வெள்ளி, 2 ஜனவரி, 2015

'பெண்ணியம் பேசிய பேரறிவு

                
                                                            


                முட்டாள்களுக்கென்று ஒரு தினம் இருப்பதில் தவறில்லை. அறியாமைதான் முட்டாள்தனத்தின் அளவுகோல் என்றால், எல்லோருமே ஒரு விதத்தில் அறியாமையின் நிழலில்தான் அமர்ந்திருக்கிறோம். சதவிகிதமே வேறுபடுகின்றன. முட்டாள்தினத்தின் நோக்கம் அறியாமையிலிருந்து அறிதலுக்கு' என்பதாக இருக்குமாயின், முட்டாள்களுக்கென்று ஒரு தினம்' இருப்பதில் தவறில்லை.
                பிரச்சினை என்னவென்றால் அடுத்தவர்களை முட்டாளாக்கும் கொண்டாட்டம் மட்டுமே இருக்கின்றவரையில் முட்டாள்கள் தினத்தை அனுசரிப்பதில் பிரயோஜனம் எதுவுமில்லை. ஏனெனில் முட்டாளாக்குவது அன்றாட செயலாக பழகிவிட்ட உலகில் அனுதினமும் முட்டாள்கள் தினமே.
                அறியாமை ஒரு கடலைப்போல் அலை மோதிக்கொண்டிருக்கிறது. பற்றுவதற்கு ஒரு மரத்துண்டுகூட இல்லாத போதும், எதிர்நீச்சல் போட்டு போராடியவர்களால் இன்று நாம் சுதந்திரமாக மிதவைகளில் பயணிக்கின்றோம். கல்விதான் இருளை போக்கும் ஒளி, கல்விக்கூடங்கள்தான் ஒளியை காக்கும் அனல்வெளி என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் கல்விச்சாலையின் நிழலில் கூட ஒதுங்காமல், அறிவுச்சுடராக ஒளிர்ந்த மேதைகளின் பட்டியலும் பெரிதுதான். அப்படியான மேதைகளில் ஒருவர் மேரி சோஃபியா ஜெர்மெயின்.
                பிரான்சில் 1776 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி சோஃபியா, பாங்க் ஆஃப் பிரான்சில் இயக்குனராக இருந்த  அம்புரோஸ் ஃபிரான்காயிஸ் மகளாக பிறந்தார். அவரது தாயின் பெயர் மேரி மெட்லின் ஜெர்மெயின். உப தொழிலாக பட்டு வியாபாரம் செய்து வந்த அம்புரோஸ்பாரிஸ் நகர நிர்வாக குழுவிலும்  இடம்பெற்றிருந்தார். இத்தனை செல்வாக்கு பெற்றிருந்தாலும் அவரது பெண்கள்  கல்வி கற்கும் சூழல் பிரான்சில்  இல்லை. பதினாறாம் லூயியின் தவறான நிர்வாகத்தினால், பிரான்சு முழுக்க கிளர்ச்சி தோன்றிய காலம் அது. பிரெஞ்சு புரட்சியின் துவக்க காலகட்டம். அன்றைய சூழலில் பெண்கள் கல்வி கற்க அனுமதி இல்லை. ஆனாலும் சோஃபியா சுயமாக மொழியை கற்றுக்கொண்டார்.
                அம்புரோஸ் தனது இல்லத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்றை அமைத்திருந்தார். சோஃபியா 13 வயதை நெருங்கும் தருணத்தில் (1789) பிரான்சில் பெண்கள் வெளியே நடமாடக்கூட முடியாத அளவுக்கு கலவரக்காடாக இருந்தது. சோஃபியா தனது பொழுதுகளை நூலகத்தில் கழிக்க நேரிட்டது. கணிதம் மற்றும் வரலாற்று நூல்கள் அவரை வாசிக்கத்தூண்டின. குறிப்பாக ழீன் எடினோ மாண்டுக்லே எழுதிய ஹிஸ்டரி ஆஃப் மேத்தமேடிக்ஸ் நூலை வாசித்தார். அதில்தான் ஆர்க்கிமிட்டிஸ்-இன் துயர மரணம் குறித்து அவர் அறிந்துகொண்டார். பொதுவாக ஆர்க்கமிட்டிஸ் கணித ஆய்வில் ஈடுபட்டால் சாப்பாடு, தூக்கம், தண்ணீர் என அனைத்தையும் மறந்துவிடுவார். அவர் வாழ்ந்த சிராக்கஸ் நகரை ரோமானிய படைகள் ஆக்ரமித்த சமயம்ஆர்க்கமிட்டீஸ் மும்முரமாக மணலில், வடிவ இயல் குறித்து சில புதிர்களை விடுவிக்க முனைந்து கொண்டிருக்கையில்  ஒரு ரோமானிய சிப்பாய் அவர் யாரென்று அறியாமல் அவரை கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் ஆர்க்கமிட்டீஸ் அந்த சிப்பாயை கவனிக்கவே இல்லை. கோபமுற்ற சிப்பாய் அந்த கணித சக்கரவர்த்தியை வெட்டி வீழ்த்திவிட்டான்.
                தன்னை கொல்லவந்தவனை கவனிக்க முடியாத அளவுக்கு கணிதம் அத்தனை சுவாரசியமானதா என்று வியப்படைந்த சோஃபியா, கணித நூல்களை வாசிக்கத்துவங்கினார். நுழைய, நுழைய ஆலிஸ்-இன் அதிசய உலகம் போல அவரை உள்ளிழுத்துக்கொண்டே போனது கணக்கு. ஜாக்குவஸ் ஆண்டனி ஜோசப் என்பவர் எழுதிய லே கால்குலஸ் டிஃபரன்ஷியல்' என்ற நூலை வாசித்ததிலிருந்து கால்குலஸ் மீது அபரிமிதமான நாட்டம் ஏற்பட்டது. அவரது தொடர்ந்த வாசிப்பு ஆர்வம் அவரது பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அவர் ஏதோ தேச விரோத செயலில் ஈடுபட்டிருந்தது போல பதறினார்கள். அவர் தொடர்ந்து படிக்க முட்டுக்கட்டை போட்டனர். ஆனால் சோஃபியா இரவு நேரத்தில் மெழுகுவர்த்திகளையும், புத்தகங்களையும், குறிப்பு ஏடுகளையும் தனது போர்வைகளோடு மறைத்து எடுத்துச்சென்று இரவு முழுக்க புத்தகங்களை வாசிப்பதிலும், குறிப்புகள் எடுப்பதிலும், கணிதப்புதிர்களை பயிற்சி செய்வதிலும் தொடர்ந்து ஈடுபட்டபடியே இருந்தார். சில நாட்களில் விடிந்தபிறகும் தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பவந்த பெற்றோர்கள் அவரது விரல்களில் படர்ந்திருந்த பேனா மையை பார்த்துவிட்டு இனி அவரது படிக்கும் ஆர்வத்தை தடை செய்ய முடியாது என புரிந்துகொண்டு அவரை அவரது வழியிலேயே விட்டுவிட்டனர்.
                பாரிசில் 1794-இல் இகோல் பாலிடெக்னிக் என்ற தொழில் நுட்பக்கல்லூரி கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் கொண்டவர்கள் படிப்பதற்காக துவங்கப்பட்டது. 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே அதில் சேரமுடியும். சோஃபியாவுக்கும் அந்த ஆண்டுதான் 18 வயது. எனவே அவர் அந்த கல்லூரியில் சேர மனு செய்திருந்தார். ஆனால் அவர் பெண் என்கிற காரணத்தினால் கல்லூரியில் சேர்க்க மறுத்துவிட்டது நிர்வாகம். வீட்டிலிருந்தபடியே பாடத்திட்டங்களை பெற்று கற்கும் முறையையும் அந்த கல்லூரி அறிமுகம் செய்திருந்தது. ஆனால் அதிலும் பெண்களுக்கு அனுமதியில்லை. சோர்ந்து போயிருந்த சோஃபியாவுக்கு ஒரு உபாயம் கிடைத்தது. வீட்டிலிருந்து கற்கும் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்த ஆண்டோனி அகஸ்ட் ப்ளான்க் என்கிற மாணவன் ஏதோ சில காரணங்களால் பாரிசைவிட்டு வெளியே செல்ல நேரிட்டது. அவன் கல்லூரிக்கு தகவல் தெரிவிக்காமல் பாதியில் படிப்பை விட்டுவிட்டான். அது பற்றி அறிந்த சோஃபியா அவனது பெயரில் பாடத்திட்டங்களை பெற்று கற்கத் தொடங்கினார். அவர் பாடத்திட்ட வினாக்களுக்கு பதில் அனுப்பிய தாள்களைப் பார்த்து வியந்துபோன கல்லூரி ஆசிரியர் லாகரேங் அவரை நேரில் வரச்சொன்னார்.
                சோஃபியா வேறு வழியில்லாமல் தான் ஒரு பெண் என்பதை அவருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். லாகரேங் முதலில் அவரை கண்டித்தாலும் பிறகு அவருக்கு கணிதம் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டே இருந்தார்.
                ஒருமுறை ஜெர்மானிய கணித அறிஞர் காஸ் என்பவரது அரித்மாடிக் டிஸ்கஷன்ஸ்' என்ற நூலை வாசித்து அதில் உள்ள கணித விளக்கங்கள் குறித்து அவரோடு கடிதத் தொடர்புகொண்டு விவாதித்தார். அவரோடு தொடர்ந்து நட்பில் இருந்தார் சோஃபியா. அவரிடமும் ப்ளான்க் என்ற பெயரிலேயே தொடர்பில் இருந்தார்.  நெப்போலியனின் படை ஒருமுறை காஸ் வசித்த நகரை சுற்றி வளைத்த போது, ஆர்க்கிமிட்டீஸ்க்கு ஏற்பட்ட நிலை அவருக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சிய சோஃபியா தனது தந்தையின் நண்பரும் ராணுவ அதிகாரியுமான ஜெனரல் பெர்னெட்டியிடம் முறையிட்டு காஸ்' ஐ பத்திரமாக காப்பாற்றினார்.  நன்றி சொல்வதற்காக காஸ் முயன்றபோதுதான் சோஃபியா தன் ஒரு பெண் என்பதை வெளிப்படுத்தினார். காஸ் பின்னர் பாரிஸ்-இல் உள்ள காடிங்டன் பல்கலைக் கழகத்தில் வானியல் பேராசிரியராக சேர்ந்ததோடு, கணிதம் குறித்த ஆய்வுதாள்களை சமர்ப்பிக்கும்முன் சோஃபியாவை கலந்து ஆலோசித்து சில திருத்தங்களை  சேர்த்துக்கொண்டார். எல்லாமே கடிதங்கள் மூலம்தான். இருவரும் கடைசி வரை சந்திக்கவேயில்லை
                அட்ரின் மேரி லெகந்தர் என்பவர் எழுதிய நூல் ஒன்றில் ஃபெர்மட் எண்ணியல் தேற்றத்தின் இறுதி சமன்பாட்டை (FLT)தீர்க்கவே முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். சோஃபியா அதை சவாலாக எடுத்துக்கொண்டு அதனை தீர்க்கும் வழியை கண்டுபிடித்தார். X3 + Y3 = Z3  என்கிற சமன்பாட்டுக்கான தீர்வுதான் கணித உலகம் சோஃபியாவை நோக்கித் திரும்பிப்பார்க்கவைத்தது.

                ஜெர்மனைச் சேர்ந்த எர்னஸ்ட் சால்ட்னி 1808 -இல் பிரான்ஸ் வந்தபோது கண்ணாடி தட்டு ஒன்றில் நுண்ணிய மணல்துகளைக் கொட்டி வயலின் கருவியை வாசிப்பது போல, சிறு குச்சி ஒன்றின் மூலம் வாசித்தார். அதிலிருந்து இனிய இசை ஒன்று தோன்றியது. இந்த நிகழ்வை ஒட்டி பிரான்ஸ் அரசன் நெப்போலியன் ஒரு போட்டி ஒன்றை அறிவித்தான். சால்ட்னி செய்துகாட்டிய  நிகழ்வை கணிதம் மூலம் கண்டடைய முடியுமா? அப்படி முயன்று வென்றவர்களுக்கு பரிசும் அறிவித்திருந்தான்.
                சோஃபியா அந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பி அதற்கான தாள்களை சமர்ப்பித்தார். ஆனால் அவருடைய கணிதத் தீர்வுகளுக்கான வழிமுறைகள் தவறானவ என நிராகரித்துவிட்டார்கள். இரண்டாவது முறையாக மீண்டும் புதிய தாள்களை அனுப்பினார். ஆனால் அதுவும் ஏற்கப்படவில்லை. மூன்றாவது முறையாக வேறொரு கோணத்தில் அதற்கான தீர்வுகளை சமர்ப்பித்தார். நடுவர்கள் இந்த முறை பரிசுக்குரியது என்று தேர்வு செய்தனர். ஆனால் சோஃபியா பெண் என்பதாலும், பள்ளிக்கல்வியை முறையாக கற்றவரில்லை என்பதாலும் இளக்காரமான கருத்துக்களையே வெளிப்படுத்தினர் என்பதால் சோஃபியா பரிசு வழங்கும் நிகழ்வுக்கு செல்லவே இல்லை. தன்னால் முடியும் என்பதை நிருபித்துவிட்டேன் பரிசுக்காக நான் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை என்று அவர் கூறிவிட்டார்.
                 பிற்காலத்தில், உலோகங்களின் நீட்சி குறித்த அவரது கணித நிரூபணங்கள் அவரைப்பற்றிய மதிப்பை உயர்த்தின. இதன் காரணமாக அவரை பிரான்சின் புகழ் பெற்ற இன்ஸ்டியூட் ஆஃப் அகாடமி அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அந்த அமைப்பின் முதல் பெண் உறுப்பினர் சோஃபியாதான். இதைத்தவிர அவருக்கு எவ்வித கௌரவமும் அவர் உயிருடன் இருக்கும் வரை வழங்கப்படவில்லை. பொதுவாக புகழ்பெற்றவர்கள், அறிவுஜீவுகள் இறந்தால் பிரான்சில் அவரது மரண சான்றிதழில் அதனை கௌரவமாக குறிப்பிடுவார்கள். ஆனால் சோஃபியாவின் மரண சான்றிதழில் அவர் ஒரு தொழிலும் இல்லாத ஒற்றைப்பெண்மணி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
                  திருமணமே செய்துகொள்ளாமல் கணித ஆய்வுகளிலேயே தனது வாழ்வின் எஞ்சிய நாட்களை செலவிட்ட சோஃபியா இறுதிகாலத்தில்  புற்று நோயால் நலிவுற்றார். 1831 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி அவர் மரணமுற்றார். அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப்பிறகு காஸ்'-ன் கடுமையான முயற்சிகளுக்குப்பிறகு காடிங்கன் பல்கலைக்கழகம் சோஃபியாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. எந்த கல்லூரி அவருக்கு கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க மறுத்ததோ அந்த கல்லூரியின் பெயர் பிற்காலத்தில் இகோல் சோஃபியா ஜெர்மெயின் பாலிடெக்னிக் என்று மாற்றமானது. ஒரு காலத்தில் சோஃபியா நுழைய  அனுமதிக்காத அந்த கல்லூரியின் நுழைவாயிலில் இன்று அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரது இல்லம் சரித்திர சின்னமாக அறிவிக்கப்பட்டு, இன்று  தவிர்க்க முடியாத இடமாக ஆகிவிட்டது. அவரது பெயர் பாரிஸ்-இன் முக்கிய தெரு ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.
                பெண்களுக்கான உரிமைகளுக்காக பலரும் பல கோணங்களில் போராடியிருக்கிறார்கள். சோஃபியா போராடியது தனது பேரறிவினால். இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் ஒற்றைச் சுடராய் ஒளிர்ந்த சோஃபியாவின்   பிறந்த நாளான ஏப்ரல் 1 ஐ வேறெதோ காரணங்களுக்காக முட்டாள்கள் தினமாக அனுசரிப்பது அநீதி என்றே படுகிறது.
         வேடிக்கை என்னவென்றால் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது  முதன் முதலாக பிரான்சில்தான் 1500 களில் ஆரம்பித்ததாம்...
                                                  நன்றி : தமிழ் இந்து  நாளிதழ்  18-05-2014

                

4 கருத்துகள்:

  1. பெண்களுக்கான உரிமைகளுக்காக பலரும் பல கோணங்களில் போராடியிருக்கிறார்கள். சோஃபியா போராடியது தனது பேரறிவினால். இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் ஒற்றைச் சுடராய் ஒளிர்ந்த சோஃபியாவின் பிறந்த நாளான ஏப்ரல் 1 ஐ வேறெதோ காரணங்களுக்காக முட்டாள்கள் தினமாக அனுசரிப்பது அநீதி என்றே படுகிறது.


    நல்ல கட்டுரை... வேதனையான விஷயம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார் தங்களது ஆழமான வாசிப்புக்கும் கருத்துரைக்கும்.. மிக்க நன்றி இப்படியாக தவறானவைகள் சமுகத்தில் காரணமின்றி முன்னிறுத்தப்படுகின்றன .. கொண்டாடப்பட வேண்டியவை தவறவிடப்படுகின்றன..மாற்றுவோம்

      நீக்கு
  2. சிறப்பான கட்டுரை. பல மேதைகளை இப்படித்தான் கண்டு கொள்ளாமலேயே விட்டுவிடுகிறது இவ்வுலகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார் தங்களது கூர்மையான வாசிப்புக்கும் கருத்துரைக்கும்.. மிக்க நன்றி இப்படியான மேதைகள் நமது நாட்டிலும் கூட உண்டு .. வாய்ப்பு கிடைக்கும் போது பகிர்ந்து கொள்வோம்

      நீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...