வியாழன், 9 ஜூன், 2011

THE POPE'S TOILET

       

        கடந்த ஆண்டு (2010) நடந்து முடிந்த உலகக் கோப்பைப் போட்டியில் வழக்கமாக இந்த இந்த நாடுகள் தான் கோப்பையை வெல்லும்; இந்த இந்த நாடுகள் தான் இறுதிப் போட்டிக்கு செல்லுமென ஊடகங்கள் ஆரூடங்கள் சொன்னபடி இருந்தன. அப்படிப் பட்டியலிடப்பட்ட நாடுகளில் பல, இறுதிச் சுற்றிலேயே மண்ணைக் கவ்வின. கொஞ்சமும் சளைக்காமல் ஊடகங்கள் ஜெர்மன் உயிரியல் காட்சியகத்திலிருந்த ‘பால்' என்கிற ஆக்டோபஸ்ஸின் காலில் சரணடைந்தன. “உங்கள் ஆரூடங்கள் என்னவாயிற்று?” என்று யாரும் கேட்டுவிடாத படிக்கு கனகச்சிதமாகத் திசைதிருப்பினர். இனி, பிரச்சினை பால்-ன் தலையில் விடிந்தது.
      பரபரப்புப் பத்திரிகைகள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும், ‘ஹீரோ' ஆக்கிவிடலாம் என்பதற்கான சான்றுதான் ‘ஆக்டோபஸ் பால்.' போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய ஜெர்மன், பிரேசில், அர்ஜெண்டினா நாட்டு ரசிகர்கள் ஆத்திரத்தில் ஆக்டோபஸ் பாலைக் கொல்ல வேண்டுமெனக் கூக்குரலிட்டனர். பாவம், என்ன பாடு படுத்தினார்களோ தெரியவில்லை. பால், சென்ற நவம்பரில்(2010) இறந்துவிட்டது. ஒரு ஆக்டோபஸின் சராசரி ஆயுளை விடக் குறைந்த வயதில் அது இறந்து போனது. அது இறந்த பிறகும் ஆத்திரம் தீராத அர்ஜெண்டினா பயிற்சியாளரும், முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரருமான மாரடோனா “மிக்க மகிழ்ச்சி” என்றாராம்!
      ஆக்டபஸ் பால்-க்கும் ஜாம்பவான் நாடுகள் தோற்று வெளியேறியதற்கும், ஏதேனும் சம்மந்தம் உண்டா? மெத்தப் படித்த, மிதமிஞ்சிய நாகரீகம் மிக்க மனிதர்களின் பிற்போக்குத் தனம் எந்த விமர்சனமுமின்றி வெறும் செய்தியாக கடந்து போகிறது. விளிம்பு நிலைக்கு துரத்தப்பட்ட மக்களின் இயலாமை ஏதேனும் ஒரு தீர்வுக்காக ஒரு நம்பிக்கையைத் தொற்றிக் கொண்டிருந்தால் அது  மூடர்களின் செயல் என்று விமர்சிப்பதும் வர்க்க பேதம்தானோ...?!
 யாராலும் கணிக்க முடியாத் உருகுவே, நெதர்லாந்தையே திணறடித்தது. உருகுவே தென் அமெரிக்க நாடுகளில் இரண்டாவது மிகச்சிறிய நாடு. (மிகவும் சிறிய நாடு கரிநாம்... ஒருமுறை ஒலிம்பிக்கில் இந்தியா வெறுங்கையுடன் திரும்பியபோது ஒரு தங்கத்தை வென்ற குட்டி நாடு).
      உருகுவே நாட்டின் எல்லப்புற ஊரான ‘மெலோ'வுக்காக மற்றொரு ‘பால்' வருகையை (போப் இரண்டாம் ஜான் பால்) முன்னிட்டு, ‘மெலோ'வுக்கு மிக அருகிலிருந்த பிரேசில் பத்திரிகைகள் கிளப்பிய பூதாகரமான தோற்றமும், ஆரூடங்களும் எப்படி அந்தக் கிராமத்து மக்களின் வாழ்வைச் சின்னாபின்னப் படுத்தியது என்பதைக் கருவாகக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் “த போப்ஸ் டாய்லட்”.
      1988-ம் வருடம் போப் இரண்டாம் ஜான்பால் உருகுவே வருவதாக அறிவிக்கப் பட்டதிலிருந்து அவர் வருகையை எதிர்நோக்கி ‘மெலோ' அல்லோகலப்படுகிறது.
       பிரேசிலின் தொலைக்காட்சி நிறுவனங்களும், பத்திரிகைகளும் சேர்ந்து ‘மெலோ'வுக்கு பிரேசிலிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் சுமார் ஐம்பதினாயிரம் பேர் வரக் கூடுமென்று அனுதினமும் தெரிவித்தபடியிருக்கின்றன. குறிப்பிட்ட தினத்தில் பிரத்யேக நிகழ்ச்சிகளும், நேரடி ஒளிபரப்புகளும் இருக்குமென அறிவிக்கின்றன.
      ‘மெலோ' கிராம மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள். உருகுவேயில் வெளிநாட்டுப் பொருட்கள் விற்பது சட்டப்படிக் குற்றம். எல்லைப்புற ஊரான மெலோவுக்குப் பிரேசிலிலிருந்து தான் அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்கள் வந்தாக வேண்டும். சைக்கிளில் தான் பெரும்பாலான பொருட்கள் எடுத்து வரப்படும். அதுதான் செலவு குறைந்த எளிமையான போக்குவரத்து. மெலோ கிராமத்து ஆண்களில் பெரும்பாலோனோர், சைக்கிளில் பொருட்களை எடுத்து வந்து அதற்கான கூலி பெற்றுப் பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களில் ஒரு சிலர் வெளிநாட்டு ஆடம்பர, அலங்காரப் பொருட்களைக் கடத்திவருவதுமுண்டு. உருகுவேயின் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு இந்தச் சைக்கிள்காரர்கள் மேல் எப்போது ஒரு கண் உண்டு. குறுக்கு வழியில், வயல்களூடே மறைந்து மறைந்து வரும் அவர்கள், பிடிபட்டு விட்டால் சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களது பொருட்களைச் சிதைத்து, உடைத்துக் கீழே போட்டு விடுவதும், தங்களுக்கு வேண்டியதை எடுத்துச் செல்வதும் உண்டு.
      ‘பெடோ' என்பவன் இப்படிக் கடத்தல் வேலை செய்கிறவர்களில் ஒருவன்.  எப்படி மறைந்து மறைந்து வந்தாலும், ஏதோ ஒரு தருணத்தில் சுங்க அதிகாரிகளிடம் மாட்டுவதும் உண்டு.
      அப்படியான ஒரு சமயம், சுங்க அதிகாரிக்கு எப்படியாவது பெடோவைக் கைது செய்வது நோக்கமற்று, அவனைப் பணிய வைத்து, தனக்கான கடத்தல் வேலையை செய்ய வைக்க முயல்கிறார்.
      பெடோவின் மகள் சில்வியாவுக்கும், அவனது மனைவிக்கும் பெடோ கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சில்வியாவுக்கு எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகிவிட வேண்டுமென்பது கனவு. கையில் கிடைக்கிற காகிதங்களைச் சுருட்டி, வாயருகே வைத்து தனிமையில் தொகுப்பாளரைப் போல் பேசி எப்போதும் பாவனை செய்து பழகியபடியிருக்கிறாள்.
      இச்சூழலில் போப் ஜான்பாலின் வருகையை ஒட்டி, மெலோவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற ஐம்பதினாயிரம் பேரைக் குறிவைத்து, மெலோ மக்கள் என்னென்ன வியாபாரம் செய்யலாமெனத் திட்டமிடுகின்றனர். பெரும்பாலானோர் திண்பண்டம், உணவுப் பொருட்கள் விற்க முடிவு செய்தனர்.
 பெடோவிற்கு வித்தியாசமான யோசனை தோன்றுகிறது. பொதுக் கழிப்பறை ஒன்றைக் கட்டி முடிந்தவரை கல்லாக் கட்டுவது என்று முடிவெடுக்கிறான். அவன் வீட்டிலும் கழிப்பறை வசதியில்லை. எனவே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
      ஆனால், கழிப்பறை கட்ட போதிய பணமில்லை என்பதால் கடத்தல் தொழிலை இன்னும் சிறிது காலம் செய்வது; அதுவும் அந்த சுங்க அதிகாரிக்காகச் செய்வது; கழிப்பறை கட்டுவதற்கான தொகையை முன்பணமாக அவரிடமே பெறுவதெனத் திட்டமிடுகிறான். மனைவிக்கும், மகளுக்கும் தெரியாமல் அவருக்காகக் கடத்தல் தொழில் செய்கிறான். நண்பர்களைத் துணைக்கழைத்துக் கொண்டு அவனே கழிப்பறைக்கும் வேலையைத் துவங்குகிறான்.
      சுற்றுச்சுவர், கூரை எனக் கொஞ்சம் கொஞ்சமாக எழும்புகிறது கழிப்பறை. இன்னும் ‘பேசின்' வைக்க வேண்டியதுதான் பாக்கி. இந்தச் சூழலில் அவன் அதிகாரிக்காகக் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது தெரிந்து கொண்ட சிவியாவும், அவன் மனைவியும் சண்டை போடுகிறார்கள். கழிப்பறை வந்துவிட்டால் அதில் கிடைக்கும் வருமானத்தில் ஏதேனும் தொழில் செய்யலாமெனச் சமாதானப் படுத்துகிறான் அவர்களை.
      சில்வியாவோ தான் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காகச் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்து, பேசின் வாங்கிவந்து கழிப்பறை வேலையை முடிக்கும் படியும், இனி கடத்தல் தொழில் செய்ய வேண்டாமென்றும் கண்டிப்புடன் கூறுகிறாள். ஒப்புக் கொண்ட பெடோ, அதிகாரியிடம் சென்று, இனி கடத்தல் தொழில் செய்ய முடியாதெனக் கூறித் திரும்புகிறான்.
       போப் வரும் நாள் வந்து விட்டது. பிரேசில் சென்று பேசின் வாங்கி சைக்கிளில் திரும்பும் போது அதிகாரியால் வழிமறிக்கப் படுகிறான் பெடோ. சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டு செல்கிறார் அவர். பேசினைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து ஊரையடைந்து பொருத்திவிடுகிறான். போப் வந்து விடுகிறார். ஆனால் கொஞ்சமும் எதிர்பாராமல் முந்நூற்று சொச்சம் பேரே அங்கு வந்திருந்தனர்.
      போப் பத்து நிமிடம் மட்டுமே மேடையேறிப் பேசிவிட்டு, பின் இறங்கிப்போய் விடுகிறார். பெடோ, அங்கு குழுமிய கூட்டத்தில் சிலரை ஓடி ஓடிக் கழிப்பறையைப் பயன்படுத்தும்படிக் கெஞ்சுகிறான். குறைந்த நேர நிகழ்ச்சி என்பதால், எவரும் அவனைப் பொருட்படுத்தாமல் கலைகின்றனர்.
 கழிப்பறை மட்டும் எஞ்சுகிறது. சில்வியாவின் உயர்கல்வி கனவு கலைந்து போகிறது. அப்பாவுக்குத் துணையாக நேர்மையான முறையில் தொழில் செய்ய பெடோவுடன் நடந்தே செல்கிறாள்.
      உலகப் புகழ் பெற்ற திரைப்படமான ‘சிட்டி ஆஃப் காட்'-ன் ஒளிப்பதிவாளர் சீஸர் சார்லோன் உருகுவேயில் பிறந்து பிரேசிலில் வசிப்பவர். அவர் 1988-ல் போப் மெலோ வந்த போது எதேச்சையாகப் பதிவு செய்த ஒளிப்படக் காட்சி, மற்றும் மெலோ மக்கள் ஏமாந்து போன உண்மைச் சம்பவம் ஆகியவற்றை வைத்து ஒரு திரைக்கதையை உருவாக்கினார். மெலோவைச் சேர்ந்த என்ரிக் ஃபெர்ணாண்டஸ் என்பவரோடு சேர்ந்து இப்படத்தை இயக்கினார். ‘சிட்டி ஆஃப் காட்' படத்தின் இயக்குநர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்.
      பெடோவும் அவனது நண்பர்களும் கடத்தல் பொருள்களுடன் சைக்கிளில் வயல்வெளிகளில் புகுந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சியில், மிக அற்புதமான நிலக் காட்சிகளை வெவ்வேறு சிறந்த கோணங்களில் பதிவு செய்த கேமரா, கதையோட்டத்துக்குத் தக்கவாறு நேர்த்தியாக பிரயாணிக்கிறது.
       சடையர் (Satire) என்று சொல்லப்படும் எள்ளல் பாணித் திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்த படம் ‘த போப்'ஸ் டாய்லட்'. எளிமையான மூலக்கதையை மெருகேற்றி அழகான திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.
      கழிப்பறை கட்டப்பட்ட பின் வரும் கூட்டத்தை எப்படி சமாளிப்பது என்று  பெடோ, மகள் சில்வியாவுக்கும், மனைவிக்கும் நடித்துக் காட்டும் காட்சி நகைச்சுவையான சிறப்பான காட்சி.
      கூட்டத்தை வரிசையில் நிற்கும்படிக் கட்டுப்படுத்துவது போலவும், கழிப்பறைக்குள் இருப்பவரை எப்படித் தட்டி அழைப்பது என்றும் பெடோ நடித்துக் காட்டும் காட்சியில், ‘சீஸர் ட்ரான்சானிகோ' பிரமாதப்படுத்தியிருப்பார். இயல்பில் நாடக நடிகரான அவர், இலாவகமாக நடிப்புத் திறனை அக்காட்சியில் வெளிப்படுத்தியிருப்பார்.
      போப் வந்து சென்ற பிறகு மெலோ மக்கள் விற்காத உணவுப் பொருட்களை வீதியில் வீசியெறிந்து விட்டு நகர்வதும், மீண்டும் தொலைக்காட்சி நிறுவனங்கள் போப் வருகையை ‘ஆஹா ஓஹோ' எனப் புகழ்ந்து ஒளிபரப்பும் போது பெடோ ஆத்திரமடைந்து தொலைக்காட்சிப் பெட்டியை உடைக்கும் காட்சியும், அந்தச் சமூகத்தின் மீதான காட்சி ரீதியிலான விமர்சனமென்றே கூறலாம். மிகைப்படுத்தப் படாத யதார்த்தமான திரைக்கதை அமைப்பில் படம் மனதில் கிளர்ச்சியூட்டாத படிப்பினையை ஏற்படுத்தி விடுகிறது.
      ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப் பட்ட இப்படம், கடைசியில் அதன் தலைப்பு காரணமாக நிராகரிக்கப் பட்டது.
      உருகுவேயின் வாழ்வியல் சூழல், ஊடகங்களின் அதீத பரபரப்பு, மதத்தின் மீதான சரியான விமர்சனமாக இப்படம் அமைந்திருக்கிறது.
 பீடங்கள், பொய்யுரைகள், பணம் பண்ணும் மாய்மாலங்கள் தேசத்துக்கு தேசம் மாறுபடலாம். ஆனால், ஏமாளிகளாய் இருக்கும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் எஞ்சியிருப்பவை நிறைவேறாக் கனவுகள் மட்டுமே.

சீஸர் சார்லோன்:

      1958-ம் வருடம் உருகுவேயில் பிறந்து வளர்ந்த சீஸர், ஒளிப்பதிவுத் துறையில் கொண்ட அதீத ஆர்வம் காரணமாக, அதற்கு வாய்ப்புகள் மிகுந்த பக்கத்து நாடான பிரேசிலில் தற்போது வசிக்கிறார். “சிட்டி ஆஃப் காட்” படத்தில் பணியாற்றியதற்காக தற்போது சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர். ஒளிப்பதிவு, இயக்கம், திரைக்கதையாசிரியர், நடிகர் என்று பல பரிமாணங்கள் உடையவர். போப் வருகைக்கு மெலோ கிராம மக்கள் ஆற்றிய எதிர்வினையை நேரில் காணும் சந்தர்ப்பம் அவருக்கு. அதை, மிகச் சாதாரணமான கையடக்க கேமராவில் பதிவு செய்தவர். பிறகு, அவற்றை ஒருங்கிணைத்து, தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு திரைக்கதையை உருவாக்கினார். மிகக் குறைந்த செலவில் இப்படத்தை எடுத்து முடித்த அவருக்கு ஆஸ்கரை வழங்கி வரும் நிறுவனம், தனது நிறுவன சிறப்பு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியது.

4 கருத்துகள்:

  1. நண்பரே
    அருமையான உலகசினிமா அறிமுகம்,இன்னும் பார்க்கவில்லை,ட்ரெய்லர் பார்த்தேன்,இன்று படம் பார்த்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி கீதப்ரியன் சார் .. உங்கள் ஆழ்ந்த வாசிப்பும் , உடனடி கருத்துரையும் மகிழ்ச்சியுட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  3. நண்பரே
    மிக அருமையான படம்,நல்ல உருப்படியான அறிமுகம்,நன்றீ நன்றி நன்றி

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...