செவ்வாய், 28 ஜூன், 2011

KHUDA KAY LIYA (குதா கே லியே)

                                                                                                                                                                             பகட்டான நகைக் கடையிலோ அல்லது ஆடம்பரமான ஐந்து நட்சத்திர உணவு விடுதியிலோ பொருத்தமற்ற உடைகளோடும், உருவத்தோடும் நுழைய நேரிட்டால் நம் மீது வீசப்படும் ஏளனப்பார்வைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஒரு சந்தேக வலை நம்மைச் சுற்றிப் பின்னப்படுவதை நுட்பமாக கவனிப்பவர்கள் உணர்ந்திருக்கலாம். எல்லை தாண்டி வேவு பார்க்க வந்த உளவாளியைப் போலவும், கிடைத்ததை அள்ளிச் செல்ல நுழைந்த கள்வனைப்போலவும் நம்மைப் பற்றி உருவாகும் சித்திரம் சிறிது நேரமேயானாலும், கூனிக் குறுக வைத்துவிடும். உதவுபவர் போல் உடன் வரும் கடைச் சிப்பந்தியின் பார்வை, நம்மை கண்காணிக்கத்தானோ என்ற அச்சம் எழுவது இயல்பு.
         அந்த ஒருசில நிமிடங்களில் மனம் நெரிபடுகின்ற அவஸ்தை, அந்த இடத்தை விட்டு அகன்றபின் தான் ‘விட்டு விடுதலையான' சுகத்தைத் தரும்.
 சந்தேகத்தின் வளையத்துக்குள் நாம் இருக்க நேரிடுகிற சூழலென்பது முதலை வாயில் பிடிபட்ட இரை உள்ளேயும் தள்ளப்படாமல், வெளியேயும் துப்பப் படாமல் உயிரின் வலியை ஒவ்வொரு அணுவும் அனுபவிப்பது போல் துயரமானது.
          சில நிமிட நேர சந்தேகப் பார்வைகளையே நாம் சகித்துக் கொள்ள முடியாத போது, வாழ்கின்ற வாழ்க்கை முழுதும் பிறருடைய சந்தேகக் கணைகளுக்கு இலக்காகி ரத்தம் கசியும் நொடிகளை நகர்த்துவது எத்தனை கொடூரமானது!
            செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பெரும்பான்மையான நாடுகளில் இஸ்லாமியர்கள் இப்படியான நரக வேதனையோடுதான் வாழ வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள்தான்; அவர்கள் சதாசர்வ காலமும் குண்டு வைக்கும் திட்டத்துடன் தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் போன்றதொரு பார்வை படித்தவர்களிடம் கூட நிலவுகிறது. 
           இப்படியான தவறான பார்வை எப்படி ஒரு இஸ்லாமிய இளைஞன் வாழ்க்கையை நிர்மூலமாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டதுதான் ‘குதா கே லியே'என்ற பாகிஸ்தானிய படம். குதா கே லியே என்பதற்கு ‘கடவுளின் பெயரால்' என்று பொருள். பொதுவாக பாகிஸ்தானில் அதிகமாக திரைப்படங்கள் உருவாக்கப் படுவதில்லை. எடுக்கின்ற ஒருசில படங்களும் இந்திப் படங்களின் தாக்கங்களில் எடுக்கப்பட்டவையாக இருக்கும்.
         ஷோயப் மன்சூர் இயக்கிய இப்படம், மூன்று வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சூழல்களில் வாழ்கிற இஸ்லாமியர்களின் வாழ்க்கையை ஒரு புள்ளியில் சேர்க்கிற நேர்த்தியான திரைக்கதையைக் கொண்டது.
          பாகிஸ்தானின் லாகூரில் வாழ்கிற மன்சூர், சர்மத் ஆகிய இருவரும் சகோதரர்கள். இருவரும் இசைப் பிரியர்கள். நல்ல பாடகர்களும் கூட. காலப் போக்கில் சர்மத் இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவரின் போதனையால், மெல்ல மெல்ல தீவிரவாத இயக்கத்தின்பால் ஈர்க்கப் படுகிறான். இசை மற்றும் ஓவியங்கள் இஸ்லாத்துக்கு எதிரானது என்று அந்த இயக்கத்தின் கொள்கைப் படி, இசையை விட்டு விலகி, நீண்ட தாடியுடன் இயக்கவாதியாகவே ஆகிவிடுகிறான்.
            மன்சூரின் இசை ஆர்வமிகுதியில், அமெரிக்காவில் உள்ள சிகாகோவுக்கு சென்று அங்கு இசைக்கல்லூரியில் பயில்கிறான். அங்கு அவனோடு இசை பயிலும் ஜென்னி என்கிற அமெரிக்க பெண்ணின் மீது காதல் பிறக்கிறது. ஜென்னி மன்சூரின் மீதுள்ள காதலால், தனக்குள்ள குடிப்பழக்கத்தை விட்டொழிக்கிறாள்.
           லண்டனில் குடியேறிய பாகிஸ்தானியரின் ஒரே மகள் மரியம் இங்கிலாந்தின் நவநாகரீக வாழ்வுக்கேற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு வாழ்பவள். டேவ் என்ற ஆங்கிலேய இளைஞனைக் காதலிக்கிறாளவள். இது பிடிக்காத அவளது தந்தை அவனோடு பழகக் கூடாதென அச்சுறுத்துகிறார். வேடிக்கை என்னவென்றால், அவர் இங்கிலாந்தில் பிறந்த வெள்ளைக்காரப் பெண்மணியோடு திருமணமாகாமலேயே குடித்தனம் நடத்துகிறார். மரியம் தன் காதலில் உறுதியாக இருக்கவே, அவளது தந்தை அவளை பாகிஸ்தானுக்கு சுற்றுலா செல்லலாமென்று அழைத்துவந்து, தாலிபான்கள் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பாகிஸ்தான் பழங்குடிப் பிரிவுகள் வசிக்குமிடத்தில் (FATA), தனது உறவினரான சர்மத்திடம் ஒப்படைக்கிறார். அவருடைய எண்ணம் டேவிடமிருந்து மரியத்தைப் பிரிப்பதே. தாலிபான்கள் இயக்கத்தின் பிடியில் உள்ள அந்தப் பகுதியில் முழுக்க முழுக்க பெண்களைச் சுதந்திரமாக இயங்கவிடாமல் முடக்கி வைத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் கொஞ்சமும் பொருந்திப் போகாத மரியம் அங்கு இருக்கும் பெண்களின் உதவியோடு அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள். ஆனால் துரதிருஷ்டவசமாக சர்மத்திடம் அகப்பட்டுக் கொள்கிறாள். சர்மத் அவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்கிறான்.
          சிகாகோவில் வசிக்கும் மன்சூர், ஜென்னியுடன் இணைந்து இசையும் சந்தோஷமுமாக வாழ்கிறான். ஒரு முறை அவன் வசிக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் மேல் தளத்தில் குடியிருக்கும் குடிகார அமெரிக்க இளைஞன் வேண்டுமென்றே மன்சூரை வம்புக்கு இழுக்கிறான். மன்சூர் ஒதுங்கியே போனாலும் அவன் மீது குடிகாரனுக்குத் தீராத வெறுப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அந்தச் சமயத்தில் செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெறுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குடிகாரன், மன்சூர் ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவன் என்று அமெரிக்க உளவுப்படைக்கு தகவல் தந்துவிடுகிறான். மன்சூர் எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்படுகிறான்.
           மரியம் தன் காதலன் டேவுக்கு ஒரு கடிதமெழுதி தன்னைக் காப்பாற்றும்படி வேண்டுகிறாள். டேவ் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, இங்கிலாந்து அரசு மற்றும் தூதரகம் மூலம் தாலிபான் தலைவர்களுக்கு நெருக்கடி தருகிறான். வேறு வழியின்றி சர்மத் மற்றும் அவனது இயக்கத்தினர் மரியத்தை விடுவிக்கின்றனர். மரியம் விடுதலையாகி, சர்மத்திடம் சட்டப் பூர்வ விலக்கு பெற பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறாள். வழக்கு நடைபெறும் தருணத்தில் வடக்கு கூட்டணிப் படையினருக்கும் சர்மத் சார்ந்த இயக்கத்தினருக்கும் சண்டை நடக்கிறது. அதில் தேவையில்லாமல் உயிர்கள் பலியாவது சர்மத்தை மனரீதியாக வெகுவாகப் பாதிக்கிறது. அவன் மெல்ல இயக்கத்தை விட்டு வெளியேறும் மனநிலைக்கு வருகிறான்.
           மன்சூர் அமெரிக்க உளவுப் படையினரிடம் சித்திரவதைப் படுகிறான். அவனிடமிருக்கும் எதேச்சையான பொருட்களுக்கும் கூட ஏதேதோ அர்த்தம் கற்பிக்கின்றன. ஒவ்வொரு விஷயத்தையும் அவன் மறுக்க கடுமையாகத் தாக்கப் படுகிறான். விசாரணைக்கு வரும் அதிகாரிகள் எல்லாம் அவன் அறையில் சிறுநீர் கழிப்பதும் அசிங்கம் பண்ணுவதுமாக கீழ்த்தர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவனது காதலி ஜென்னியால் அவனைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு சட்டம் மன்சூரை வலைப்பின்னலுக்குள் தள்ளுகிறது. அமெரிக்க அதிகாரிகளை நம்ப வைக்க அறை முழுதும் ‘ஐ லவ் யூ எஸ்' என்று எழுதி வைக்கிறான். ஆனாலும் அவனை அதிகாரிகள் துன்புறுத்துவது நிற்கவில்லை. எப்பொழுதோ ஒரு முறை அவனது சகோதரன் சர்மத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதப் பெரியவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டி, அவனை மேலும் சித்திரவதைப் படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் ‘ஐ லவ் யூ எஸ்' என்று எழுதியிருப்பதை மாற்றி ‘ஐ லவ் ஒசாமா' என்று எழுதி விடுகிறான். இதனால் கொதிப்படைந்த அமெரிக்க அதிகாரிகள் அவனைக் கண்மூடித் தனமாகத் தாக்குகின்றனர். இதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு புத்தி பேதலித்தவனாக நடமாட முடியாத முடவனாக ஆகி விடுகிறான்.
           மரியம் தொடுத்த வழக்கில் இஸ்லாம் சம்மந்தப்பட்ட சில சந்தேகங்களை தெளிவுபடுத்த வாலி என்கின்ற முஸ்லீம் மதத் தலைவர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்படுகிறார். அவர் பெண்களை அடிமைப்படுத்துவதும், வலுக்கட்டாயமாக மணம் புரிவதும் இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை தர்க்க பூர்வமாக கூறுகிறார். அதன் பேரில் மரியம் விடுவிக்கப்படுகிறாள்.
 இந்த இடத்தில் இயக்குநர் மரியத்தை இங்கிலாந்து செல்வதாகக் காட்டாமல், தான் அடைபட்ட இடத்துக்கே திரும்புவதாகக் காட்டியிருப்பது சிறந்ததொரு முடிவு. அடைபட்ட இடத்தில் உள்ள பெண்களுக்குக் கல்வி புகட்ட அவள் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறாள். சர்மத் இயக்கத்திலிருந்து விலகி, மசூதியில் குர்-ஆன் ஓத ஆரம்பிக்கிறான்.
           மன்சூர் ஒரு வருட கால சித்திரவதைகளுக்குப் பிறகு ஒரு குற்றமும் நிரூபிக்கப்படாதவனாக, அதே நேரத்தில் மனநிலை பிறழ்ந்த, சக்கர நாற்காலியில் எஞ்சிய வாழ்க்கையை நகர்த்துபவனாக அவனது தாய் தகப்பனிடம் சேர்க்கப்படுகிறான். அவன் ஒருநாள் குணமாகக் கூடுமென்ற நம்பிக்கையோடு அவனது குடும்பத்தினர் காத்திருக்கும் நெகிழ்வான காட்சியோடு படம் நிறைவடைகிறது.
           ஒரு சராசரி இந்திப்படத்தின் சாயலிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், பாகிஸ்தானில் வெளிவந்த படங்களில் மிகச்சிறந்த படமென்றே கருதப்படுகிறது. மூன்று வெவ்வேறு சூழல்களில் வாழும் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களின் இயல்பு, சூழல்கள் ஆகியவற்றை சிக்கலில்லாமல் நேர்த்தியான திரைக்கதை ஆக்கியிருக்கிறார் மன்சூர்.
 மன்சூராக நடித்திருக்கும் ஷான் மற்றும் சர்மத்தாக நடித்திருக்கும் ஃபலட் அப்சல்கான், மரியமாக நடித்திருக்கும் இமான் அலி ஆகியோர் கதாபாத்திரத்துக்கு ஒத்திசைவான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
              எல்லாவற்றையும் விட நீதிமன்றத்தில் வாலியாக வரும் இந்தி நடிகர் நசுருதீன்ஷாவின் நடிப்பு அபாரமானது. படத்தின் ஆகச்சிறந்த அந்த காட்சியில் கொஞ்சமும் மிகைத்தன்மை வந்துவிடாமல், மிகக் கவனமாகத் தேர்ந்த முகபாவங்கள், உச்சரிப்பு நேர்த்தியோடு பிரமாதப்படுத்தி விடுகிறார் ஷா. படத்தின் பாடற்காட்சிகள், இசை, பாடல் வடிவமைப்பு எல்லாவற்றிலும் ஒரு இந்தியத் தன்மைதான் தென்படுகிறது.
              கெய்ரோ படவிழாவில் சிறந்த படத்துக்கான விருது, ஜப்பான் திரைப்பட விருது, இத்தாலி படவிழா விருது, ஆசியாவில் தயாரான முதல் படங்கள் பிரிவில் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது இப்படம்.
             சந்தேகத்தின் நிழல் படர எவராலும் ஒருபோதும் இயங்க முடியாது. வன்முறைக்கும், போராட்டத்துக்கும் இடையே மெல்லிய இழைதான் இருப்பதாகப் பொதுப் பார்வையாளன் பார்வையில் கணிக்கப்படுகிறது.
 போராட்டமென்பது தன்னை பின்னியிருக்கும் வலையைத் தானே அறுத்துக் கொண்டு வெளிவருவது. இதன் வலியும், வேதனையும் போராடுகிறவன் தான் ஒருவனே ஏற்றுக் கொள்வது. வன்முறையென்பது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எதையும் தயவுதாட்சண்யமின்றி அழிப்பது
.

         ஒரு சில குழுக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, பொது இடத்தில் ஏதுமறியாத அப்பாவிகளின் உயிரைப் பணயம் வைப்பதை ஒருக்காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்தின் இலக்கணமென்று கூறும் போது, ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது' என்பது எத்தனை நியாயமோ அத்தனை நியாயம் ஒரு போராட்டம் என்பது எந்தவொரு அப்பாவியின் வாழ்வையும் பலிகேட்பதாக இருந்துவிடக் கூடாது.
          அதேசமயம் ஒரு தேசத்தில் நடக்கக்கூடாத ஒரு துர்ச்சம்பவம் நிகழ்ந்துவிட்டால் அதற்குக் காரணமாக இருப்பவர்களின் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, மொழியைப் பேசுபவர்கள் என்பதற்காக, மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதற்காக ஒன்றுமறியாத ஜீவன்கள் உயிர்வதை செய்யப்படுவதோ, வாழத் தகுதியற்றவர்களாக ஆக்குவதோ நியாயமற்றது.
             போகின்ற இடமெல்லாம் நம் பின்னந்தலையில் விரலொன்று அழுத்தியபடி நம்மை அச்சுறுத்துவது போல சந்தேகத்தின் கண்கள் குத்துவதும், ஏளனப் பார்வை, போலிப் புன்னகை வீசப்படுவதும் ஒரு தனிமனிதனின் வலியை எத்தனை தூரம் அதிகப்படுத்துகிறதென்பது அவனது நிலையிலிருந்து பார்த்தால்தான் உணரமுடியும்.
             இந்த சமயத்தில் தலித்துகள் அரசு சலுகையினால் உயர்வதையும், சில நன்மைகள் பெறுவதையும் சுட்டிக்காட்டி, ‘அவர்களுக்கென்னப்பா... எல்லாம் கிடைக்கிறது' என்று மறைமுகப் பரிகாசம் செய்பவர்கள் பலருமிருக்கிறார்கள். உதாசீனத்தின் வலியென்பதும் அவமானத்தின் அடையாளமாய் இருப்பதும் எத்தனை துயர்மிக்கது என்பது அப்படியாக இருப்பவர்களுக்குத் தான் புரியும்.           இராசை. கண்மணி ராசாவின் ‘வலி' என்ற கவிதை அந்த வேதனையை நுட்பமாகப் பதிவு செய்துள்ளது.
      சாணிப்பால் ஊற்றி
      சவுக்கால் அடித்தான்
      என் பூட்டனை உன் பூட்டன்
      காலில் செருப்பணிந்ததால்
      கட்டி வைத்து உதைத்தான்
      என் பாட்டனை உன் பாட்டன்
      பறைக்கு எதுக்கடா படிப்பு என
      பகடி செய்து ஏசினான்
      என் அப்பனை உன் அப்பன்

       ‘உங்களுக்கென்னப்பா
       சர்க்காரு வேலையெல்லாம்
       உங்க சாதிக்குத்தான்'-என
       சாமர்த்தியம் பேசுகிறாய் நீ!
      
       ஒன்று செய்
        உன்னையறியாத ஊரில் போய்
        உன்னைப் பறையனென்று சொல்!
       அப்போது புரியும்
       என் வலி!
           (‘கவிதையாவது கழுதையாவது' தொகுப்பிலிருந்து)
         
        ஏளனப் பார்வைகளுக்கும், சந்தேக வளையத்துக்கும் ஆளாகும் எல்லா மனிதர்களின் மனவலியை ரத்தம் கசியப் பதிவு செய்துள்ள இக்கவிதை இப்படத்தின் இஸ்லாமியர்களின் மனநிலைக்கும் பொருந்தும்.
 குதா கே லியே தன் பாணியில் அதே வலியை திரைமொழியாக பதிவு செய்துள்ளது.

                          

4 கருத்துகள்:

  1. அருமையான பட விமர்சனம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. விமர்சகன் முழுக் கதையையும் சொல்லக் கூடாது என்றொரு நெறி இருக்கிறது. சரி, நாம் எங்கே பாக்கிஸ்தானில் எடுக்கப்பட்ட ஓர் உர்தூத் திரைப்படத்தைப் பார்க்கப் போகிறோம்? அதனால் முழுக் கதையைச் சொன்னதும் ஒரு சேவைதான்.

    இஸ்லாமியர்களைத் தலித்துகளோடு ஒப்பிட்டதும் காலத்துக்குப் பொருந்தி வருகிறது.

    படத்தின் தலைப்பைத் தமிழ்ப் படுத்தியதில் என்னை இடறியது இது: 'குதா கே லியே' என்று இருக்க வேண்டும். குதா = கடவுள், கே லியே = கு ஆக, (அல்லது) கு வேண்டி, (அல்லது) கு நேர்ந்து. அதாவது, 'கடவுளுக்காக', அல்லது 'கடவுளுக்கு வேண்டி' அல்லது 'கடவுளை நேரிட்டு' என்றிப்படிப் பொருள்படும். மாறாக, 'குத்தா' என்றால் 'நாய்' என்று பொருள்பட நேரும் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவரக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி ரத்னவேல் சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி ராஜ சுந்தர் ராஜன் சார். உங்கள் சுட்டி காட்டலுக்கு நன்றி . உடன் திருத்தி விட்டேன் . முழு கதையை சொல்வது ஆயசமான விஷயம் என்று நிச்சயம் அறிவேன் . நீங்கள் குறிப்பிட்டது போல் அயல் மொழி படம் என்பதால் அதை செய்ய வேண்டியிருக்கிறது ..படத்தை வெறும் பார்வையாளனாக மட்டுமல்லாமல் சக படைப்பாளியாக நின்று உள்வாங்கும்போது சில சிந்தனைகளை கூடுதலாக பதிவு செய்யவேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். உங்கள் ஆழமான கருத்துகளுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...