விகடன் பிரசுரம் வெளியிட்ட 'பழம் பெருமை பெசிவோம் நூலுக்கு எழுதிய என்னுரை
‘கனிந்த கனவு
மனிதர்களின் வாழ்வு பெரும்பாலும் ‘சுயம்' சார்ந்தே இயங்குகின்றது. தனது வாரிசுகளுக்கு
சொத்துக்களையும், சொந்தங்களையும், நோய்களையும் கடத்திவிட்டு மனிதன் மறைகிறான். ஆனால்
பறவைகளும், பழங்களும் அப்படியல்ல....
ஒவ்வொரு கனியும் சுவையை, மணத்தை, ஆரோக்கியத்தை சமூகத்தின் சகல ஜீவ ராசிகளுக்கும்
பாரபட்சமின்றி வள்ளலைப்போல வாரி வழங்கிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் சுவைத்துக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு கனியும் உங்கள் மூதாதையர் ருசித்துவிட்டுப் போட்ட ஏதோ ஒரு விதையிலிருந்து
தோன்றியிருக்கலாம். ஏதோ ஒரு பறவை அதனை சுமந்து வந்து இந்த பூவுலகின் வேறொரு பிரதேசத்தில்
வீசியபடியே இருக்கிறது.
நம் மரபை. மூதாதையரின் ஆன்மாவை, எச்சத்தை எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் பறவைகளும்,
பழங்களும் பல ஆயிரம் வருடங்கள் கடந்தும் சுமந்து வந்திருக்கின்றன. இன்னமும் சுமந்து செல்கின்றன.
ஒவ்வொரு பழமும் இயற்கையின், இறைவனின் துளி என்னும் பிரம்மிப்போடு நோக்கினால் அதன்
மகத்துவத்தை உணரமுடியும்.
‘பழம்' பெருமை பேசுவோம் என்ற தலைப்பில் சனிக்கிழமைதோறும் வெளிவர இடமளித்த தினதந்தி
நாளிதழில் தொடர்ந்து 32 வாரங்கள் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பழங்கள் என்னும்
மகா சமுத்திரத்திலிருந்து உள்ளங்கை குழியில் சில சொட்டுக்களை அள்ளி வர இந்த நூலில்
முயன்றிருக்கிறேன்.
இத்தொடர் வெளி வருகையில் எனக்கு முழுச் சுதந்திரமும், போதிய இடமும் அளித்து உதவிய
‘தினதந்தி' நாளிதழ் நிறுவனத்திற்கும், ஆசிரியருக்கும் இந்த தருணத்தில் மனநிறைவோடு நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.
என்னுடைய முதல் சிறுகதை ‘ ஆனந்த விகடனில்தான்' வந்தது என்பதை கர்வத்துடன்
சொல்லியபடிதான் இலக்கிய வீதிகளில் திரிந்து கொண்டிருக்கிறேன். அன்று விகடன் விதைத்த விதை,
ஆழமாக வேர் பிடித்து, விகடன் பிரசுரத்தில் நூல் ஒன்று வரவேண்டும் என்கிற கனவைக் கனிய
வைத்திருக்கிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது, அதனால் உருவாகும்
நெருக்கடிகளை பொருட்படுத்தாது துணை நின்ற எனது தாயார் சாந்தா, மனைவி ஆதிலட்சுமி, மகள் பிருத்வி
மதுமிதா, மகன் சிபிக்குமார் ஆகியோருக்கும், தினதந்தியுடனான உறவுக்கு பாலம் அமைத்த நெய்வேலி
புகைப்பட கலைஞர் என்.செல்வனுக்கும், அருமைச் சகோதரர் மு.செந்திலதிபன் அவர்களுக்கும், அன்பழகன்
அவர்களுக்கும், விகடன் நிர்வாகத்தினருக்கும், விகடன் பிரசுர குழுவினருக்கும், அட்டையை வடிவமைத்த
மற்றும் அச்சிட்ட அத்துணை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதில் மனம் மகிழ்கிறது
தொடர் வெளியான போது பலரும் நேரில் அல்லது தொலைபேசியில் தங்கள் வாசிப்பனுபவத்தை
பகிர்ந்து கொண்டனர். அந்த பட்டியல் பெரியது. சனிக்கிழமை தவறாமல் தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து
கொண்ட பா. உஷாராணி மற்றும் குறிஞ்சி. ஞான. வைத்தியநாதன் இருவருக்கும் நன்றிக்கடன்
பட்டுள்ளேன்..
மிக்க அன்புடன்,
நெய்வேலி பாரதிக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>