திங்கள், 16 ஏப்ரல், 2012

நில் ... கவனி... செல்...


மூன்று:

          காதலின் நண்பன் யார்?
          சந்தேகமென்ன ... ‘செல்'தான்.
          ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு அலைவரிசை இருக்கலாம்.
         ஆனால், காதலும் செல்லும் ஒரே அலைவரிசை
         இரவுகள்தான் இரண்டுக்கும் பிடித்தமான பொழுது
         தனிமைதான் இரண்டுக்கும் பிடித்தமான சூழல்
        இரண்டில் சில இதயத்தில் இடம்பிடிக்கும்
        சில இடுப்பில் இடம் கேட்கும்...
        விரல்கள் தேய்ந்தாலும்
        தொட அலுப்பதேயில்லை


       “அடே... சூர்யா, மொட்டைமாடியில ஒத்தையா என்ன பண்ணிகிட்டு இருக்கே?”
         “ம்... வடாம் காய வைச்சிட்டு இருக்கேன்.”
          “ஓ... எஸ்.எம்.எஸ்-ஐ பிழிஞ்சி உலர்த்திகிட்டிருக்கியா? என் கோடவுன்ல ஸ்டாக் இல்லே. ரெண்டு தேக்கரண்டி எஸ்.எம்.எஸ். கடனாக் குடேன். திருப்பிக் குடுத்துடறேன். சுவைக்கத்தக்க அளவு தேன் குழைச்சிக்கொடு.”
         “போடாங்... நானே வெந்து வெரைட்டி ரைசா கெடக்கேன். நீ வேற சாவடிக்கறே...”
        “பொறிக்கத்தக்க அளவு கொதிச்சுக் கெடக்கேன்னு புரியுது. அதென்னடா மச்சான் அப்படியொரு கண்டீஷன்?”
         “அந்த வயித்தெறிச்சலை ஏண்டா கேட்குற... இன்னிக்கு தேதி 3... கரெக்டா பத்து நாளு பாக்கக் கூடாதாம்; போன் பேசக் கூடாதாம்; எஸ்.எம்.எஸ் கூட அனுப்பக் கூடாதாம்!
         இந்தப் பத்து நாளும் ஒவ்வொரு மணி நேரமும் என்ன பண்றேன்னு இந்த டைரியில குறிச்சி வைச்சிருக்கணுமாம்... 14-ம் தேதி காலையில 9.00மணிக்கு அவளைப் பார்க்கும்போது குடுக்கணுமாம்...”
         “காதல்னா ஏர்க்கண்டிஷன் இருக்கலாம். போர்க் கண்டீஷன் இருக்கக் கூடாது... கர்மம்... இதுக்குத்தான் தமிழ் படிச்ச பொண்ணு வேணாம்னேன்... கேட்டியா?”
        டிங்... டிங்... இரண்டு முறை ஒலித்தது சந்தோஷின் செல்...
        “இங்க பார்த்தியா... என் ஆளு அனுப்புன எஸ்.எம்.எஸ்.... ‘காதலுக்கும் நட்புக்கும் என்ன வித்தியாசம்? உடுக்கையிழந்தவன் கைபோல இடுக்கண் களைவது நட்பு... இடுக்கண் களைவதற்காக உடுக்கை களைவது காதல்!' ரெண்டு நாளா ஒரே நான்வெஜ் எஸ்.எம்.எஸ்.ஸா வருது. ஏண்டா பாவி எஸ்.எம்.எஸ்.க்கு என்ன எக்ஸ்பான்ஷன்?”
        “ம்... ஷார்ட் மெஸேஜ் சர்வீஸ்.”
        “அதான் இல்லே... ஸோல் மெயிண்டெனிங் சர்வீஸ்! பார்க்காம காதல், பேசாம காதல்ன்னு படத்துல பார்த்திருக்கேன். இது என்னய்யா காதலிச்ச பிறகு பார்க்காம, பேசாம...”
          “பேயே போய்த் தொலை...”
           சிரித்தபடி நகர்ந்தான் சந்தோஷ்.

ஏழு:
       
        புலர்ந்தது இரண்டாம் நாள்... 7.00 மணியானால் ஒரு வேக்-அப் கால் வரும். அப்புறம் வழக்கம் போல் எஸ்.எம்.எஸ். படையெடுப்பு... ம்...
 வாயில் பிரஷ்-ஐ வைத்தபடி செல்லுடன் வெளியே வந்த சந்தோஷ் பாப்பா குரலில் பாடினான்.
           “காலை எழுந்தவுடன் மிஸ்டுகால் பின்பு
            கனிவுதரும் நல்ல எஸ்.எம்.எஸ்.
            மாலை முழுதும் மணிக்கணக்கில் கடலை
           என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

 கையில் கிடைத்த ‘மக்'கை எடுத்து அவன் மீது வீசினான் சூர்யா.
        லாவகமாகக் குனிந்து தப்பிய சந்தோஷ் தன் முயற்சியில் சற்றும் தளராமல் பாடினான்...
         “பாலிருக்கும், பழமிருக்கும், பசியிருக்காது...
          பக்கத்திலே செல்லிருக்கும் காலும் வராது...
          ஒரு காலும் வராது...”
 ஒரு காலால் கில்லி தாண்டுவது போல் ஆடிக்  கொண்டே பாத்ரூமுக்குள் ஓடி மறைந்தான்.
           சூர்யா செல்லை அனிச்சையாக எடுத்துப் பார்க்க, ஸ்க்ரீன் சேவரில் மஞ்சு சிரித்தாள்.
            “சிரிக்காதே... எல்லாம் உன்னால்தான். கண்ட நாயெல்லாம் காலைத் தூக்கிட்டுப் போகுது... என்ன அப்படி ஒரு குரூரமான ஐடியா உனக்கு... என்ன பெரிசா சாதிக்கப் போற...உனக்கென்ன... என் தலைக்குள்ள ஆயிரம் வண்டுங்க சுத்தி சுத்தி குடையறமாதிரியில்ல இருக்கு...”

ஐந்து:
          கிழிந்த நார் போல் கம்பெனியை விட்டு வெளியே வந்தான் சூர்யா. மாலை நேரத்துக் காற்று இதமாக முகத்தை வருடிச் சென்றது.
          அரவிந்த் அவனருகில் வந்து, “டேய் சூர்யா, நானும் ரெண்டு நாளா பார்க்குறேன், பேய் அடிச்ச பேக்காண்டி மாதிரியே இருக்கே... என்ன ஆச்சு உனக்கு...?”
           “சும்மாதான்... லேசா ஜுரம்.”
           “நான் என்ன கேள்விப்பட்டேன்னா, மஞ்சு ஏதோ பத்து நாளைக்குப் பேசக்கூடாது, பார்க்கக் கூடாது, முக்கியமா எஸ்.எம்.எஸ். அனுப்பக் கூடாதுன்னும் சொல்லிட்டதா நம்பத் தகுந்த வட்டாரத்திலேருந்து தகவல்  கிடைச்சுதே...”
            “அதான் வெவரமா இருக்கீங்களே, அப்புறமென்ன ரொம்ப கவலைப்படற மாதிரி கேள்வி...? எட்டி உதைச்சுடுவேன், எட்டிப் போயிடு.”
           “கோபப்படாதே சூர்யா... ஒரு இடைக்கால நிவாரணமிருக்கு... அக்கவுண்ட் செக்ஷனில அனிதா இருக்கா தெரியும்ல... குட் கம்பேனியன்... என்ன அப்பப்ப ஷாப்பிங், தீம் பார்க்குன்னு கூட்டிட்டு போகணும்பா... கொஞ்சம் செலவு பிடிக்கும்; பரவாயில்லையா? உன் நம்பரைக் குடுக்கட்டுமா? மிஸ்டு கால் வரும். சும்மா பிரிச்சி மேய்ஞ்சுடுவா...”
              “டேய், டேய்... ஓடிப் போயிடு; எனக்குள்ள இருக்கற மிருகம் முழிச்சு சோம்பல் முறிக்குது. மவனே உன் கையை முறிக்கறதுக்குள்ள காணாமப் போயிடு...”

சுழியம்:
 
           நடுநிசி. மொட்டை மாடி. நட்சத்திரங்களைத் தாறுமாறாக தன்போக்கில் எண்ணிக்கொண்டிருந்தான். இத்தனை அழகா இந்த வானம்? இத்தனை இதமா இந்த இரவு...? இத்தனை நாள் உற்றுக் கவனித்ததேயில்லை சூர்யா. இந்த மொட்டை மாடி தூக்க ஸ்தலமாக மாறியதே மஞ்சுவுடனான காதலுக்குப் பிறகுதான்... இப்பொழுது இந்தத் தனிமையே கொடுமையாகிப் போனது...
 கண்டிஷனாவது ஒண்ணாவது... ஆவறது ஆவட்டும்னு போன் அடிச்சிடுவோமா... போனை எடுத்தான். அப்புறம் நிரந்தரமா பேச மாட்டேன்ன்னு மிரட்டல் வேற... மூணு நாளே தாங்களை... லைஃப் முழுக்கன்னா... தாங்காதே. செல்லில் போன் புக்கில் அவள் பெயரை டெலிட் செய்தான். செல்லை கோபமாகக் கீழே வைத்தான்.
           
            நீயும் நானும்
            உயிரும் உடலும்
            நீ உயிர்;
            நான் உடல்...
            அதனால்தான்
            நீ பிரிந்த பின்
            நானே வெந்து போகிறேன்.


              புரண்டு புரண்டு படுத்தான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாமல் தூங்கிப்போனான்.

ஏழு:

           மாலை நேரம் மணி 7.00. ஊர் மொத்தமும் டி.வி.க்கு முன் பவ்யமாக சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. மாற்றி, மாற்றி கண்ணீரும் கம்பலையுமாகப் பெண்கள்... வெறுத்துப் போய் தன் அறைக்குள் அடைந்தான் சூர்யா. ரூமை ஒழுங்கு படுத்தினான். பழைய பிரஷ்களும் கேன்வாஸ் துணிகளும் கிடைத்தன. தூசி தட்டினான். சாஃப்ட்வேர் கம்பெனியில் சேர்ந்த பிறகு பரணில் போட்டாயிற்று வரைதலை. ஸ்டேண்டைப் பிரித்து கேன்வாசை ஃபிக்ஸ் செய்தான்.
            இரண்டு கண்களை மட்டும் வரைந்தான். பார்ப்பதற்கு மஞ்சுவின் கண்கள் போலவே இருந்தது. பிரித்து சுருட்டிப் போட்டான்.
            வேறொரு துணியை எடுத்து ஃபிக்ஸ் செய்தான். இப்பொழுது முகம் ஒன்றை வரைந்தான். ஒரே ஒரு கண்ணை வரைந்தான். முகத்துக்குக் கீழே மற்றொரு கண்னை வரைந்தான். இரண்டு கண்ணும் பிரிந்து கிடந்ததை உணர்த்துவது போலிருந்தது. அவனையுமறியாமல் கண்ணீர் பெருகி முகத்துக்குள் இருந்த கண்ணில் விழுந்து வழிந்தது.
         “அட, எக்ஸலெண்டா இருக்கு. என்னடா திடீர்னு ஓவியமெல்லாம் தூள் கிளப்பற. ஆனா இன்னும் கம்ப்ளீட் ஆகாம பாதியா நிக்கற மாதிரியிருக்கு.” பின்னாலிருந்து சந்தோஷின் குரல் கேட்டது.
          ‘ஆமாம்' போல் தலையாட்டிய சூர்யா சிறிது நேரம் யோசித்தான். பின் முகத்துக்குக் கீழேயிருந்த கண்ணில் சிவப்பு வர்ணம் தீட்டினான். ரத்தக் கண்ணீர் போல் தெரிந்தது.
           “அடடா... அற்புதம்... புறநானூற்றுப் பாடல் போல் கவித்துவமா ஆயிடுச்சி. பிரிவுத் துயரைப் பின்னியெடுத்துட்டே!”
          “அது மட்டுமா தெரியுது?”
          “வேற ஒண்ணும் விளங்கலையே...”
          “நாளைக்கு இத ஒரு ஹோர்டிங்கா வெளியில வைக்கப் போறேன். என்னென்ன அர்த்தம் கிடைக்குது பாரு.”
           இன்னும் கவனமாக மெருகேற்றினான்.

நான்கு:
 
        மேன்ஷனின் வெளியே இருந்த அந்த ஓவியம் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரையும் ஈர்த்தது. சொல்வதற்கு எதுவும் தோன்றாமல் சிலர் அவனைத் தேடி வந்து கைகொடுத்தனர்.
             ஒரு விளம்பரக் கம்பெனியின் எக்ஸிக்யூட்டிவ் அவனை சந்தித்து ஆயுள் காப்பீட்டுக் கம்பெனியின் விளம்பரமாகப் பயன்படுத்த அனுமதி கேட்டார். ஒரு உறுப்பினரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்குக் கண்ணீர் மட்டுமே மற்றொரு கண்ணுக்குக் கிடைக்கும் என்று அவனிடமே விளக்கம் சொன்னார். புன்னகையோடு கேட்டுக்கொண்டான்.
            இதற்குக் கீழே ஏதாவது இரண்டு வரி வாசகங்களை எழுதுங்கள். நாங்களே பயன்படுத்திக் கொள்கிறோம் என்றார்.
            என்ன எழுதலாம்... எது எழுதினாலும் அது அடுத்தவர்களின் கற்பனையைத் தடுத்துவிடுமே... செல் ஏதோ எஸ்.எம்.எஸ். என்று கிணுங்கியது.  ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.
             “எழுதுவேன். அது உங்களுக்குப் பொருந்துமா வேறு எவருக்காவது பொருந்துமா என்று தெரியாதே.”
            புரிந்து கொண்டு நகர்ந்தார்.

இரண்டு:

         அடுத்தநாள் விடிந்ததும் ஓவியத்தின் முன் கூட்டம் நிறைந்திருந்தது.
 யாரோ தங்களுக்குத் தோன்றிய இரண்டு வரிகளை எழுதியிருந்தார்கள். அதற்கு கீழே கையொப்பமிட்டுப் போக, இன்னும் சிலரும் கீழே...
 நெருங்கி வந்து படித்தான் சூர்யா.

          “துடைக்க நீளும் கைகள் இருந்தும்
           முயலாதவன் முடவன்...”

யாரோ அர்த்த்த்தைப் பூர்த்தி செய்து விட்டுப் போயிருந்தார்கள்...

         “ஈரம் உணர இதயம் இருந்து
           மறுப்பவன் மூடன்”

நான்கு:

        மார்வலஸ் சூர்யா... ரொம்ப நாளைக்கு அப்பறம் வரைஞ்சாலும் அதை பேச வைச்சிட்டே, கலை பேசணும் சூர்யா. பாக்கறவங்க கிட்டயெல்லாம் பேசணும். உன்னால முடியுது, இனிமே அடிக்கடி தோண்றப்பவெல்லாம் ஏதாவது வரை. எல்லாரையும் நம்ம பக்கம் திரும்பச் செய். உன் செல்-ஐ ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டியா? எனக்குத்தான் இப்ப நிறைய ‘கால்' வருது. எல்லாம் உன்னைத்தான் விசாரிக்கிறாங்க. ஆன் பண்ணுடா” என்றான் சந்தோஷ்

நான்கு:
         இப்பொழுது இரவு படுக்கும்போது படபடப்பு இல்லை. அடுத்த ஓவியம் பற்றிய சிந்தனை மட்டுமே இருந்தது. டைரியை எடுத்தான்.

          “காதலிக்கத் துவங்கும் போது
           உன்னை உணர்ந்தேன்
           காதலித்த பின்
           என்னையே உணர்ந்தேன்..”


        நாளை வந்து உன்னைப் பார்க்கப் போகிறேன் மஞ்சு. முழுசா பத்து நாளைக்கு அப்புறம்! உனக்கு என்ன கொடுத்தாலும் தகும் தான்; ஆனாலும், உனக்காக... உனக்காக மட்டுமே ஒரு ஓவியம்...
        புதிய கேன்வாசைப் பொருத்தி வரையத் தொடங்கினான். விடிய விடிய வரைந்தான்.

ஒன்பது:

        மணி 8.52... இதயம் இதமாகப் படபடத்தது. செல்-ஐ எடுத்தான். ஸ்விட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்தது. ஆன் செய்ய ஒரு கணம் நினைத்தான். வேண்டாம்... மஞ்சு வரட்டும். பார்க்கில் நடை பழகுபவர்களெல்லாம் அவனையே பார்ப்பதுபோல் இருந்தது. முதன்முதலாகக் கூச்சமாக இருந்தது. முதன்முதலாக அவளைப் பார்க்கக் காத்திருந்த போது உலகமே கண்ணுக்குத் தெரியவில்லை. இப்பொழுது தரையில் நெளியும் சிறு பூச்சி கூட இவனையே விசாரிப்பது போல் பட்டது.
           பின்னாலிருந்து அவள் வாசம் வீசியது. திரும்பினான். அவளேதான்...
          “எப்படி இருக்கீங்க...?”
            சட்டென்று பதிலே வரவில்லை அவனிடமிருந்து... இத்தனை நாள் கழித்து பார்த்தபோது மஞ்சு இன்னும் அழகாக இருந்தாள்.
         “அப்புறம்...” என்றாள். ஒரு கணம் சிலிர்த்து ஓடியது உள்ளுக்குள்...
          “கழுவி விட்ட நிலா போல் அழகா இருக்கே மஞ்சு...”
          “தேங்க்யூ சூர்யா. கவிஞனாகவும் ஆகிட்டீங்க போல... நானும் உங்களுக்குத் தெரியாம வந்து அந்த ஹோர்டிங்கைப் பார்த்தேன். க்ரேட் சூர்யா. உனக்குள்ள இப்படியொரு அற்புதமானவன் இருக்கானா?!”
            “எனக்குத் தெரியாது, கண்டுபிடிச்ச நீயே இப்படிக் கேட்டா நானென்ன சொல்றது? மறுபடி ஓவியம் வரைஞ்சதும் உனக்குத்தான் முதல்ல சொல்லனும்ன்னு நெனைச்சேன். உன் கண்டிஷன் என்னைக் கட்டிப் போட்டுடுச்சு. ஏன் திடீர்ன்னு இப்படியொரு யோசனை உனக்கு?”
              “செல் வந்தப்பறம் காதல் சுலபமா ஆயிடுச்சு. ஆனால், திரில் போயிடுச்சு. பொழுதன்னிக்கும் பேச்சு... பேச்சு.... பேச்சு... ஓயாம பேச்சு. அப்புறம் எஸ்.எம்.எஸ். உனக்கு உன் லட்சியம் போச்சு. எனக்கு என் சுவாரஸ்யம் போச்சு. ஒரு கட்டத்துல எனக்குள்ள குற்ற உணர்ச்சி வந்துடுச்சு.
         என் காதல் உன் நேரத்தைத் தின்னதுமில்லாம உன் அறிவை, உன் திறமையை, உன் உழைப்பை திங்க ஆரம்பிச்சுடுச்சோன்னு தோண தொடங்கிச்சு. இது இல்லை சூர்யா காதல்... உன்னையும் என்னையும் ஒரு அங்குலமாவது உயர வைச்சாதான் அது காதல். நேர் எதிரா திரும்பினா அது காதல் இல்லை ....சாதல்.
           எங்க போகப் போறோம் நாம... வாழ்க்கை பூரா பேசப்போறோம். எல்லாத்தையும் இழந்த பிறகு என்னத்தைப் பேச... நம் தோல்வியைப் பத்தியாஅ... என்னைப் பொறுத்தவரைக்கும் காதல் தோல்விங்கறது சேராம பிரிஞ்சு போறதில்ல... சேர்ந்த பிறகு ஒருத்தரை ஒருத்தருக்குள்ள தொலைஞ்சு போக வெச்சிக்கறது தான். உன் கிட்ட பேச வேணாம்னு சொல்லிட்டேனே தவிர ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் கடக்க பட்ட பாடு.... எனக்குத் தான் தெரியும்.              ஒரு கட்டத்துல நீ நிபந்தனையை மீறிப் பேசக் கூடாதான்னு தான் தவிச்சேன். நல்ல வேளை நீ போன் பண்ணலை. உன்கிட்ட சொன்னது போல செல்-ஐ நான் ஆஃப் பண்ணி வைக்கலை.”
           “தேங்க்ஸ் மஞ்சு” அவள் கைகளை இறுகப் பிடித்தான். ரொம்பப் புதுசாக இருந்தது.
             “இப்ப சொல்... காதலின் எதிரி யார் சூர்யா?”
             “சந்தேகமென்ன... செல்தன்” சொல்லி விட்டு செல்-ஐ தூக்கி விசிறப் போனான்.
           அவன் கைகளைப் பிடித்துத் தடுத்த மஞ்சு, “வீசாதே சூர்யா, இருக்கட்டும். இந்த பத்து நாளும் அம்மா கூட ஒத்தாசையா இருந்து வீட்டு வேலைகளைப் பழகிகிட்டேன். ஒரு ஆன்லைன் எக்ஸாம் எழுதி ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்கியிருக்கேன். எனக்கு ஒரு பதிப்பகத்தில வேலை கிடைச்சிருக்கு. பதிப்பிக்க வர்ற புத்தகங்களை எடிட் பண்ற வேலை. இனி உன்னோட வெற்றியை என்கிட்ட சொல்றத்துக்கும் என்னோட வெற்றியை உன்கிட்ட சொல்றதுக்கும் இந்த செல் பயன்படட்டுமே.”
            “ஒரு விஷயம் தெரியுமா மஞ்சு.. என்னையும் மீறி எங்கே உனக்குப் போன் பண்ணிடுவேனோன்னு பயந்து உன் நம்பரை டெலிட் பண்ணிட்டேன். இப்ப யோசிச்சு பார்த்தா கொஞ்சம் கொழம்புது. ஐ ஆம் நாட் ஜோக்கிங். உன்நம்பரைச் சொல்லு...”
            மஞ்சு சொன்னாள்  “94424 70573”

நன்றி: 'மனமாற்றம் ' சிறுகதை தொகுப்பு, ஜூலை - 2009



13 கருத்துகள்:

  1. அருமை..அருமை..அருமை..ஐயா..இவ்வளவு சிறப்பான பகிர்வை சுவார்ஸ்யம் குறையாமல் கொடுத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.தங்களது வாசகனாக ஆனதில் பெருமிதம் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி குமரன் . நானும் உங்கள் ரசிகன் குமரன். உங்களை வாசகனாய் கொண்டதில் நானல்லவா பெருமிதம் கொள்ளவேண்டும்?

    பதிலளிநீக்கு
  3. கைபேசியில் பேசுவது குறித்து எனக்கு வெறுப்பே வருமாறு என் பிள்ளைகள்( விடுதி மாணவியர்கள் ) பேசுவார்கள், பேசுவார்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள் . கைபேசிக்கு வரும் விளம்பரமாய் என்னத்தை தான் அப்படி பேசிவிட முடியும். எல்லாவற்றையும் பேசிமுடியுமா! கோபம் வரும், பாவமாயும் இருக்கும். என்ன பேசினாலும் தீராத மொழியின் மௌனம் அறியாத பேதைகள். வலியும், வலிமையையும் உணர தலை படும்போது உரையாடல் உறைந்து உருகி உருமாற்றம் கொள்ளும் அழகு அற்புதம்!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் பாரதி குமார்.நில் கவனி செல் சிறு கதை யை படித்தேன்.என் செல்லிலிருந்து பதிலனுப்ப எண்ணினேன்.மஞ்சுவோட எண்தானே?நல்லது.வேண்டாம்னு மெயலினேன் .தொல்லைபேசி ஆகிவிட்ட அலைபேசி, பலவற்றை மறக்க செய்து விட்டிருப்பதை நகைச்சுவையுடன் கதையாக்கியிருக்கிற பாங்கு பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் மணிச்சுடர் மொபைல் என்பது அற்புதமான அறிவியல் ஆச்சர்யம். ஆனால் இந்த தலைமுறை அதனை நேரம் கொல்லும் கருவியாக அல்லது மிக தவறான காரணங்களுக்காக பயன் படுத்துகிறார்கள் . அந்த வலியின் விளைவே இந்த கதை. ஒரு சிலர் sms இதழ்களை நடத்துகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும் இன்னும் அதனை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தட்டுமே எகிப்தில் முக நூல் முலம் புரட்சி வந்தது போல.. என்ற ஆதங்கம் உங்களைப்போலவே எனக்கும் ... நன்றி

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் குப்பு வீரமணி சார் உங்கள் வருகை எனக்கு மகிழ்வுட்டுகிறது ... அது என்னுடைய மொபைல் எண் தான். சிறுகதைகளை வழக்கமான மொழியில் எழுதுவதைவிட வெவ்வேறு உத்தியில் எழுதினால்தான் வாசிக்க வைக்க முடியும் என்பதால் எண்களை அடிப்படையாக வைத்து இந்த முயற்சி தஞ்சை சுகன் விழாவில் சந்திப்போமா? ... நன்றி

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. மன்னிக்கவும். உங்க பதிவை இப்பொழுது தான் படிக்க முடிந்தது.

    “காதலிக்கத் துவங்கும் போது
    உன்னை உணர்ந்தேன்
    காதலித்த பின்
    என்னையே உணர்ந்தேன்..”

    உங்கள் சிறுகதையில் குறிப்பிட்டிருந்த இச்சொற்கள், என்னை பல்வேறு சிந்தனைகளுக்கு கொண்டு சென்றது, மனிதன் மற்றொரு மனிதனை மற்றும் அல்ல, வேற எந்த ஒரு பொருளையோ, செயலையோ காதலித்தாலே அவனால் அவனை உணர முடியும் என்பது எனது எண்ணம்.

    நான், எனது நண்பர்கள் எந்நேரமும் கைபேசியில் உரையாடுவதை கண்டு வியந்திருக்கிறேன். கைபேசியில் செலுத்தும் கவனத்தை ஏன் கல்வியில் செலுத்த இயல்வதில்லை என்று யோசித்தும் உண்டு. அவர்கள் இக்கதையை படித்தால் அவர்கள் மனம் மாற வாய்புகள் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

    எனக்கு பிடித்த கதைகளில் இனி இதுவும் ஒன்று... :)

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி அரவிந்த் .. எப்படி இந்த பதிவை தேடி பிடித்தீர்கள் உங்கள் விரிவான பின்னூட்டம் உங்கள் ஆழமான வாசிப்பையும், சிந்தனையையும் காட்டுகிறது எனக்கும் உங்களைப்போலவே ஆதங்கம்தான் அந்த ஆற்றாமையின் வெளிப்பாடுதான் இந்த கதை தொடர்ந்து என்னுடைய பதிவுகளை வாசியுங்கள் மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. மிக்க மகிழ்ச்சி!!! நிச்சயமாக உங்களது மற்ற பதிவுகளையும் படிப்பேன்...

    (ஒரு சிறிய திருத்தம். எனது பெயர் அரவிந்த் அல்ல, அர்விந்த். ஒருவனின் அடையாளமே பெயர் தானே. ஆதலால் கூறினேன் . :) )

    பதிலளிநீக்கு
  11. ஓ... அர்விந்த்.... பெயர் ஒரு அடையாளம் மட்டுமல்ல் .. ஆயிரம் அர்த்தம் புதைந்த அற்புதமான பொக்கிஷமும் கூட .. இப்ப காந்தி என்று சொன்னால் உண்மை அகிம்சை சத்தியம் என்று பல விஷயங்கள் நினைவுக்கு வரும் இல்லையா .. நம் பெயர் நிலைக்கத்தானே இத்தனை கஷ்டப்படுகிறோம் .. இனி சரியாக உச்சரிப்பேன் பதிவு செய்வேன் சரிதானே?

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...