திங்கள், 6 மே, 2013

தூக்குமர அனலிலும் தொய்வடையாத துர்கா மல்லா...

          வரலாற்றின் சிக்கல்களையும், சிடுக்குகளையும் களைய முற்படுகையில் நாம் பிழைகளின் தளைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். சரித்திரம் என்பது அளந்து முடிக்க முடியாத சமுத்திரம். ஆர்ப்பரிக்கும் அலை மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிய, கரையைத் தொட்டுவிட்டுச்செல்லும். ஆழ்கடலில் அமைதியாக மிதக்கும் துளிகள் பார்வைக்குப்படாமல் ததும்பிக் கொண்டிருக்கின்றன.

          ‘கூர்க்கா' என்றொரு சொல்லைக்கேட்டால் இரவில் ஏதாவது ஒரு சமயத்தில் இருளைக்கிழிக்கும் விசில் ஒலியோடு தெரியும் உருவம் மங்கலாக தெரிவதோடு மறைந்துவிடுகிறது. சிறுவயதில் கூர்க்காக்களைப் பார்த்தால், குறும்பாக ‘குட்மார்னிங்' சொல்வதுண்டு.. பதிலுக்கு மமதையின்றி வணங்கிச்செல்லும் காக்கி உருவம் அனேகமாக கூர்க்காவாக மட்டும்தான் இருக்க முடியும்.

         ‘கோரக்நாத்' என்ற கடவுளை வழிபட்டு வந்தவர்கள் என்பதால் அவர்களை ‘கூர்க்கா' வென அழைக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு, இமய மலையின் ‘கூர்க்' பகுதியில் அதிகம் வசித்தவர்கள் என்பதால் அவர்களுக்கு அப்படி ஒரு பெயர் என்று சொல்லப்படுவதுண்டு. எது சரியோ ஆனால் ‘கூர்க்கா' என்றால் ‘விசுவாசம் கலந்த வீரம்' என்ற பொருள் இருக்குமாயின் அது மிகப்பொருத்தமாகவே இருக்கும். கூர்க்காக்கள் ஒன்று விவசாயத்தின் மூலம் ஜீவிப்பார்கள் அல்லது இராணுவத்திலோ, காவல் படையிலோ இருப்பார்கள்.

          கூர்க்காக்களின் கைவசம் பொதுவாக ‘குக்ரி' எனப்படும் முனையில் வளைந்த குறுவாள் ஒன்று இருக்கும். அவர்கள் எந்த படைப்பிரிவில் இருந்தாலும் அவர்களின் பணிக்காலத்துக்குள் ஒருமுறையேனும் எதிரியின் குருதியை ‘குக்ரி' சுவைத்திருக்கவேண்டும். அப்படி இல்லாமல் போனால் ஓய்வு பெறும்தருவாயில் தங்கள் உடலைக் கீறியாவது அந்த கத்தி ரத்தம் பார்க்கவேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவர்கள். அவர்கள் எந்தப்படையில் பணியிலிருக்கிறார்களோ அதன் தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள். உயிரே போனாலும் துரோகம் என்ற சொல்லுக்கு தங்கள் அகராதியில் இடம் தர விரும்பாதவர்கள். அதனால்தான் இன்றைக்கும் பிரிட்டிஷ் இராணுவத்தில் இங்கிலாந்தின் பிரஜை அல்லாத கூர்க்காக்களை தேடிப்போய் சேர்த்துக்கொள்கிறார்கள்.

         1814 -இல் நேபாள படைக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையில் நடந்த கூர்க்கா யுத்தத்தின் முடிவில் கூர்க்காக்களின் போர் புரியும் உத்வேகம், அவர்களின் போர் ஒழுக்க கட்டுப்பாடுகள், தலைமைக்கு கீழ் படியும் தன்மையால் கவரப்பட்ட கி.இ. கம்பெனி ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது. அதன்படி தனது படையில் கூர்க்கா பிரிவை ஏற்படுத்தி அதில் கூர்க்காக்கள் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் போரை நிறுத்திக்கொண்டது. அன்றிலிருந்து இப்பொழுது வரை ஆண்டுதோறும் கூர்க்காகளுக்கான ஆள்சேர்ப்பு படலத்தை பிரிட்டிஷ் இராணுவம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

          மான்செஸ்டரில் உள்ள பிரிட்டிஷ் பாதூகாப்புத்துறை அலுவலகத்துக்கு முன் கூர்க்காக்களின் சேவையை போற்றும் வகையில் கூர்க்கா வீரன் ஒருவனின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய சுதந்திரத்தின்போது பிரிட்டிஷ்காரர்கள் அப்போதைய படையில் இருந்த கூர்க்கா படைப்பிரிவை அப்படியே தங்கள் இராணுவத்தில் இணைத்துக்கொண்டுதான் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். எதிரியையும் கவரும் வீரம் செறிந்தவர்கள் என்பதால்தான் அவர்கள் இந்திய, நேபாள், பிரிட்டிஷ் ஆகிய மூன்று இராணுவப்படைகளிலும் பேதமற்று சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

           இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கூர்க்காக்களின் பங்கு அளப்பரியது. பல கூர்க்காக்கள் காந்தியவாதிகளாக, அவர் அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டு பிரிட்டிஷ் காவலர்களின் வெறிகொண்ட தாக்குதல்களில் பலியானவர்கள் பலர். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து கொண்டு ஆங்கிலேய ஏகாதியபத்தியத்தை எதிர் கொண்ட காரணத்தினால் சித்திரவதைகளுக்கு ஆளானவர்கள் பலர். அதில் மிக இளம் வயதில் தூக்கு மேடையேறி இன்னுயிர் ஈத்த துர்கா மல்லா மற்றும் தல் பகதூர் தாப்பா ஆகியோரை இந்திய வரலாறு தனது பக்கங்களில் குறித்து வைத்திருக்கிறதா அல்லது அவர்களை நமது சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களைக் காணும் உத்வேகத்தில் தொலைத்துவிட்டோமா? ... தெரியவில்லை..

           துர்கா மல்லா டெஹ்ராடூனுக்கு அருகிலுள்ள டொய்வாலா என்ற கிராமத்தில் 1913 ஆம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்தவர். அவரது தந்தை கங்காராம் மல்லா அப்போதைய பிரிட்டிஷ் இராணுவத்தில் ஜமேதாராக பணியாற்றிக் கொண்டிருந்தார். எட்டுப்பிள்ளைகளில் மூத்தவர் துர்காமல்லா. படிக்கும் காலத்தில் மற்ற பிள்ளைகள் போல் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் ஆர்வமற்றவராக சதா புத்தகங்களில் தனக்கான உலகத்தை தேடிக் கொண்டிருப்பவராக இருந்தார். இலக்கியம் எளிதாக அவரை பற்றிக்கொண்டது. சிறுவயதில் அவரது கவிதைகள் உள்ளூர் பத்திரிகைகளில் பிரசுரமாயின. புத்தகங்கள் வாயிலாக சுதந்திரத் தாகம் மிக்கவராக அவர் மாறினார்.

         குறிப்பாக காந்தியின் உப்பு சத்தியாகிரகம் அவருள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது காலத்தில் பிரபலமாய் அறியப்பட்ட காந்தியவாதிகள் கவிஞர் பகதூர் சிங் பரால் மற்றும் மித்ர சென் தாப்பா ஆகியோரால் பெரிதும் அவர் ஈர்க்கப்பட்டார். அடிக்கடி சுதந்திர இயக்க கூட்டங்களில் காணப்பட்ட மல்லாவை பிரிட்டிஷ் அரசு கண்காணிக்கத் தொடங்கியது. அதனால் அவர் அவர்களின் பார்வையிலிருந்து ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவுக்கு தப்பிச்சென்றார். ஆனால் அமைதிவழி போராட்டங்களில் தொடர்ந்து செயல்பட ஈடுபாடு அற்றவராக இருந்தார். 

        சிலகாலத்திற்குப்பின் வீடு திரும்பிய அவர் குடும்பச்சூழல் காரணமாக இராணுவப்பணியில் சேரவேண்டியிருந்தது. அவர் அதனை பயிற்சியின் பொருட்டே ஏற்றுக்கொண்டார். அந்த காலத்தில் சற்று அதிகம் படித்தவர் என்கிற காரணத்தினால் அவர் இரகசிய குறிப்புகள் பயிற்சிப்பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மிக எளிதாக பயிற்சியில் தேறி பதவி உயர்வுபெற்றார். 1941- ல் மத்தியப்பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தைச்சார்ந்த சாரதா தேவி என்பவரை மணந்தார். அப்பொழுது இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் என்பதால் திருமணமான மூன்றாம் நாளே தலைமையகத்தால் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். செகந்திராபாத் படைப்பிரிவோடு அவர் உடன் சென்று இணையும்படி உத்திரவிடப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு உடன் அவர் அங்கு சென்று பணியாற்ற வேண்டியிருந்தது. பின்னர் ஜப்பானியப்படையுடன் மோதுவதற்காக மலேஷியா செல்லும் துருப்புகளோடு அவர் செல்லும்படி பணிக்கப்பட்டது. மும்பை சென்று கடல் வழிமார்க்கமாக மலேஷியா செல்லும் முன் கிடைத்த இடைவெளி விடுமுறை நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருக்க வாய்ப்புக்கிட்டியது. ஆகஸ்ட் 23, 1941-ல் அவர் மலேஷியா சென்றார்.

       ஆனால் அங்கு நடந்த போரில் ஜப்பானிய படைகளின் ஆதிக்கமே ஓங்கி இருந்தது. தாக்குப்பிடிக்க முடியாத பிரிட்டிஷ் கூட்டுப்படையின் தளபதி ஹண்ட் ஜப்பானிய படைகளிடம் தனது அணியை சரணடைய செய்துவிட்டார். கூர்க்கா படையினரின் விவேகமிக்க வீரத்தினால் ஈர்க்கப்பட்ட ஜப்பானிய தளபதி ஃபியூஜிவாரா அவர்களை கனிவோடே நடத்தினார். அந்த சமயத்தில்தான் நேதாஜி ஜப்பானிய அரசுடன் பேசி பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட உடன்பாட்டை ஏற்படுத்தி ‘இந்திய தேசிய படையை' (INA) உருவாக்கும் முயற்சியில் இருந்தார். அவரது எண்ணப்படி 1943-ல் INA நேதாஜியின் தலைமையின் கீழ் வந்தது. மல்லா இந்த தருணத்துக்காகவே காத்திருந்தவராக INA வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

        துவக்கத்தில் ஒரு சிப்பாயாக சேர்ந்த அவர், ஏற்கனவே இருந்த இராணுவ அனுபவம் காரணமாக உளவுப்பிரிவு மேஜராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான போர்ப்பணியில் களத்தின் சூழல், எதிரியின் படைபலம், வியூகம் ஆகியவை குறித்து தகவல் அனுப்பும் மிக முக்கியமான பொறுப்பு மல்லாவுக்கு தரப்பட்டிருந்தது. தனக்கு இடப்பட்டிருந்த வேலையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக மல்லா 1944ஆம் வருடம் மார்ச் 27ம் தேதி பிரிட்டிஷ் படையிடம் பிடிபட்டார். பிரிட்டிஷ் அரசு INA வில் பணியாற்றிய எவரையும் அத்தனை சுலபமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆயுதம் ஏந்திய அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பதை உணர்ந்துகொண்டிருந்தது. எனவே அவர்களை மிரட்டி தனக்கு கீழ் பணியவைக்க முயற்சித்தது அல்லது அவர்களை அடியோடு அழிக்க நினைத்தது.

         டெல்லி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட அவரை மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்க சம்மதித்தால், விட்டுவிடுவதாக சொன்னது. ஆனால் அதற்கு மல்லா சம்மதிக்கவில்லை. மண்டியிடுவதைவிட மரணத்தை ஏற்பதே மேல் என்று அவர்களுக்கு பதிலளித்தார். அவரது மனைவி சாரதாவை அனுப்பி அவரை சம்மதிக்கவைக்க முயற்சித்தது. “ சாரதா உனக்கு இலட்சக்கணக்கான இந்திய சகோதரர்கள் இருக்கிறார்கள் அஞ்சாதே. மரணத்தின் வலி என்னை அச்சுறுத்தவில்லை. இந்தியா இன்னும் விடுதலை ஆகவில்லையே என்ற வேதனைதான் என்னை உருக்குகிறது. ஆனால் நிச்சயம் ஒரு நாள் என் தேசம் விடுதலையாகும்” என்று உக்கிரத்துடன் சொன்னார். மல்லா 1944, ஆகஸ்ட் 25ம் தேதி செங்கோட்டையின் தூக்கு மேடையில் அடங்காத வேங்கையைப்போல துணிவோடு தூக்குக்கயிற்றில் தன் உயிரை நிரப்பினார். மல்லாவிற்குப்பிறகு 1945 ஆம் வருடம் தல் பஹதூர் தாப்பா INA வில் பணிபுரிந்த காரணத்தால் தூக்கிலிடப்பட்டார்.

        இந்தியாவின் ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா ஒருமுறை கூர்க்காக்களை பற்றி குறிப்பிடும்போது “ ஒருவன் தன்னுடைய உயிரை துச்சமென கருதுவேன் மரணத்துக்கு அஞ்சேன் என்று கூறுவானாகில் ஒன்று அவன் பொய்யனாக இருக்கவேண்டும் அல்லது அவன் கூர்க்காவாக இருக்கவேண்டும்” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார். அதற்கு உதாரணமாக மல்லாவும், பஹதூர் தாப்பாவும் நிரூபித்துவிட்டு சென்றுவிட்டார்கள். இந்த வருடம் மல்லாவின் நூற்றாண்டு. தன்னோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பதவி தூசு உதிர்ந்தாலே பதறிப்போகும் தலைவர்களின் பிறந்த நாளுக்காக டிஜிட்டல் பேனர்களை தயாரித்துக்கொண்டிருக்கும் இன்றைய அரசியல் உலகம் மல்லா போன்ற சரித்திரம் புறக்கணித்துவிட்ட மறவர்களை முற்றிலும் மறந்துவிட்டிருக்கிறது.

                 ‘ஹிஸ்டரி' என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் ‘விசாரணை' என்று பொருளாம். கடந்த காலங்களை நாம் விசாரித்தபடியே இருக்க வேண்டும் இல்லையேல் சரித்திரம் நம்மை கூண்டிலேற்றிவிடும்.மல்லாவின் கல்லறை வேண்டுவது சில துளி கண்ணீரையோ, ரோஜா இதழ்களையோ அல்ல... விசாரியுங்கள் கடந்து போன காலங்களை....

        ஒருவேளை கிடைக்கின்ற தடயங்களில் தொலைந்துபோன நீங்களும் கிடைக்கலாம்..

 நன்றி: 'காக்கைச் சிறகினிலே'

வெள்ளி, 3 மே, 2013

வந்தேறிகளை உலுக்கிய சிதம்பரனார் (வ.உ.சி. நாடகம்...நிறைவு.)


காட்சி: 15
பாத்திரங்கள் :             
               ..சி, ஜெயிலர்
ஜெயிலர்:
சிதம்பரனாரே, ஜெயிலுக்குள் கட்டுக்கடங்காத கலவரம் நடக்கிறது. நீங்கள் உங்கள் வேலையை இங்கும் காண்பித்து விட்டீர்களா?
..சி:
கலவரமா? எதனால்? யார் யாருக்கு?
ஜெயிலர்:
ஒன்றும் புரியாதது போல் நடிக்காதீர்கள். ஜெயில் சுப்பரிடெண்டெண்ட் மிஞ்சேலை யாரோ நையப் புடைத்து விட்டார்கள். அவரை மருத்துவ மனைக்குத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் படுகாயம் அடைந்து விட்டார்.
..சி:
அடடே... கைதிகள் நிலை கவலைக்கிடமாகிவிடுமே...! தேவையில்லாமல் எதற்கு இப்படியொரு பிரச்சினை?
ஜெயிலர்:
யார் ஆரம்பித்தது என்று தெரியாது. ஆனால் எப்படி முடிக்க வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்.
..சி:
                (மனசுக்குள்) சரிதான். வடுகராமன் விளையாடி விட்டான் போலிருக்கிறதே.
ஜெயிலர்:
                என்ன சொல்கிறீர்கள்?
..சி:
                ஒன்றுமில்லை... வடுகராமனுக்கு என்னாயிற்றோ என்று கவலைப்பட்டேன்.
ஜெயிலர்:
அவன் தான் கன்விக்ட் வார்டன் ஆயிற்றே... அவனுக்கு எதுவும் ஆகவில்லை. மிஸ்டர் சிதம்பரம், கலவரத்தை தூண்டிவிட்டு நிலவரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா?
..சி:
                எனக்கே என்ன நடந்தது என்று இப்பொழுது தான் தெரியும்.
ஜெயிலர்:
ஓஹோ... நீங்கள் சொன்னதைச் செய்திருக்கிறார்களா என்று சரிபார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
..சி:
     அபாண்டமாகப் பேசாதீர்கள். கலவரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஜெயிலர்:
                ஏற்கனவே கைதிகளுக்குத் தரப்படும் உணவு தரமில்லை என்று உண்ணாவிரதம் இருக்கத் தூண்டியவர்தானே நீங்கள்... உங்களை தனிமைச் சிறையில் அடைக்கும்படி உத்தரவு.

..சி:
                எங்கே இடி இடித்தாலும் என் தலையில் தான் மழையா?!
ஜெயிலர்:
                அங்கே உங்களுக்கு கைராட்டை தரப்படும். தனிமையில் நூல் நூற்றுக் கொண்டு கிடங்கள்.
..சி:
                சிறையில் நூல் தயாராவது வழக்கம் தானே... என்னுடைய நூலும் வரட்டும்.
ஜெயிலர்:
                உங்கள் தத்துவ போதனைகள் தேவையில்லை.
..சி:
நூல் நூற்கும் பணி சுதேசிப் பொருட்களை உற்பத்தி செய்வதில் மிக முக்கியமானது. சுதேசிப் பொருட்களைத் தான் உற்பத்தி செய்ய வேண்டும்; சுதேசிப் பொருட்களைத் தான் விற்பனை செய்ய வேண்டும்... என்று நாங்கள் வெளியே சொல்லிக் கொண்டிருந்தோம். அதைத்தான் நீங்கள் சிறைக்கு உள்ளே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்களும் எங்கள் வழிக்கு வந்து விட்டீர்கள்.

ஜெயிலர்:
..சி.யின் எலும்பு கூட ஒருவனின் உணர்வுகளை தட்டியெழுப்பி அரசாங்கத்துக்கு எதிராகப் போராட வைத்துவிடும் என்று நீதிபதி பின்ஹேய் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. விரைவில் உங்களை கண்ணனூர் சிறைக்கு மாற்றப் போகிறோம். அங்கு உங்கள் தமிழ்ப் பேச்சைக் கேட்க ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.



                  காட்சி: 16

பாத்திரங்கள்   : 
           ..சி, மலபார் மாப்பிள்ளை, சிவம்

மலபார் மாப்பிள்ளை:
ஐயா நீங்கள் இந்தக் கண்ணனூர் சிறைக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டன. இன்று உங்களுக்கோர் மகிழ்ச்சியான செய்தி. பிரிவியூ கவுன்சிலில் தண்டனைக் குறைப்பு காரணமாக, உங்களுடைய சிறைவாசம் முடிவுக்கு வருகிறது. இன்று உங்களுக்கு விடுதலை.
..சி:
அப்படியா மலபார் மாப்பிள்ளை அவர்களே, இன்றைக்கு என்ன கிழமை, என்னதேதி?
மாப்பிள்ளை:
ஐயா, சிறைவாசம் உங்களை நாள் கிழமை என்னவென்று கூட மறந்து போகுமளவுக்கு மாற்றி விட்டது. இன்றைக்கு 1912-ம் வருடம் டிசம்பர் 4-ம் தேதி.
..சி:
                அப்படியா! உங்களுக்கு எப்போது விடுதலை?
மாப்பிள்ளை:
நான் கொலைக் குற்றவாளி. என் மீது கணக்கற்ற கொலை வழக்குகள் உள்ளன. நீங்கள் சிறைக்கு வந்த போது எனக்குத் தரப்பட்ட வேலையென்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?
..சி:
                தெரியாதே... என்ன மாதிரி வேலை?
மாப்பிள்ளை:
முரண்டு பிடிக்கும் கைதிகளை விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற அரசியல் கைதிகளை கம்பளிகளைக் கொண்டு போர்த்தி விட்டு கண்மண் தெரியாமல் அடிப்பது. வெளிக்காயங்கள் எதுவும் தெரியாது. ஆனால் உள்ளே உள்ள மிகச் சிறிய எலும்புகள் கூட முறியக் கூடும். இரக்கமற்ற குணமுடையவன் என்று என்னிடம் இந்த வேலையை ஒப்படைத்திருக்கிறார்கள். நான் முதலில் உங்களைச் சந்தித்தது உங்களையும் கம்பளி கவனிப்புக்கு ஆளாக்குமாறு சிறை அதிகாரிகள் உத்தரவிட்டதன் காரணமாகத் தான்.
..சி:
                அப்படியா! நீ ஒரு முறை கூட அது போல் என்னை செய்ததில்லையே...
மாப்பிள்ளை:
உண்மைதான். உங்கள் மென்மையான குணமும் எளிமையான நடவடிக்கைகளும் என்னை மிகவும் கவர்ந்து விட்டன. நீங்கள் வெள்ளையர்களை எதிர்த்து கப்பல் ஓட்டியவராமே... உஙக்ள் பேச்சுக்கும் எழுத்துக்கும் அவ்வளவு மரியாதையாமே.. இங்கு வந்த பிறகு நீங்கள் எழுதிய உங்கள் சுயசரிதையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைப் படித்ததும் என் மனம் நெகிழ்ந்தது. இந்த நாட்டுக்காக எவ்வளவு இழப்புகளைத் தாங்கியிருக்கிறீர்கள்! அதனால்தான் எந்த அச்சுறுத்தலும் என்னால் உங்களுக்கு வரக்கூடாதென நினைத்தேன்.
..சி:
                ரொம்ப நன்றியப்பா! நீர் நீடூழி வாழ்க!
மாப்பிள்ளை:
என்னைப் பற்றிக் கேள்விப்பட்டவர்களெல்லாம் நான் எப்போது செத்து ஒழிவேன் என்றுதான் விரும்புவார்கள்; பேசுவார்கள்; நிந்திப்பார்கள். ஆனால் நீங்கள் மட்டும் நான் எத்தனை கொலைகள் செய்தேன், எப்படிச் செய்தேன் என்றெல்லாம் கேட்டுத் துன்புறுத்தவில்லை. உனக்கு எப்பொழுது விடுதலை? நீ எப்போது உன் குடும்பத்தைப் பார்ப்பாய்? என்றுதான் கேட்டுக் கொண்டு இருந்தீர்கள். நீங்களும் இப்போது சென்று விட்டால், என்னை யார் இப்படி பரிவோடு கேட்க இருக்கிறார்?
..சி:
(சிரித்துக் கொண்டே) வேண்டுமானால், உனக்காக என் தண்டனையை நீட்டிக்கச் சொல்கிறேன். வெள்ளையர்கள் சந்தோஷப் படுவார்கள்.
மாப்பிள்ளை:
(பதறியபடி) ஐயய்யோ... நீங்கள் இத்தனை ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றதே அநீதி. இதில் இன்னும் நீங்கள் இங்கு இருக்க வேண்டுமா?! வெளியே சென்று நாட்டு மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டுங்கள். உங்களை வரவேற்று அழைத்துச் செல்ல உங்கள் நண்பர் காத்துக் கொண்டிருக்கிறாராம்.

..சி:
மகிழ்ச்சி. நீயும் விரைவில் விடுதலையாகி, எல்லோரையும் போல சந்தோஷப் பறவையாக இருக்க வாழ்த்துகிறேன்! வருகிறேன்.

சிவம்:
ஐயா, வாருங்கள். எத்தனை ஆண்டுகளாயிற்று உங்களைப் பார்த்து! எப்படி  மெலிந்து உருக்குலைந்து போய் விட்டீர்கள்!

..சி:
                ஆமாம். நீங்கள் யார்?

சிவம்:
ஐயா, என்னைத் தெரியவில்லையா? தொழுநோய் மெல்ல மெல்ல என் உடலை அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது. இந்த வியாதிதான் என்னை விரைவில் சிறையை விட்டு வெளியே வரவழைத்திருக்கிறது. நான் தான் உங்கள் சிவம். சுப்பிரமணிய சிவா.
..சி:
அடக்கொடுமையே! சிவமா?! சிங்கம் போல பிடறி சிலிர்க்க முகத்தில் எப்போதும் கனல் வீச நீங்கள் நடந்து வருவதே அத்தனை அழகாக இருக்கும். இப்படியொரு கொடுமையா உங்களுக்கு?! அருகே வாருங்கள் சிவம்.
சிவம்:
வேண்டாம் ஐயா.. என்னைத் தொடாதீர்கள். தொழுநோய் உங்களையும் தீண்டிவிடக் கூடாது.

..சி.:
உங்கள் அன்பும் நட்பும் மட்டும் வேண்டும்; ஆனால் நீங்கள் படும் துன்பம் மட்டும் வேண்டாம் என்றால் எப்படி? தொழுநோய் தொடுவதால் பரவாது சிவம்.. தோழமைதான் பெருகும்.. நெருங்கி வாரும் உம்மை ஆரத்தழுவி எத்தனை நாட்களாகின்றன.. அருகே வாருங்கள் சிவம்.

சிவம்:
உமது கரங்கள் பட்டு எனது தனிமை நோய் தீர்ந்தது அய்யா இந்த உலகம் மாறி விட்டது. இந்த மனிதர்கள் மாறி விட்டார்கள். எத்தனை அளப்பரிய தியாகம் செய்திருக்கிறீகள். ஆனால் உங்களை வரவேற்க இந்த ஜனங்கள், நண்பர்கள் ... எவருமே வரவில்லையே...! கப்பல் கம்பெனியை இழுத்து மூடிவிட்டார்கள். அந்த செய்தி தெரியுமா உங்களுக்கு?

.வு.சி:
                கேள்விப் பட்டு நெஞ்சம் பதைபதைத்தது. அதைவிடக் கொடுமை எந்த பிரிட்டிஷ் காரர்களை எதிர்த்து கப்பல் வாணிபம் நடத்த வேண்டுமென்று அரும்பாடு பட்டேனோ அவர்களிடமே நான் வாங்கி வந்த கப்பல்களை விற்று விட்டதாக கேள்விப்பட்ட போது என் நெஞ்சில் ஆயிரம் ஈட்டிகள் பாய்ந்தது போல் துடித்துப் போனேன்.

சிவம்:
                உங்களை சிறையில் வைத்து கொடுமைப் படுத்தியதற்காகவும், உங்கள் கப்பல் கம்பெனியை நஷ்டமடையச் செய்ய சதி செய்ததற்காகவும் ஆஷ் துரையை நமது தீரமிக்க தம்பி வாஞ்சி சுட்டுக் கொன்று விட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டான்.

..சி:
                அது இன்னொரு கொடுமை. வாஞ்சி போன்ற வீர வேங்கைகள் நம் நாட்டின் சுதந்திரப் போருக்கு எத்துணை அவசியம்! அவர் தன்னுயிர் மாய்த்ததைத் தான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. திடமும் தெளிவும் கொண்ட அவரைப் போன்ற தீரம் மிக்கவர்கள் ஒருபோதும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது. விடுதலைப் போரில் நானும் நீங்களும் தீவிரவாதிதான். ஆனால், பயங்கர வாதம் நம் கொள்கையல்ல. இனி வெள்ளையர்களை ஒருபோதும் கொல்லக் கூடாது. அதன்பொருட்டு நம் இளைஞர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் அது இந்தியாவுக்குத் தான் நஷ்டம். ஆயிரம் கயவர்கள் ஆஷ் போல் தோன்றுவார்கள்.ஆனால் , ஒரு வாஞ்சி கிடைப்பது கடினமல்லவா! சுதந்திரப் போராட்டத்துக்காக மட்டுமல்ல, சுதந்திரம் பெற்ற பிறகு நாம் சுயமாக எழுந்து நிற்க இன்னும் பல இலட்சம் இளைஞர்கள் தேவை.
சிவம்:
                உண்மைதான். வாஞ்சியின் இடத்தை எவர் நிரப்ப முடியும்?!
..சி:
சுதந்திர இந்தியா வல்லரசாகத் திகழ, நாம் நமது கவனத்தை ஆயுதங்களின் மீது செலுத்தக் கூடாது. பொருளாதார ரீதியாக நம்மை வலுப்படுத்த வேண்டும். தொழில் ரீதியாக ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த வேண்டும். விவசாய வளங்களை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இத்தனை பணிகள் இருக்கின்றன. தன்னலம் கருதாத தியாகிகள் கையில் இந்த தேசம் வீறு கொண்டு எழவேண்டும். எவன் நம்மை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினானோ, அவன் நம்மைப் பார்த்துக் கலங்கி ஒதுங்கி நிற்க வேண்டும். இதுவே என் கனவு. இதுவே இந்த நாட்டு இளைஞர்களுக்கு என் செய்தி.
சிவம்:
உங்கள் கனவு நனவாகும் காலம் வெகு தூரத்திலில்லை. வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!

..சி:
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வாழ்க பாரதம்! வாழ்க நம் மணித்திரு நாடு!!
                                                               



                                          காட்சி  :17

பாத்திரங்கள்
               அப்பா, மகன்

சிறுவன்  சிதம்பரம்:
             வந்தே மாதரம்! வந்தே மாதரம்!! வாழ்க பாரத மணித்திருநாடு!! அப்பா, இப்படியும் கூட ஒருவர் கஷ்டப்பட முடியுமா?! இப்படியும் கூட தைரியமாக ஒருவர் இருக்க முடியுமா?!
அப்பா:
இருந்தாரே...! அவர்தான் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! பொருளாதார மேதை! தன்னலமற்ற தன்மானச் சிங்கம்! ..சிதம்பரனார்.
சிறுவன் சிதம்பரம்:
எங்களுடைய காலத்தில் இந்த நாட்டுக்கு எது வேணும்னு  எப்படி இவ்வளவு வருஷங்களுக்கு முன்னாலேயே யோசிச்சிருக்கிறார்?!  ..சி.ன்னா என்னன்னு இப்பதான் புரியுது. வந்தே மாதரம் உணர்த்திய சிதம்பரனார்; வந்தேறிகளை உலுக்கிய சிதம்பரனார்; வரும்பொருள் உரைத்த சிதம்பரனார்... எல்லாமே ரொம்பப் பொருந்துதுப்பா.
அப்பா:
                இப்ப புரியுதா...? நான் உனக்கு ஏன் சிதம்பரம்ன்னு பேர் வெச்சேன்னு?!
சிறுவன்:
புரியுதுப்பா. எனக்கு இப்ப ரொம்ப பெருமையா இருக்கு. இனிமே யாராவது சிதம்பரம்ங்கற பேரை கிண்டல் பண்ணினா கோபப்பட மாட்டேன். அவங்களுக்கு பொறுமையா ..சி.யோட வரலாற்றைச் சொல்லுவேன். வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
அப்பா:      வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
   

செக்கிழுத்த செம்மல் (வ.உ.சி. நாடகம்)


காட்சி: 13

பாத்திரங்கள் :              
            வ..சி, , வடுகராமன், ஜெயிலர்

வடுகராமன்:
ஐயா கப்பலோட்டிய தமிழரே... உம்மை வணங்குகிறேன்.
..சி:
நீங்கள் கன்விக்டர் வார்டன் இல்லையா? எங்களைப் போன்ற கைதிகளை அடக்கியாளும் பணி உங்களுக்கு. நீங்கள் என்னை வணங்குவதைப் பார்த்தால் பரங்கியர் கூட்டம் உங்களை வாட்டி வதைத்து விடுமே...
வடுக ராமன்:
உங்களைப்போன்ற தியாகிகளை வணங்குவதால் நான் சித்திரவதைப் பட்டால் அதைப் பெருமிதத்துடன் ஏற்பேன்.

..சி:
உங்களை யாரென்றே எனக்குத் தெரியாது. என்றாலும் என் மீது இத்தனை அன்பு, மரியாதை... அப்படியென்ன பெரிதாக சாதித்து விட்டேன்? சரி, உங்கள் பெயர்?
வடுகராமன்:
என் பெயர் வடுகராமன். நான் உங்களைப் போல தேச விடுதலைக்குப் போராடும் தியாகி அல்ல. நான் இந்த அரசாங்கச் சட்டப்படிக் குற்றவாளி.
..சி:
இந்த அரசாங்கத்தில் சட்டங்கள் எதுவும் அத்தனை நியாயமானவை அல்ல. ஆகவே அதுகுறித்துக் கலங்க வேண்டாம், இந்த அரசாங்கத்தின் பார்வையில் நான் கூடக் குற்றவாளிதான்.
வடுகராமன்:
ஐயா... நீங்கள் சாப்பாட்டுக்காக இனி தட்டேந்தி வரிசையில் நிற்கவேண்டாம். நானே எடுத்து வருகிறேன்.
..சி:
என் மீது சாட்டப்பட்ட குற்றம், நியாயமில்லாமல் போகலாம். ஆனால், இங்கு நானும் ஒரு குற்றவாளி. உங்களைப்போன்றே நானும் ஒரு கைதி. ஆகவே எனக்கென்று எந்த சலுகையும் வேண்டாம்.
வடுக ராமன்:
அதற்காக சொல்லவில்லை. நான் தனியே வந்து உங்களிடம் ஒருசில விஷயங்களைச் சொல்ல வேண்டும். இந்த ஜெயில் பற்றி, ஜெயிலர் பற்றி, இங்குள்ள மருத்துவர் பற்றி... நான் சொல்லியே ஆக வேண்டும்.
..சி:
ஓஹோ... சரி. அப்படியானால், என்னை சந்திப்பதில் உங்களுக்கு எதுவும் ஊறு நிகழ்ந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜெயிலர்:
                வடுகராமன்... என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன்னை ஜெயில் சூப்பிரண்டெண்ட் அறைக்கு கூப்பிடுகிறார். உடனே அங்கு போ.
வடுகராமன்:
                சரி, இப்போதே நான் அங்கு செல்கிறேன்.

ஜெயிலர்:
                என்ன பிள்ளைவாள்... இங்கும் ஆள் பிடிக்கிறீர்களா?
..சி:
ஆள் பிடிப்பது, வால் பிடிப்பது, நாடு பிடிப்பது இதெல்லாம் எங்கள்    வேலையல்ல.
ஜெயிலர்:
ம்ம்ம்... திமிர். வாய்க்கொழுப்பு. இந்த இரண்டும் உங்களுக்கு அதிகம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.(கைத்தட்டி) ஏய், இங்கே வா. இவரை செக்கிழுக்கும் பகுதிக்கு இட்டுச் செல். அங்கு மாடுகளுக்கு பதிலாக இவரைப் பூட்டி இழுக்கச் சொல்.
..சி:
அதற்கெல்லாம் அஞ்சோம். நாங்கள் எள் என்றால் எண்ணெயாக இருப்பவர்கள். எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.

ஜெயிலர்:
அப்படியா? அதை நாள் முழுக்க தாராளமாகச் செய்யுங்கள். கையோடு கொண்டுபோங்கள் இவரை.





காட்சி: 14
பாத்திரங்கள் :           
              வ..சி, , வடுகராமன்,
வடுகராமன்:
தமிழர்களின் வீரம் தழைக்க இந்தியர்களின் மானம் காக்க அன்று கப்பல் இழுத்த உங்களை இங்கு செக்கிழுக்க வைத்து விட்டார்களே கயவர்கள்...!
..சி:
பரவாயில்லை வடுகராமா... பாரதத் தாயின் அடிமை விலங்கை உடைக்க கப்பலையும் இழுப்போம்; செக்கையும் இழுப்போம்.
வடுகராமன்:
என்னால் தானே உங்களுக்கு இத்தனை இக்கட்டு...உங்கள் கைகளெல்லாம் தோலுரிந்து வெடித்துக் கிடக்கின்றனவே. தினவெடுக்கும் உங்கள் தோள்களில் தான் எத்தனை ஆழமான ரணம்.
..சி:
போகட்டும். உன்னைச் சும்மாவா விட்டார்கள்?
வடுகநாதன்:
மிகக் கேவலமாக நடத்தினார்கள். இழிவாகப் பேசினார்கள். ஆனால், என்னிடம் இலேசான பயமுண்டு அவர்களுக்கு. என் மூர்க்கத் தனம் முன் அவ்வளவு சீக்கிரம் வாலாட்ட மாட்டார்கள்.
..சி:
நீ என்னை அதிகம் சந்திக்க வேண்டாம். இப்பொழுது கூட நான் உன்னை அழைத்ததற்குக் காரணம் ஆறுமுகம் பிள்ளை உன்னைப் பற்றி ஒரு தகவல் சொன்னார். அது உண்மையா என்று அறியத்தான் அழைத்தேன்.
வடுகராமன்:
... புரிகிறது. உங்களிடம் அதுபற்றி விவாதிக்க வேண்டாமென்று சொல்லியிருந்தேனே... ம்ம்ம்... உங்களின் விசுவாசி. நான் சொல்லியா கேட்கப் போகிறார்?
..சி:
ஆனால் நீ நான் சொல்வதைக் கேட்க வேண்டும்.
வடுகராமன்:
ஐயா, இந்த ஜெயிலரும், சூப்பிரண்டெண்டும் உங்களை இழிவு படுத்திய சிறைத்துறை மருத்துவரும் ஒருகாலும் திருந்த மாட்டார்கள். அவர்கள் மூவரையும் ஒரே நேரத்தில் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகின்றோம்.
..சி:
தயவு செய்து அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிடு. வெள்ளையர்களின் ஆட்சியை ஒழித்து அவர்களை இங்கிருந்து விரட்ட வேண்டுமே தவிர, அவர்களையே அழிக்க நினைக்கக் கூடாது.
வடுகராமன்:
ஐயா, இதில் உங்களை ஒருபோதும் சம்பந்தப் படுத்த மாட்டோம். எங்கள் வழியில் எங்களை விட்டுவிடுங்கள்.
..சி:
உயிர்க்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது. அது கொடிய பாவமும் கூட. எந்த ஜென்மத்தில் நாம் என்ன பாவம் செய்தோமோ... இந்த சிறைச்சாலையில் வந்து சித்திரவதைப் பட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஏன் பாவச் செயலைத் தொடர வேண்டும்?
வடுகராமன்:
ஆனால், அவர்கள் தொடர்ந்து இதே சிறையிலிருந்தால், ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் நான் கோபத்தில் அவர்களை அடித்தே கொன்று விடுவேன். திட்டமிடாமல் ஒருவனைக் கொல்லுவதை விட திட்டமிட்டு மூன்று பேரை தீர்த்துக் கட்டிவிடலாம்.
..சி:
                உன்னுடைய பிரச்சினை அவர்கள் இங்கு இருப்பது தானே.. உன் புத்திக் கூர்மையைப் பயன்படுத்தி, அவர்களை இந்த ஜெயிலை விட்டு விரட்ட முயற்சி செய்.
வடுகராமன்:
          ம்ம்ம்... சரி. உங்கள் பேச்சை என்னால் மீற முடியவில்லை. முயற்சி செய்கிறேன். உங்கள் மீதான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தீர்களே... அது என்னாயிற்று?
..சி:
முதல் குற்றத்துக்கு ஆறாண்டுகளும், இரண்டாம் குற்றத்துக்கு மூன்றாண்டுகளுமாக தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அத்துடன் விடப்போவதில்லைபிரிவி.கவுன்சிலில் மனுச்செய்து மீண்டும் போராடப் போகிறேன். தண்டனைக் குறைவென்பது எனக்கு வழங்கப் படும் நீதியல்ல. நீதிமன்றத்தில் தண்டனை என்று தரப்படுவதே நான் குற்றவாளி என்பதையும் ஊர்ஜிதம் செய்வது போல்தான் இருக்கிறது.
வடுகராமன்:
                கவலைப் படாதீர்கள். சரித்திரம் உங்களைப் புரிந்து கொள்ளும்.

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...