏன்கா உன்னோட ஃபோனு சுவிட்ச் ஆப்னு வருது எங்களுக்கு ஒரு கஷ்டம்னா உன் வீட்டு கதவைத்தானே தட்டுவோம்? இந்தக் கடிதம் உன் கையில எப்ப கிடைக்குமோ தெரியாது ஆனா கிடைக்கற அன்னிக்கு ஒரு எட்டு பார்த்திபன் அண்ணனை பார்த்துட்டு வந்துடுக்கா.. உன்னை நினைச்சு நினைச்சு அவன் உருகி உருகி மெழுகுத் திரியாட்டம் மெலிஞ்சு கருகிட்டான் (இப்ப இங்க நானு சிரிச்சேன்கா)  அவன் இப்ப எங்க இருக்கான்னும் தெரியலை.. எப்படியும் அமிர்தம் அக்காவை பாக்கறப்போ கட்டாயம் உன்னை பாக்க சொல்றேன்னு சொல்லிட்டேன் ஒரு எட்டு பார்த்துடு..

                                      இப்படிக்கு

                                      பொன்னுசாமி

கடிதத்தை படிக்கத் துவங்கும் போது சிரிக்கச் சிரிக்க தொடர்ந்த அமிர்தம் கடிதத்தை முடிக்கும் போது கனத்த மனத்துடன் முடித்தாள்.

பார்த்திபன்தான் கூத்து ஆடுகிறவர்களுக்கு பேசும் வசனத்தையும் பாட்டையும் சொல்லிக் கொடுப்பவன். ராசாங்கத்தின் கைப்பிரதியை வைத்துதான் சொல்லித் தரவேண்டும் என்பது குழுவின் விதி என்றாலும் காலத்துக்குத் தகுந்தாற் போல வசனங்களை நகைச்சுவையாகவும், பாடல்களை அப்போதைக்கு பிரபலமான திரைப்பட பாடல்கள் சாயல்களிலும்  இடையிடையே செருகுவது அவன் வேலைதான். அமிர்தத்தின் கட்டுக்குலையாத மேனியும் குழைவான இடுப்பும், அகன்ற குளத்தில் அலையும் மீன் போல கண்களும் பார்த்திபனுக்கு அவள் மேல் ஒரு மையலை தந்தது. இத்தனைக்கும் அவளைவிட வயதில் சிறியவன்

எதற்கும் பிடி கொடுக்காத அமிர்தத்தின் பின்னாலேயே சுற்றுவதில் பேரானந்தம் பார்த்திபனுக்கு. சட்டென்று கடிதங்களை மறுபடி எடுத்து தேடிய பொழுது பார்த்திபனின் கடிதம் கிடைத்தது.

 

2. கை நழுவிய காதல்

அன்பிற்கினிய அமிர்தம்

காலத்தின் கைகளில் ஒரு அரக்கனின் கூரிய பற்கள் போல் நீண்டு கொண்டிருக்கும்  நொடிகள் ஒவ்வொன்றையும் சிறு குழந்தையின் விரல்களால் நகர்த்துவது போல நகர்த்திக் கொண்டிருக்கும் பார்த்திபன் எழுதிக் கொண்டது. அனேகமாக கூரிய விரல்கள் என்று எழுதியதும் கடிதத்தின் எல்லா மூலையையும் பல முறை தேடிக்கொண்டிருப்பாய் என் ரத்தக்கறை அதில் தெரிகிறதா என்று..

சந்தன முல்லையை சரம் சரமாக கூந்தலில் அணியும் பழக்கம் உனக்கு. அது என்னவோ சந்தனமுல்லைதான் உலகத்தின் மிகச்சிறந்த மலர் என்று நான் வாதிடாத மனிதர்களே இல்லை. சில சமயம் நீ சந்தன முல்லையை சூடாத பொழுதும் அதன் வாசம் உன் மீது வீசிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறை நீ என்னைக் கடந்து செலலும்போதும் சந்தனமுல்லைச் செடி ஒன்று நகர்ந்து செல்வது போலவே தோன்றும்..

நான் உன் மீது கொண்ட காதலை ஒரு விடலைப் பையனின் பித்து நிலை என்று எண்ணிக்கொண்டிருக்கிறாய்... நீ இந்த கூத்துக் குழுவில் இணைந்து பத்து வருடங்கள் இருக்கலாம்.  நீ இங்கு வந்த முதல் நாள் துவங்கி காற்றில் கரைந்த சந்தன முல்லையின் வாசம் போல் கண் காணாத இடத்துக்கு மறைந்து இருக்கும் இந்தத் தருணம் வரை என்னுடைய காதல் வாடவே இல்லை. பொன்னுசாமியிடம் ‘பார்த்திபனுக்கு ஒரு செய்தி இருக்கிறது’ என்று நீ சொல்லிவிட்டுப் போனதாக கல்லாப்பெட்டி என்னிடம் சொன்னபொழுது நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. பிரியமான பெண்ணிடம் வரும் கடிதத்தில் ஒரே ஒரு புள்ளி இருந்தால் கூட அதன் பின்னே மறைந்திருக்கும் காதல் மகத்தான பல அர்த்தங்களைக் கொண்டது ஆனால் நீ மெலட்டூர் பக்கம் நான் வரவே கூடாது என்று அன்போடு கட்டளை இட்டதாக தெரிந்த பொழுது முறிந்து விழுந்தேன்.

பார்வையற்றவனின் கைகளில் கிடைத்த அழகிய ஓவியம் நீ.. உன் உன்னதம் புரியாமல் ஒவ்வொரு கோடாக அவன் கிழித்து எறிந்த அவலம் நீ வாழ்ந்த தெருவில் நடந்தேறியதாக நான் அறிந்த பொழுது நீ என்னைவிட்டு வெகு தூரம் சென்றுவிட்டாய். ஒரு முறை கூட என்னைத் தவறாக பார்த்திடாத உன்னை என்னோடு இணைத்து உன் கணவன் தகாத வார்த்தைகளால் குத்திக் குதறி தெருவெங்கும் இழுத்துச் சென்ற போது உன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.? ஏதோ ஒரு விதத்தில் நான் அதற்கு காரணமாகிவிட்டேன் என்று நினைக்கையில் குற்ற உணர்ச்சியால் குமைந்துபோகிறேன். யாரை மிக அதிகம் நேசிக்கிறோமோ அவர்களுக்கு நம்மால்தான் தீங்கு வரும் என்பதும் யாரால் அதிகம் நேசிக்கப் படுகிறோமோ அவரால்தான் அதிகம் காயப்படுவோம் என்பதும் உண்மைதானோ?

ஒரு குற்றவாளி தண்டிக்கவும் படாமல் மன்னிக்கவும் படாமல் இருப்பது எத்தனைத் துயர் தெரியுமா? எப்பொழுது கூடப்பாக்கம் வருவாய் என்று தெரியாது. எப்பொழுது இந்தக்கடிதம் உன் கைக்கு கிடைக்கும் என்றும் தெரியாது. ஒரு வேளை இந்தக் கடிதம் உன் கைக்கு கிடைக்கும் நேரத்தில் நான் இங்கு இருந்தால் என்னை மன்னித்துவிடாதே.. மிகக் கடுமையாக என்னைத் தண்டித்துவிடு.

நம் குழுவில் சிலர் சென்னைக்கும் சிலர் வெளிநாட்டுக்கும் பிழைப்புக்காக கிடைத்த வேலையைத் தேடி சென்றுவிட்டார்கள். எனக்கு இங்கிருக்க பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் நாம் பேசிய இடங்கள் , குழுவின் மற்றவர்களோடு நான் உலகை மறந்து உற்சாகமாக இருந்த நினைவுகள் என்னை கசக்கிப் பிழிகின்றன.. நான் எங்கு செல்ல போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒரு வேளை நீ இங்கு வந்துவிட்டால் அது எனக்குத் தெரிய வந்தால் நிச்சயம் திரும்புவேன்.

அதுவரை உன் நினைவுகளை குழந்தையைப் போல மனதில் சுமந்து அதனோடு கொஞ்சிக் குலாவி முத்தமிட்டுக் கொண்டே கால் போன போக்கில் செல்கின்றேன்..

                           பிரியமுள்ள பார்த்திபன்.

கடிதத்தை படித்து முடித்ததும் தன்னையும் அறியாமல் தன கண்களில் கண்ணீர் வழிவதை துடைக்க மறந்து அப்படியே கட்டிலில் சரிந்தாள் அமிர்தம்.. கண்களாலும் சொற்களாலும் உடல் மொழியாலும் அவளிடம் தங்கள் காதலை அல்லது காமத்தை வெளிப்படுத்தியவர்களை எண்ணிப் பார்த்தால் விரல்களுக்குள் அடங்காது. சிறு வயதில் சாரங்கபாணி வாத்தியார் முதல் மயானக் கொள்ளை விழாவுக்கு சிறப்பு அழைப்பாளாராக வந்திருந்த அமைச்சர் கோதண்டராமன் வரை பல தரப்பட்ட ஆண்கள்.. ஆனால் அவளுக்கு வந்த முதல் காதல் கடிதம் இதுதான் அதுவும் இந்த முப்பத்தி ஏழு வயதில்.. நினைக்கையில் சிரிப்பாக வந்தது கைப் பிடித்தவனுக்கு காதல் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் கண்ணில் பட்ட ஆண்களில் அறுபது சதவிகிதத்தினருக்கு மேல் அவள் மீது வலையை வீசிக் கொண்டுதான் இருந்தனர். இயற்கையின் விசித்திரங்கள் தரும் அனுபவங்கள் நினைத்திட முடியாத புதிர்கள் நிறைந்தவை

ஒவ்வொரு பெண்ணும் தன் உண்மை வரலாற்றை எழுத நேரிட்டால் எத்தனை மனிதர்கள் அரிதாரம் அழிந்து அகோரமாக நிற்பார்கள். எத்தனை அயோக்கியத்தனங்கள்  இந்த பூமியை உலுக்கி இருக்கும்?. பெண்ணுடல் எரியும்பொழுது அழிவது அவள் மட்டுமல்ல இந்தப் புற உலகம் அறிந்திடாத எத்தனையோ அபத்தங்களும், அசிங்கங்களும்தான் 

ஆனாலும் பார்த்திபனின் காதல் பார்வைகளை அவள் ஏற்காமல் இல்லை. கூத்துப் பாடங்களை மனனம் செய்ய அவன் உதவும்பொழுது பிரதியில் இல்லாத வரிகளை ஆசை பொங்க பொங்க அவன் சொல்லும் பொழுது அவள் உள்ளூர காதலுடன் ரசித்துக் கொண்டுதான் இருந்தாள். அவன் இல்லாத போது கண்கள் அவனைத் தேடாமல் இல்லை. ஆனாலும் ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டுதான் இருந்தது.

“அக்கா .. அமிர்தம் அக்கா ..” என்று கதவைத் தட்டும் சப்தம் கேட்டு கதவைத் திறந்தாள் அமிர்தம்.

“வா.. ஜெயா”

“எப்படிக்கா எங்களை எல்லாம் மறந்தே..? நல்லா இருக்கியா? அதே அழகுக்கா நீ.. அப்படியே இம்மி மாறாம தேர் கணக்கா இருக்கே”

சிரித்துக் கொண்டே “சரி சரி உள்ள வா..”

ஜெயலட்சுமி உள்ளே வந்து கட்டிலில் சாவாதானமாக உட்கார்ந்து கொண்டாள்.

“பால் இருக்கா யக்கா .. ஒரு டீ போட்டேன் உன் கையால குடிச்சு நாளாச்சு”

அவள் எப்புமே அப்படித்தான் இங்கிதம் சங்கீதம் எதுவும் கிடையாது மனதுக்குள் தோன்றும் எதையும் அப்படியே வைத்துக் கொள்ள மாட்டாள். முகத்துக்கு நேராக எதையும் கேட்டுவிடுவாள்.

“ஒரு நிமிஷம் இரு போட்டுட்டு வர்றேன்”

“அது வரைக்கும் நான் இங்க குந்தி என்ன பண்ணப் போறேன்? நானும் வர்றேன் அடுக்களைக்கு “ என்று கூடவே வந்தாள்.

ஜெயலட்சுமிதான் அவளுக்கு மேக்கப் போடுவது ,ஒத்திகையின் போது குழுவுக்கு சமைப்பது எல்லாம்.. முதல் முறை சந்திப்பிலேயே பூகம்பம் போன்ற அதிர்ச்சியைத் தந்தவள்.

அன்றைய தினத்தை அமிர்தத்தால் மறக்கவே முடியாது. கூத்தில் சேர்ந்த சில நாட்களில் குறிஞ்சிப்பாடி அம்மன் கோயில் மயானக் கொள்ளை விழாவுக்காக வள்ளித் திருமணம் கூத்து. வழக்கமாக ஆண்கள்தான் பெண் வேடமிடுவார்கள். அவர்களே மேக்கப்பும் செய்து கொள்வார்கள். சேலை கட்டுவதுதான் அவர்களுக்கு சவாலான வேலை என்பதால் சமைக்க வந்த ஜெயாவை சமயத்தில் கட்டிவிடச் சொல்லுவார்களாம்.

முதன் முதல் வேடம் கட்டுவதால் ஒத்தாசைக்கு அமிர்தத்துக்கு அனுப்பி வைத்தார் ராசாங்கம். சேலையை ஒரு உதறி அவள் இடுப்பில் செருகும் பொழுது கூச்சத்தில் நெளிந்தாள் அமிர்தம்.

“அட அவுத்தா விடறேன்.. கட்டித்தானே விடறேன்.. இந்த சிலும்பு சிலும்பரே.. என்றவள் “ஒரு தரம் மூஞ்சூறுவுக்கு பொம்பளை வேஷம்.. சேலை கட்டறப்போ தெரியாம கை பட்டிடுச்சு அவ்வளவுதான் மூஞ்சூறு பெருச்சாளி ஆயிடுச்சு “ என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்ன போது ஒரு கணம் திகைத்துத்தான் அவள் சொன்னதை மெதுவாகத்தான் உள் வாங்கினாள் அமிர்தம். அவள் சுபாவமே அப்படித்தான் என்று தெரிந்த பிறகு எதுவும் பெரிதாக தோன்றுவதில்லை.

ராசாங்கம் அவளை வைத்திருப்பதாக அரசல் புரசலாக கேள்விப்பட்டதை அவளிடம் எச்சரிக்கையாக சொல்லலாம் என அமிர்தம் முயன்றபோது ‘ஆமா அதுக்கு என்ன ? கெழவன் பாவம் ஆசைப்பட்டான்.. சரி மண்ணு திங்கற உடம்பை மனுஷன் திங்கட்டுமேன்னு விட்டுட்டேன்.. கயவாலிப் பயலுவளுக்கு இது பெரிய சிதம்பர ரகசியம்... போவியா?” என்று அசால்ட்டாக பதில் சொன்னாள்/

“சூடு சர்க்கரை எல்லாம் போதும்கா மாறவேயில்லை அதே மணம்.. அதே சுவை” என்று விளம்பரம் போல சொல்லிவிட்டு சிரித்தாள். நிமிஷத்துக்கு மூன்று முறை சிரிப்பது அவள் பழக்கம்..

“ராசாங்கம் எப்படி இருக்காரு?”

“அவருதான் கை காலு வெளங்காம போயி மகன்காரன் பட்டுக்கோட்டைக்கு இட்டுகிட்டு போயிட்டான். எப்படியும் ரெண்டு மொத்து மொத்திதான் ஒரு கவளம் சொத்தை போடுவான்”

“அவ்வளவு மோசமானவனா?”

“தெரியலை .. ஆனா அதானே நடக்கும். ஒன்னு கையில காசு இருக்கணும் இல்லாட்டி கைகாலு தெடமா இருக்கணும். ரெண்டும் இல்லைன்னா மொத்துப் பட்டுத்தான் ஆவணும். அதுவும் கெழவன் வயசுல ரொம்ப ஆட்டம் போட்டவன். ஒருத்தியை விட மாட்டான். அது என்னவோ உன்கிட்டதான் வால் ஆட்டலை. நீ கூத்திலே சேரும்போது கெழவனுக்கு அறுவது ஆயிடுச்சு.. பண்டம் தீர்ந்துடுச்சு...”

“நீ ஒருத்தி.. உனக்கு  வேற நெனைப்பே இருக்காது”

“அட உத்தமபுத்திரி அப்படியே பத்திரமா இருந்துக்கடி.. யாரு வேணாம்னா? ஆமா பார்த்திபன் எங்க இருக்கான் ? பார்த்தியா பேசினியா?”

“யார் கண்டா? எங்க இருக்கான் எதுவும் தெரியாது”

“அட பாதகத்தி .. நல்லா இருப்பியா நீ? நீயே கதின்னு கெடந்தான்.. இப்படி யார் கிட்டவும் சொல்லாம ஓடிப் போயிட்டான். அப்படி அந்த கற்பை பத்திரமா வச்சிருந்து என்னத்தைக் கண்டே? நல்லுசாமி கோயில் கட்டி உனக்கு கும்பாபிஷேகமா பண்ணிட்டான்? பசிக்கறவனுக்கு போடாம தொரத்திவிட்டுட்டே”

“இதோ பாரு ஜெயா நீ உன்னை மாதிரி இருப்பேன்னா நான் என்னை மாதிரிதான் இருப்பேன்.. உனக்கு வெளக்கம் எல்லாம் சொல்ல முடியாது”

“அதுவும் சரிதான். மாற வேணாம் அப்படியே இருந்துக்க.. இந்தா ரெண்டாயிரம் நீ இந்த ஊரைவிட்டு போகறச்சே உன்கிட்ட கடனா வாங்கி இருந்தது.. பணம் கசங்கி இருக்கேன்னு பாக்காதே ஒரு கல்யாணத்துக்கு சமைக்கப் போயி சம்பளமா கிடைச்சது. அப்பவே எடுத்து வச்சிட்டேன். நீ இப்பத்தான் வர்றே.. வட்டி எல்லாம் கிடையாது..

“உன்னை யாரு பணம் கேட்டா? அதுக்குத்தான் இவ்வளவு அவசரமா வந்தியா?”

“கஷ்டம்னு கேட்டப்ப குடுத்தே.. நாணயமா திருப்பி தந்துடனும்லே.. இப்பல்லாம் கல்யாணம் விசேஷம்னு சமைக்க போயிடறது.. நாலு காசு கிடைக்குது பிரச்சினை ஒண்ணும் இல்லை.. கடன்காரியா சாவக் கூடாது’

அதான் ஜெயலட்சுமி அவளது கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாமே தனி..

“அப்புறம் ஒரு கவர்ன்மென்ட் கடுதாசி “ ஜாக்கெட்டில் இருந்து எடுத்து தந்தாள் ஜெயா. நாளாய் எட்டாய் மடித்திருந்த அரசு வாசகம் அச்சிடப்பட்டிருந்த அந்தக் கடிதம் ஏற்கனவே பிரிக்கப்பட்டிருந்தது.

“அப்படி பாக்காதே .. காதல் கடுதாசியா இது.. கவர்ன்மென்ட் கடுதாசிதானே... என்னவோ உனக்கு வேலைதான் கிடைச்சிடுச்சுன்னு தபால்காரரு என்கிட்டே பத்திரமா குடுத்தாரு. நானும் உடனே சேரனுமாங்காட்டியும்னு .பிரிச்சிட்டேன். அப்புறம் என் மவன் படிச்சு பார்த்துட்டு சாதா கடுதாசிதான் வர்றப்ப குடுத்துக்கலாம்னு சொல்லிட்டான் என்ன போட்டிருக்கான்?”

அமிர்தம் அதை பிரித்துப் படித்தாள்/

புதுச்சேரி அரசு

தலைமைச் செயலகம்

புதுச்சேரி

உயர்திரு/ திருமதி

     அமிர்தம் நல்லுசாமி

     செந்தமிழ் கிராமிய கலைக்குழு

     எண்: 30, ஆனந்தரங்கம் பிள்ளைத் தெரு,

     புதுச்சேரி

பொருள்: அரசு நல வாரியம் கோரியது தொடர்பாக

     தங்கள் தங்களது செந்தமிழ் கிராமியக் கலைக்குழு சார்பாகவும், புதுச்சேரியில் உள்ள மற்ற கிராமியக் கலைக் குழு மற்றும் கலைஞர்கள் சார்பாகவும்  அனுப்பியிருந்த கடிதம் கிடைத்தது. நீங்கள் கடிதத்தில் கோரியபடி கிராமியக் கலைகள் குறிப்பாக தெருக்கூத்து கலைக்கான நலவாரியம் அமைப்பது தொடர்பாகவும் நலிந்த கலைஞர்களுக்கு  கூடுதல் உதவித் தொகை வழங்குவது தொடர்பாகவும் முன் வைத்த கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப் பட்டு அவை பரிசீலனையில் இருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

                     நன்றி

                                புதுச்சேரி அரசு தலைமைச் செயலகம்

கடிதத்தை வாசித்து முடித்ததும் அதனை பத்திரமாக எடுத்து ஒரு ஃபைலில் வைத்துக் கொண்டாள் அமிர்தம்.

“அமைச்சர் கோதண்டராமன் உன்னை விசாரிச்சாருன்னு அவங்க கட்சிக்காரரு கேட்டார்”

“அவரைப் பாக்கணும் ஆனா நீ நினைக்கற விஷயத்துக்கு இல்லை நம்ம குழுவுக்கு ஏதாவது கலை நிகழ்ச்சி நடத்த உதவி செய்யனும்னு கேக்கலாம்னு நினைக்கிறேன்”

“அப்ப அவருகிட்ட சொல்லி அனுப்பறேன். வரட்டா” ஜெயலட்சுமி விடுவிடுவென கிளம்பினாள். அது ஒரு புயல் வந்த வேகத்தில் கிளம்பி விடும்.

 

 

 

 

 

3. சிறுதொண்டரும் சிறுமைத் தொண்டரும் 

திருச்செங்காட்டாங்குடி சென்று சிறு தொண்ட நாயனார் வரலாற்றை தெருக்கூத்தாக வடிவமைத்தது அவர்கள் குழுவுக்கு புது அனுபவம். அங்குதான் கோதண்டபாணியை முதன் முதலாக அமிர்தம் சந்தித்தாள். கோதண்டபாணியின் சகோதரர் அந்த ஊரில் இருந்தார் என்பதால் கோதண்டபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

சிறுதொண்டரின் தர்மபத்தினி திருவெண்காட்டு நங்கை வேடத்தில் அமிர்தம் நடித்துக் கொண்டிருந்தாள். யவ்வனம் ததும்பும் இருபத்தி மூன்று வயது. ஜெயலட்சுமியின் மேக்கப்பில் இன்னும் பிரகாசமாகத் தெரிந்தாள் அமிர்தம். முதல் பார்வையிலேயே விழுந்துவிட்ட கோதண்டபாணி ஜெயலட்சுமி வழியே அப்பொழுதே தூதுவிட்டார். ஆனால் முகத்தில் அடித்தால் போல திருப்பி அனுப்பியதால் அதன் பிறகு அதிகம் தொல்லைத் தரவில்லை என்றாலும் புதுச்சேரிதானே பார்த்துக் கொள்ளலாம் என அவ்வப்பொழுது வாலை நீட்டுவார். மசியவே இல்லை. அது ஆயிற்று பதினைந்து வருடம் இப்பொழுதும் அவருக்கு மையல் தீரவில்லை. இப்பொழுது அவர் அமைச்சர் இல்லை. கட்சியும் அவரை ஓரங்கட்டி வைத்துவிட்டது.

ஆனாலும் இப்பவும் அவரை அமைச்சர் என்று அழைப்பவர்கள் அதிகம். இப்பவும் அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசி காரியம் சாதிக்கும் சாமர்த்தியம் அவருக்கு உண்டு.

“அக்கா.. அக்கா” வெளியில் சத்தம் கேட்க எழுந்து வந்தாள் அமிர்தம். தபால் பையன் என்னமா வளர்ந்துவிட்டான். காலம்தான் எப்படி விரைந்தோடுகிறது. அரும்பு மீசையோடு ஏகத்துக்கும் வெட்கப்பட்டுக் கொண்டு வருவான். இப்பொழுது மீசை வளர்ந்து தாடியோடு இணைந்து ஆளே மாறிப் போயிருந்தான்.

“அட செல்வா எப்படிடா இருக்கே?”

“நல்லா இருக்கேன்கா ஞாபகம் இருக்காக்கா இது நீங்க வாங்கிக் கொடுத்த சைக்கிள்தான்.”

“இன்னுமா அப்படியே வச்சிருக்கே ? எல்லாம் இப்ப பைக்கிலே வர்றாங்க”

“நமக்கு செட் ஆகாதுக்கா இதான் நமக்கு பைக்கு, காரு, ராக்கெட் எல்லாம்.. சோறு போடற வண்டிக்கா.. ஆமா.. இனிமே இங்கதானே?”

“ஆமாம்டா சாகற வரைக்கும்”

“அட வாயைக்கழுவுங்க எல்லோருக்கும் நல்லது பண்றீங்க உங்களுக்கெல்லாம் சாவே கிடையாது.. இன்னிக்குன்னு பாருங்க உங்களுக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு..” அவளிடம் ஒரு கவரைக் கொடுத்தான்

“சரி.. எப்ப கல்யாணம்?” என்று கேட்டபடி வாங்கிக்கொண்டாள்.

“நீங்க வந்தப்புறம் ஆரம்பிச்சிடலாம்னு இருந்தோம்”

“டேய் .. பாத்தியா”

“சரிக்கா.. சரிக்கா ஏற்கனவே பொண்ணு ரெடியாத்தான் இருக்கு.. மாமா பொண்ணு இப்ப எனக்கு சகடையாம்.. ஆவணியிலதான் பண்ணனுமாம்”

“சீக்கிரம் நல்ல சேதி சொல்லு ஜமாய்ச்சிடலாம் “

“சரிக்கா இன்னொரு நாள் பொறுமையா வந்து பேசறேன் வர்றேன்கா” கிளம்பினான்.

கடிதத்தைப் பிரித்தாள்.

அன்புள்ள அமிர்தம்

     எப்படி இருக்கிறாய்? கோர்ட்டில் உன் பக்கம் தீர்ப்பானதாக அறிந்தேன். உன்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஜெயம் சொன்னாள். நீ எப்படியும் இங்கு வருவாய் என்று தெரியும். நேரில் உன்னை சந்திக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்பொழுது அரசியல் சூழல்கள் சரியில்லாமல் .இருக்கின்றன. ஆகவே நான் அங்கு வருவது சரியாக இருக்காது. கடைசியாக நீ திருசெங்காட்டாங்குடியில் என்னை சந்திக்க விரும்பியபோது உனக்கு மிகவும் தெரிந்த தெருக்கூத்துக் கலைஞர் பரஞ்சோதியின் மகனுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய உதவி கேட்டு வந்தாய். அன்றைக்கு நடந்த சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது. அப்பொழுது என்னால் உனக்கு உதவ முடியாமல் போயிற்று. அன்றிருந்த சூழ்நிலை வேறு.

அதற்காக நீ கோபித்துக் கொண்டு இனி திருசெங்காட்டாங்குடிக்கு தெருக்கூத்து ஆட வரமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனாய். நீ சொன்னால் ராசாங்கம் மறுக்க மாட்டான் என்பதால் அன்றிலிருந்து அங்கே திருவிழாவில் தெருக்கூத்து நடக்கவில்லை. என்னால்தான் அப்படி ஆனது என்று யாருக்கும் தெரியாவிட்டாலும் என் மனசாட்சி உறுத்துகிறது. எனவே அந்த முடிவை மாற்றிக்கொண்டு மறுபடி அங்கு தெருக்கூத்து நிகழ்வுக்கு வரவும். இந்த ஆண்டு கொரானா காரணமாக திருவிழா விமர்சையாக நடை பெறவில்லை. ஆனாலும் எல்லாம் சரியானதும் கூத்து அங்கு நடக்க நானே ஏற்பாடு செய்கிறேன். அவசியம் வரவும். ராசாங்கம் உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டேன். எந்த உதவியையும் செய்யத் தயாராக இருக்கின்றேன். ஜெயலட்சுமியிடம் சொல்லி அனுப்பவும். ஃபோன் வாங்கியபிறகு எனக்கு நம்பர் அனுப்பவும்  படித்து முடித்ததும் இந்தக் கடிதத்தை கிழித்துப் போடவும்.

                மீண்டும் சந்திப்போம்  

கீழே கையெழுத்தோ பேரோ இல்லை ஆனால் அது கோதண்டபாணியின் கடிதம்தான். அரசியல் ராஜதந்திரி அப்படித்தான் இருப்பார். அவரை சந்திப்பது என்று முடிவு செய்தாள்.

திருசெங்காட்டாங்குடி என்றதும் அன்றைக்கு கலைமகள் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்ட பரஞ்சோதியும்  இப்பொழுது மிகச்சரியாக நினைவுக்கு வந்தான். நல்ல சாரீரம். லட்சணமாக இருப்பான். போகிற ஊர்களில் எல்லாம் அவனுக்கு கைத்தட்டலும் வரவேற்பும் அதிகமாக இருப்பதைக் கண்டு பொறாமை பிடித்த சக கலைஞர்கள் ஏதேதோ சொல்லி அவனை கலைமகள் குழுவிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள்.. கலைஞர்கள் வாழ்வில் பொறாமையும் வஞ்சகமும் சகஜம்தானே... அதன் பிறகு செந்தமிழ் கலைக்குழுவில் சேர்ந்துவிட்டான்.

பைரவன் என்னும் அடியார் இருந்தாரே

     ஆத்தி மரத்தடியில் சிவனின் அடியார் இருந்தாரே 

     கருமேகம் போல கருத்த சடா முடியும்

     கதிரொளி போல சிவந்த மேனியும் கொண்டு

     பைரவ அடியார் அமர்ந்து இருந்தாரே

     தாய் பிடிக்க தந்தை அரிந்து சமைத்த கறியை

     புசிக்க கேட்டாரே

 

     ஆ.. இது என்ன அநியாயம்

     அடாது அடாது..

என்று அன்றைக்கு பாடிய பரஞ்சோதியின் குரல் இன்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வறுமையின் கோரப்பிடியில் இருந்தவனின் மகனுக்கு மூளையில் ஏதோ கட்டி என்றும் லட்சக்கணக்கில் செலவு செய்துதான் வைத்தியம் பார்க்க முடியும் என்றும் தெரிந்து கலங்கிப் போனான். முடிந்த போது கையில் இருக்கும் பணத்தை கொடுத்து உதவினாள் அமிர்தம். ஆப்பரேஷனுக்குத் தேவையான மொத்தத்தொகையைத் திரட்ட முடியவில்லை. அரசு சார்பில் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டுத்தான் கோதண்டபாணியை பார்க்கப் போனாள் அமிர்தம். ஜெயலட்சுமி சொன்னது போல கற்பை காப்பாத்தி என்ன பயன் பரஞ்சோதியின் மகனையும் காப்பாற்ற முடியவில்லை. பரஞ்சோதி தற்கொலையையும் தடுக்க முடியவில்லை. கடைசியாக அவன் எழுதிய கடிதம் இன்னமும் அமிர்தத்தின் ட்ரங்க் பெட்டியில் பத்திரமாக இருக்கிறது.  அவசரமாக சென்று பரஞ்சோதியின் கடிதத்தை எடுத்து பிரித்தாள்.  

4. சோதியாகிய பரஞ்சோதி  

த்தனை நாள் எனக்கு வாழ்வு தந்த அற்புதம் அக்கா

வாழ்நாளில் இப்படி ஒரு கடிதம் எழுதும் துரதிர்ஷ்டம் யாருக்கும் வரக்கூடாது. ஆனால் துரதிர்ஷ்டங்களாலேயே வடிவமைக்கப்பட்ட வாழ்வு எனக்கு வரமளிக்கப்பட்டிருக்கிறது. சுந்தரத்தை மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். யார் யாரிடமோ கையேந்தி எனக்காக இரண்டு லட்ச ரூபாயை திரட்டித் தந்தீர்கள். அதுவும் இந்த இடைப்பட்ட கால வைத்தியத்துக்கு செலவாகிவிட்டது. கொடுத்து கொடுத்து பழக்கப்பட்ட உங்கள் கைகள் எனக்காக ஏந்தி நின்றது போதும் என சுந்தரம் கண் மூடிவிட்டான். எனக்கென்று இருந்த ஒரே சொத்து அவன்தான். நான் அவனுக்காக எதையும் சேர்த்து வைக்கவில்லை. கூத்தில் இட்டுக்கட்டி பாடுவதில் கெட்டிக்காரன் என்கிற பெயர் ‘ஒரு வேளை’ சோத்துக்கு கூட உத்திரவாதம் தராது.

’கலையைக் காப்பாத்துற கடவுள் நீங்க உங்களை காப்பாத்த மாட்டோமா’ என்று நீங்கள் சொன்னபோது பெருமிதத்துடனும் கர்வத்தோடும் நிமிர்ந்து நின்ற அந்த கணம்தான் என் வாழ்வில் மகத்தான தருணம்.  யதார்த்தத்தில் ஒரு சாண் வயிற்றைக் கூட காப்பாற்ற முடியாத தரித்திரன் நான். சரியான சத்தான சாப்பாடு இல்லாமல் மனைவி லெட்சுமி சுந்தரத்தை பிரசவிக்கும் போதே இறந்து போனாள். என் கையாலாகாத தனத்தால் இரண்டு உயிர்களை பலி தந்ததுதான் மிச்சம்.

நல்ல வேளையாக என் மகனுக்காக நீங்கள் கோதண்டபாணியின் ஆசைக்கு இரையாகாமல் தைரியமாக அந்த முடிவை எடுத்து எங்களை பெரும் பாவத்துக்கு ஆளாக்காமல் காப்பாற்றி விட்டீர்கள்.

நான் இறந்து போவதால் எந்த நட்டமும் இல்லை. உங்கள் கடனை அடைக்காமல் செல்கிறேனே என்றுதான் கவலை. யாருக்காவது கடன் பட்டுத்தான் ஆகவேண்டும். உங்களுக்கு பட்ட நன்றிக்கடனை அடுத்த ஜென்மத்தில் உங்கள் மகனாகப் பிறந்து தீர்ப்பேன்.

என் வீட்டில் தற்சமயம் இருக்கும் என் பழைய சைக்கிள், பழைய கட்டில், மேஜை, தட்டுமுட்டு சாமான்களை விற்று சொற்ப பணம் வந்தாலும் அதை பெரியநாயகியம்மன் கோயிலில் தரை பெருக்கும் சுலோச்சனாம்மாவுக்கு கொடுத்து விடவும். அந்த அம்மாவும் என் போல அநாதை..

பிறந்தது என் கையில் இல்லை ஏனெனில் நான் பிரம்மன் இல்லை ஆனால்   மரணம் என் கையில்தான்.. எனக்கிருந்த அதிகாரத்தின் வழியே பயனற்ற என் வாழ்வைக் கொன்று பழி தீர்த்தேன்

                                பாசம் மறவாத பரஞ்சோதி..

பல முறை படித்த கடிதம்தான் என்றாலும் எப்பொழுது படித்தாலும் துக்கம் ஒரு பந்தைப்போல அடைக்கிறது. பரபரவென்று பெட்டியில் இருந்த விசிட்டிங் கார்டுகளை எடுத்துப் பார்த்தாள் அமிர்தம். அதிலிருந்த கோதண்டபாணியின் கார்டை எடுத்து தன் கைப்பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள். ஃபோன் டைரியை எடுத்து அதில் ஆட்டோ குமாரின் நம்பரைத் தேடினாள். தன் ஃபோனில் இருந்து குமாருக்கு ஃபோன் செய்தாள்.

“குமார் நான் அமிர்தம் பேசுறேன் எங்க இருக்கே?”

“யாரு அமிர்தம் அக்காவா என்னக்கா எப்படி இருக்கே? இவ்வளவு நாளு எங்கே போனே?”

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன்.. இப்ப வீட்டுக்கு வர முடியுமா? ஒரு இடத்துக்குப் போகணும்..”

“பத்து நிமிஷத்துல அங்க இருக்கேன்”

ஃபோனை வைத்துவிட்டு தன் கைப்பையில் டாக்டர் சீட்டு இருக்கா என்று பார்த்துக் கொண்டாள். கண்ணாடி மாற்றவேண்டும்..

அடுத்த பத்து நிமிஷத்தில் சேலை மாற்றி லேசாக முகத்தைத் திருத்திக் கொண்டு கண்ணாடியில் பார்த்த பொழுது முகமும் உடலும் பொலிவாகவே இருப்பதாகத் தோன்றியது.

ஆட்டோ குமார் வந்துவிட்ட சப்தம் கேட்டது. வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே கிளம்புமுன் பார்வதியை அழைத்து சாவியை அவளிடம் கொடுத்தபடி “பஜார் வரைக்கும் போயி இந்தக் கண்ணாடியை மாத்திட்டு வந்துடறேன்.. “

“சமையல் ஆயிடுச்சு.. சாப்பிட்டுட்டு போகலாமே?”

“வந்து சாப்பிட்டுக்கறேன்.. பத்திரமா எடுத்து வை.. உடனே முடிக்க வேண்டிய சில வேலைங்க இருக்கு முடிச்சுட்டு வந்துடறேன்”

“சரிக்கா வெளியில சாப்பிட்டுடாதே “

தலையாட்டிவிட்டு ஞாபகமாக மாஸ்க்கை எடுத்து அணிந்து கொண்டாள். ஆட்டோவில் அமர்ந்தாள். ஆட்டோ கிளம்பியது.

“என்ன குமாரு எப்படி இருக்கே?”

“சாவு வராம தடுமாறிகிட்டு இருக்கேன்..”

:”ஏன் என்னாச்சு குமாரு?”

“கொரானா வந்தாலும் வந்தது.. எங்க பொழப்பு போயிடுச்சுக்கா..பாதி வருஷம் லாக் டவுன்.. மீதி நாளு மக்கள் வர்றதே இல்லை.. அதது ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வாங்குதுங்க சாப்பிடுதுங்க.. ஓடிடியில படம் பாக்குதுங்க  தியேட்டரே தேவையில்லைன்னு ஆயிடுச்சு.. எப்படிக்கா நாங்க பொழைக்கறது?”

“லாக் டவுன் நேரத்துல என்ன பண்ணினே? எப்படி சமாளிச்சே?”

“காய்கறி வித்தேன் ஆட்டோவிலதான்.. அதுலேயும் காய் விக்காம காய்ஞ்சி போயிடும்.. ஒழிஞ்ச நேரம் பூண்டு வித்தேன். என்ன பண்ண சொல்றீங்க? வயிறு இருக்கே? லாக்டவுன் முடிஞ்சாலும் எங்களுக்கு விடியலை.. மக்கள் உள்ளேயே முடங்கிக் கிடக்க பழகிடுச்சு இதெல்லாம் சர்வதேச சதியோன்னு தோணுது..நீ என்னக்கா நினைக்கிறே?”

“படிச்சவங்க.. பெரிய பெரிய வேலை பாக்கறவங்கன்னு சொல்லிக்கறவங்களை விட நீ அதிகமா சிந்திக்கறேன்னு தோணுது”

“சவாரி கிடைக்காதப்ப என்ன வேலை...? அண்ணாந்து பார்த்துகிட்டு எதையாவது யோசிக்க வேண்டியதுதான். எங்கக்கா போகணும்?”

“முதல்ல விஜயா ஆப்டிக்கல்ஸ் போ.. கண்ணாடி மாத்தணும்.. அப்புறமா போற இடத்தைச் சொல்றேன்”

வழி எல்லாம் வள வளவென எதையோ பேசிக்கொண்டே வந்தான் குமார். அது அவன் சுபாவம். விஜயா ஆப்டிக்கல்ஸ் வந்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கி தன் கைப்பையில் இருந்து ‘அலங்காரப்பிரியர்கள்’ புத்தகத்தை எடுத்து நீட்டினாள். ஆசையோடு வாங்கிக் கொண்டான்.

“வர்ற வரைக்கும் இதை படிச்சுகிட்டு இரு வேள்பாரி எழுதினாரே.. அவரெழுதின புத்தகம்தான். இப்ப வந்துடறேன்” என்றபடி கடைக்குள் நுழைந்தாள். குமார் ஆட்டோ என்றாலே அவன் வாசிப்பதற்காக ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அவனிடம் தருவது அவள் வழக்கம். அவனும் ஆர்வமாக படிக்கக் கூடியவன்.

கண்ணாடியை மாற்றிய பிறகு ஆட்டோவுக்குள் அமர்ந்து

“மினிஸ்டர் கோதண்டபாணி வீட்டுக்கு வண்டியை விடு” என்றாள்

“அந்த பேமானி இப்ப மினிஸ்டர் இல்லையே”

“அது தெரியும்.. அப்படி சொன்னாத்தான் உனக்கு சட்டுன்னு புரியும்னு சொன்னேன்.”

“அந்த ஆள்கிட்ட ஜாக்கிரதைக்கா”

“என்கிட்ட வாலாட்ட மாட்டான்.. நான் வேற ஒரு காரியத்துக்காக போறேன்”

அதன் பிறகு அதிகம் பேசவில்லை. கோதண்டபாணி வீடு வந்ததும் அவள் இறங்கினாள். வீட்டுக்குள் செல்லத் திரும்பியபோது ”அக்கா புத்தகம்” என்று அழைத்தான் குமார்.

“படிச்சுகிட்டே இரு. பதினஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்..” என்று உள்ளே சென்றாள். கோதண்டபாணி வீட்டு வாசலில் கோதண்டபாணியைப் பார்ப்பதற்கென்றே எப்பொழுதும் நிற்கும் கூட்டம் அப்பொழுதும் நின்று கொண்டிருந்தது. பெரும்பாலோர் முகக் கவசம் அணியவில்லை. மிக இயல்பாக நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர். பலர் கட்சிக்காரர்கள் என்று புரிந்தது.. தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்கிற மிதப்பு அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. 

அமிர்தம் உள்ளே நுழையும் போது ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு அவளையே ஒரு கணம் யாரையும் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தாள்.  அவளைக் கண்டதும் கோதண்டபாணி எழுந்து நின்றது அவளுக்கு சங்கடத்தைத் தந்தது

“என்னது நீங்க போயி எந்திரிச்சு நின்னுகிட்டு..”

“அது மரியாதை இல்லை.. அமிர்தம்.. ஒரு குத்த உணர்ச்சி.. உக்காரு அமிர்தம் நல்லா இருக்கியா?”

“இருக்கேன் நீங்கதான் இளைச்சி போயிட்டீங்க”

“வயசாகுதில்லே.. ஆமா என்ன விஷயமா நேர்லே பேசணும்னு ஃபோன்ல சொன்னே?”

“உங்களுக்கே நல்லாத் தெரியும் கோயில் திறக்கலை.. திருவிழா இல்லை.. கூத்து இல்லை.. வருமானம் இல்லை  ஆனா கூத்து கட்டறவங்களுக்கு வயிறு இருக்கே//”

“இதையும் சேர்த்துக்கோ.. நான் ஆட்சியிலும் இல்லே..”

“ஆனா உங்க கையிலே எப்பவும் அதிகாரம் இருக்குன்னு எனக்குத் தெரியும்.. உங்களால இப்ப ஃபைல்ல கையெழுத்து போட முடியாது சட்டம் போட முடியாது மத்தபடி எல்லாம் முடியும்”

கோதண்டபாணி கொஞ்சம் மிதப்பாக சிரித்தார்.

“சொல்லு நான் என்ன செய்யணும்?”

“கூத்துக் கலைஞர்களை வச்சி அரசோட திட்டங்கள் செய்திகளை விளம்பரப் படுத்தற மாதிரி ஏதாவது செய்ய முடியாதா? கொஞ்ச நாளைக்கு முன்னாடி கடலூர்ல காந்தி பிறந்தநாள் அன்னிக்கு மது அரக்கன்னு கூத்து நாடகம் போட்டோம். நல்ல வரவேற்பு இருந்துச்சு  அது மாதிரி”

“பாண்டிச்சேரியில மது அரக்கன்னு நாடகம் போடணுமா? நல்லா யோசனை சொன்ன பாரு.. எந்த சரக்கு  நிறைய போதை தரும்னு நாடகம் வேணும்னா போடலாம்” இடி இடி என சிரித்தார்,

” இல்லே ..நான் ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன்”

“இப்படி பண்ணலாம்.. கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு அப்புறம் தடுப்பூசி பற்றி விழிப்புணர்வுன்னு யோசியுங்களேன்”

“அதெல்லாம் டாப்பா பண்ணிடுவாங்க நம்ப பசங்க.. நீங்கதான் ஏற்பாடு பண்ணித் தரணும். பரஞ்சோதிக்கு செய்யக் கூடிய உபகாரமா நினைச்சு பண்ணலாம்”

“பரஞ்சோதிக்காகத்தான் ஏதாவது செய்யணும்னு நினைச்சேன்.. சரி நான் டிபார்ட்மெண்ட் ஆளுங்கிட்ட பேசிட்டு சொல்றேன். எப்படியும் ஏதாச்சும் பண்றேன்.. என்ன சாப்புடறே?”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ஆட்டோ வெயிட்டிங்க்ல நிக்குது”

“அதுக்கென்ன அனுப்பிடு கார்ல விடச் சொல்றேன்”

“இல்லை கிளம்பறேன் எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு”

“ஒரு நிமிஷம்” என்று உள்ளே சென்றவர் ஒரு கடிதத்தை கொண்டு வந்து அவளிடம் நீட்டினார்.

திகைப்போடு அதை வாங்கினாள்

“லவ் லெட்டர் இல்லே தைரியமா படி” என்றார் சிரித்துக் கொண்டே

“மதிப்பிற்குரிய அய்யா அவர்கள் சமூகத்திற்கு

குடப்பாக்கத்தில் கூத்தடிகள் அடிக்கும் கூத்து நளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே பொகிறது.. தெருக்கூத்து குழுவில் பொம்பிலைகலை சேர்ப்பது இல்லை ஆனால் ராசங்கம் என்னும் காமுகன் அமிர்தம் என்கிர பொம்பிலையை செர்த்துக் கொண்டு கொட்டம் அடிக்கிறான். அந்த பொம்பிலை எதற்கும் துணிந்தவள்,, எல்லா ஆம்பிலைகள் கூடவும் சுற்றுகிறவள். கோயில் விழாக்களில் அவர்கள் கூத்தடிப்பது மக்களிடையே முகம் சுலிக்க வைக்கிரது.. ஆகவே தக்க அதிகாரிகள் கெண்டு அவர்கலை விஜாரித்து அவர்கலின் செந்தமிழ்  கூத்துக் குழுவை தடை செய்யும்படி தணடனிட்டு கேட்டுக் கொல்கிறோம்

இப்படி தப்பும் தவறுமாக அடித்தல் திருத்தலுமாக இருந்தது மொட்டைக் கடிதம்தான் என்று ஊர்ஜிதமானது. அனேகமாக கலைமகள் குழு ஆள் எவனாவது கூட எழுதி இருக்கலாம்.

“உனக்கு இந்த வருஷம் புதுவை கிராமியக் கலைஞர் விருதுக்காக ரெக்கமண்ட் பண்ணி இருந்தேன் அப்ப இந்த கடிதாசியை அந்த டிப்பார்ட்மெண்ட்ல குடுத்தாங்க

“”அரசியல், கலை, பொது வாழ்க்கை இப்படி எங்க போனாலும் பெண்கள் மீது எளிதாக செய்யக் கூடியது அவளது ஒழுக்கத்தை சிதைக்கிறதுதானே.. அற்பர்களின்  கையில் இருக்கும் கடைசி  ஆயுதம் “

“உன்னைப் பத்தி எனக்கு மட்டுமில்லே அங்க டிப்பார்ட்மெண்ட்லேயும் தெரிஞ்சிருக்கு அதனால  இதை யாரும் பெரிசா எடுத்துக்கலே. கவலைப்படாதே நீயே கிழிச்சிப் போட்டுடு. அப்புறம் இந்த நாடகம் சொன்னியே.. அதுக்கு ஒரு லெட்டர் மாதிரி குடுத்துடு நான் பாத்துக்கறேன் ”

அதற்குள் ஜில் லென்ற குளிர் பானத்தை கொண்டு வந்து வைத்தான் அவரது வேலையாள்.

கோதண்டபாணியின் பி.ஏ. உள்ளே நுழைந்து அவரருகில் குனிந்து சன்னமான குரலில் “ராஜிவ்காந்தி ஹாஸ்பிட்டல்லேர்ந்து ஸ்டாஃப் நர்ஸ் வந்திருக்காங்க.”

“அப்படியா.. அந்த ரூம்லே உக்காரச் சொல்லு இப்ப நான் வந்துடறேன்.”

அவர் சரி என்று தலையாட்டிவிட்டு வெளியே சென்றார்.

“ரொம்ப நன்றி அப்ப நான் வர்ரேன் “ என்று எழுந்து கொண்டாள்.

சட்டென்று அவளது கையைப் பிடித்துக் கொண்ட கோதண்டம் “பரஞ்சோதி குடும்பத்தார்கிட்ட என்னோட வருத்தங்களை சொல்லிடு”

சற்று சங்கடத்துடன் கையை விடுவித்துக் கொண்டு “அவங்க குடும்பத்துல இப்ப யாரும் இல்லே.. “

“அடடா அப்படியா..  சரி நீ கிளம்பு. இன்னொரு நாள் பொறுமையா வா”

கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்..

 

5. கண்திறப்பு

வீட்டுக்கு வந்ததும் குளியல் போட வேண்டும் போல இருந்தது. பார்வதி தயாராக சாப்பாட்டு வகையறாக்களை கொண்டு வந்து வைத்துவிட்டு அவசரமாக போய்விட்டாள். ஆசை தீர குளித்துவிட்டு தலையை உலர வைத்தபடியே ஃபேனுக்கு அடியில் அமர்ந்தாள். சாப்பிட பெரிதாக ஆர்வம் இல்லை. இருந்தாலும் பாத்திரம் எடுக்க பார்வதி வந்தால் நிச்சயம் என்ன ஏது என்று கேட்டு உலுக்க ஆரம்பித்துவிடுவாள். அதற்காகவாவது சாப்பிட வேண்டும்.

சாப்பாட்டுத் தட்டை எடுத்து வைத்து பாத்திரங்களைப் பிரித்தாள். வகை வகையாக நிறைய சமைத்திருந்தாள் பார்வதி. ஒத்தை ஆளுக்கு இவ்வளவு சமைக்கிற ஆளில்லை. தனக்காகத்தான் சமைத்திருக்கிறாள். அந்த அன்பை நினைத்து  நெகிழ்ந்து போனாள் அமிர்தம். எத்தனை நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறோம் என்று நினைக்கும்போது மன நிறைவாக இருந்தது.

சாப்பிட்டு முடித்து விட்டு அந்த பாத்திரங்களைக் கழுவி ஓரமாக வைத்துவிட்டு எப்பொழுதும் எழுதும் மேஜை அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

புதுக் கண்ணாடியை எடுத்து போட்டுக்கொண்டு ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு விண்ணப்பக் கடிதத்தை எழுத ஆரம்பித்தாள்.

அனுப்புனர்

செந்தமிழ் கிராமியக் கலைக்குழு

கூடப்பாக்கம்

வில்லியனூர் தாலுக்கா

புதுச்சேரி

 

பெறுனர்

     உயர்திரு இயக்குனர்

     புதுச்சேரி தகவல் மற்றும் விளம்பரத்துறை

     புதுச்சேரி

 

மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்

           பொருள்: புதுச்சேரி அரசு நலத்திட்டங்கள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்துவது சம்மந்தமாக-

     புதுச்சேரி செந்தமிழ் கிராமியக் கலைக்குழு சார்பாக மிகுந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கொரானா பெருந்தொற்றுக் காரணமாக கோயில் திரு விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக எங்களைப் போன்ற கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்களில் பலருக்கு வேறு எந்த வேலையும் கிடைப்பதில்லை. அன்றாட உணவிற்கே கை ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எங்கள் மீது பரிவும் பற்றும் கொண்ட நீங்கள் தயவு செய்து புதுச்சேரி அரசு நலத்திட்டங்கள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பற்றிய பயனுள்ள மக்களுக்கு தேவையான செய்திகளை கூத்து நிகழ்ச்சி, மற்றும் நாடகங்கள் மூலம் கொண்டு சேர்த்தால் இன்னும் பலரை பயனடைய வைக்கும் என்று நம்புகிறோம்.

ஏற்கனவே நாங்கள் புகைப்பதால் ஏற்படும் தீமைகள் , மதுவால் ஏற்படும் கேடுகள், கழிப்பறையின் அவசியங்கள் குறித்தெல்லாம் சிறு நாடகங்கள் தெரு கூத்து நிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த தீநுண்மி காலத்தில் கொரானா பற்றிய விழிப்புணர்வு, தடுப்பூசி போடுவதன் அவசியங்கள் குறித்து சிறப்பான எளிமையான தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளை நடத்த ஆர்வமாக இருக்கின்றோம். அரசின் சார்பில் அதற்கான வாய்ப்புகளை எங்களுக்கு வழங்கினால் மக்கள் பயனுறும் வகையில் நடத்தித்தர தயாராக இருக்கின்றோம் என்பதை தங்களின் கனிவான கவனத்துக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். அய்யா அவர்கள் ஆதரவளித்தால் பல கிராமியக் கலைஞர்களின் வாழ்வில் புதிய விடியல் தோன்றும் என்று நம்புகிறோம். இது குறித்து நேரில் விளக்க ஒரு வாய்ப்பை வழங்கும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

 

மிக்க நன்றியும் வணக்கமும்

                                     ஒப்பம்

                                செந்தமிழ் கிராமியக் கலைக்குழு

                                30, ஆனந்தரங்கம் பிள்ளைத் தெரு,

                                     புதுச்சேரி

கடிதத்தை எழுதி முடித்து ஒரு முறை திரும்பப் படித்தாள். திருப்தியாகவே இருந்தது. ஒரு கவர் எடுத்து அதனை உள்ளிட்ட அற்புதம் கண்ணாடியை அதன் கூட்டுக்குள் வைத்தாள். கண்ணாடி தெளிவாக வாசிக்க வசதியாக இருந்தது.

வெளியே சென்று வந்ததில் இருந்து லேசாக தலை வலிப்பது போல இருந்தது. ரெண்டு முறை தும்மல் போட்டாள். வியர்வை அடங்குவதற்குள் தலை குளித்தது தப்போ? சாயந்திரம் ஆவி பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

பழைய டைரியை எடுத்து பொன்னுசாமியின் நம்பரைத் தேடி எடுத்து அவனுக்கு ஃபோன் செய்தாள்.

           “ஹலோ”

     “பொன்னுசாமி.. நான் அமிர்தம் பேசறேன் எப்படி இருக்கே?”

     “கனவா இல்லை நிஜமா ? இப்பதான் எங்க ஞாபகம் வந்துச்சா? எப்படிக்கா இருக்கே?”

“ஒரு வைராக்கியம் .. நடந்தது எல்லாம் கேள்விப்பட்டிருப்பே.. கோர்ட்ல என் பக்கம் தீர்ப்பை வாங்கிட்டுத்தான் ஊருக்குள்ள வரணும்னு யார்கிட்டேயும் பேசாம கொள்ளாம இருந்துட்டேன்.”

“அப்ப கூடப்பாக்கம் வந்துட்டீங்களா?”

“ஆமா பொன்னுசாமி .. அதே வீட்டுக்கு வந்துட்டேன் இன்னிக்குத்தான் உன் லெட்டரை படிச்சேன் நீங்க எல்லாம் சென்னையில இருக்கறதா தெரிஞ்சுது.”

“ஆமாக்கா கையில காசு இல்லாம எத்தனை நாளு பொழப்பை ஓட்டறது அதான் இங்க வந்துட்டோம் வேலை கஷ்டம்தான் இருந்தாலும் வாழ்ந்தாகனுமே.. என்ன பண்ண சொல்றீங்க?”

“அது சரிதான் நம்ம சுப்புணி, சொக்கலிங்கம், தேவேந்திரன் எல்லாம் எங்க இருக்காங்க? வாத்தியார் உடம்பு சரியில்லாம பட்டுக்கோட்டையில இருக்காராம்”

“ஆமாக்கா கை காலு ஒரு பக்கம் இழுத்துகிச்சு.. சொக்கலிங்கம்  அங்கதான் இருக்காரு. செக்கு எண்ணெய் ஆட்டி கடை கடையா வித்துகிட்டு இருக்காரு. மத்த ரெண்டு பேரு அங்க இல்லை. சென்னைக்குத்தான் வந்துட்டதா சொல்றாங்க அந்தோணியை கேட்டாத் தெரியும். அவன்தான் நம்பர் வச்சிருக்கான்.”

“சரி இப்ப கொஞ்சம் கொஞ்சமா நிலைமை சரியாகிட்டு வருது.. மறுபடி ஊருக்கு வந்துடுங்க திரும்பவும் கூத்தை ஆரம்பிச்சிடலாம்.”

“இப்படித்தான் போன வருஷம் கொரானா முடியறப்ப சொன்னாங்க ஆனா. எல்லாம் சரியான மாதிரிதான் இருந்துச்சு அப்புறம் ரெண்டாவது அலை அது இதுன்னு மறுபடி லாக்டவுன் பண்ணிட்டாங்க. எதை நம்பிக்கா இருக்கறதை விட்டுட்டு வர்றது? உள்ளதும் போச்சுடா உலகநாதான்னு உள்ளூர்ல மரத்துக்கு மரம் குந்திக் கிடக்க வேண்டியதுதான்.”

“அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா? புதுச்சேரி கவர்ன்மென்ட்டுக்கு ஒரு மனு எழுதி இருக்கேன். கொரானா விழிப்புணர்வு கூத்து நடத்தறோம் உதவி பண்ணுங்க அப்படின்னு கேட்டிருக்கேன். அதுக்கு நிச்சயம் பணம் சேங்க்ஷன் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்... உங்களை எல்லாம் நம்பித்தான் ஆளைப் பிடிச்சு தேளைப் பிடிச்சு ஏற்பாடு பண்றேன். எல்லாம் வந்துடுங்க”

“வாத்தியார் இல்லாமலா?”

(இடையில் பீப் பீப் என்று அலைபேசி சத்தமிட்டது. யாரோ முயற்சிக்கிறார்கள் யாரென்று பார்த்தாள்.. ஆட்டோ குமார். அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று தொடர்ந்தாள்.)

“என்னிக்கு இருந்தாலும் ஒரு நாள் நாம வாத்தியார் இல்லாமத்தான் நடத்தியாகணும். அவரோட இந்தக் குழு கலைஞ்சி போச்சுன்னு இருக்கக் கூடாதில்லே.. திரும்ப எடுத்து நாம நடத்துறது  கூட நாம அவருக்கு செய்யிற குருதட்சிணை மாதிரிதானே?”

“அதெல்லாம் சரிக்கா பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் சங்கை சங்கையா திட்டுதுங்க. என்னா பொழப்பு இது ..வெளியே போகவே வெக்கமா இருக்கு கூத்தாடி குடும்பம்னு எல்லாம் கிண்டல் பண்றாங்கன்னு பொலம்புதுங்க”

“ஓஹோ அவங்க சொல்லித்தான் தெருக் கூத்து ஆடுனியா?”

“இல்லைக்கா எனக்கு கூத்துன்னா உசிரு”

“அவங்க சொல்லி ஆடாதப்ப அவங்க சொல்லி ஏன் நிறுத்தறே?” இதோ பார் உனக்கு விருப்பம் இல்லைன்னா சந்தோஷம். உன்னை யாரும் கட்டாயப்படுத்தலை. எனக்கு இதை செய்ய விருப்பம் நீங்களும் வர்றீங்கன்னா முயற்சி பண்ணுவோம் இல்லன்னா பரவாயில்லை அவங்கவங்க வேலையைப் பார்ப்போம்”

“அய்யய்யோ என்னக்கா இப்படி கோச்சுக்கறே? ஆயிரம் சம்பாதிச்சாலும் அதுல கிடைக்கிற சந்தோசம் மன நிம்மதி கலாட்டா இதெல்லாம் வேற எங்க கிடைக்கும்? மனுசங்க சந்தோஷமா இருந்தா எல்லாரும் என்ன சொல்லுவாங்க.. என்னங்கடா கூத்தடிக்கிறேன்னுதானே கேப்பாங்க.. நான் இங்க மத்தவங்களை கேட்டுட்டு சொல்றேன். நீ அடுத்து ஆக வேண்டியதை கவனி”

“இதை பாரு எல்லோரும் பொறக்கறோம்.. சாவறோம்.. சோறு போற வழியா நம்ம உடம்பு.. என்னவாவது சாதிச்சுட்டு சாகனும் இல்லை நாலு பேரை சந்தோஷப்படுத்திட்டு சாகனும். வா எல்லாம் ஏற்பாடு பண்ணி வைக்கிறேன்” போனை கட் செய்தாள்.. 

ஆட்டோ குமாருக்கு ஃபோன் செய்தாள்.

“சொல்லு குமார் ..”

“அக்கா இங்க ஒரு பொம்பளை உன் கூட பேசணும்குது.. யாரோ தொரைராசு பொண்டாட்டியாம் தரட்டுமா?”

“குடு குமாரு”

“அக்கா அமிர்தம் அக்காதானே”

“ஆமா சொல்லும்மா.. எப்படி இருக்கே?”

“தடுமாறிகிட்டு கெடக்கறேன் தாயி.... பொண்ணுக்கு கல்யாணம் பேசி முடிச்சிருக்கேன்.. செலவுக்கு பணம் இல்லாம தவிக்கிறேன். அந்த மனுஷன் சென்னையில வேலை பாக்கறேன்னு அங்க போயி குந்தி கெடக்கறாரு. எப்ப ஃபோன் பண்ணாலும் வேலையா இருக்கேன் வேலையா இருக்கேன்னு போனை வச்சிடறாரு. ஒத்தை பொம்பளை நான் என்ன பண்ணுவேன். சொக்கலிங்கம் அண்ணாச்சி தான் உங்களை பாக்க சொன்னிச்சு..  எந்த உதவின்னாலும் கேளு செய்வாங்கன்னு சொன்னிச்சு”

“சொக்கலிங்கமா எங்க குரூப்புலே கூத்து கட்டுவாரே அவர்தானே?”

“ஆமாம் தாயி.”

“.துரைராசு நல்லா வசதியாத்தானே இருந்தாரு?”

“குந்தி தின்னா குன்றும் குறையும்னு சொல்லுவாங்க..மனுஷன் எல்லாத்தையும் சீட்டாட்டத்திலேயும் குடியிலேலேயும். அழிச்சிட்டாரு.. நீதான் உதவனும் தாயி”

“என்ன செலவு? எவ்வளவு வேணும்னு எழுதிக் கொடும்மா நான் என்ன செய்ய முடியும்னு பாக்கறேன்”

“பாத்திரம் பண்டம் வாங்கித் தரணும். ஒரு அம்பதாயிரம் தேவைப்படும். மத்ததை நான் சமாளிச்சுக்குவேன்”

சட்டென்று ஒரு கணம் யோசித்துப்  பார்த்தாள்.

அவள் தயங்குவதாக நினைத்து

“நெசமா என் கிட்ட அவ்வளவு பணம் இல்லை தாயி.. காதல் கல்யாணம். மாப்பிள்ளை வீட்டுலே எதுவும் கேக்கலை. குடித்தனம் வைக்கவாவது நாம செய்யனுமேன்னு நானாத்தான் சிலதை செய்யறேன்..”

“.குமாரோட வீட்டுக்கு வாம்மா”

 

 

6. நட்பென்னும்  அமிர்தம்

டுத்த அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்தாள். ஒட்டடை குச்சி மாதிரி வெடவெடவென இருந்தாள். வாரப்படாத தலை. அப்படியே அள்ளி முடிந்து ஒற்றை ரிப்பனைக் கட்டி இருந்தாள். அவள் வறுமையை சொல்ல வேறு நிரூபணம் தேவைப்பட வில்லை.

“நெஜமாலுமே உனக்கு பாத்திரம் வாங்கத்தான் பணம் வேணுமா?”

“புள்ளை கல்யாண விஷயத்துலே பொய் சொல்லுவனா?”

“ஏன்னா.. துரைராசு இது வரைக்கும் பல காரணம் சொல்லி பணம் வாங்கி இருக்கு.. எல்லாமே பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை பொண்ணுக்கு பீஸ் கட்டணும்.. வீடு ஒழுகுது ரிப்பேர் பண்ணனும் இப்படி ஏதாச்சும் சொல்லும்”

“அம்புட்டும் பொய்யி.. எனக்கோ எம் புள்ளைக்கோ, வீட்டுக்கோ ஒரு செலவும் பண்ண மாட்டாரு.. மளிகை சாமான், காயி, பால் இதுக்கே அவர்கிட்ட பல்லை கெஞ்சி காலைப் பிடிச்சு வாங்கணும்.. வேணும்னா நீயும் கூட வா எவ்வளவு ஆகுதோ அதை கடையிலே நீயே குடுத்துடு.. தலையை அடகு வச்சாவது நான் திருப்பி குடுத்துடறேன். தானமா தரவேணாம் கடனா குடு”

“அப்ப ஒண்ணு பண்றேன். தங்கவேலு பாத்திரக் கடைக்கார்ருக்கு ஒரு லெட்டர் தர்றேன்.. அதை எடுத்துட்டு போ என்ன தேவையோ அதை மட்டும் வாங்கு பணம் அப்புறமா நான் அவர்கிட்ட கொடுத்திடறேன்”

“நீ மகராசியா இருப்பே அது போதும் தாயி.. அது போதும் சல்லிக்காசு என் கையில குடுக்க வேணாம்”

“சரி உள்ளே வா”

“வேணாம் தாயி நான் பத்து வீட்டுலே பத்து பாத்திரம் தேய்க்கிறவ.. என்னால யாருக்கும் எதுவும் வந்துடக் கூடாது.. நான் இங்கேயே நிக்கிறேன். குமாரை கூட தெரு முனையிலேயே நிக்க சொல்லி இருக்கேன்.. அவனும் நாலு இடம் போற ஆளு..”

“சரி பத்து நிமிஷத்துலே வந்துடறேன். உன் பேரென்னம்மா ?”

“மல்லிகா”

உள்ளே வந்து ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்தாள்

தங்கவேலு அண்ணாச்சிக்கு

வணக்கம்.. எப்படி இருக்கீங்க.. நான் மெலட்டூர் அமிர்தம். அப்பா உங்களை விசாரிச்சதா சொல்லச் சொன்னாங்க இந்தக் கடிதம் கொண்டு வரும் மல்லிகா எனக்கு வேண்டிய குடும்பத்து பெண்.. அவங்க மகள் திருமணத்துக்குத் தேவையான பாத்திரங்கள் எடுக்க நம்ம கடைக்குத்தான் வரச் சொல்லி இருக்கேன். தேவையான பாத்திரங்களைத் தரவும். என்ன தொகை ஆகிறதோ அதனை நெட் பேங்கிங் –இல் அனுப்பி வைக்கிறேன். நன்றி

இப்படிக்கு

அமிர்தம்

கடிதத்தை ஒரு கவரில் போட்டு ஒட்டி அவர் பெயர் எழுதி பின்னர் வெளியே வந்து மல்லிகாவிடம் கொடுக்கிறாள்.

வாங்கிக் கொண்ட மல்லிகா கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு “நீ நல்லா இருக்கணும் மகராசியா புள்ளை குட்டியோட சவுரியமா இருக்கணும்”

“அதுக்கென்ன இருந்தா போச்சு. அப்புறம் சொக்கலிங்கத்தை நான் பாக்கணும்னு சொல்லு ” என்றவள் ”சரி ஒரு நிமிஷம்.. குமாரை இங்க வர சொல்லு “ என்றாள்.

“சரிங்கம்மா” என்று நகர்ந்தாள்.

சற்று நேரத்தில் குமார் அங்கு வந்தான்

“என்னக்கா ஏதாச்சும் செய்தியா?”

“ஆமாம் குமார் .. நான் ஒரு மனு தர்றேன் அதை செகரட்ரியேட்ல இன்பர்மேஷன் டிபார்ட்மெண்ட்ல டெஸ்பாட்ச் செக்‌ஷன்ல ஜெயராமன்னு ஒருத்தர் இருப்பாரு அவர்கிட்ட அமிர்தம் கொடுக்க சொன்னதா சொல்லி குடுத்துடு.” கூடவே ஐநூறு ரூபாய் நோட்டையும் கொடுத்தாள்.

“சரிக்கா” அந்தக் கவரையும் பணத்தையும் வாங்கிக் கொண்டான்.

“மனுன்னு சொல்றே நீ வந்து நேரா கொடுத்தா நல்லா இருக்கும்” என்று இழுத்தான் குமார்.

“எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தேவலாம் போல இருக்கு. ஜெயராமன் எனக்குத் தெரிஞ்சவர்தான். நான் ஃபோன்ல பேசிக்கிறேன். தாமதப்படுத்தினா காரியம் தடையாயிடும்”

“சரிக்கா நான் வர்றேன்” என்று கிளம்பினான்

தூக்கம் வருவதற்குள் மீதம் இருக்கும் கடிதங்களை வாசித்துவிடலாம் என்று அவற்றை எடுத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தாள். வங்கி ஸ்டேட்மெண்ட், குலதெய்வம் கோயிலில் இருந்து விபூதி பிரசாதம், கூத்தரசன் பத்திரிகையின் சந்தா முடிவடைந்து விட்டதையும் புதுப்பிக்க கோரியும் நினைவூட்டல் கடிதம் என சிலவற்றைத் தள்ளினாள். கடைசியாக மஞ்சுவின் கடிதம் சட்டென்று ஒரு மழைத்துளி கண்ணிமையில் விழுந்தது போல் சிலீரென்றது.

கல்லூரியில் அவளும் மஞ்சுவும் ஒரே அறை. உண்ணுவதும் உறங்குவதும் ஊர் சுற்றுவதும் அவளோடுதான். எத்தனை நாட்களாயிற்று அவளைப் பார்த்து.. கல்யாணமாகி கணவனோடு சிங்கப்பூர் போனவள் தொடர்பே இல்லாமல் போய் விட்டாள். ஒருமுறை ஃபேஸ்புக்கில் எப்படியோ அவளைக் கண்டுபிடித்து ஃபிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து அவளோடு ஸ்கைப்பில் பேசினாள். அப்பொழுது விலாசத்தையும் வாங்கி இருந்தாள் மஞ்சு. அதன் பிறகு நல்லுசாமியுடனான வாழ்க்கை தந்த சலிப்பு அவமானம் எவரது நட்பையும், உறவையும் தொடர வேண்டும் என்கிற எண்ணத்தை அடியோடு அழித்துவிட்டது.

மஞ்சுவின் கையெழுத்து சித்திரம் போல அழகாக இருக்கும் கடிதத்தின் பின்பகுதியில் அவள் கையொப்பமிட்டிருந்ததை பார்த்தே கண்டுபிடித்து விட்டாள் அமிர்தம்.

கடிதத்தைப் பிரித்தாள் அமிர்தம்

அன்புமிக்க அமிர்,

எப்படி இருக்கிறே குண்டு குட்டி?  இப்பவும் அதே கொழுக் மொழுக்தானா? காலேஜ் படிக்கிறப்ப உன்னோட கன்னத்தைக் கிள்ளி கிள்ளி உன்னை வெறுப்பேத்திகிட்டே இருப்பேன். கடைசியா உன் கிட்ட பேசி ஒரு மூணு நாலு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். உன்னோட ஃபேஸ்புக் அக்கவுண்ட் , இன்ஸ்டாகிராம் எல்லாத்திலேர்ந்தும் ஏன் வெளியேறிட்டே? உனக்கு ஃபோன் அடிச்சா சந்தாதாரர் போதிய தொகை இல்லாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது அப்படின்னு வருது..

இந்த அட்ரஸ்க்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்தேன்.. டீ சொல்ல மரந்துட்டேன் நான் இந்தியாவுக்கு வந்து ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. இப்ப திருச்சியில செட்டில் ஆயிட்டோம். வந்த உடனே உன்னைப் பாக்கத்தான் வந்தேன். இங்க வந்தா நீ ஊரைவிட்டுப் போயி மூணு வருஷம் ஆயிடுச்சு. ஆனா இது உன் சொந்த வீடுதான் என்னிக்கா இருந்தாலும் இங்கதான் வருவே அப்படின்னு பக்கத்து வீட்டு பார்வதி சொன்னாங்க. ரொம்ப ஏமாத்தமா போயிடுச்சு.. அவரும் குழந்தைகளும் கூட வந்திருந்தாங்க. வர்ற வழி எல்லாம் உன்னைப் பத்திதான் உளறிகிட்டே வந்தேன். எல்லாருமே உன்னைப் பாக்க அவ்வளவு ஆவலா இருந்தாங்க. பயங்கரமா அப்செட் ஆயிட்டேன். பார்த்தியா என்னோட ஃபேவரேட்  வேர்ட் ’பயங்கரமா’ வந்துடுச்சு..நீதான் அடிக்கடி கிண்டல் பண்ணிகிட்டு இருப்பே

ஆமீர் இப்படி உன்னைக் கூப்பிட்டு நீ அப்படி ஒரு அன்போட என்னை என் கையை பிடிச்சு உன் உள்ளங்கையில வச்சி அழுத்துவியே அந்த அழுத்தத்துக்குப் பின்னாடி எத்தனை அர்த்தம் இருக்கும் தெரியுமா? நாம காலேஜ்ல படிக்கிறப்போ ஆமிர்கானோட பயங்கரமான ஃபேன். அப்பதான் லகான் ரிலீஸ் ஆயிருந்துச்சு. அனேகமா அதை அஞ்சு தடவை பார்த்தோம்னு நினைக்கிறேன். அப்பத்திலேர்ந்துதான் உன்னை ஆமீர்னு கூப்பிட ஆரம்பிச்சேன்.

நான் இப்ப பயங்கரமா குண்டடிச்சிட்டேன் .. என் மக பிரியா சின்ன வயசு மஞ்சு அப்படின்னு எங்கம்மா சொல்லிகிட்டே இருக்காங்க உன்கிட்ட காமிச்சு அப்படியான்னு கேக்கலாம்னு நெனச்சேன். நீதான் இல்லாம போயிட்டே..

உன் கதையை எல்லாம் பார்வதி சொன்னாங்க ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. அந்த ஆளை எப்பவோ தூக்கி எறிஞ்சிருக்கணும். உன்னோட அருமை தெரியலை. உன் பின்னாடி எத்தனை பேரு சுத்திகிட்டு இருந்தாங்கன்னு அந்த ஆளுக்குத் தெரியுமா? ஃபுட்பால் பிளேயர் மோகன் உன் மேலே பைத்தியமா திரிஞ்சான் அப்படிங்கறது தெரியுமா? நீ யாருக்கும் மசிஞ்சி கொடுக்கலை. அப்பாவுக்கு வீடு வாங்கிக் கொடுத்து மனை வாங்கிக் கொடுத்து நல்ல பேரு வாங்கி வஞ்சகமா உங்கப்பாவை ஏமாத்திட்டான். நீ அப்பா பேச்சைத் தட்டாத பொண்ணு.. அந்த சர்ட்டிபிகேட் உனக்கு எதுக்காச்சும் உதவுச்சா?

பழசைப் பேசி உன்னோட மனசை புண் படுத்த விரூம்பலை.. நான் இங்க வந்த அடுத்த மாசமே நம்ம காலேஜ் ஓல்ட் ஸ்டுடன்ட் ‘அலுமினி மீட் ‘ வச்சிருக்கறதா வாசுகி எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தா.. போய் கலந்துகிட்டேன். எவ்வளவு ஜாலியா இருந்துச்சு தெரியுமா? எல்லோரும் உன்னை மிஸ் பண்ணினோம். இப்ப கூட இந்த கடிதம் எழுதக் காரணம். மறுபடி அது போல ஒரு மீட் வர்ற ஜூலை பதினைந்தாம் தேதி நடக்கப் போகுது. உன்னோட நம்பர் யார்கிட்டேயும் இல்லை. உன்னோட இந்த விலாசம்தான் என்கிட்டே இருக்கு ஒரு வேளை இந்தக் கடிதம் உன் கையில் கிடைத்தால் இதான் என்னோட நம்பர். 9442470573.. மறக்காம ஃபோன் பண்ணு..

வளர்மதி புதுச்சேரியிலதான்  டி.எஸ்.பியா இருக்கா உன்னை பாக்க வந்தப்பதான் அவளையும் மீட் பண்ணிட்டு வந்தேன். நான் அவளை பார்க்கும் போது ஜாயின் பண்ணி இரண்டு மாசம்தான் ஆகுதுன்னு சொன்னா. அதனால நீ இங்க இருந்தது அவளுக்குத் தெரியலை. அவளும் மீட்டுக்கு அத்தனை பிசியான டைம்லேயும் வந்திருந்தா.. அப்புறம் சுமதி அரியலூர்ல ஆர்.ஐ.ஆ இருக்கா. ஒத்தை சடை நிர்மலா இல்லே.. நம்ம நிம்மி.. அப்போல்லோவுல டாக்டராம் சிரிப்பா வரலை..? பரிமளா, ஜெயந்தி, கலாவதி எல்லோரையும் பார்த்து .. ஒரே கலாட்டாதான்..இந்தக் கடிதம் உன் கையில கிடைக்கனும்னு எல்லாம் வல்ல ஷீரடி சாய் பாபாவை வேண்டிக்கறேன்.

கடிதம் கிடைச்ச உடனே எனக்கு ஃபோன் பண்ணு

           வேணும் பதில் வேணும் சுகம்..

                                     அன்போடு உன்

                                நெட்டை கொக்கு .. (ஸ்மைலி)

படித்து முடித்ததும் அமிர்தத்துக்கு அலையலையாக கல்லூரி நினைவுகள் வந்தன. எத்தனை அற்புதமான நாட்கள். எத்தனை அருமையான நட்புகள். கூடப்பாக்கம் திரும்பி வந்ததில் இன்றைக்குத்தான் மன நிறைவான ஒரு செய்தி கிடைத்தது.   

அலைபேசியை எடுத்து மஞ்சுவின் எண்ணுக்கு அழைத்தாள்..

 

 

7. குழு மலர்ந்தது

ஓம் சாயி நமோ நமஹா.. என்று ரிங் டோன் ஒலித்தது.. தீவிர சாயி பக்தி ஆகிவிட்டாள் போலிருக்கு..போனை எடுத்தாள்..

“டீ நெட்டை கொக்கு....” என்று உணர்ச்சிப் பொங்க அழைத்தாள்..

“அடியே குண்டு கன்னி எப்பிடிடி இருக்கே?”

“நான் நல்லா இருக்கேன்.. இப்பதான் உன்னோட லெட்டரைப் படிச்சேன். என் வாழ்க்கையிலேயே இன்னிக்குத்தான் ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்தோஷமா இருக்கேன்.. ஒவ்வொரு எழுத்தும் அச்சு கோர்த்த மாதிரி இப்பவும் அப்படியே அச்சு அச்சா எழுதறே.. அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கு.. நேர்ல பார்த்தா உன் மடியில படுத்து அழுதுடுவேன்..”

“15 ஆம் தேதி திருச்சிக்கு வாடி சேர்ந்து அழலாம்.. இந்த முறை வானதி, திலகா, பிரேமா, கிரேஸ் எல்லாம் வர்றாங்க வாடி கொட்டம் அடிக்கலாம்..”

“நிச்சயமா.. அப்புறம் உன்னோட ஹஸ்பன்ட், பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க பதிலுக்கு என்னை நீ கேட்டுடாதே..”

ஒரு நிமிடம் தயங்கி , எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க.. ஆனா இப்ப அவங்களைப் பத்தி நாம பேசிக்க வேணாம்.. யாரை பார்த்தாலும் அதானே பேசறோம். நம்ம காலேஜ் லைஃப் பத்தி யார்கிட்ட பேசறது? நாமதான் பேசிக்கணும்.. அதனால நாமெல்லாம் டைம் மிஷின்ல டிராவல் ஆகி நம்ம காலேஜ் டேஸ் க்கு போயிடறோம் அன்னிக்கு முழுக்க நாம அந்த வயசுல மட்டும்தான் இருக்கோம் .. இன்னிக்கு காலத்துக்கு நாம வரவே கூடாது.. டீல் ஓகேவா..”

“ஒகே.. அப்புறம் வளர்மதியை பார்த்தேன்னு சொன்னியே நானும் இங்க இப்பத்தான் வந்தேன் அதனால தெரியலை.. அவ நம்பர் தர்றீயா அவ கிட்ட பேசணும் போல இருக்கு..

“கண்டிப்பா தர்றேன்.. ஆனா ஒரு கண்டீஷன்.. என்னை எப்படி நெட்டை கொக்குன்னு சொன்னியோ அதே மாதிரி அவளை நீ ஃபோனை எடுத்த உடனே நிப்பான் அப்படின்னுதான் கூப்பிடனும் அப்படின்னா தர்றேன்”

“டீ  அவ இன்னிக்கு டி.எஸ்.பி .. அதெல்லாம் தப்பு”

“அப்ப நம்பர் கிடையாது..”

“ஒகே ஒகே. அப்படியே கூப்பிடறேன்..சரியா?”

“ஓகே இதானே உனக்கு வாட்சப் நம்பர்? இதுக்கே அனுப்பி வைக்கிறேன்?

“ஆமா ஒரு நம்பர்தான் என்கிட்டே இருக்கு அதான் வாட்சப் நம்பரும்..அது சரி உன் டாவு ஒருத்தன் இருந்தானே.. ம்..ம்..சுரேந்தர் .. சுரே.... அவன் வந்திருந்தானா?””.

“இல்லை அவன் கனடாவுல செட்டில் ஆயிட்டானாம்.. அடுத்தமுறை வர்றதா சொன்னானாம், “

ஒகேடி ரொம்ப சந்தோசம் அப்பப்ப பேசு.. நாம திருச்சி எஸ்.ஆர்.சியில மீட் பண்ணுவோம்.. பை.. “

“ஜூலை 15 அன்னிக்கு மீட் பண்ணுவோம்.. பைடி”  ஃபோனை கட் செய்தாள், .

தலைவலி விடாமல் இருந்ததால் மாத்திரை ஒன்று போட்டுக்கொண்டு படுத்தாள். மஞ்சுவிடம் பேசியது அத்தனை குதூகலமாக இருந்தது. திரும்பவும் கல்லூரிக்குச் சென்று அதன் வராண்டாக்களில், விடுதி முற்றத்தில், மெஸ்-சின் நீட்டு பென்ச் எல்லாம் கண்களுக்கு முன் நிழலாடின..ஏதேதோ எண்ணங்கள் கலைந்து கலைந்து ஓடின. எப்பொழுது தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிப் போனாள்.

ரண்டு நாட்கள் எங்கும் செல்லாமல் வீட்டை ஒழுங்கு படுத்தும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.. உடம்பும் தளர்ந்து களைப்பாக இருந்தது. இடையிடையே இருமல் வேறு படுத்தி எடுத்தது. சுக்கு கஷாயம், பனங்கற்கண்டு பால் , இருமும் போது வால் மிளகு என்று அவ்வப்பொழுது கை வைத்தியம் செய்து கொண்டாள்.

புத்தகங்களை எல்லாம் அடுக்கி அலமாரியில் வகைப்படி அடுக்கி வைத்தாள்.  அவளுக்கு அது பிடித்தமான வேலை. புடவைகளை விட புத்தகங்கள்தான் அதிகம் அவளது அலமாரிகளில் இருக்கும்,

வெளியில் யாரோ அழைப்பது போல இருந்த்து. வெளியில் வந்து பார்த்தாள். சொக்கலிங்கம் நின்று கொண்டிருந்தார்.

“வாங்க அண்ணே இன்னிக்குத்தான் உங்களுக்கு வழி தெரிஞ்சுதா? இல்லை மல்லிகா இன்னிக்குத்தான் சொன்னிச்சா?”

“அய்ய்ய்யோ தப்பும்மா ரொம்ப தப்பு.. அன்னிக்கே சொல்லிடுச்சு.. அதுவுமில்லாம பாத்திரம் எல்லாம் வாங்க நீங்கதான் உதவி பண்ணினதா சொன்னிச்சு.. கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் பொண்ணை கூட்டிட்டு வந்து காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்னு சொன்னிச்சு..எல்லாம் ஃபோன்தான் நேர்ல என்னை பாக்க முடியாது.. எனக்கு கொரானா வந்து பத்து நாள் ஆஸ்பத்திரியில இருந்தேன். அதுக்கப்புறம் பதினாலு நாள் வீட்டிலேயே தனியா இருக்கணும்னு சொல்லிட்டாங்க அதன் வர முடியலை.. தப்பா நினைச்சுக்காதம்மா”

“கொரானாவா மல்லிகா சொல்லவே இல்லையே”

“அது போன்லதான் பேசுச்சு.. அதனால அதுங்கிட்டயும் நான் சொல்லலை.. இப்ப நீங்க ஏன் வரலைன்னு கேட்டதும் சொல்லும்படி ஆயிடுச்சு.. எப்படிம்மா இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் அண்ணே ஒரு வார்த்தை சொல்லி இருந்தீங்கன்னா நான் வரவேணாம்னு சொல்லி இருப்பேன்.”

“அதனால என்ன இப்ப நான் நல்லாத்தான் இருக்கேன்”

“சரி சரி உள்ள வாங்க..”

“வேணாம்மா இங்கேயே இருந்துக்கறேன்.. நெகட்டிவ்னு வந்துடுச்சு இருந்தாலும் கொஞ்ச நாள் எல்லாரையும் விட்டு தள்ளியே இருக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். நம்மால அடுத்தவங்களுக்கு கெடுதல் வரக்கூடாது இல்லியாம்மா?”

“உங்களை எதுக்கு வரச்சொன்னேன்னா.. ராசாங்கம் அண்ணன் உடம்பு சரியில்லாம இருக்கு.. இப்ப இருக்கற சூழ்நிலையில அவர் நல்லாகி வந்தாலும் பழைய மாதிரி அவரால முடியாது. ஆனா அதுக்காக  நம்ம குழுவை அப்படியே விட்டுடக் கூடாது வயித்துக்கு சோறு போட்டுச்சோ இல்லியோ மனசுக்கு சோறு போட்டுச்சு.. நம்ம பொன்னுசாமியை போன் பண்ணி கேட்டேன்.. மறுபடி ஆரம்பிக்கிறதா இருந்தா அவன் கண்டிப்பா வருவான்.. அவன் கூடத்தான் தொரைராசு, அந்தோணி, கல்லாப்பெட்டி எல்லாம் இருக்காங்க.. அவங்களையும் கலந்துகிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கான்”

“கேக்க சந்தோஷமா இருக்கு.. இப்படி யாராவது ஒருத்தர் எடுத்து சொல்லக் கூடாதான்னு கவலையோட இருந்தேன். வயித்துல பாலை வார்த்தே.. ஆனா இப்பத்தான் கோயில் திறக்கலை திருவிழா இல்லை.. யாரும்மா நம்மளை கூப்புடுவா?”

“அதுக்குத்தான் கவர்ன்மெண்ட்ல தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட பேசிகிட்டு இருக்கேன். அவரு மூலமா கொரானா நோய் பத்தி நாடகம், தடுப்பூசி போடணும்னு விழிப்புணர்வு நாடகம் போடறோம் ஏற்பாடு பண்ணுங்கன்னு கேட்டிருக்கேன். அவரும் சரின்னு சொல்லி இருக்காரு.. அது கிடைச்சா வருமானத்துக்கு பிரச்சினை இல்லை..“லெசாக இருமியது. தொண்டையை கனைத்துக் கொண்டாள்.

“அது போதும்மா.. நம்ம பசங்களுக்கு வீட்டுக்கு குடுக்க கால் காசு வேணும் அவ்வளவுதான். அதை சொல்லியே அம்பது நாடகம் போட்டுடுவானுங்க.. எனக்கு எந்த கவலையும் இல்லைம்மா மில்லு இருக்கு ஆள் போட்டிருக்கேன் அவங்க பாத்துக்குவாங்க”

“அதுக்குத்தான் கூப்பிட்டேன் இனிமே நீங்கதான் செந்தமிழ் கிராமியக் கலைக் குழுவுக்கு வாத்தியார்..”

“பெருமாளே இது என்ன சோதனை? பஸ்ல உக்காந்து போக சீட் கொடுத்தா போதும்னுதான் இருக்கேன்.. என்னைப் போயி டிரைவர் சீட்டுல உக்கார வைக்கறீயே...”

“டிரைவர் சீட்டுல உக்காந்தவங்க எல்லாம் ஒரு டயத்துல பஸ்ல பேசஞ்சர் சீட்டுல்ல உக்காந்திருந்தவங்கதான்.. அதெல்லாம் நீங்க சமாளிச்சிடுவீங்க நீங்கதான் இதுக்கு சரியான ஆளு.. அனுபவம் பொறுமை, திறமை, சகிப்புத் தன்மை எல்லாம் உங்க கிட்டதான் இருக்கு.. உங்க மில்லுல தானியம் காய வைக்குற களம் இருக்கில்லே ராத்திரியிலே அங்க வச்சுக்குவோம் ஒத்திகையை”

“என்னமோ எனக்கு சரியா தோணலை.. என்னோட மில்லை எதுக்கு வேணும்னாலும் எடுத்துக்கலாம்.. ஆனா நான் வாத்தியாரா? ராசாங்கம் இட்த்துல என்னை வச்சி என்னாலேயே பாக்க முடியலையே”

“அதெல்லாம் நான் பார்த்துட்டேன்.. நல்லாத்தான் இருக்கு.. ஒண்ணும் பேசாதீங்க.. இன்னிக்கு நாள் நல்லா இருக்கு ஒரு நிமிஷம் இருங்க (மொபைலை எடுத்து அன்றைய நாள் நிலவரத்தை பார்த்தாள்) அட நேரமும் யோகம்.. குளிகை .. எதை செஞ்சாலும் வளரும் அண்ணாச்சி நீங்க வாத்தியாரா பதவி ஏற்கறதுக்குன்னே ரெண்டு நாள் தள்ளி வந்திருக்கீங்க.. இருங்க வந்துட்டேன்”

அவசரமாக உள்ளே சென்றாள். பூஜை அறையில் இருந்து பிள்ளையார் படம், சூடத்தட்டு, வத்தி, சூடம், வத்திப்பெட்டி, திருநீற்று மடல், கொஞ்சம் படி கல்கண்டு, சிறிய அகல் விளக்கு எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். முன் வாசலில் இருந்த செம்பருத்தி பூவை பறித்துக் கொண்டாள். பிள்ளையாரை வைத்து அகல் ஏற்றி முன்னாள் பிரசாதமாக படி கல்கண்டை வைத்தாள்.. வத்தி ஏற்றிக்கொண்டாள். 

“அண்ணே இந்த சூடத்தை ஏத்துங்க சொல்றேன்”

“எதுக்கும்மா?”

“நீங்க ஏத்துங்க சொல்றேன்”

சொக்கலிங்கம் சூடத்தை ஏத்தி பிள்ளையாருக்கு காண்பித்தார்.

எப்பவும் கூத்து ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி பாடுவோம்ல அந்த கணபதி துதி பாடுங்க”

இடுப்பில் துண்டை எடுத்து கட்டிக்கொண்டார். திருநீற்றை எடுத்து நெற்றி நிறைய பூசிக் கொண்டார்.

“ஹக்கேங் “ என்று ஒரு முறை கனைத்துக் கொண்டார்.

“”ஆனை முகத்தவனே – எங்களை

ஆளும் நாதனே வணங்கினோம் அய்யா..

தொந்தி கணபதியை முந்தி நிறுத்தினோம்

வந்தனம் வந்தனம் வெற்றி நாயகா வந்தனம் வந்தனம் அய்யா..

சொக்கனின் மைந்தனே விக்ன வினாயகா

சொல்லெடுத்து தாருமய்யா

முருகனின் அண்ணனே

மூஞ்சூறு வாகனனே

முன்னின்று அருளுமய்யா”

குரல் விண்ணை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு திரும்பியது. சொக்கலிங்கம் அண்ணாச்சி குரல் இடி மாதிரி அவருக்கு இந்த மைக் மண்னாங்கட்டி எதுவும் தேவை இல்லை .. கேட்டுக் கொண்டிருக்கும்போதே அமிர்தத்துக்கு கண்களீல் கண்ணீர் கர கரவென வழிந்தோடியது. 

“ஏன் தாயி அழுவுற?”

“மறுபடி இந்த பாட்டை கேப்பமா.. திரும்பி நம்ம குழு கூத்து நடத்துமான்னு நேத்து வரைக்குமே சந்தேகம் இருந்துச்சு.. ஆனா இப்ப இல்லைண்ணே.. கூட பொறக்கலேன்னாலும் நீங்க எனக்கு அண்ணன்தான்.. இப்ப தைரியம் வந்துடுச்சுண்ணே..  யாரும் இல்லைன்னாலும் நீங்க ஒருத்தரு போதும் நடத்திக் காட்டிடுவேன்.. ரொம்ப நன்றிண்ணே..”

“நீ எதுக்கும்மா நன்றி சொல்றே நான் சொல்லணும் நாங்க சொல்லணும்.. உனக்கு இருக்கற சொத்து சொகத்துக்கு நீ ராசாத்தி மாதிரி எதைப் பத்தியும் கவலைப்படாமே வாழ்ந்துட்டு போயிடலாம்.. இந்தக்கலையை வாழ வைக்க நீ இவ்வளவு கஷ்டப்படறே நாங்கதானே உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம். இப்ப சொல்றேம்மா.. வேற யாரு வரலைன்னாலும் சரிதான் நான் ஒண்டியாளா நின்னு நீ எங்க சொல்றியோ அங்க நின்னு கத்துவேம்மா”

“அது போதும்ணே” கையெடுத்து கும்பிட்டாள். பின்னர் தட்டெடுத்து அதில் கற்கண்டை வைத்து ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து அவரிடம் நீட்டினாள்.

“பணம் எல்லாம் எதுக்கும்மா”

“மொத மொதல்ல வாத்தியார் ஆகி கணபதி துதி பாடி இருக்கீங்க. வெறும் கையா அனுப்புனா நாளைக்கு நம்ம குழு எங்கயாச்சும் கூத்து நடத்துனா வெறும் கையா வரணும்.. வேணாம்னு சொல்லாம வச்சிக்கங்க” என்று சொல்லி அவர் கையில் பணத்தைத் திணித்தாள்.

“மகராசியா இருக்கணும் தாயே.. அச்சாரம் குடுத்துட்டே எப்ப கூத்தை நடத்தனும்னு சொல்லலியேம்மா.” என்று விளையாட்டாக சொன்னபடி கடவுளை வேண்டிக்கொண்டு பணத்தை உள்ளே வைத்தார்.

”நான்தானே அச்சாரம் குடுத்தேன் நானே எப்ப நீங்க கூத்து நடத்தனும்னு சொல்றேன்.”என்று அமிர்தமும் விளையாட்டாக பதில் சொன்னாள். 

”அப்புறம் ஒரு சேதி இருக்கு அமிர்தம்.. நம்ம ராசாங்கம் வாத்தியாரு வீட்டை இப்ப வட்டிக்காரன் சீனிவாசன் ஆக்ரமிச்சுகிட்டு பிடிச்சு வச்சிருக்கான். கேட்டா ராசாங்கம் என்கிட்ட கடன் வாங்கி இருக்காரு. அவரு கையெழுத்து போட்ட பத்திரம் என்கிட்ட இருக்குன்னு ராவடி பண்றான். ராசாங்கம் புள்ளைக்கு தெரவுசு பத்தலை பயந்துகிட்டு வராம இருக்கான். நம்ம குழு ஒவ்வொரு கூத்துக்கும் கிளம்பறதுக்கு முன்னாடி அவரு வீட்டுலதான் பூஜை போட்டு கிளம்புவோம். இப்ப பூட்டி கிடக்கறதே சங்கடமா இருக்கு. இதுல வட்டிப்பய அதுல உக்காந்திருக்கறதை பார்த்தா வயிறு எரியது.. என்ன நியாயம்? நீதான் இதுக்கு ஏதாச்சும் பண்ணனும். உனக்குத்தான் எல்லா ஆளையும் தெரியுமே”

“இதை யாருமே சொல்லலையே.. வீட்டு பத்திரம் எல்லாம் யார்கிட்ட இருக்கு?”

“அதெல்லாம் ராசாங்கத்துகிட்ட்தான்  இருக்கு அவன் பேர்ல உள்ள சொத்துதான் அதுல வில்லங்கம் ஒண்ணுமில்லே.. இப்ப அவனால வீட்டை விட்டு நகர முடியாது அதை தெரிஞ்சுகிட்டு அவன் ஆட்டம் போடறான்.. ஆள், படை, பணம் எல்லாம் இருக்கற திமிரு..”

”கவலைப் படாதீங்க நான் பாத்துக்கறேன். அவங்க பையன் நம்பர் இருக்குதா?”

“கையோட எடுத்துட்டு வந்திருக்கேன்” பையில் இருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

“சரி பாத்துக்கலாம் நீங்க கிளம்புங்க” இருமல் இன்னும் அதிகமானது. கோதண்டபாணி வீட்டில் குடித்த குளிர்பானம் வேலை கொடுக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். அவளுக்கு குளிர் பானம் எதுவும் ஒத்துக் கொள்ளாது. அதுவும் அப்படி ஐஸ் கட்டிகள் நிரம்பிய குளிர் பானம் என்றால் அறவே ஆகாது.. மறுத்தால் அது மரியாதையாக இருக்காது என்று குடித்தது வேலை கொடுக்கிறது.

மறுபடியும் ஒரு வால்மிளகை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். கொஞ்சம் குறைவது போலத் தோன்றியது.

மீதமுள்ள கடிதங்களில் அவ்வளவு பொருட்படுத்தக் கூடிய அல்லது பதில் அளிக்க வேண்டிய கடிதங்கள் எதுவும் இல்லை ஷாலினியின் அஞ்சலட்டையைத் தவிர.

ஷாலினியின் குழந்தைத் தனமான கையெழுத்து பரவசமூட்டியது. அன்னை தெரசா அன்பு மலர் குழந்தை இல்லத்திலிருந்துதான் அந்தக் கடிதம் வந்திருந்தது. கூடப்பாக்கத்துக்கு வந்ததிலிருந்து அங்கு போய்க் கொண்டிருந்தாள். அமிர்தம். திரும்ப மெலட்டூர் போன பிறகு தொடர்பு விட்டுப் போய்விட்டது.

அன்னை தெரசா அன்பு மலர் இல்லம் இப்படி கொடையாளர்கள் தரும் நிதியிலிருந்துதான் நடந்து வருகிறது. அன்பு இல்லத்தின் நிர்வாகிகள் நேரடியாக இல்லத்துக்கு நன்கொடை கேட்டு கடிதம் எதுவும் எழுதுவதில்லை. அவர்கள் எப்பொழுதும் அங்கிருக்கும் குழந்தைகளை கடிதம் எழுதச் சொல்வார்கள். ஷாலினியும் அப்படித்தான் எழுதி இருப்பாள். எடுத்து படிக்கத் தொடங்கினாள்

அன்புள்ள அம்மா

     எங்களை எல்லாம் மறந்துட்டீங்களா? நான் இப்ப பக்கத்துலே இருக்கிற வள்ளலார் பள்ளியில்தான் சேர்ந்திருக்கேன். ஸ்கூல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க வரும்போதெல்லாம் எனக்கு டிராயிங் பென்சில், பிரஷ் கலர் பெயிண்ட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வருவீங்க, என்னோட பெயிண்டிங் கலர் எல்லாம் தீர்ந்துடுச்சு.. எப்ப வருவீங்க? அம்மா.. வாங்க.. ” 

அவ்வளவுதான் இவ்வளவு தொகை வேண்டும் அது இது எல்லாம் இருக்காது

“சரி நான் வரேன்னு சொல்லு” என்று கடிதத்தை பத்திரப்படுத்திக் கொண்டே எதிரில் அவள் இருப்பது போல சொன்னாள். ஒரு முறை கூத்துக் கலைஞர்களை அழைத்துச் சென்றிருக்கிறாள்... அவர்களுக்கு தருவதற்கு பணமில்லை என்றாலும் அங்கேயே அவர்களுக்காக கூத்து நடத்த மனம் மனம் இருந்தது.

நகைச்சுவையாக இருக்கட்டும் என்று வித்தியாசமாக தெனாலிராமன் கதைகளை கூத்துக்கான கதைக் களமாக ஆக்கி.. எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிட்டார்கள். இன்னொருதரம் அங்கு போகும் போது நாம எங்கக்கா அவங்களுக்கு பணம் கொடுக்கறது.? அடுத்தவங்களுக்கு தானம் கொடுக்கற அளவுக்கு நமக்கு வசதி இல்லையே என்று புலம்பியவர்கள், வள்ளல் பாரி நாடகம் போட்டுவிட்டு  அவர்களின் அன்பிலும் பாராட்டிலும்  நெகிழ்ந்து கையில் இருக்கும் ஐம்பது நூறை போட்டு கிட்டத்தட்ட 1200 ரூபாய் தந்துவிட்டார்கள்.

கண்டிப்பாக போய் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். தொலைக்காட்சியைப் பார்க்கலாம் என்று போட்டுவிட்டாள். குழந்தைகளின் பாடும் திறனை போட்டியாக்கி வெற்றி பெறுகிறவர்களுக்கு வீடு கார் என்று பரிசளிக்கும் நிகழ்ச்சி. குழந்தை ஒன்று மிக அற்புதமாக பாடிக் கொண்டிருந்தது மாற்றவியலாத அளவுக்கு அந்த குழந்தையின் குரல் அவளைக் கட்டிப் போட்டது. நிகழ்ச்சிக்கு இடையில் வந்த விளம்பரங்களைத் தவிர்க்க அடுத்தச் சேனலுக்குத் தாவினாள்.

செய்திச் சேனலில் யாரோ இருவர் காரசாரமாக மோதிக் கொண்டிருந்தனர். நெறியாளர் அவர்களை சமாதானப் படுத்த படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார், கீழே ஓடும் அப்போதைய செய்தியில் முன்னாள் அமைச்சர் கோதண்டபாணிக்கு கொரானா தொற்று உறுதி மருத்துவ மனையில் அனுமதி என்ற தகவல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது.

அதைப் படித்ததும் திக்கென்று ஆனது அமிர்தத்துக்கு.. இரண்டு நாட்கள் முன்பாகத்தானே அவரை சந்தித்துவிட்டு வந்தோம் கடைசி நேரத்தில் எதிர்பாராதபடி கைகளைப் பிடித்து வேறு ஆறுதல் சொன்னாரே..

தான் அங்கு இருந்த சமயத்தில்தானே ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் இருந்து ஸ்டாஃப் நர்ஸ் வந்ததாக அவரது பி.ஏ. சொன்னார் என்பது நினைவுக்கு வந்தது. எதற்கு வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தும் தன் கைகளைப் பிடித்து பேசியது எத்தனை அற்பமானது? மக்கள் நலப்பணியில் இருக்கிறோமே என்கிற அச்சம் ஏன் அவர்களுக்கு இல்லை என்று ஆத்திரமாக வந்தது அமிர்த்ததுக்கு..

ஆக இருமலும் தலைவலியும் அவர் கொடுத்த பரிசுதான் என்று தோன்றியது அவளுக்கு. செய்தித்தாளின் இடையே வைக்கப்படும் விளம்பர துண்டுப் பிரசுரத்தில் கொரானாவா இல்லையா தெரிந்துகொள்ள வேண்டுமா உங்கள் வீட்டுக்கே வந்து டெஸ்ட் செய்கிறோம் என்று படித்ததாக நினைவு. பரபரவென செய்தித்தாள் இருக்கும் மேஜை, அலமாரி என்று எல்லா இடத்திலும் தேடினாள். கடைசியாக குப்பைத்தொட்டியில் கிடைத்தது. அதை கையில் எடுத்து அதிலிருந்த எண்ணுக்கு போன் செய்தாள். பணத்தை ஆன்லைனில் அனுப்பிவிட்டால், அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக பதிலளித்தார்கள். போனை கட் செய்தாள். உடனடியாக மொபைல் வழியாக பணத்தை அனுப்பி வைத்தாள்.

எத்தனை எத்தனை வேலைகள் இருக்கிறது  ஒரு வேளை பாசிட்டிவ் என்று வந்துவிட்டால் தனிமைச் சிறை போல உள்ளுக்குள்ளேயே கிடக்க வேண்டுமே.. அதற்கு தேவையான பொருட்கள் இருக்காதே என்று ஞாபகம் வர குமாருக்கு போன் செய்தாள்.

இன்னும் அரை மணி நேரத்தில் வருவதாக குமார் சொன்னான். கொஞ்சம் பதட்டமானாலும் சட்டென சுதாகரித்து தனக்கு வேண்டிய மளிகை பொருட்கள், காய்கறிகள், மருந்துகள், முதலுதவி பொருட்கள் என தனித்தனியாக பட்டியல் போட்டாள். பணத்தையும் லிஸ்ட்டையும் எடுத்து வைத்தாள்.

லேப்பில் இருந்து இரண்டு பேர் மாஸ்க், கிளவுஸ், பாதுகாப்பு உடைகள் சகிதமாக வந்தார்கள். ஜன்னலுக்கு இந்தப் பக்கம் அவளை அமரச் சொல்லிவிட்டு அந்தப் பக்கத்தில் இருந்து டெஸ்ட்டுக்குத் தேவையான சேம்பிளை எடுத்துக் கொண்டனர். ஆதார் எண்ணை சரிபார்த்துவிட்டு முடிவு தெரிய ஒரு நாளாகும் அது வரை தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு அவர்கள் கிளம்பினர்.

அவர்கள் வீட்டை விட்டுச் சென்றதும் அமிர்தம் வாசலுக்கு வந்து ஒரு நிமிடம் நின்றாள். அவளைப் பார்த்ததும், எதிரி நாட்டு வீரன் துப்பாக்கியோடு நிற்பது போல பயந்து படபடவென அவரவர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளை சாத்திக் கொண்டனர். பார்வதியின் வீடு ஏற்கனவே சாத்திதான் இருந்தது ஒரு நொடியில் உலகம் அவளைத் தலையில் தூக்கி அப்படியே விசிறி அடித்தது போலத் தோன்றியது. .

ஆட்டோ குமார் வீட்டு வாசலுக்கு வருவது தூரத்தில் தெரிந்தது.. அமிர்தம் உள்ளே வந்து போனை எடுத்து குமாரின் எண்ணுக்கு அடித்தாள்.

”இதோ வீட்டு வாசலுக்கு வந்துட்டேன்கா”

“அங்கேயே இரு குமார். எனக்கு கொஞ்சம் இருமலும் தலைவலியும் இருந்துச்சு. அதனால ஒரு சந்தேகத்துக்கு டெஸ்ட் பண்ணிடலாம்னு பார்த்தேன். இப்பத்தான் வந்து டெஸ்ட் எடுத்துட்டு போறாங்க.. நாளைக்குத்தான் ரிசல்ட் வரும். எனக்கு கொஞ்சம் பொருள் தேவைப்படுது. லிஸ்ட்டும் பணமும் வெளியில வச்சிருக்கேன்.. வாங்கிட்டு வந்து தரமுடியுமா?”

“அதுக்கென்னக்கா தாராளமா.. டெஸ்ட்தானே எடுத்துட்டு போயிருக்காங்க அதுக்குள்ள கொரானாவே வந்துட்ட மாதிரி இப்படி பயப்படறீங்க.. சும்மா வெளியில வாங்க..”

“வேணாம் குமார்.. இதுல விளையாட்டு எல்லாம் கூடாது. வாங்கிட்டு வந்து வெளியிலேயே வச்சிடு. போன் பண்ணிட்டு சொல்லிட்டு நீ கிளம்பிடு நான் வந்து எடுத்துக்கறேன். பணம் கூடதான்... வச்சிருக்கேன் திருப்பி பாக்கி எல்லாம் தரவேண்டாம். உனக்காகத்தான் அதிகமா வச்சிருக்கேன்.

“என்னக்கா பணத்துக்காகவா உங்க கூட பழகுறேன் .. “

“இருக்கட்டும் குமார் இந்த இக்கட்டான சூழ்நிலையில உனக்கு ஏதாச்சும் உதவி செய்யணும்னு நினைச்சேன்.. தயங்காம எடுத்துக்க வேற ஏதாவது தேவைப்பட்டா நான் ஃபோன் பண்றேன் “

“சரிக்கா .. ஆமா என்னக்கா உங்க தெருவை யாராச்சும் கொள்ளையடிக்க வர்றாங்களா? எல்லாம் கதவை இழுத்து மூடிகிட்டு உள்ள இருக்காங்க”

அமிர்தம் சிரித்தாள்” எல்லாருக்கும்  பயம் இருக்கத்தானே செய்யும்”

“நாலாவது வீடு நீலக்கலர் பெயிண்ட் அடிச்சிருக்கே.. அந்த வீட்டு ஜன்னல்லேர்ந்து ஒரு அம்மா இங்கேயே பார்த்துகிட்டே இருக்கு.. உங்க வீட்டு வாசப்படியிலே கொரானா உக்காந்துட்டே இருக்கில்லே.. அதையே பார்த்துகிட்டு இருக்கு” சிரிக்காமல் குமார் சொல்ல கேட்டுவிட்டு அமிர்தம் அடக்கமாட்டாமல் சிரித்தாள்.

“சரி.. சரி அந்த கொரானா கழுதை உம்மேலே ஏறுறதுக்குள்ளே நீ கிளம்பிடு குமார்” என்று சொல்ல காற்றில் பறக்காமல் வைக்கப்பட்டிருந்த கல்லை எடுத்து தூக்கி எறிந்துவிட்டு பணத்தையும் லிஸ்ட்டையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அமிர்தம் அடுத்ததாதக செய்ய வேண்டிய விஷயங்களை மனசுக்குள் பட்டியலிட ஆரம்பித்தாள். அது அவளது பழக்கம். எப்பொழுதும் தன்னை பரபரப்பானவளாகவும், ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் திட்டமிட்டு பயன்படுத்துபவளாகவும், ஒரு நிமிடத்தைக்  கூட வீணாக செலவழிக்காதவளாகவும் வடிவமைத்துக் கொள்வதில் பெருமிதம் அவளுக்கு..

வளர்மதியின் எண்ணை எடுத்து அவளுக்கு போன் செய்தாள். ரிங் போய் நின்றது. புது எண்ணாக இருப்பதால் எடுக்கவில்லையோ என்னவோ,, அவளது பணி நெருக்கடி கூட காரணமாக இருக்கலாம்.. காத்திருப்போம்,, என்று நினைத்தபடி.. தனது நாட்குறிப்பு ஏட்டை கையில் எடுத்து அன்றைய தினத்தின் குறிப்புகளை எழுத ஆரம்பித்தாள். நீண்ட நாட்களாக எழுதாமலே இருந்து மஞ்சு பேசிய தினம் வாழ்வில் மறக்க முடியாத தினமாக அதனைக் கருதி அன்றிலிருந்து  மறுபடி எழுத ஆரம்பித்தாள் அமிர்தம்.

 

8 புகார் காண்டம்  

ஒரு நாள் விடிகிறது. சில நாட்கள் விடிந்தேன் முடிந்தேன் என்று ஒரு சராசரி மத்திய தர வர்க்க பிரதிநிதியைப் போல வாழ்ந்து மடிந்து போகிறது. இன்னொரு நாளோ துக்ககரமான நிமிடங்களை திணித்து, வாழ்க்கையைக் குறித்த அவநம்பிக்கையை அரிதாரமாக பூசி ஒரு மூலையில் அமரவைத்துவிடுகிறது. மிக மிக சில நேரம் வாழ்க்கை என்னும் தேனின் ருசியை துளித்துளியாய் பருகுவதே இப்பிறவியின் பேரானந்த பேறு என்று செல்வந்தனாக வாழவைக்கிறது. இயற்கையின்  விசித்திரம் என்பது இதுதானா? எழுதிவிட்டு பேனாவை மூடி வைக்கிறாள்.

சொக்கலிங்கத்தை வாத்தியாராக்கி பாட வைத்து அச்சாரம் தந்து என்ன துணிச்சலில் இதை எல்லாம் செய்கிறோம் என்று புரியாவிட்டாலும் நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்ய முடியும் என்று எந்தக் காரியத்தை செய்வதற்கும் முன்னும் நினைத்துக் கொள் என்று தனது தமிழாசிரியர் நாதமுனி சொன்னதை எப்பொழுதும் நினைத்துக் கொள்வாள்.

செல்போன் அடித்தது எடுத்தாள்.. வளர்மதிதான் .. நல்லவேளை பார்த்துவிட்டு அடிக்கிறாள்.. ஒரு நொடி யோசித்தாள்.. ஒரு கணம் தயங்கினாள். ஆனாலும் கடைசி நேர துணிவில்

“ஹலோ நிப்பான்..” என்று அழைக்க சட்டென்று மறுநொடி “எவடி அவ?” என்று வளர்மதி சீற சப்த நாடியும் அடங்கிப்போனது அமிர்தத்துக்கு..

“எவன்னு கேக்கறேன்ல.. “ மீண்டும் அதிகாரமாக வந்தது குரல்..

கல்லூரியில் படிக்கும்போதே ஆம்பளைக் காமாட்சின்னு இன்னொரு பெயர் உண்டு அவளுக்கு.. எதற்கும் அஞ்சாத பெண்புலி அது. முகமும் மூக்கும் சப்பையாக ஜப்பானிய பெண் போல இருப்பாள் என்பதால் நிப்பான் என்று பட்டப்பெயர்.

”அவ்வளவு துணிச்சல் இருக்கறவ பேர் சொல்ல வேண்டியதுதானே? மஞ்சு குரலாட்டம் இல்லையே..”

நிஜமாக மிரட்டவில்லை என்று அப்பொழுதுதான் புரிந்த்து அமிர்தத்துக்கு

“அமிர்தம்”

“குண்டு கழுதை குரலை கொஞ்சம் ஒசத்திட்டா ஒண்ணுக்கு விட்டுருவ போல இருக்கே..” கெக்கே கெக்கெ என்று சிரித்தாள் வளர்

“எப்படி பயந்துட்டேன் தெரியுமா?”

“இந்த டிபார்ட்மெண்ட்ல இருந்துட்டு இவ்வளவு கூட மிரட்டலைன்னா எப்படி? ஆமா எப்படிடி இருக்கே? இப்ப எங்க இருக்கே மெலட்டூரா.. கூடப்பாக்கமா”

“கூடப்பாக்கம் வந்துட்டேன்.. நீதான் டி.எஸ்.பி ஆயிட்டே அப்படின்னு மஞ்சு சொன்னா?”

“உன்னைப் பத்தி கேள்விப்பட்ட்தையும் சொன்னா.. என் கிட்டே சொல்லி இருந்தா லாடம் கட்டி இருப்பேன்.. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை அவன் எங்க இருக்கான் மட்டும் சொல்லு ரிவிட் அடிச்சிடறேன்.”

“அடிச்சு என்ன ஆகப்போகுது.. எல்லா அசிங்கத்தையும் பண்ணிட்டான். ஒரு வேளை அந்த நேரத்துல நீ இங்க வந்திருந்தின்னா கண்டிப்பா உன்கிட்ட சொல்லி உள்ளே தள்ளி இருப்பேன்.. டூ லேட்.. போகட்டும் விடு.. நீ எப்படி இருக்கே?”

“கத்தியும் ரத்தமுமா.. முட்டியும் லட்டியுமா இருக்கேன்.. எனக்கு திருப்தியான வேலைதான் பல சமயம் நாங்களும் கைதிதான் கௌரவமான கைதி.. விலங்கு இருக்காது.. ஆனா பயந்துகிட்டுதான் இருப்போம்.. இந்த ஏரியாவே எங்களுக்கு சிறை மாதிரி .. சொல்லு எப்ப வர வீட்டுக்கு இல்லை நான் வரட்டுமா?”

“இரண்டுமே இப்ப நடக்காது.. இன்னிக்குத்தான் டெஸ்ட்டுக்கு கொடுத்திருக்கேன்.. நெகட்டிவா இருந்தா பாக்கலாம்”

“பீ பாசிட்டிவ் பட் டோண்ட் கெட் பாசிட்டிவ்” என்று டைமிங்காக சொல்ல.. இருவருமே சிரித்தனர்..

“உன்னால எனக்கு ஒரு உதவி ஆகணும்”

“சொல்லு”

“நான் இங்கே ஒரு கிராமியக்கலைக் குழுவிலே இருக்கேன். அதுல மூத்தவர் ராசாங்கம்னு பேரு.. வாத்தியார்னு நாங்க சொல்லுவோம். அவருக்கு இப்ப பராலிஸ் அட்டாக் ஆகி பெட் ரிட்டனாக இருக்காரு. அவரோட வீடு இங்க கூடப்பாக்கத்துலதான் இருக்கு. ஆனா அவரு இப்ப உடல் நிலைக் காரணமா மகனோட பட்டுக்கோட்டையிலே இருக்காரு. ஒரு வட்டிக்கு விடற ஆள் அவரோட வீட்டை ஆக்ரமிச்சுகிட்டு வம்பு பண்றான்.. நாங்க எல்லாம் கூத்து நடத்த போகறதுக்கு முன்னால அவரு வீட்டுலதான் பூஜை போடுவொம் செண்டிமெண்ட்டா எங்களுக்கு அந்த வீட்டை மீட்டு அவர்கிட்ட கொடுக்கணும்னு ஆசை “

“வீடு லீகல அவர் பேர்லதான இருக்கு?”

“ஆமா.. நான் அவருக்கு கடனா பணம் குடுத்திருக்கேன்னு பொய் சொல்லிட்டு உக்காந்திருக்கான்”

“டீட்டெயிலா கம்ப்ளெயிண்ட் எழுதி ஸ்டேஷன்ல கொடுக்க சொல்லு நான் பாத்துக்கறேன் .. இந்த ஏரியாவுல இது மாதிரி நிறைய பயலுக அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டு இப்படி உக்காந்திருவானுங்க அதெல்லாம் தொரத்திடலாம் கவலைப்படாதே”

“அவரால வர முடியாத நிலைமை.. “

“ஒண்ணும் பிரச்சினை இல்லை.. மெயில்ல அனுப்ப சொல்லு.. என் மெயில் ஐடியை உனக்கு வாட்ஸப்புலே அனுப்பறேன். மிரட்டியே  விரட்டிடலாம்”

“தேங்க் யூ வளர்”

“ஓகே..பார்ப்போம்” இணைப்பைத் துண்டித்தாள்.

சொக்கலிங்கத்தைப் பிடித்து விஷயத்தை சொல்லிவிட்டு ராசாங்கத்தின் மகனுக்கு ஃபோன் செய்தாள். சுருக்கமாக அறிமுகம் செய்துகொண்டு பின்னர் வளர்மதியிடம் பேசியதை விளக்கமாக சொன்னாள்.

“அம்மா எனக்கு யாரையும் தெரியாது.. அவனை எதுக்கற வலுவும் இல்லை.. தெய்வம் மாதிரி நீங்க வந்து உதவறேன்னு சொல்றீங்க ரொம்ப நன்றிங்க”

“அதெல்லாம் இருக்கட்டும். நான் ஒரு மெயில் ஐடி அனுப்பறேன் அதுக்கு ஒரு கம்ப்ளெயிண்ட் அனுப்புங்க மத்ததை நான் பாத்துக்கறேன்”

“எனக்கு கம்ப்யூட்டர், மெயில், ஃபேஸ்புக் இதெல்லாம் எதுவும் தெரியாதுங்கம்மா ஃபோன் இருக்கறதால வாட்ஸப் மட்டும் அனுப்புவேன்”

ஒரு நிமிடம் யோசித்தாள்

“சரி நான் சில டீட்டெயில் கேட்டு வாட்ஸப்புல அனுப்பறேன் அதுக்கு எனக்கு தகவல் அனுப்புங்க அப்பாவுக்கு ஒரு மெயில் ஐடி க்ரியேட் பண்ணி நானே கம்ப்ளெயிண்ட்டை அனுப்பறேன்.. யாராவது கேட்டா எனக்கு மெயில் எப்படி அனுப்பறதுன்னு தெரியாது. அதனால அவங்களை என் சார்பா அனுப்பச் சொன்னேன்னு நீங்கதான் சொல்லணும் “  

”கண்டிப்பாம்மா”

ஃபோனை வைத்துவிட்டு மெயில் ஐடியை உருவாக்கத் தேவையான தகவல்களைக் கேட்டு ராசாங்கத்தின் மகனுக்கு வாட்ஸப்பில் அனுப்பி வைத்தாள்.

தொண்டைக்குள் பந்து போல் உருள்வதாகத் தோன்றியது, உடல் வெப்பம் அதிகரிப்பதையும் உணர முடிந்த்து. இருமல்களுக்கான இடைவெளி குறையத் தொடங்கியது. இனி ரிசல்ட் வந்துதான் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை என்று தோன்றியது

அடுப்பில் வென்னீர் போடுவதற்குள்ளாகவே அம்பது லொக் லொக் போட்டாகிவிட்டது. நன்கு கொதித்தவுடன் கல் உப்பு போட்டு கலக்கிவிட்டு பின்னர் காகுள் செய்தாள். சிறிது இதமாக இருந்தது.

வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்டது. குமாருக்கு போன் செய்தாள். போனை எடுத்த குமார் “வந்துட்டேன்கா நானே உள்ளே கொண்டு வந்து வச்சிடறேன்.. எல்லாம் ரொம்ப வெயிட்டா இருக்குக்கா”

“அப்படி ஏதாச்சும் செஞ்சிடுவேன்னுதான் போன் பண்றேன் வேண்டாம் குமார்.. இதுலெல்லாம் அலட்சியமா இருக்கக் கூடாது. அங்கேயே வச்சிடு கொஞ்சம் கொஞ்சமா எடுத்துக்கறேன் எனக்கும் பொழுது போகணும்லே”

“சரிக்கா”

எல்லாவற்றையும் வைத்துவிட்டு “ நான் கிளம்பறேன்கா” என்றான் குமார்.

“தேங்க்ஸ் குமார் ” அவன் கிளம்பியதை உறுதி செய்துவிட்டு பின்னர் ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் எடுத்து வந்து வைத்தாள். உண்மையில் முடியவில்லைதான். எடை அதிகம் என்பது மட்டுமல்ல இவள் உடல் பலகீனம் என்பதும் காரணம்.

ராசாங்கத்தின் மகனிடமிருந்து கேட்கப்பட்ட தகவல்கள் வந்திருந்தன. அவற்றை வைத்துக்கொண்டு மின்னஞ்சல் முகவரியை ராசாங்கத்தின் புகைப்படத்தோடு உருவாக்கினாள்.

பின்னர் காவல்துறைத் துணை கண்காணிப்பாளருக்கு புகார் ஒன்றை டைப் செய்ய ஆரம்பித்தாள்.

அனுப்புதல்

     கு. இராசாங்கம்

     10/12, முருகன் கோயில் தெரு,

     பட்டுக்கோட்டை

பெறுதல்

உயர்திரு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அவர்கள்

காவல் துறை

புதுச்சேரி

உயர்திரு காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு..  

நான் முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக புதுவை கனகசெட்டிக்குளம் சிவன் கோயில் மாடத்தெருவில் இலக்கம் 19 என்ற எனது இல்லத்தில் எனது குடும்பத்தினருடன் வசித்து வந்தேன். மேற்படி இல்லம் பாரம்பரியமாக என் தந்தை வழி சொத்தாகும். அந்த வீட்டின் சட்டப்படியான பத்திரங்கள், வரி செலுத்திய ஆவணங்கள், மின்கட்டணம் செலுத்திய ரசீதுகள் அனைத்தும் என் பெயரில் என் வசம் பத்திரமாக உள்ளன. தற்சமயம் பக்கவாத நோய் காரணமாக என்னுடைய மகனின் வீட்டில் பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறேன். மேற்படி எனக்குச் சொந்தமான இல்லத்தை வட்டி வியாபாரம் செய்யும் சீனுவாசன் என்பவர் ஆக்ரமித்துக் கொண்டு நான் அவருக்குத் தரவேண்டிய கடனுக்காக வீட்டை எடுத்துக் கொண்டதாக பொய்யான தகவலை பரப்பிக்கொண்டு இருக்கிறார். நான் அவரிடம் கடன் எதுவும் வாங்கவில்லை. அப்படி என் வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றதாக அவர் எதுவும் ஆவணம் வைத்திருந்தால் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி சட்ட ரீதியான எந்தச் செயலையும் செய்யலாம் இப்படி முறையான ஆவணம் எதுவும் இல்லாமல் அடியாட்களைக் கொண்டு என்னையும் என் மகனையும் அச்சுறுத்தி வீட்டை அநீதியாக அபகரித்துக் கொண்டு அந்த வீட்டை அவரது பயன்பாட்டுக்கு வைத்திருக்கிறார். எனவே தாங்கள் எனது இல்லத்தை அடாவடியாக ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் சீனிவாசனை வெளியேற்றி எனது வீட்டை எனக்கே மீட்டுத் தருமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்

இணைப்பு

எனது இல்லம் தொடர்பான ஆவணங்களின் நகல்கள்

                                ஒப்பம்/

                                கு. இராசாங்கம்

மின்னஞ்சலை வளர்மதிக்கு அனுப்பி வைத்துவிட்டு பிரிண்டரில் இன்னொரு நகலை பிரதி எடுத்து தன்னுடைய ஃபைலில் வைத்துக் கொண்டாள்.

9. தொட்டு தொடர்ந்த தொற்று

ரு காலத்தில் தெருக்கூத்துக் கலைஞர்களின் உருவத்தை சுவரில் வரைந்து கிராமத்தில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் நடக்கவிருக்கும் தெருக்கூத்து நிகழ்ச்சி பற்றி அறிவிப்பார்களாம். டிஜிட்டல் பேனர்கள் இல்லாத காலம் அது. திரைப்படக் கலைஞர்களுக்கு மாநிலம் முழுதும் இரசிகர்கள் இருப்பார்கள். தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு அவரவர்கள் வட்டாரத்தில் ரசிகர் கூட்டம் இருக்கும்.

வருடம் முழுக்க உழைத்துவிட்டு திருவிழாக்கள் எப்பொழுது  வரும் என்று தெருக்கூத்துக்காக காத்திருக்கும் கிராமத்தினர் இருந்தார்கள். இராசாங்கத்துக்கு அப்படியான இரசிகர்கள் இருந்தார்கள் என்று பொன்னுச்சாமி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறாள் அமிர்தம். டிஜிட்டல்களால் நிரம்பிய இன்றைய சூழலில் தான் நடிக்கும் தெருக்கூத்து பற்றிய அறிவிப்பு பேனர்களில் ஒரு காலத்தில் வரும் என்று நம்பிக் கொண்டிருந்த பல அப்பாவிக் கலைஞர்களில் அமிர்தமும் ஒருத்தி. அப்படி ஒரு காலம் வரவே இல்லை.  ஆனால் அவளது வீட்டின் முன் இது தடை செய்யப்பட்ட பகுதி கொரானா தொற்று உள்ள வீடு என்கிற அறிவிப்போடு தொங்க விடப்பட்ட டிஜிட்டல் பேனரும் சுற்றி கட்டையால் வைக்கப்பட்ட மரவேலியும் அவளை இந்த உலகின் தனி மனுஷியாக மாற்றிவிட்டது.

இரண்டு நாட்களாக விட்டு விட்டு அடிக்கும் காய்ச்சல் அவளது தற்காலிக சிகிச்சை முறைகளை கேலி செய்வது போல வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. ஃபோன் வழியாக பேசினால் கூட தொற்றிவிடுமோ என்கிற அச்சத்தில் அவளுடன் யாரும் பேசுவதில்லை. ராசாங்கத்தின் மகன் ஒன்றிரண்டு முறை பேசினார். ஆட்டோ குமார் ’அக்கா எதாச்சும் வேணுமா? என்று அவ்வப்பொழுது கேட்டதோடு சரி.

பார்வதி, ஜெயலட்சுமி என எல்லோரும் சைலண்ட் மோடில் போய்விட்டார்கள். மஞ்சு மட்டும் அவ்வப்பொழுது  பேசினாள். வளர்மதி மின்னஞ்சல் வந்தத் தகவலை சொல்லிவிட்டு தான் பார்த்துக் கொள்கிறேன் என்று போனை வைத்தவள் அப்புறம் பேசவில்லை.

பாசிட்டிவ் என்ற தகவல் குறுஞ்செய்தியாக முதலில் வந்த்து. அதன் பிறகு தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை ஊழியர் “என்னென்ன அறிகுறிகள் தெரிகின்றன? என்று கேட்க..

அப்போதைக்கு லேசான இருமல் மட்டும் இருந்தது என்பதால் அதை மட்டுமே சொன்னாள். வீட்டில் யாருமில்லை தான் மட்டுமே தனியாக இருப்பதாக சொன்னதைக் கேட்ட அந்த ஊழியர் அப்படியானால் வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள் மருத்துவமனையில் போதிய இடமில்லை. மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களை மட்டுமே இப்போதைக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கிறோம் என்கிற தனது நிலையைச் சொல்லி வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார். ஒரு வகையில் அது தனக்கு நிம்மதி அளித்தது என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டாள்.

ஆனால் புத்தகம் வாசித்தல், தொலைக்காட்சி, வீட்டை ஒழுங்கு படுத்துதல் என்று எத்தனைதான் தன்னை அவற்றில் ஈடுபடுத்திக் கொள்ள முனைந்தாலும் முழுமையாக எதிலும் முங்கி எழுந்திரிக்க முடியவில்லை. ஒரு புத்தகத்தை அதனை வாசிப்பதற்கென்றே தேர்வு செய்து நேரம் ஒதுக்கி, வாகான இடம் அமைத்துக் கொண்டு   வாசித்தால் அந்தப் புத்தகம் வாசிப்பவரை வாரி அணைத்துக் கொள்ளும். தன்னை அவரிடம் முழுமையாக நிரப்பிக் கொள்ளும். ஆனால் தனிமையை விரட்ட, மனக்குழப்பத்தை போக்க, துக்கத்தை தடவிக் கொடுக்க என்று புத்தகத்தை மேலோட்டமாக மேய முற்பட்டால் அந்தப் புத்தகம் அதனை எளிதாகக் கண்டுபிடித்துவிடும். அதன்பிறகு அந்தப் புத்தகம் அவரை எளிதில் நுழையவோ, தொடரவோ விடாது. பலநேரம் அதனை உணர்ந்திருக்கிறாள் அமிர்தம்.

தனிமையை ஒரு படைப்பாளன் விரும்பி இரு கைகளில் ஏந்திக்கொள்ளலாம். புதிதாய் காதலிக்கத் துவங்கியவர்கள் தேடித்தேடி ரசிக்கலாம். ஆனால் இலட்சியங்களுக்காக வாழ்பவர்கள், பரந்துப்பட்ட இந்த உலகை அணுவணுவாக நேசிப்பவர்களால் ஒருபோதும் தனிமையை விரும்ப முடியாது. அதுவும் நோய் ஒன்று உடலை ஆக்ரமித்திருக்கையில் மனம் இயல்பாக மனிதர்களைத் தேட ஆரம்பித்து விடுகிறது. அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்பா எல்லா தலைமுறையினராலும் நேசிக்கப்படக் கூடியவராக தன்னை ஒவ்வொரு நாளும் செதுக்கிக் கொண்டே இருப்பவர்,

நல்லுசாமியை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று தன்னைக் கட்டாயப்படுத்தவே இல்லை. உண்மையில் அவர் நல்லுசாமியிடம் ஏமாந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் தனது தேன் தடவிய உதடுகளால் வார்த்தைகளில் இனிப்பைக் குழைத்து மெல்ல மெல்ல அவருக்கு ஒவ்வொரு விள்ளலாக தந்திருக்கிறான். அது விஷம் என்று அறியாமலே விழுங்கி இருக்கிறார். எப்பொழுது எது கிடைத்தாலும்  தருவது போல வேடிக்கைப் பார்த்த தனக்கும் ஊட்டி இருக்கிறார். நல்லவர்களெல்லாம் திறமையானவர்கள் அல்ல எல்லாவற்றையும் முன்கூட்டித் தீர்மானிக்க அவர் தீர்க்கதரிசியும் அல்ல. மற்றபடி எல்லா விஷயத்திலும் அவளது விருப்பம் எதுவோ அது எத்தனை வலி தருவதாய் இருந்தாலும் அதற்கு தன்னை ஒப்புக் கொடுத்திருக்கிறார்.

கொரோனா பற்றிய தகவல்களை அதிகம் கவனம் செலுத்தி படித்தால் அதுவே தன்னை வலுவிழக்கச் செய்துவிடும் என்று அவற்றை தவிர்த்தாள். வாட்ஸப்பை திறந்தால் ஆயிரம் ஆலோசனைகள், அச்சுறுத்தல்கள், லட்சம் மருத்துவ குறிப்புகள். தொலைக்காட்சி செய்திகளும் அப்படியே.. ஆக எதை தான் விரட்ட நினைக்கிறோமோ அதுவே தன்னைத் துரத்தி துரத்தி வருவது போன்ற மாயை அவளைச் சுற்றியபடியே இருந்தது. .. ஒரு சில சமயம் தன்னுடைய உறுப்புக்களைத் தானே தொட்டதற்காக அச்சத்தில் கைகழுவுகிறோமோ என்று கூடத் தோன்றியது.

ஜன்னலைத் திறந்தால் வீதிகளில் முகமூடி அணிந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுபிடிக்கும் விளையாட்டை அல்லது போட்டியை நிகழ்த்திக் கொண்டிருப்பது போல இருந்தது.

அலைபேசி அழைத்தது.. இராசாங்கத்தின் மகன்தான்.

“ரொம்ப நன்றிங்கம்மா.. உங்களை வாழ்நாள்லே மறக்கவே மாட்டேன். அப்பாவுக்கு பேசமுடியலை.. வாய் சுத்தமா இழுத்துகிச்சு..டிவி யில நியூஸ்ல போட்டுகிட்டு இருக்காங்க அப்பாகிட்ட காமிச்சேன். அவரு கண்ணிலேர்ந்து தாரைத் தாரையா தண்ணி வந்துகிட்டே இருக்குங்கம்மா.. ரெண்டு கையெடுத்து கும்பிட்டாரு.. அந்தக் கும்பிடு உங்களுக்குதாம்மா.. பையன் காலேஜ் போயிருக்கான். அவன் வந்ததும்.. ஏதோ ஸ்கைப்பாம்லே அதுல அவரைக் காமிக்கிறேன்... இல்லை வாட்ஸப்புலேயே பேசலாமாமே  எனக்கு எப்படின்னு தெரியலிங்கம்மா.. நான் தற்குறி எழுதப் படிக்கத் தெரியாது.. நேரா வரணும்னுதான் நெனைச்சேன் உங்களுக்கு கொரானான்னு கேள்விப்பட்டேன். சொக்கு அண்ணாச்சிக்கு தெரியாதுங்களா? ஜெயலட்சுமிதான் போன் பண்ணி சொல்லிச்சு .. பயப்படாதீங்கம்மா சரியாயிடும் அப்புறமா வந்து பாக்கறேன்” என்றார் தழுதழுத்தக் குரலில்..

“பரவாயில்லைங்க.. ஏதோ இத்தனை நாளு எங்களுக்கு வாத்தியாரா இருந்தவருக்கு என்னால ஆன குருதட்சிணை” இரண்டு வரி பேசுவதற்குள் மூச்சு இறைத்தது..

அந்தப்பக்கம் இருந்தவர் “மூச்சு இறைக்குதா’ என்று கேட்கக் கூட பயந்து மவுனத்தை சிறிது நேரம் படரவிட்டு பின்னர் ”வச்சிடட்டுங்களா” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் வைத்துவிட்டார்.

தொலைக்காட்சியை ’ஆன்’ செய்தாள். செய்திச் சேனலில் சில நிமிடங்களுக்குப் பிறகு அந்தச் செய்தி ஒளிபரப்பானது. வட்டி சீனிவாசனை கைது செய்து வாகனத்தில் ஏற்றுவது திரும்பத்திரும்பக் காண்பிக்கப்பட்டது. தெருகூத்துக்கலைஞர் வீட்டை கந்து வட்டிக்காரர் கொலை செய்வதாக மிரட்டி பிடுங்கிக் கொண்டதாக ஒரு அச்சம் தரும் இசை பின்னணியில் வயிற்றைக் கலக்கும் குரலில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இராசாங்கத்தின் புகைப்படம் காண்பிக்கப்பட்டது. வளர்மதியின் கம்பீர நடை ஒளிபரப்பானது. ‘இனி இந்த நகரத்தில் யாரும் அராஜகமாக வட்டிப் பணத்துக்காக எவரையாவது மிரட்டினால் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்’ என்று வளர்மதி எச்சரித்ததாக செய்தியாளர் சொல்லிக் கொண்டிருந்தார். மூச்சு வாங்குவது சிரமமாக இருந்தாலும் நிம்மதி பெருமூச்சு ஒன்று மெலிதாக அதில் கலந்திருந்ததை அவள் உணர்ந்து கொண்டாள்.

தனது இறுதி நாட்கள் நெருங்குவதாக முதன்முதலாக அவளுக்குத் தோன்றியது. தனக்கு குழந்தை இல்லாததை நினைத்து ஒரு கணம் அவள் கவலைப் பட்டாலும் நல்ல வேளையாக இல்லை என்று ஆறுதல் பட்டுக்கொண்டாள். எல்லாம் இருந்தும் அனாதை போல ஒரு அறையில் ஒரு வாரம் அடைபட்டிருந்ததே வலிமிகுந்த துயராக இருந்தது என்றால் வாழ்க்கை முழுக்க தனிமை என்பது மாபெரும் கொடுமை இல்லையா? ஒரு வேளை நல்லுசாமி அப்படியே ஒரு கொடூரனாக இருந்ததும் நல்லதே என்று நினைத்துக் கொண்டாள். குணம் மாறி அன்போ அல்லது இனம் தெரியாத பற்றோ இருவரையும் தொற்றி இருந்தால் இந்த உலகம் பிரிந்து போக முடியாத ஒன்றாக இருந்திருக்கும்.. எல்லோருக்கும் இப்படி மரணம் வந்து அருகில் அமர்வது தெரிய நேரிட்டால் எல்லா பந்தங்களையும் அறுத்து எறிவதும் வலி தெரியாததாக இருக்கும்தானே...

யாரிடமும் எதுவும் சொல்லாமல் இப்படியே இருந்துவிடலாம். கதவிடுக்கின் வழியே வந்து தரையில் விழும் வெய்யிலின் சிறுவட்டம் போல மரணம் தன்னைத் தழுவட்டுமே என்றுதான் நினைத்தாள். ஆனால் தன்னுடலை நெருங்கி எடுத்து சுமந்து சென்று வண்டியில் ஏற்றும் இடர்மிகு பணியை யார் ஏற்றுக்கொண்டாலும் அது கசப்பான தருணமாகத்தானே இருக்கும்?

ஆக தானே பொது மருத்துவமனைக்கு ஃபோன் செய்து தன்னைத் தானே ஆம்புலேன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொள்ளலாம். பூமியின் முகத்தில் இந்த  வீடு தீநுண்மி தொற்றிய தேமல் போல துருத்திக் கொண்டு நிற்க வேண்டாம். இந்த உலகத்துக்கு இந்த அழகிய உடல், உயிருள்ள வரைதான், நோய் தீண்டாத வரைதான் அதிசயப் பொக்கிஷம்.. அதன் பிறகு துர்நாற்றம் நிரப்பபட்ட வெறும் தோல் பை. எவருமே தீண்ட விரும்பாத கிழிந்து நைந்துபோன பை..

ஃபோன் செய்வதற்கு முன் தனது இந்த வீட்டையும் தஞ்சாவூர் வீட்டையும் தன் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் என தனது தந்தை அனுமதி அளித்ததனால் அது பற்றிய உயில் கடிதத்தை எழுதிவைத்துவிட்டு ஃபோன் செய்யலாம் என்று ஒரு காகிதத்தையும்  பேனாவையும் எடுத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.

வணக்கம்...  

இந்தக் கடிதத்தை யார் வாசிக்கப் போகிறார்கள் என்று தெரியாமலேயே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

உலகத்தின் மிக விசித்திரமான கடிதம் இது என்று கூட நீங்கள் நினைக்கலாம்.. பதில் எதிர்பாராத கடிதம். வாசிக்கின்றவர்கள் யாராக இருப்பினும் மெலட்டூர் கிராமத்தில் மேல சன்னதித் தெருவில் வசிக்கும் சாமிநாதன் மகள் அமிர்தம் எழுதிய இக்கடிதத்தை என்னுடைய உயிலாக கருதலாம். என் முழு சுய நினைவோடும் சம்மதத்துடனும் எழுதிய உயில் கடிதம் என்று நான் உறுதி அளிக்கின்றேன். வேறு யாரும் முன்னிலையாக இருக்க முடியாத, சாட்சிக் கையெழுத்து இடமுடியாத பெருந்தொற்று நோய் காலத்தில் எழுதப்படுவதால் இக்கடிதத்துக்கு நானே உறுதி அளிப்பவளாகவும், சாட்சியாகவும் இருக்கின்றேன். கொரானாத் தொற்று என்னையும் ஆட்கொண்டு இப்பொழுது என்னை அது தின்றுத் தீர்த்துவிடும் சூழலில் இந்த பூமியில் நான் பிறந்ததற்கான அர்த்தத்தைத் தேடி ஒவ்வொரு நிமிடமும் என்னை நான் இயக்கிக் கொண்டு இருந்தேன்.

ஆனால் இன்று என் இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கையில் அகன்ற வானின் நட்சத்திரம் ஒவ்வொன்றையும் புரட்டிப் புரட்டிப் பார்ப்பது போல என் கேள்விக்கான விடையைத் தேடிக்கொண்டிருக்க முடியாது.

இந்த உலகம் அறங்களால் வாழ்கிறது அல்லது வாழவைக்கப் படுகிறது என்று திடமாக நம்புபவள் நான். ‘அறங்களை’ கலையும் இலக்கியமுமே யுகம் யுகமாய் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்கின்றன. இன்று நிலைத்திருக்கும் கலை இலக்கியங்கள் யாவும் வாய்மொழியாக வழிவழியாக சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த கதைகளினால் வளர்ந்தவையே.... ஒரு நல்ல கதை சொல்லி உங்களை அறியாமல் உங்களுக்குள் தர்மத்தையும் அறத்தையும் தூவுகின்றான். ஒரு பறவை போல சொற்கள் அந்த விதைகளை உங்கள் இதயத்தின் ஆழத்தில் விதைக்கின்றன.

நீங்கள் இன்று உள்வாங்கும் அத்தனை போதனைகளும், பெறும் அத்தனைக் கனிகளும் உங்களுக்குள் வளர்ந்த அந்த விருட்சங்களின் பிள்ளைகளே.. உலகின் மூத்த கலை தெருக்கூத்துதான் என்று நான் திடமாக நம்புகிறேன். ஒரு கலையை நிகழ்த்துபவனும் அந்தக் கலையை கிரகிப்பவனும் ஒன்றிணையும் மகத்தான தருணத்தை தெருக்கூத்தில் மட்டுமே தரிசிக்க இயலும். முத்தமிழும் இணைந்திருக்கும் கலையும் அதுவே. ஆகவேதான் தெருக்கூத்து என் உயிரோடு கலந்துவிட்டது. நான் வாழ்ந்த தருணங்களை தெருக்கூத்தில் நடித்த நேரங்களில் மட்டுமே உணர்ந்திருக்கின்றேன்.

என்னுடைய வாழ்க்கை சக மனிதர்களின் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் தோற்றுப்போன ஒன்றுதான். ஆனால் என் வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கின்றேன். சராசரி பெண்கள் அனுபவித்த காதல், இல்லறத்துணையின் பேரன்பு, தாயன்பின் உன்னதம் எதையும் நான் அனுபவித்ததில்லை. ஆனால் கலையை அதன் உச்சபட்ச ஆனந்தத்தை தரிசித்திருக்கிறேன்.

கூத்துக்கலைஞர்கள் அசாத்திய திறன் கொண்டவர்கள். முதலில் அவர்களுக்கு மனனம் செய்யும் திறன் இருக்க வேண்டும். உச்சபட்ச ஒலியளவில் குரல் எழும்பவேண்டும். சமயத்திற்கு தகுந்தாற்போல சமாளிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட இரவுமுழுக்க விழித்தபடி, கூத்தில் அங்கும் இங்குமாக இயங்கியபடி சலிப்பின்றி  எழும்பி  ஆடும் சக்தியும் இருக்க வேண்டும். இப்படி எல்லாமுமாக இருந்தாலும் பல சமயம் கடினமாக உழைத்ததற்கான பலன் கிடைக்காமல் போய்விடும். அதையும் எதிர்கொள்ளும் மனநிலையோடு தொடர்ந்து நடிக்கும் பக்குவம் இருக்க வேண்டும். யாரோடும் ஒப்பிட முடியாத மகத்தான கலைஞர்கள் இன்று கான்க்ரீட் கற்களை சுமந்தபடியும், சேறு மிதித்த படியும் அன்றாட சோற்றுக்காக அல்லாடியபடியும் இருப்பதை காலம் கருணையின்றி பார்த்துக் கொண்டிருக்கிறது. அள்ளி அள்ளி தந்த பாரி வேடமிட்ட துரைராசு இன்று பெற்ற மகளுக்காக மனைவியை  கையேந்தும் நிலையில் வைத்திருக்கிறான். ‘போரில் இறப்பது வீரமடா.. களத்தில் போர்க் களத்தில் உயிர் துறப்பது தீரமடா’  என்று கூத்தில் எக்காளமிட்ட பரஞ்சோதி மகனின் உயிரை காப்பற்ற முடியாமல் தூக்கிட்டு செத்துப் போனது துயரமில்லையா? இதை இந்த உலகம் நன்றியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.   ஆனால் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

என் பெயரில் எழுதப்பட்ட இந்த கூடப்பாக்கம் வீட்டை செந்தமிழ் கிராமியக் கலைக்குழுவுக்கு நான் அதன் வளர்ச்சிக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் மனமுவந்து நன்கொடையாக அளிக்கின்றேன். தஞ்சாவூரில் என் பெயரில் இருக்கும் இரண்டு வீடுகளையும் என் தந்தையின் வசம் திரும்ப ஒப்படைக்கின்றேன். அவர் தன் விருப்பம் போல அவற்றை பராமரித்து பயன்பாட்டில் வைத்துக் கொள்ள சகல உரிமைகளும் உண்டு. செந்தமிழ் கிராமியக்கலைக் குழு முறைப்படியான நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்கள் இந்தக் கூடப்பாக்கம் வீட்டினை கலை வளர்ச்சிக்காகவும் , குழு பயன்பாட்டுக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.

வங்கியில் என் பெயரில் உள்ள பத்து லட்சம் ரூபாயை என் சக கலைஞர்கள் சொக்கலிங்கம், பொன்னுசாமி, மூஞ்சூறு, துரைராசு, ஆறுமுகம், கல்லாப்பெட்டி, அந்தோணி ஆகியோர் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டியது. அதற்கு நன்றிக்கடனாக அவர்களை நான் கேட்டுக்கொள்வது ‘இந்தக் கலையை வாழ வையுங்கள்...’

கணபதி வந்தனம்.. சுந்தர கணபதி வந்தனம்..
வந்தனம் தந்தனம் இங்ஙனம் சுந்தர கணபதி வந்தனம்.

வழக்கமாக கூத்தின் துவக்கத்தில்தான் இந்தப் பாடலை பாடுவோம்... இதுவே தொடக்கமாக இருக்கட்டும்..

                போய் வருகிறேன்

                                     அமிர்தம்

கடிதத்தை இன்னொரு முறை படித்துப் பார்த்த அமிர்தம் தன்னுடைய மனக் குமுறல்கள், வலிகள், கனவுகள் என எல்லாவற்றையும் நினைத்தது போல எழுத்தில் கொண்டு வரமுடியவில்லை என்பதை உணர்ந்தாள். ஆனாலும் எதைச் செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்துவிட்டதாக திருப்தியானாள். கண்ணாடியைக் கழற்றி அதனை அதன் கூட்டுக்குள் வைத்தாள்.  கடிதத்தை மடித்து காற்றில் பறந்துவிடாமல் இருக்க அதன் மீது தன் கண்ணாடிக் கூட்டினை வைத்தாள்.

மருத்துவமனைக்கு ஃபோன் செய்தாள். தன்னுடைய நிலையை அவர்களுக்குச் சொல்லும் போதே மூச்சிரைத்தது. அந்தப் பக்கம் இருந்தவர் அதனைப் புரிந்து கொண்டு உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைப்பதாக சொன்னார். கண்கள் தணலாக கொதித்தன. எழுந்து நடக்கவே சிரமப்பட்டாள். தன்னுடைய உடைமைகளை , மாத்திரைகளை, அவசரத்துக்குத் தேவைப்படும் போர்வை, தட்டு , டம்ளர், ஃபிளாஸ்க் இத்தியாதிகளையும்  ஒரு பையில் எடுத்து வைத்தாள். தண்ணீர் குடிக்க பாட்டிலை எடுத்து வைக்கப் போனவள் அவளையும் அறியாமல் தடுமாறிக் கீழே விழுந்தாள். அவ்வளவுதான் அவள் இறுதியாக நினைவில் இருந்தவை.

10 மண் தின்னும் உடல்..

ஆம்புலேன்ஸ் வந்து வாசலில் நின்றதும் கவச உடை அணிந்த மனிதர்கள் அவளை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்துக் கொண்டு எடுத்துப் போனது எதுவும் அவளுக்குத் தெரியாது. தெருவில் உள்ளவர்களுக்கும் தெரியாது. அவள் எப்பொழுது வருவாள் என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அவள் எப்பொழுது போனாள் என்பதை அறிய விரும்பாதவர்களாக இருந்தார்கள். எல்லா அதிகார மட்டத்தையும் அறிந்து வைத்திருந்த அமிர்தம் சட்டென யாருமற்ற அனாதையாக மாறிப்போனாள். கருணையுள்ள மருத்துவ ஊழியன் ஒருவன் அவளை ஏற்றிய பிறகு அவளின் பையை எடுத்துக் கொண்டு கதவை நாய் எதுவும் நுழைந்துவிடக் கூடது என்கிற நல்லெண்ணத்தில் சாத்திவிட்டு வண்டியில் ஏறினான். முதன் முதலாக அந்த வீடு திறந்தே கிடக்கிறது என்பது தெரிந்தும் எவருமே நுழைய விரும்பவில்லை...

ரண்டு நாட்கள் கழித்து அமிர்தத்துக்கு ஃபோன் செய்து பார்த்துவிட்டு அவளது ஃபோனை அவள் எடுக்கவில்லை என்று தெரிந்து குமார் அவள் வீட்டருகே வந்து பார்த்துவிட்டு பார்வதியின் வீட்டுக்குச் சென்று அவளிடம் விசாரித்தான். அவள் கதவுக்கு உள்புறமாக நின்று கொண்டு முகத்தைக் கூட காண்பிக்காமல் பொது மருத்துவமனை ஆம்புலேன்ஸ் வந்து ஏற்றிக்கொண்டு போன விவரத்தை மெல்லிய குரலில் எந்த சலனமும் இன்றி சொன்னாள். குரலில் பச்சாதாபம் காட்டினால் எங்கே உள்ளே வந்து போய் பார்த்துவிட்டு வரலாமா என்று கேட்பானோ என்ற அச்சத்தில் செயற்கையான அலட்சியத்தை செயலிலும் குரலிலும் காட்டினாள்..

பதட்டமான குமார் அவளிடம் அமிர்தத்தின் அப்பாவின் போன் நம்பர் அல்லது சொக்கலிங்கத்தின் போன் நம்பர் இருக்கா என்று கேட்டான். எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டு அடுத்த கேள்வியைக் கேட்கும் முன் உள்ளே சென்றுவிட்டாள்..

மருத்துவமனையை நோக்கி வண்டியை அவசரமாக செலுத்தினான்.

கொரானா எமர்ஜென்சி வார்டில் அவள் ஆக்சிஜனின் உதவியோடு படுத்திருப்பதாக நூறு ரூபாய் உபயத்தில் ஒரு மருத்துவமனை ஊழியன் தகவல் சொன்னான். யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டான். செய்வறியாது திகைத்த ஆட்டோ குமார் நினைவுகளை உருட்டித் திரட்டி மல்லிகாவின் நம்பரை தன் செல்போனில் கண்டுபிடித்து அவளிடம் தகவலைத் தெரிவிக்க முயற்சித்தான். நான்கைந்து முறை முயற்சித்த பிறகு அவள் லைனில் வந்தாள்.

“அம்மா நான் ஆட்டோ குமார் பேசறேன்.. இங்க அமிர்தம் அக்கா உடம்புக்கு ரொம்ப முடியாம கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகி இருக்காங்க பேச்சு மூச்சு இல்லையாம்.. என்ன பண்றதுன்னு புரியலை..நீ செத்த வர முடியுமாம்மா?”

“தெய்வமே .. என்னப்பா சொல்றே? ஈரக்குலை நடுங்குதே.. அந்த மவராசிக்கு இப்படி ஒரு கஷ்டமா?.. விடிய காலை ஆறு ஏழரைக்குள்ள மவளுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். கொரானாவால கோயில்ல வச்சிக்கலாம்னு மாப்பிள்ளை வீட்டுலே சொல்லிட்டாங்க எங்க கிராமத்து கோயில்ல அதிகம் யாரையும் கூப்பிடாம வச்சிட்டோம்பா. அந்தம்மாவுக்கு ரெண்டு நாளா போன் பண்ணிட்டு இருந்தேன் அந்த அம்மா எடுக்கலையே..”

“ஏம்மா இவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்காங்க ஒரு எட்டு வந்து பார்த்திருக்க கூடாது? அநாதை மாதிரி ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்கம்மா” தன்னையும் அறியாமல் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்..

“அழாத ராசா.. கல்யாணத்தை திடீர்னு வச்சிட்டோம் ஒத்தை பொம்பளை நான் என்ன பண்ணுவேன் பஸ்  ஓடலைன்னு என் வூட்டுக்காரன் இன்னும் வந்து சேரலை சாமி.. காராவது வச்சி வந்து சேருன்னு சொல்லி இருக்கேன் எனுமோ பாஸ் கிடைக்கலைன்னு சொல்றான் அந்த உதவாக்கரை.. நான் என்னத்தை பண்ணுவேன்?”

“சரி ஒண்ணு செய்யி எப்படியாச்சும் இங்க இருக்கிற அவங்களோட தெருக்கூத்து ஆளு யாராச்சும் தெரிஞ்சா அவங்களுக்கு தகவல் சொல்லி ஜி.எச்.சுக்கு வந்து இருக்க சொல்லு நான் மெலட்டூர் போயி அவங்கப்பாவை எப்படியாவது கண்டுபிடிச்சு தகவலைச் சொல்லி அவரைக் கூட்டியாரேன் “

“சொக்கலிங்கம்னு ஒருத்தரு இருக்காரு அவருக்கு சேதி சொல்லி வரச்சொல்றேன் கல்யாணத்தை முடிச்சிட்டு பொண்ணு மாப்பிள்ளையை அவங்க ஊட்டுக்கு அனுப்பி வச்சிட்டு எப்படியாச்சும் அங்க வந்துடறேன்”

“சரிம்மா அவரை வரச் சொல்லும்மா” ஃபோனை கட் செய்தான். ஆட்டோவை பஸ்ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு கூட்டாளி மணியிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு பஸ் ஏறினான்.

சொக்கலிங்கத்துக்கு தகவல் போய் அவர் வண்டி பிடித்து இங்கு வந்து சேரும் சமயம் ஆஸ்பத்திரி ஊழியன் “அமிர்தம்.. அமிர்தம் அம்மாவுக்கு யாராச்சும் இருக்கிங்களா?” என்று கத்திக் கொண்டிருந்தான். சொக்கலிங்கம் கூட்டத்தை விளக்கிக் கொண்டு அவன் முன்னே சென்று “நான் இருக்கேன் சார்” என்று பதட்டத்தோடு சொன்னார்.

“யோவ் எங்கய்யா  போயி தொலைஞ்சே ? எவ்வளவு நேரமா கூப்படறது? நீ யாரு அந்தம்மாவுக்கு என்ன வேணும்?”

ஒரு கணம் யோசித்த சொக்கலிங்கம் “ அண்ணன்ங்க” என்றார்.

“சரி சரி அந்த தெற்கால பக்கம் இருக்கற ஜன்னல் பக்கம் போ அங்க ஒரு ஃபார்ம் தருவாங்க அதுல கையெழுத்துப் போட்டு குடுத்துட்டு இங்க வா “

“சரிங்க” அவசரமாக அந்த ஜன்னலின் அருகே சென்று அதன் முன்பாக நின்றார்.

“என்னய்யா?”

“அமிர்தம் .. அமிர்தத்தோட அண்ணன் நானு”

“ஒரு நிமிஷம் இரு” சில அச்சிட்ட ஃபாரங்களை எடுத்து அவர் முன் நீட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டான்.

“அமிர்தம் எப்படிங்க இருக்கு?”

“எப்படி இருக்கா? யோவ் அது போய் சேர்ந்து அரை மணி நேரம் ஆயிடுச்சு ஆள் வரலன்னா இந்நேரம் முனிசிபாலிட்டிக்கு தகவல் சொல்லி இருப்போம்”

“அய்யய்யோ அமிர்தம் இப்படி என்னை அநாதை ஆக்கிட்டியே“என்று தரையில் விழுந்து புரளத் தொடங்கினார். சுற்றி நின்றவர்கள் கவனமாக எட்டிச் சென்றார்கள். கொரனாவால் இறந்த யாரோ ஒருவனின் உறவினன் என்று உடனே கண்டுகொண்டவர்கள் மிக எச்சரிக்கையாக அவரிடம் எதையும் விசாரிக்காமல் எங்கோ திரும்பிப் பார்த்தார்கள்.

ஆறுதல் சொல்லக் கூட யாருமில்லாமல் அவரே ஒரு வழியாக அழுகையை நிறுத்தினார். முதலில் அமிர்தம் என்று பெயர் சொல்லி அழைத்தவன் திரும்பவும் அழைத்தான். சொக்கலிங்கம் அவனை நோக்கி ஓடினார்.

“அவங்களைப் பாக்க முடியுங்களா?”

“இன்னிக்குன்னுப் பார்த்து நாலைஞ்சு கேசு மட்டையாயிடுச்சு .. ஒரே ஆம்புலேன்சுலதான் ஏத்திகிட்டு போறோம் இங்க நிறுத்த முடியாது நீ என்ன பண்ணு இடுகாட்டுக்கு வந்துடு தூரமா நின்னு துக்கம் வச்சிக்கலாம்”

“எவ்வளவு நேரம் ஆகுங்க ?”

“இப்பதான் பொட்டலம் கட்டிகிட்டு இருக்கோம்.. இன்னும் ஒரு மணி நேரத்துல வண்டி ஏத்திடுவோம்’

“அய்யா... அவங்க அப்பா இன்னும் வந்து சேரலைங்க”

“அதான் ஒரு மணி நேரம் டயம் இருக்குல்லே .. நேரா அங்க வரச் சொல்லு.. அப்பா வந்தாலும் அம்மா வந்தாலும் கட்டிபிடிச்சு அழ முடியாது நீங்க கொள்ளி வைக்க முடியாது.. நாங்கதான் அள்ளிப் போடப்போறோம் கூடவும் போகப் போறதில்லே.. அதனால விதி அதான்னு போயிட்டே இருங்க “

“ஐயோ சாமி..” திரும்ப அழ ஆரம்பித்துவிட்டார்.

“அழுதுகிட்டே அப்படியே போயிடாதே .. பெத்த புள்ளை மாதிரி நாங்கதான் எல்லாத்தையும் செய்யறோம் பார்த்து கவனிச்சிட்டு போ” என்று சொல்லிவிட்டு உள்ளே போனான்.

ஆசுவாசமான பின் பொன்னுசாமிக்கு ஃபோன் அடித்தார்.

“அண்ணே சொல்லுங்கண்ணே.. இதோ கிளம்பிகிட்டே இருக்கோம்”

“எங்கடா கிளம்பறீங்க எதுக்கு வரீங்க?’

“என்னண்ணே அப்படி கேட்டுட்டே.. அதான் அக்கா இங்க வாங்கடா மறுவடி கூத்து ஆரம்பிக்கலாம்னு ஃபோன் பண்ணிச்சே.. எல்லார்ட்டயும் பேசி ஒரு வழியா சம்மதிக்க வச்சி இப்ப கிளம்பிட்டோம் அண்ணே.. அக்காவுக்கு ஃபோன் அடிச்சா ஏன் எடுக்க மாட்டேங்குது?”

“போங்கடா போக்கத்தவனுங்களா.. அமிர்தம் நம்மளை எல்லாம் விட்டுட்டு போயிடுச்சுடா..“அதற்கு மேல் பேச முடியாமல் குலுங்கி குலுங்கி அழுதார்.

“என்னண்ணே தலையில குண்டைத் தூக்கிப் போடுறே .. ? என்னாச்சுண்ணே.. நல்லாத்தானே பேசுனாங்க அன்னிக்கு .. “

“கொரானா வந்து அந்த குத்து விளக்கை தூக்கிட்டுப் போயிடுச்சுடா.. எதுல வர்றீங்க?”

”கார்தான் பேசியிருக்கோம் .. இன்னும் மூணு மணி நேரம்... மூணே மணி நேரத்துல வந்துடறோம்..”

“இன்னும் ஒரு மணி நேரத்துல காரியமே முடிஞ்சிடும்.. சிக்கிரம் வாங்க எனக்கு பதைக்குது”

ஃபோனை நிறுத்திவிட்டு பித்துப்பிடித்தவர் போல மருத்துவமனை வாசலை நோக்கி முன்னும் பின்னுமாக நடந்தார்.

சரியாக முக்கால் மணி நேரம் கழித்து “மாரிமுத்து, பழனியம்மாள், அமிர்தம், கந்தசாமி உறவுக்காரவங்க அப்படியே மார்ச்சுவரி பக்கம் வாங்க “

அவரவர்கள் திடுதிடுவென ஓடினார்கள்.

மார்ச்சுவரியில் இரண்டு ஆம்புலன்சுகள் நின்றிருந்தன.

“கிட்ட வந்துடாதீங்க.. பொட்டலம் கட்டியாச்சு கிட்ட வந்தாலும் ஒண்ணும் தெரியாது.. எட்டியே நின்னாக்கா ஆபத்து இல்லை.. நீங்களும் இங்க வரணும்னா தாராளமா கிட்ட வாங்க“ மார்சுவரி ஆள் கத்தினான். எல்லோரும் எட்டி நின்றபடி பார்த்தனர். ஒவ்வொரு உடலாக எடுத்துவந்து இது பழனியம்மாள் அப்படியே பாத்துக்கங்க.. இது மாரிமுத்து.. என்று கணநேரத்தில் வண்டியின் உள்ளே எறிந்தார்கள்.

“அமிர்தம்”

என்று சொல்லும்போது அடக்க மாட்டாமல் அருகில் ஓடினார் சொக்கு

“தள்ளு தள்ளு.. வந்து மேல வுழுற .. தள்ளுய்யா “ என்று எரிந்து விழுந்த ஆள் இன்னும் வேகமாக ஆம்புலேன்சில் உள் பகுதிக்கு அமிர்தம் உடலை எறிய அது ஏற்கனவே வீசப்பட்ட உடல் மீது விழுந்து நழுவி வண்டிக்கு வெளியே திரும்ப வந்து விழுந்தது. எரிச்சலில் அவன் காலால் தடுக்கி அதே வேகத்தில் அதனை நெட்டித் தள்ளினான். துடித்துப் போனார் சொக்கு..

அடுத்த உடல்களையும் ஏற்றிக்கொண்டு “சொள்ளைக்கரைக்கு வந்துடுங்க கால் மணி நேரம்தான் பார்ப்போம் அதுக்கப்புறம் ஜேசிபி வெயிட் பண்ணாது.. சொல்லிட்டேன்” என்று எச்சரித்தான் ஆம்புலேன்சின் உள்ளே அமர்ந்திருந்தவன் வண்டி சர்ரென்று கிளம்பிச்சென்றது. அது சென்ற சாலையில் அழுகுரல்கள் துரத்திக்கொண்டே சென்று வழியிலேயே விழுந்து தேய்ந்தன.

சொக்கலிங்கம்  ஆட்டோ பிடித்து வேகமாக சுடுகாட்டுக்குச் சென்றபோது ஜேசிபி ஒவ்வொரு உடலாக தள்ளிக் கொண்டிருந்தது. எந்த உடல் அதன் பெயர் என்ன என்பதெல்லாம் அழிந்து “பாடியை  முட்டுக்கா போடாதே அண்ணே .. அப்படியே நெரவலா பரப்பி போடு“ என்று என்னவோ தென்னங்கன்றை புதைப்பது போல ஒருவன் ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தான். அப்படி அடித்துப் பிடித்து போயும் பிரயோஜனம் ஒன்றுமில்லை ஒரு கயிறை குறுக்கே கட்டி எல்லோரையும் எட்டவே வைத்திருந்தனர்.

கவச உடை அணிந்தவர்கள் மட்டும் சடங்கு என்ற பெயரில் அருகே சென்று எதையோ சில நிமிடம் செய்துவிட்டு பின்னர் ஜெசிபிக்கு வழிவிட அது மொத்தமாய் மண்ணை அள்ளி சில நிமிடங்களில் நிரவிவிட்டது. அவ்வளவுதான் வாழ்க்கை .. அவ்வளவுதான் உலகம்.. அனாதைகளாக திரிந்த நாய்களை ஒரு வேனில் பிடித்து வந்து ஊசி போட்டு கொன்று புதைப்பது போல முடிந்தது அவர்களின் பெருவாழ்வு.. செய்த புண்ணியம்.. வேண்டுதல்கள்.. லட்சியங்கள்.. கனவுகள்.. எல்லாவற்றையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறு கிருமி விழுங்கி செரித்து பசியோடு இன்னமும் பேராசையோடு அலைந்து கொண்டிருக்கிறது ..

ஜேசிபி ஆம்புலென்ஸ் உறவுக்கூட்டம் எல்லாம் கலைந்து சென்றும் சொக்கலிங்கம் மட்டும் மண்ணள்ளி போடப்பட்ட இடத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். எதேச்சையாக அவர் கை அவர் சட்டைப்பையை தடவியது. பைக்குள் அமிதம் கொடுத்த ஆயிரம் ரூபாய் இருந்தது நெருடியது.. மருந்து வாங்க உதவும் என்று அவள் தந்ததை சாமி படத்தின் முன்னே வைத்திருந்தார். வரும் அவசரத்திலும் அதையும் கையில் இருந்த சில நூறு ரூபாயையும் எடுத்து வந்தார்.

“அச்சாரமா வச்சிக்கங்க அண்ணே “ என்று அவள் சொன்னது இன்னமும் ஒலிப்பது போலவே இருந்தது. எப்ப கூத்து நடத்தட்டும்? தாயி இன்னிக்கே நடத்தறேன் என்று வாய் விட்டு சொன்னவர் அரிச்சந்திரன் மயான காண்டத்தின் கதையை  ஓங்கி உரக்க சொல்ல ஆரம்பித்தார்..

 

'சரி சாமி... புண்ணியம் என்பது என்ன?’ என்று கேட்டான்.

'நடக்கிற வழியிலே நடைபாதை கட்டியவனும், போகிறவழியிலே முள்ளைப் போடாதவனும், கோதானம் கொடுத்தவனும், அன்னதானம் கொடுத்தவனும், விதைக்கிற விதையிலே பதறு கலக்காதவனும், எல்லையைப் புரட்டாதவனும், கொல்லையைப் புரட்டாதவனும், வரப்பை வெட்டாதவனும், உழுகிற மாட்டை நுகத்தடியால் அடிக்காதவனும், தாயை அடிக்காதவனும், தாய்ப்பால் நோக அடிக்காதவனும், கர்ப்பிணியை காலால் உதைக்காதவனும், வாத்தியார் கூலி, வண்ணாங் கூலி, அம்பட்டன் கூலி, பறையங் கூலி, செக்கிலி கூலி, எல்லார் கூலியையும் கொடுத்தவனும்... இவர்களெல்லாரும் சொர்க்கத்தில் போய் சேமமாய் இருப்பார்கள்என்றான் என்று கதையை சொன்னவர் பிறகு பாடலுக்குத் தாவினார்..

அடே அரிச்சந்திரா எந்த புண்ணியம் உன்னை காப்பாற்றியது?

“அரியாசனத்தில் அமர்ந்திருந்த அரசனே..

மயானத்தில் விதி சொல்லி நின்றாயே

அரிச்சந்திர மகாராசனே..

சத்தியத்தை காப்பாற்றிய சத்தியவானே

உன் சந்ததியை காப்பாற்றுவது யாரடா?

வாக்கினை காப்பாற்றிய வல்லவனே

உன் வம்சத்தை காப்பாற்றுவது யாரடா?

 

அதைக் கேட்டதும் தெளிவு பெற்ற வீரஜாம்புகன், கிளம்புகிற போது, தயங்கித் தயங்கி, தனக்குள் நெடு நாட்களாய் அரித்துக் கொண்டிருக்கிற அந்தக் கேள்வியைக் கேட்டான்.... இப்படியாக தொடர்ந்தது கதை..

ஞ்சையில் இருந்து புதுச்சேரிக்கு பறந்து வந்த காரில் இது எதுவும் அறியாமல் அமிர்தத்தின் தந்தை சாமிநாதன் அழுதபடி வந்து கொண்டிருந்தார். அவரருகில் எதுவும் சொல்லமுடியாமல் குமார்.

சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த காரில் பொன்னுசாமி சொக்கலிங்கத்துக்கு ஃபோன் செய்ய.. அழைப்பு வந்ததும் ‘ஆன்’ செய்து எதுவும் பேசாமல் தொடர்ந்து அரிச்சந்திரன் கதையை உக்கிரமாக சொல்லிக் கொண்டிருந்தார் சொக்கு. அந்தப் பக்கம் கேட்டுக் கொண்டிருந்த பொன்னுசாமி செல்லில் இருந்த ஸ்பீக்கரை ஆன் செய்ய எல்லோருமாக தலையாட்டி தலையாட்டி ஆவேசமாக கேட்டு பின் கூடவே பாடவும் செய்தனர்..

மிர்தத்தின் வீட்டில் ..

யாராலும் வாசிக்கப்படாத அந்தக் கடிதம் மேஜை மீது ஒரு கண்ணாடிக் கூட்டின் கிழே தன் குமுறல்களை, ஆசைகளை, நினைவுகளை பகிர்ந்தபடி, காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது... 

 

  

 

 

 

 

 

 

 

  

       

     

 

 

 

    

 

       

   

 

 

 

  

 .      

     

     

 

. .

  .  ..

.  . 

   .

  

 

 

 

 

 

       . .

        .

 

 

. .  

 

.

    

..

       

 .   

 

 

 

 

 

 

  .      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...