புதன், 19 அக்டோபர், 2011

அன்பின் அடையாளம்

எனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் புறக்கணிப்பவன்தான் நான். இருப்பினும் இனிய உறவுகளும், நெருங்கிய நட்பு வட்டமும் நினைவாக வருடம் தோறும் வாழ்த்துவதும், உற்சாகமூட்டும் பரிசுகளை அளித்து கவுரவிப்பதும் குதுகலம் தருவதாகவே இருப்பதை மறுப்பதற்கில்லை.

இவர்களின் அன்பு நெகிழச் செய்கிறது என்னை. இவற்றுக்கு பிரதியாய் மனப்பூர்வ அன்பை  அன்றி வேறென்ன தந்து ஈடு செய்துவிட முடியும் என்னால்...?!

நேற்று உஷாவின் அன்பை சுமந்து வந்த கூரியர் ஊழியர் தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொண்டது எங்களிடம் ஒப்படைத்த பிறகுதான். அந்த திளைப்பில் திக்குமுக்காடியிருக்கும் போதே இன்று கிருஷ்ணப்ரியாவிடமிருந்து மின்னஞ்சல்! இம்மின்னஞ்சலைப் பதிவிடுவது கூட தம்பட்டமாகும் என்றேன். நிலாமகள் சில சமயங்களில் மருந்து ஏதுமற்ற பிடிவாதம் நிரம்பியவர்.

நன்றி உஷா!






நன்றி பிரியா!


அன்பின் பாரதி.,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.........
உங்களுக்கு பிறந்த நாள் பரிசாக நீங்கள் ஒரு வருடத்துக்கு முன்பு எனக்கு அனுப்பிய உங்கள் சிறுகதை தொகுப்பின் விமர்சனம் அனுப்பியிருக்கிறேன்......



      உலகில் ஒவ்வொருவர் வாழ்வும் கதைகளால் நிரம்பியிருக்கிறது.. சிலர் மட்டுமே அந்த கதைகளை வாசிக்கிறார்கள். வெகு சிலர் மட்டுமே பிறர் வாசிக்கவும் தருகிறார்கள். அப்படி வாசிக்கத் தருவதிலும், சுவையாய், அந்த கதைகளுக்குள் சென்று நாமே வாழ்கிற அனுபவத்தைத் தர மிகச் சிலரால் மட்டுமே முடிகிறது... அப்படி ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது நெய்வேலி பாரதிக்குமாரின்முற்றுப் பெறாத மனுசிறுகதைத் தொகுப்பு...

      கதைகள் என்பது படித்து முடித்தப் பிறகும் மனதுக்குள் ரீங்கரித்து உள்ளச் சுவர்களை குடையும் வண்டைப் போல, உள்ளத்தை கொள்ளைக் கொள்ளும் நல்லப் பாட்டைப் போல, வேதனை தீர்க்கும் மருந்தைப் போல, உற்சாகத்தை அள்ளித் தரும் நண்பனைப் போல இன்னும் பலப் பலவாய் தோற்றம் தரக்கூடியவை.... இது அத்தனையையும் செய்கிறது இவரது கதைகள். மிக இயல்பான நடை, கவித்துவம் மிளிரும் வரிகள், நமக்குமே நடந்தது போன்ற கதைக்கரு..... இந்த முற்றுப்பெறாத மனு முற்றாய் கனிந்த பழக்குவியல் என்றால் அது மிகையில்லை.....

       "தெருக்கள் இல்லாத ஊர்..". இந்தக்கதையைப் படிக்கும்போது நமது பால்யமும் பிறந்த ஊரும் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை....தொகுப்பின் ஆரம்பமே மிக அழகான கடிதம் கதையாய் விரிகிறது... கடிதம் எழுதுவதே காலாவதியாகிப் போன காலக்கட்டத்தில் இப்படி ஒரு கதையை படிப்பவர்கள் கூட பாக்கியசாலிகள் தான் என்று தோன்றுகிறது....கிட்டிப்புள் போன்ற விளையாட்டுகள் எல்லாம் நம் பிள்ளைகளுக்குத் தெரியாமல் போய் பல காலமாகிவிட்டதே.... அந்த கடிதம் படிக்கும் போது எனக்குத் தோன்றியது....காட்டாமணக்குச் செடிகள் இப்பொழுது இருக்கிறதா என்ன?அழிந்து போனவை வெறும் விளையாட்டுக்களும், செடிகொடிகளும்மட்டும் தானா? “கேபிள் டிவி ஒயர்களும், தொலைபேசி ஒயர்களும் ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து எல்லா மென்மையான உணர்வுகளையும் வெளியேற்றிவிட்டது.....” என்று அழகாக கவித்துவமாக சொல்கிறார் பாரதிக்குமார்...

      "பக்கத்து இருக்கையில் மரணித்தவன். .. " படிக்கும் போதே மனதை அதிர வைக்கிறது.... ஒரு மரணம் எதிர்பாராமல் நிகழ்கையில் , நாம் அந்த மரணத்தோடு எதிர்பாராமல் சம்பந்தப்படுகையில் என்ன விதமான அதிர்வுகள நேருமோ அது அத்தனையும் நமக்குள் ஏற்படுகிறது... அடுத்தவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தும் மனிதர்கள், அவர்கள் அனாயசமாக உதிர்க்கும் ஆபாச வார்த்தைகள், அதிலும் நுணுக்கமாக பெண்களை இழிவுபடுத்தும் விதம், மரணத்துக்குப் பின்னும் கூட அவன்நம் ஆளாஎன்று பார்க்க நினைக்கும் கயமைத் தனம் என்று அதிர்வுகளைத் தந்து கொண்டே போகும் கதை, இறந்தவன் ஒரு அரவான் என்பதை அறிவிக்கும் இடத்தில் நெஞ்சைப் பிளந்து விடுகிறது.... அவர்களும் நம்முடன் வாழும், நம்மைப் போன்ற மனிதப் பிறவிகள் என்றுணராத மாக்கள்.....
      ஆசிரியர் இறுதியில் கேட்கும் கேள்விக்கு என்ன தான் பதில்?

      "வீடு சின்னது " சிறுகதை கதையல்ல... அழகான கவிதை..... செடிகளுக்கும், மரங்களுக்கும் கூட நம் வீட்டில் இடம் கொடுக்க வேண்டுமென்ற குழந்தைகளைத் தவிர வேறு யாரால் யோசிக்க முடியும்...!

     "கதை சொல்லு " ரொம்ப உன்னதமான உளவியல் சார்ந்த கதை.... எல்லாம் தெரிந்தவர் என்று நினைத்துக்கொண்டிருப்பவரால் சின்னக் குழந்தைகளிடம் வெற்றிபெற முடியாமல் போகிறது... ஒன்றும் தெரியாதவள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும் அவர் மனைவி மிக இயல்பாக அவர்களது மனதை வென்றெடுக்கிறாள். அவரது அகங்காரத்தைபோங்க மாமா உங்களுக்கு கதை சொல்லவே தெரியலஅடித்துவிடுகிறது குழந்தை..... நாமெல்லாம் கூட சில சமயங்களில் இந்த குழந்தைகள் என்னும் தெய்வங்களிடம் இப்படி அடி வாங்கித் தான் திருந்த வேண்டியிருக்கிறது என்ற சூட்சுமமான கருத்து உள்ளோடும் கதை....

     "சுவாசிக்க கொஞ்சம் புகை....." கண்ணீர் வராமல் படிக்க முடியாது.....இப்படி எத்தனை தொழில்கள் நசிக்கும் போது எத்தனை உயிர்கள் வெந்து போயிருக்கும் என்ற வேதனை எழாமல் இந்த சிறுகதையை தாண்ட முடியாது யாராலும்.. அதுதான் ஆசிரியரின் வெற்றி. இழந்த பிறகு தான் எந்த பொருளுக்கும் மதிப்பு கூடிப்போகும். ஆனால் அப்பா பிள்ளை பாசம், அந்த பிள்ளையின்ஏழைத் தந்தையை சேதப்படுத்தாத கனவுகள்”, வைக்கும் விதமான அந்த உறவின் நெகிழ்ச்சி என்று மனதை உருக்கும் கதையாக்கம்....
      "ஆறு மனமே ஆறு" நல்ல கற்பனை..... இயல்பான மனிதர்களின் புலம்பல்களை ஆற்றின், காற்றின் மேலேற்றி அழகான ஒரு கதையை வடித்தெடுத்திருக்கிறார்.. . "திட்டும் போது புலம்புவதும், புகழும் போது புளகாங்கிதப் பட்டுப் போவதுமான மனித மனம், தன் விருப்பம் போல இயற்கையைப் பேச..." என்ற சின்ன வரிகளால், இருக்கும் போதே அதன் மதிப்பை உணர வைக்கிறது.... “உன்னுது என்னுதுன்னு ஒரு பய சொல்ல முடியாதுல்லஎன்று கடலை எண்ணி ஆறு சொல்கிறதே... இன்று கடலைக் கூட உன்னுது என்னுது என்று பிரித்து மக்களை கொல்கிறார்களே என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை......

      "உயிருள்ள மெழுகு...." படித்த போது அனுராதா ரமணனின்கூட்டுப் புழுக்கள்நினைவுக்கு வந்தது. புகழ் வெளிச்சத்தில் மின்னுகிறவர்களைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களது புகழ் என்னும் அந்த மாயைக்குப் பின்னால் அவர்கள் இழந்த எத்தனை எத்தனை இன்பங்கள் இருக்கிறது என்னும் பெரிய கருத்தை சின்ன சின்ன வாக்கியங்களால் நிறைந்திருக்கும் இந்த கதை அழகாய்ச் சொல்கிறது.....

     "வள்ளியின் கணவன்......."  உண்மை தான்... பொறுப்புகளுக்குத் தகுந்த மாதிரி நடக்கத் தெரிந்த மனிதன் தான் வாழ்வை வெற்றிகரமாய் வாழ்கிறான். தன்னுடைய ஆசைக்கென்று புத்தகம் வாங்க பணம் சேர்த்தாலும் குடும்பத்தின் ஆசைக்கென்று அந்த பணத்தை செலவு செய்யும் சுயம்பு பிரகலாதன் மனதில் மட்டுமல்ல, படிக்கும் எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்கிறான்.... பிறருடைய மகிழ்ச்சியில் மகிழ்கிறவனே உண்மையில் உயர்ந்தவன் என்கிற அருமையான செய்தி புதைந்திருக்கும் இந்த கதை என்னை மிகவும் ரசிக்க வைத்தது. கதையின் ஊடாக வருகின்ற புத்தகக் கண்காட்சியின் வர்ணனை நாமும் ஒரு முறை கண்காட்சியை சுற்றிய உணர்வை ஏற்படுத்துகிறது....

      "கேள்விகள்..."  மனதை கணக்க வைக்கிறது..... அதைப் பற்றி அதிகம் எழுதுவது கூட மனதை உறைய வைக்குமோ என்ற அச்சத்தை, துயரத்தை தருகிறது.... நம் கண் முன்னால் இப்படி எத்தனை கேள்விகள்..... பதில் தான் யாரிடமும் இல்லை....

     "மயில் குட்டி...." எப்படி பாரதி... இத்தனை நுணுக்கமான சின்ன நூல் போன்ற பின்னி மெத்தென்ற குளிருக்கு இதமான சால்வையாக்கி விடுகிறீர்கள்? என்று கேட்கத் தோன்றுகிறது... சரளமான நடையில் அருமையான கதை...
பிள்ளைகளுடைய உலகம் தான் எத்தனை எளிமையானது... அவர்கள்
நமக்கு என்னவெல்லாம் கற்றுத் தருகிறார்கள்.... எதிலிருந்தும் எளிமையாய்
விசயத்தைக் கூட விடாமல் பிடித்து இழுத்து அழகாய் விடுபட்டுக் கொள்ள, எதனோடும் வேகமாய் ஒட்டிக் கொள்ள.... எத்தனை வயதானாலும் குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கத் தான் செய்கிறது.

     " மரங்கள்"சிறுகதை...... சுற்றுச்சூழல் மாசுப்படுவது பற்றி இங்கு யாருக்குக் கவலையிருக்கிறது....? அவரவர் தேவைக்குத் தகுந்த மாதிரி அவரவர் வாழ்வு என்று போய்க் கொண்டிருக்கிறர்கள்.... சுந்தரேசன் மாதிரி ஒரு சிலர் எத்தனை அலட்சியப்படுத்தப் பட்டாலும் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்... அரசாங்க ஊழியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எத்தனை இடங்களில் மெத்தனமாக இருக்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லிப் போகிறது கதை.... நடுவே வரும் கவிதை அழகு... “அடிக்கடி அலையாதே கறுத்து விடுவாய் என்றணைக்க அம்மா உண்டோ உனக்கு எனக்கிருப்பதைப் போல..” என்னவொரு பெருமிதம் தொனிக்கும் வரிகள்....
      "ஷாமு..." குட்டிக் கதை என்றாலும் மிகப் பெரிய கதை.....அம்மா பற்றிய அந்த அழகான கவிதை வந்த கதைக்குப் பின்னால் இந்த கதை.... யதேச்சையான நிகழ்வா, அல்லது திட்டமிட்டு தொகுக்கப் பட்டதா என்று தெரியவில்லை...ஆனால் அந்த வரிகளில் மூழ்கி வெளி வருகையில் இந்த கதை மனதை ஆறாத்துயரத்தில் ஆழ்த்துகிறது....

     "நிம்மதி.....". சூதாடி பணம் சேர்க்க நினைப்பவர்களுக்கு சுள்ளென்று அடி தருகிற கதை...கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான மனம், நகரத்து சூதாட்ட விடுதிகளின் போக்கு, அங்குள்ள சூழல் குறித்த வர்ணனை, விழித்திருக்கும் போதே நம்மை சுருட்டிக் கொண்டுவிடுகின்ற கயமைத் தனம் என்று அழகாய் விரிகிறது கதை.... “இனி தொலைக்கிறதுக்கு ஒன்னுமில்லங்கற இடத்தில தான் நிம்மதி குடியேறும்என்ற தத்துவத்தில் முடியும் இந்த கதை அருமை....
     "சேனல் தேசம்..." இன்றைய உலகின் யதார்த்தம்... ஒரு நாள் தொலைக்காட்சி இல்லையென்றாலும் மக்கள் சார்ஜ் இழந்த ரோபோக்கள் போல நின்று விடுவார்கள் போல.... மனிதர்களோடு உறவாடுவதை விட சுவையான, அதிமுக்கியமான விஷயமாக ஆகி விட்டது இன்று தொலைக்காட்சியுடன் உறவு.... நீண்ட போராட்டத்துக்குப் பின் சேனல் தெரியும் போது வந்து போகிற செய்தியின் மறைபொருளில் நாம் தான் ஆடிப் போகிறோம்... அங்கே மாட்டிக் கொண்டவனின் நிலை என்னவாயிற்றோ என்று.... யாரைப் பற்றியும் கவலைபட நேரமில்லாத இந்த சேனல் தேசத்தில் அதைக் குறித்த கவலை யாருக்குத் தோன்றக் கூடும்?

      "முற்றுப் பெறாத மனு.......". சிறுகதை தொகுப்பின் பெயர்.... இந்த சிறுகதையைவெறும் கதையாய் படிக்க முடியவில்லை என்பது தான் இந்த கதையின்வெற்றி... ஆடுகள் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ உயிர்களைத் தின்றுதான் வாழ்கிறது மனித இனம். என்றாலும், ஒரு சக மனிதனைப் போல நம்முடன் கூட வளரும் ஒரு உயிரை இரக்கம் சிறிதுமின்றி வெட்டிக் கொல்வது மிகப் பெரிய பாவம் என்பதை உணர்த்தும் கதையாக இது இருக்கிறது...முற்றுப் பெறாத அதன் மனு கண்ணீரை வர வைக்கிறது...
     தொகுப்பு முழுதுமே கதாசிரியரின் அழகான வரிகளின் அணிவகுப்பு  நம்மை கொள்ளை கொள்கிறது.... கவித்துவமான அவரது வரிகள் கதைக்கு மேன்மேலும் அழகைத் தருகிறது...
      “அந்த காலத்து நடிகை ராஜஸ்ரீயின் கருவிழிகள் போல நீள்வட்ட கோடு
வரைந்து”... ராஜஸ்ரீயைப் பார்க்காதவர்களை அவரைத் தேடி பார்க்கத் தூண்டும் வரிகள்....

     ”களவாடிப் போகிறவ்ர்களின் பாஷை எதுவானால் என்ன அழுகையையும் துக்கத்தையும் உணராதவர்களின் பாஷை எதுவாக வேணுமனாலும் இருந்து விட்டு போகட்டும்எத்தனை அழுத்தமான வரிகள்....
     “சிறைக்குள் அடைபட்டு தவித்த கிளிகள் கதவு உடைபட்டதும் வெளியே பறக்கத் துடித்து வருவது போல அவள் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் தெரிந்தன

       இன்னும் இன்னும் எடுத்து சொன்னால் பலப்பல வரிகளை சொல்லிக்கொண்டே போகலாம்..... படிக்க எளிதான, மனதைத் தொடும் கதைகள், அழகான நடையில் என்பது கூடுதல் தகுதி...
      தொகுப்புக்கு விமர்சனம் எழுத என்று தினமும் (“நேரம் கிடைக்கும் போது எழுதலாம்”) அலுவலகம் எடுத்து வருவேன் ஒரு நாள் என்னிடம் உதவிக்கு இருக்கும் பையன் எடுத்து புரட்டி விட்டு சொன்னான், “அருமையான கதைகளா இருக்கும் போலிருக்கேம்மா, படிக்கத் தருவீங்களா எனக்குஎன்று.....
      சும்மா புரட்டிப் பார்ப்பவர்களையே  புரட்டி விடக் கூடிய கதைகள்  மிகுந்த இந்த கதை தொகுப்பைத் தந்த நெய்வேலி பாரதிக் குமாரை மனமார பாராட்ட வேண்டும்.


      தொகுப்பின் ஆரம்பத்தில் உள்ள முன்னுரை, பின்னுரை என்று அவர் வடித்து தந்திருக்கும் வரிகளெல்லாமே அவரது கற்பனா உள்ளத்துக்கு சான்றாக விளங்குகிறது.... கதைக்கென்றே எடுக்கப் பட்ட
புகைப்படங்கள் அவரது மற்றும் அவரது நண்பர் ந. செல்வன் ரசனையை பறை
சாற்றுகின்றது.....

       இது போன்ற, இதை விடவும் இன்னும் வீரியம் நிறைந்த பல சிறுகதை
தொகுப்புகளை பாரதிக்குமார் தர வேண்டும்.... தருவார்....


-கிருஷ்ணப்ரியா
www.krishnapriyakavithai.blogspot.com/


4 கருத்துகள்:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாரதி. உங்கள் பிறந்த நாள்வாழ்த்தாக க்ரிஷ்ணப்ரியாவின் சிறுகதை விமர்சனம் நல்ல முயற்சி, நானும் படிக்க வேண்டும் நிச்சியமாக என்று தோன்ற வைத்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி மணிச்சுடர் விரைவில் அனுப்பி வைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. அட..பிரமாதமாய் இருக்கிறதே!
    வாழ்த்துக்கள்...பாரதி!
    சிறுகதைகளுக்கும்....
    சிறுகதைகளைப் படைத்த..
    சின்ன பிரம்மனுக்கும்!

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...