செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

கடுதாசி



" ஏன்வே வள்ளிநாயகம், என் பேருக்கு மணியார்டர் எதாச்சும் இருக்கா?"

         திண்ணையில் அமர்ந்துகொண்டு, வெற்றிலையை சவைத்தபடி எப்போதும்போல் கேட்டார் பெரியசாமி.

       "எம்.ஓ.தானே நாளைக்குத் தாரேன்." என்று வழக்கம் போல் சொல்லிவிட்டு, "இப்போதைக்கு கார்டுதான் இருக்கு" என்றார் போஸ்ட்மேன் வள்ளி நாயகம்.

        " அட, எதுக்குய்யா கார்டு? போறபோக்கில போஸ்ட் ஆஃபீசையே இளுத்து மூடிட வேண்டியதுதான். இந்த போன்லாம் வந்தப்புறம் தந்தி ஆபீசை மூடுனாமாதிரி... இந்த கல்யாணப் பத்திரிகை, போன் பில்லு, கருமாதி பத்திரிகை இல்லன்னா உங்களுக்கு ஒரு வேலையும் இருக்காது போல.. இப்பம்தான் பணத்தை எந்த ஊர் பேங்க்ல வேணும்னாலும் கட்டலாம் போலிருக்கே..."

        இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே ரிடையர்மெண்டுக்கு என்று நினைத்த போது மலைப்பாக இருந்தது வள்ளி நாயகத்துக்கு. கட்டிலிருந்த கார்டை எடுத்து பெரிய சாமியிடம் கொடுத்தார். 

       வாங்கிப் பார்த்த அவர், "ம்க்கும், வழக்கமா வர்றதுதான் ஆச்சிதான் போட்டிருக்காக..அந்த காலத்து அஞ்சாங் க்ளாஸ். இன்னும் தடுமாறாம எளுதுது..  என்னவே மழையில நனச்சிட்டீரா.. எழுத்தெல்லாம் அழிஞ்சி கலங்கி கெடக்கு"

        "இத்தனை கடுதாசி இருக்கு.. இது மட்டும் எப்படி நனையும் அண்ணாச்சி. இப்படி குடுங்க." என்று வாங்கிப் பார்த்த வள்ளிநாயகம், "ஆச்சி அளுதிருக்குமோ" என்றார்.

        சற்று திடுக்கிட்டுப் பின் சுதாகரித்த பெரியசாமி "சவம், இங்க வந்து கெடன்னா கேக்கமாட்டேங்கா..  கடுதாசி எல்லாம் ஒண்ணப்போல இருக்கும் அது இல்லை, இது இல்லன்னுட்டு.. அங்க எவன் மல்லுகட்டச் சொன்னாங்கறேன்... நான் பலத படிச்சவொடனே கிழிச்சுடறது, சிலத படிக்கறதே இல்லை. போன் வந்தப்புறம் எவன் கடுதாசியை எல்லாம் மதிக்கான்?"

       “ ஆச்சிகிட்ட போன்ல பேசுவீயளோ?”

       “ ம்க்கும் காது ரெண்டும் பங்சர். பெறவு எப்படி பேசுவா போன்ல. அதான் கார்டா கிழியுது வாரந்தவறாம..”

        அப்போதுதான் பெரியசாமி இடுப்பில் புத்தம்புதிதாக முட்டிக்கொண்டிருந்த பச்சை பெல்ட்டைப் பார்த்தார் வள்ளிநாயகம். "அது என்ன அண்ணாச்சி, புதுசா பெல்ட்டெல்லாம் தரவுக்காரவுக மாதிரி.."

" அத ஏன் கேக்குதீய... கோவில்பட்டி மாப்புள போனதரம் வந்தப்ப ஒரு ‘செல்' ஐ வாங்கி குடுத்துட்டாக.. நமக்குத்தான் மேச்சட்டை போடற பளக்கமே இல்லயே.. அது என்னமோ பவுசாமே"

"பவுச் அண்ணாச்சி"

"அந்த கருமந்தான். அதுல வச்சிக்கலாம்னாங்க. களுத நமக்கு அதெல்லம்  சரிபட்டு வருமா? அதான் புது பெல்ட்." பெருமிதமாக இடுப்பில் தட்ட அந்த நேரம்பார்த்து செல் அடித்தது. 

         "அட மக்கா, தட்டினவுடனே அடிக்கி" என்றபடி செல்லை காதில் வைத்தவர் ‘அல்லோ' என்றார்.

" அண்ணாச்சிங்களா... இங்க செத்த மின்னாடி ஆச்சி தவறிட்டாக. நீங்க கொஞ்சம் வொடனே பெறப்புட்டு வந்திங்கன்னா பரவால்லை"

          சட்டென்று கைகள் நடுங்கின பெரியசாமிக்கு. காற்று வந்து அவரது கையிலிருந்த கார்டை பறித்துச்சென்றது. 

         "அண்ணாச்சி பதட்டப்படாதீக.. இப்பமே கெளம்புங்க. கேக்கறனேன்னு தப்பா நெனக்காதீக ஆச்சியை  போட்டோ புடிச்சு வச்சிருக்கீகளா.. இல்ல அவுக குரலை புடிச்சி வச்சிருக்கீகளா டேப்புல..?"

        இல்லையென்று உதட்டை பிதுக்கிய பெரியசாமியின் கண்களிலிருந்து அவரையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது. அருகிலிருந்த பேரனின் முதுகில் தட்டி விரட்டிய பெரியசாமி பதட்டமாக கத்தினார், 

       "ஏலே அந்த கார்டை புடிலே.. ஆச்சியோட மிச்ச உசுரு அதுலதான் இருக்கு..."     

நன்றி: 'சங்கு' இலக்கிய இதழ்                   

6 கருத்துகள்:

  1. நவீன யுகம் பலப்பல சிறிய சந்தோசங்களை முழுங்கிக் கொண்டு இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  2. உயிருள்ளவரை கண்டுகொள்ளாமல் இறந்த பிறகு அவர் நினைவாக என்று உயிரற்ற சில பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் என்று ஒழியும் என்ற எண்ணம் மட்டும் உங்கள் கதை முடிவில் என் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி தனபாலன் சார் ... மிகச் சரியாக சொன்னீர்கள் நவீனங்களில் வசதிகள் இருக்கும் .. மிக சுலபமாய் எதுவும் கிடைக்கலாம்.. ஆனால் உயிர்ப்பு இருக்காது .. சில விஷயங்கள் மென்மையான இதயத்தால் நுகரப்படவேண்டியவை ...

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி சூர்ய ஜீவா சார் ... உங்கள் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு...மனிதர்களை உதாசீனப்படுத்தி விட்டு சம்பிராதாயங்க்களை தூக்கிகொண்டு அலைவதில் எனக்கும் நம்பிக்கை இல்லை .. உங்கள் பார்வை வேறு கோணத்தில் இருந்தது அதுவும் மிகச்சரி யே ... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. இருக்கும் போது மறந்து விட்டு இறந்த பிறகு நினைவில் நிறுத்த, பொருள் தேடுகிறோம்.....

    சிறப்பான பகிர்வு......

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி வெங்கட் சார் .. எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் அங்குள்ள ஆத்மாக்களை பார்க்காமல் அலமாரிகளை பார்ப்பதுதானே பலரது பழக்கம் .. பொருள் சார்ந்த இவ்வுலகில் பொருட்களின் மீது அத்தனை ஈர்ப்பு எல்லோருக்கும் .. உங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...