சனி, 28 ஜனவரி, 2017

ஷின் சாங் ஓக் ( தென் கொரியா)



            ஷின் சாங் ஓக் ( தென் கொரியா)


      சிலர் பிறக்கும்போதே கலகக்காரர்களாகப் பிறக்கிறார்கள். சமூகத்தின் சூழல் ஒரு சிலரை கலகக்காரர்களாக உருவாக்குகிறது. இன்னும் ஒரு சிலரை இந்த உலகம் கலகம் செய்யத்தள்ளுகிறது. இந்த மூன்றாவது பிரிவைச் சேர்ந்தவர்தான் தென் கொரியாவில் 1926 ஆம் ஆண்டு பிறந்த ஷின் சாங் ஓக். தென் கொரியா ஜப்பானின் ஆளுமையிலிருந்து விடுதலைப் பெற்ற பிறகு தயாரான முதல் திரைப்படமான  Viva Freedom இல் தயாரிப்பு நிர்வாகியாக துவங்கிய ஷின்னின் திரைப்பட வாழ்க்கை அவர் 2006 ஆம் ஆண்டு இறக்கும் வரை இயக்குனராக, தயாரிப்பாளராக பல பரிமாணங்களில் தொடர்ந்தது.
      கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஷின், 300க்கும் அதிகமான படங்களை தனது ஷின் ஸ்டூடியோ மூலம் தயாரித்தவர். வர்த்தக ரீதியாகவும் கலாப்பூர்வமாகவும் அவரது படங்கள் அமைந்தன. கொரியப் படங்களை ஷின் சினிமா அவரல்லாத சினிமா என்று இரண்டாகப் பிரித்துவிடலாம் என கொரிய சினிமா விமர்சகர்கள் வேடிக்கையாக குறிப்பிடுவதுண்டு.  The Evil Night, Prince Yeonsan, To the last day, Rice, 3 Ninjas Knuckle up, Pulgasari,  A Flower in Hell, Phantom queen  ஆகியன அவரது குறிப்பிடத்தக்க படங்களில் சில.. கொரிய சினிமாவின் பேரரசன் எனப் புகழப்பட்டவர் ஷின். அவரது காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த ஸோய் யூன் லீயை மணந்தார். ஸோய் யூன் ஹி 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். Sogum படத்தில் நடித்ததற்காக மாஸ்கோ திரைப்பட விழாவில் சிறந்த நடிகை பட்டம் பெற்றவர். சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மனக்கசப்புக் காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
      1952இல் துவங்கி 1970 வரை கொரிய திரைப்பட உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் ஷின். தென்கொரியாவின் ஆட்சி அதிகாரத்தை இராணுவ ஜெனரல் பார்க் சங் லீ பிடித்தப் பிறகு சட்டத்திட்டங்கள் கெடுபிடியாகின. திரைப்படத் தணிக்கைத் துறையில் அரசின் தலையீடுகள் துவங்கின. சுதந்திரமான திரைப்பட இயக்கத்தை கொள்கையாகக் கொண்டிருந்த ஷின்னின் திரைப்படங்கள் பலகடுமையான தணிக்கைக்கு ஆளாயின. இதனால் தனது அதிருப்தியை வெளிப்படையாக சொல்லத் தொடங்கினார் ஷின். அரசு ஷின்னின் படத் தயாரிப்பு நிறுவனங்கள்ஸ்டூடியோக்களை மூடச்செய்தது.
      1977ஆண்டின் இறுதி நாட்களில் ஷின்னின் மனைவி ஸோய் யூன் ஹி யை ஹாங்காங்க்- ஐச் சேர்ந்த  வாங்க் டாங் யில் என்பவர் சந்தித்தார். தான் ஹாங்காக்கில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன் சார்பாக ஒரு படத்தை இயக்கித்தருமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்காக ஸோய் யூன் ஹி எதிர்பார்க்காத, நம்பவே முடியாத ஒரு தொகையைத் தருவதாக உறுதி அளித்தார். ஸோய் யூன் ஹி விவாகரத்து பெற்றிருந்தாலும் ஷின்னின் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தார். ஷின்னின் திரைப்பட நிறுவனத்தின் அலுவலகம் ஒன்று ஹாங்காக்கிலும் இருந்தது. எனவே ஷின்னிடம் இது குறித்து பேசிவிட்டு சொல்வதாக வாக்களித்தார் ஸோய் யூன் ஹி.
      ஷின்னிடம் இது குறித்து ஸோய் யூன் ஹி விவாதித்த போது ஷின்னுக்கு தாங்கமுடியாத ஆச்சரியம். கூடவே கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. தென்கொரியாவின் நம்பர் ஒன் இயக்குனர் தான்தான் தம்மிடம் கேட்காமல், ஒரு நடிகையாக மட்டும் பிரகாசித்த ஸோய் யூன் ஹி-க்கு அந்த வாய்ப்பு வந்ததை ஷின்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
      இருப்பினும் யூன் லீ வந்த வாய்ப்பை விடுவதாயில்லை. 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹாங்காக் பிரயாணமானார். வாங்க் அவருக்கு இரத்தினக் கம்பள வரவேற்பினைத் தந்தான். சொகுசான தங்கும் விடுதி, விருந்து, பரிசுப்பொருட்கள் என அவரைக் கொண்டாடினான். இரண்டு நாட்கள் அவனது உபசரிப்பில் திளைத்த யூன் லீ தான் வந்த வேலையைக் கூட மறந்து போனார். இடையில் ஷின்னின் அலுவலகம் சென்று அங்கு கம்பெனியின் நிர்வாகியை சந்தித்தார்.  மூன்றாவது நாள் வாங்க் அனுப்பியதாக லீ சாங் ஹீ என்னும் பெண்மணி தனது 12 வயது மகளுடன் வந்து யூன் லீயை சந்தித்தார். ஸோய் யூன் ஹி யை வானளாவப் புகழ்ந்தார். இந்த சந்திப்புதான் ஸோய் யூன் ஹி மற்றும் ஷின்னின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. சந்தித்த ஒரே நாளில் இருவரும் ரொம்பவும் நெருங்கிப்பழகிய தோழிகள் போல் ஆகினர். அடுத்த நாளும் மகளுடன் வந்த அந்தப் பெண் ஸோய் யூன் ஹியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு யூன் ஹி கிளம்பிய அந்த நொடியிலிருந்து யூன் ஹி மற்றும் ஷின்னின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு திகில் திரைப்படத்தின் திரைக்கதைக்கு இணையானவை. ஒரு வாடகைக்காரில் மூவரும் கிளம்பினார். செல்கிற வழியில் Repulse Bay என்கிற கடற்கரை அருகே சென்றதும் லீ சாங் திடீரென காரை நிறுத்தச் சொன்னாள். ஸோய் யூன் ஹியை இறங்குமாறு கேட்டுக்கொண்டாள். காரை திருப்பி அனுப்பியும் விட்டாள்.
      எதற்காக இங்கே இறங்கச் சொன்னீர்கள்?”
      இங்கே ஒருவரை சந்திக்கிறோம்
      முன்னரே நீங்கள் சொல்லவில்லையே.. நான் மாலை ஒரு விருந்துக்குச் செல்லவேண்டும்
      அதற்குள் கிளம்பிவிடலாம்.. நேரம் இருக்கிறது
      அந்தக் கடற்கரை போதைமருந்து கும்பல்களுக்கும், வழிப்பறிச் செயல்களுக்கும் பெயர் பெற்றது. Repulse Bay  என்ற பெயர் கூட அது ஆபத்தான இடம் என்னும் காரணத்தால் பேச்சு வழக்கில் அழைக்கப்பட்ட பெயர் பின்னாளில் நிலைத்துவிட்டது.
      அப்பொழுது நீண்ட தலைமுடியுடன் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் அலைகளினூடே பறந்தபடி வந்தனர். ஒரு மோட்டார் படகு கடலில் அவர்களை நோக்கி வந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஸோய் யூன் ஹி- யை படகில் ஏறுமாறு கூறினர். யூன் ஹிமறுத்தபோது வலுக்கட்டாயமாக அதில் ஏற்றினர். அவ்வளவுதான் யூன் ஹி எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்ற தகவலே இல்லை. தென்கொரியாவெங்கும் யூன் ஹி காணாமல் போய்விட்டார் என்றுதான் தெரியுமே தவிர என்ன நடந்தது என்று தெரியாது.
      ஷின் சாங் ஓக் நிலைமையோ பரிதாபகரமாகிவிட்டது. ஏற்கனவே அவர் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்துவிட்டதால் லீ காணாமல் போனதற்கும் இவருக்கும் சம்மந்தம் உண்டோ என்ற பேச்சு பரவலாக கிளம்பிவிட்டது. அதுவுமல்லாமல் ஸோய் ஹாங்காக்கில் ஷின்னின் அலுவலகம் சென்றிருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. அப்போதைய தென்கொரிய அரசாங்கத்துடன் ஷின்னுக்கு நல்ல உறவில்லை எனவே ஷின்னுக்கு எதிரான வதந்திகளை அவர்கள் ரசித்தனர் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் தரப்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆக ஷின் தான் இப்பொழுது ஸோய் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும்.
      ஷின் ஒரு திரைப்படக் கதாநாயகன்  போல ஸோய்யைக் கண்டுபிடிக்க ஹாங்காக் கிளம்பிவிட்டார். முதலில் அங்குள்ள தன் அலுவலகம் சென்று விசாரித்தார். ஏற்கனவே தென்கொரிய அரசாங்கத்தால் அது செயல்படவிடாமல் முடக்கப்பட்டதால், அங்குள்ள நிர்வாகிகள் பெயரளவுக்குத்தான் இயங்கிவந்தனர். அவர்களுக்கு ஸோய் தங்கியிருந்த ஹோட்டலில் என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.
      ஹோட்டலில் அவர் யாருடனோ வாடகைக்காரில் சென்றதுவரை சொன்னார்கள். ஷின் அதே ஹோட்டலில் ஏதாவது தகவல் கிடைக்குமா என்ற தேடலுடன் தங்கியிருந்தார். ஒரு நாள் லீ Repulse Bay பக்கம் சென்றதை பார்த்ததாகக் கூறி சிலர் ஷின்னிடம் கூறினார்கள். அவர்களுடன் காரில் சென்றார். லீ கடத்தப்பட்ட அன்று என்ன நடந்ததோ அதுவே மறுபடி நடந்தது.  இந்த முறை ஷின்னிடம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கவில்லை. மயக்கமருந்து தூவிய சிறிய கர்ச்சீஃப்பை அவரது மூக்கில் வைத்து படகில் ஏற்றிவிட்டனர்.
      ஷின்னை அழைத்துச் சென்ற இடத்தில் டியர் லீடர்' என வந்தவர்களால் அழைக்கப்பட்ட கிம் ஜோங் யில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். வடகொரியாவின் அடுத்த அதிபர் என கருதப்பட்ட கிம் புன்னகையுடன் வடகொரியாவுக்கு வருகைத் தந்திருக்கும் ஷின் சாங் ஒக்கை அன்புடன் அழைக்கிறேன்என்றார். அப்பொழுதுதான் ஷின் தான் வந்திருப்பது வடகொரியாவின் தலைநகர் பியான்யோங் என்பது புரிந்தது. சர்வாதிகார நாடான வடகொரியாவில் கிம் மற்றும் அவரது தந்தை சங் யில் வைத்ததுதான் சட்டம். இரும்புத்திரை கொண்ட நாடு என்பதால் அங்கு என்ன நடக்கிறது என்பது வெளி உலகுக்குத் தெரியாது.

      கிம் ஐ பார்த்து கேள்வி கேட்கக்கூட யாருக்கும் தைரியம் அங்கு கிடையாது. அவராக பார்த்து என்ன சொல்கிறாரோ அதுதான்.. அவ்வளவுதான்.. ஷின் எதுவும் பேசாமல் இருந்தார். வடகொரியாவில் தயாரிக்கப்படும் படங்கள் அத்தனை சிறப்பானதாய் இல்லை.. உங்கள் திரைப்படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. எனவே நீங்கள் எங்கள் நாட்டிலேயே தங்கியிருந்து சில படங்களை இயக்கவேண்டும்என்றார் கிம். மறுபேச்சு பேசினால் என்ன நடக்கும் என்பதை எல்லாம் சொல்லித்தான் அங்கு ஷின்னை அழைத்து வந்திருந்தார்கள். 
      கிம் தனது பிரம்மாண்டமான வீடியோ லைப்ரரிக்கு ஷின்னை அழைத்துச் சென்றார். அங்கு சுமார் 19000 உலகத்திரைப்பட வீடியோ கேசட்டுகள் இருந்தன. சில படச்சுருள்களும் இருந்தன. ஷின்னின் அனைத்துப் படங்களின் வீடியோ கேசட்டுகளும் இருந்தன. அங்குதான் Tale of Shimchoeng  என்ற ஷின்னின் படச்சுருள்களும் இருந்தன. ஷின் அந்தப் படத்தின் பிலிம்களை சப்டைட்டில் போடுவதற்காக ஹாங்காங் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவரது ஹாங்காங் அலுவலகத்துக்கு செல்லாமலேயே அது தொலைந்துவிட்டது. அந்த படச்சுருள்கள் எப்படி கிம்மின் லைப்ரரிக்கு வந்தது என்பது ஆச்சர்யமாக இருந்தது ஷின்னுக்கு. கிம்மின் அதிகார வரம்பு எல்லைத் தாண்டியது என்பது ஷின்னுக்கு புரிந்தது.
      ஷின்னுக்கு உரிய மரியாதை தந்து அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் 24 மணி நேரமும் கண்காணிக்கப் பட்டபடியே இருந்தார். யாரிடமும் எதுவும் பேசமுடியாது. ஏனெனில் அரசாங்க உத்தரவு இல்லாமல் அவர்கள் தண்ணீர் குடிக்கக்கூட வாய்த் திறக்கப் பயந்தார்கள். ஸோய் எங்கிருக்கிறார் என்று ஒரு தகவலும் இல்லை. ஒருவேளை அவர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சினார். எப்படியாவது அங்கிருந்து தப்ப வேண்டும் என நினைத்துக்கொண்டார். அதுவரை கிம் சொன்னபடி திரைப்படங்களை உருவாக்கும் பணியில் இருப்பது என்று முடிவு செய்தார்.
      ஒரு நாள் அவர் திரைப்பட வேலையாக காரில் சென்று கொண்டிருந்தார். அருகில் அரசாங்க காவல் அதிகாரி. கடைத்தெருவில் ஏதோ வாங்குவதற்காக இறங்கியவர். சட்டென தப்பிக்கும் முயற்சியில் நடக்கத் துவங்கினார். ஆனால் ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் அரசாங்க அதிகாரிகள் சோதனை செய்வார்கள் என்ற விஷயம் அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. மூன்றாவது சோதனைச் சாவடியில் அவர் மாட்டிக்கொண்டார். அவ்வளவுதான் விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டார்.
      ஒரு வகை புல், கொஞ்சம் அரிசி சோறு, கொஞ்சம் உப்பு அவ்வளவுதான் அவருக்கான உணவு. சிறை அதிகாரிகளிடம் முழந்தாளிட்டபடி, தலையை குனிந்து கொண்டுதான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவேண்டும். கடுமையான தனிமைச் சிறை அவருக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. சிறையில் வடகொரியாவின் வீரம், வரலாறு இவற்றை எல்லாம் படிக்கச் சொன்னார்கள். சில சமயம் சக கைதிகளுக்கு வகுப்பெடுத்தார்.
      ரொம்ப நல்ல பிள்ளையாக இருக்கிறார் என்பது தெரிந்து மீண்டும் அவரை கிம் சந்திக்க அழைத்தார். இந்த முறை கண்டிப்பாக தப்பிக்க முயற்சிக்க மாட்டேன் என்ற உறுதிமொழியின் பேரில் அவர் திரைப்பட வேலைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டார்.
      வடகொரியாவை பொறுத்தவரை கிம்மின் ஆலோசனை பெறாமல் ஒரு திரைக்கதை கூட அங்கு உருவாகாது. ஆனால் ஷின் சுதந்திரமாக படங்களை இயக்க அனுமதிக்கப்பட்டார். ஷின் கேட்ட அத்தனை உதவிகளும் தரப்பட்டன. அங்கிருந்த போதுதான் அவரது திரைப்பட வாழ்நாளின் மிகச்சிரந்த படம் எனக் கருதப்பட்ட  RUN AWAY உருவானது. ஜப்பான் ஆக்ரமிப்பினால் கொரியர்கள் பட்ட துயரங்களின் வலியை பதிவு செய்த படம் அது. புகழ் பெற்ற கோட்சில்லா படமான PULGASARI யும் வெளியானது.
      கிம்மின் நம்பிக்கையை பெற்ற சில நாளில் அவர் வைத்த விருந்து ஒன்றில் கலந்துகொண்ட போதுதான் ஷின் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸோய்யை சந்தித்தார். கிம்மினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு வெளி உலகம் அறியாமல் தனிமையில் உழன்ற லீக்கும் அன்றுதான் பிறரைப்பார்த்து பேச அனுமதித் தரப்பட்டது. கிம் தனது இருபுறமும் ஸோய் மற்றும் ஷின் ஐ நிற்கவைத்து பெருமிதமாய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சொன்னபடி சிறந்த படங்களை இயக்கியதால் லீயுடன் இனி சுதந்திரமாக ஷின் இருக்கலாம் என கிம் அங்கு அறிவித்தார். ஆனால் அதற்கு ஷின் மீண்டும் ஸோய் யூன் ஹி யை மணக்கவேண்டும் என கிம் நிபந்தனை விதித்தார். ஆக அங்கு மறுபடி அவர்களுக்குத் திருமணம் நடந்தது.
      தொடர்ந்து கிம்மின் நம்பிக்கையைப் பெற சில படங்களை இயக்கினார் ஷின். இருவரும் சரியான சந்தர்ப்பத்தில் தப்பிக்க முடிவு செய்திருந்தனர். ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் 1986-இல் நடக்கும் படவிழாவில் கலந்து கொண்டு வட கொரிய படங்களுக்கான ஒரு மார்க்கெட்டிங்- ஐ செய்தால் உலகம் முழுக்க அது கவனத்தை ஈர்க்கும் என ஷின் ஒரு யோசனையை கிம்மிடம் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் இருவரையும் அனுப்ப கிம் ஒப்புக்கொண்டார்.
      வியன்னாவில் இருந்தபடி தப்பிப்பது எளிது என்பதால் அதற்கானத் திட்டத்தை நிதானமாக இருவரும் வகுத்தனர். தங்களுக்கு அறிமுகமான ஜப்பானிய திரைப்பட விமர்சகர் ஒருவர் மூலம் வியன்னாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தஞ்சமடைய முன்கூட்டி அனுமதி பெற்றனர். தப்பிப்பதற்கு முன் தங்களை கிம்தான் கடத்தினார் என்பதற்கு ஆதாரம் வேண்டுமே, இல்லை என்றால் உலகம் நம்பாது. முக்கியமாக தென்கொரிய மக்கள் நம்பவே மாட்டார்கள். ஆகவே ஸோய் ஒரு சிறிய ரக டேப் ரெக்கார்டரை ரகசியமாக வாங்கினார். கிம் ஐ அடுத்த முறை சந்திக்கும்போது அவரோடு உரையாடுவதை ரகசியமாக பதிவு செய்வது என தீர்மானித்து ஸோய்யின் ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டார். வடகொரியாவை பொறுத்தவரை அது மரணத் தண்டனையைத் தருமளவு மாபெரும் குற்றம். ஏனெனில் அதற்கு முன்னர் கிம்மின் இரண்டே இரண்டு குரல் பதிவுகள்தான் வெளி உலகுக்குத் தெரியும். ஒருமுறை அவர் இராணுவ வீரர்களுக்கான கூட்டத்தில் உரையாடியது, மற்றொன்று ஒரு விளையாட்டு விழாவில் பேசியது.  இரண்டையும் வடகொரிய அரசுதான் வெளியிட்டு இருந்தது.
      மிகுந்த ஆபத்தான சூழலில் அந்தக் குரல் பதிவு ஸோய்யினால் செய்யப்பட்டது. இருவரும் வியன்னா கிளம்பினார்கள். அங்கு அவர்கள் தங்கியிருந்த விடுதி வரவேற்பாளருக்கு துண்டுச் சீட்டில் தாங்கள் தஞ்சமடையும் விபரத்தை எழுதி அமெரிக்க தூதரகத்தில் சேர்க்க வைத்தனர். அவர்கள் சென்ற காரை பின்னிருந்து வடகொரிய அதிகாரிகள் வேறொரு காரில் கண்காணித்தபடி தொடர்ந்தனர். ஒரு சிக்னலில் சாமர்த்தியமாக  பின் தொடர்ந்தவர்களை தனிமைப் படுத்திவிட்டு ஷின் மற்றும் ஸோய் இருந்த காரை அமெரிக்கத் தூதரகம் நோக்கி வேகமாக செலுத்தினார் ஓட்டுனர். அங்கே தயாராக இருந்த ஜப்பானிய விமர்சகர் அவர்களை அழைத்துச் சென்று அமெரிக்க தூதரிடம் சேர்ப்பித்தார்.
      கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் வனவாசத்துக்குப் பிறகு அவர்கள் சுதந்திரக் காற்றை அனுபவித்தனர்.  இந்த எட்டு ஆண்டு இடைவெளியில்  5 ஆண்டுகள் சிறையில் இருந்தாராம் ஷின்.. 7 திரைப்படங்களையும், சில அரசாங்கப் படங்களையும்  வடகொரியாவுக்காக இயக்கித் தந்தார் ஷின். அமெரிக்க தூதரகத்தில் தஞ்சமடைந்த ஷின் சில வருடங்கள் அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் படங்களை இயக்கினார். அங்குதான் நிஞ்சா திரைப்படங்களை தொடர்ச்சியாக உருவாக்கினார் ஷின்.
      ஆனால் கிம் அதற்குப்பிறகு ஷின் ஐ தொல்லைப்படுத்தவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் இது பற்றி அவரிடம் கேட்டபோது ஷின் மிகத் திறமையான இயக்குனர். அவரை அமெரிக்காதான் கடத்திக்கொண்டு போய் இப்பொழுது அருமையான திரைப்படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறதுஎன்று ஜாலியாக சொல்லிவிட்டு போய்விட்டார்.
      தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒரு கும்பல் ஒரு நடிகையை கடத்திவைத்திருக்கும் படத்தையும், மற்றொரு படத்தில் ஒரு தாதா ஒரு இயக்குனரை மிரட்டி படமெடுக்கும் கதையையும் பார்த்திருப்பீர்கள். அந்த சம்பவங்கள் இரண்டுமே ஷின் மற்றும் லீயின் வாழ்வில் நிஜமாகவே நடந்ததுதான்.
      தென்கொரியாவின் அரசியல் நிலைமை சீரானதும் 1994 இல் இருவரும் தென்கொரியா திரும்பினர்.  கடத்தல் சம்பவம் குறித்துக் கேட்டபோது ஷின் நகைச்சுவையாக விவாகரத்து ஆன பின்னர் ஸோய் திரும்பவும் என்னுடன் சேர விரும்பியிருந்தால் நேரடியாக என்னிடம் தெரிவித்திருக்கலாம். கிம் ஜோங் யில் லிடம் சொல்லிவிட்டார் போலும் அவர் எங்களைத் தூக்கிப்போய் திருமணம் செய்து வைத்துவிட்டார்என்றாராம்..
      வாழ்க்கை பல சமயம் கற்பனையையும் விஞ்சி சுவாரசியங்கள் மிகுந்தது என்பது ஷின் மற்றும் லீ யின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன இல்லையா
        

      

3 கருத்துகள்:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...