திங்கள், 27 ஜூன், 2022

 

காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த கட்டுரை 


காவிரிக்கரையில் துவங்கிய போர்ப்பரணி

விதைத்த வீரமங்கை வேலுநாச்சியாரும், தீர மங்கை குயிலியும் 




 



     இந்திய சுதந்திரப்போர் பிரகடனம் என்பது கங்கைக்கரையில்தான் துவங்கியது என்றுதான் வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது ஆனால் அது காவிரிக்கரையில்தான் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது என்றார் அறிஞர் அண்ணா.  அது வெறும் சொல்விளையாட்டு இல்லை. உண்மையான வரலாறு அதை சரி என்றே நிரூபிக்கின்றது.

     1857-ல் கிளர்ந்த சிப்பாய்க் கலகம்தான் இந்திய சுதந்திர போராட்டுத்துக்கான முதல் படியாக கருதப்படுகிறது. ஆனால் சிவகங்கை பகுதியை ஆண்ட முத்துவடுக நாதரின் படையில் பணியாற்றி பின்னர் சிவகங்கையை நிர்வகித்து வந்த மருது சகோதரர்கள் ஐரோப்பியர்களின் வருகை மற்றும் அவர்களது அராஜகமான போக்கு ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்ததுடன், ஒத்தக் கருத்துடைய சிற்றரசர்களை ஒருங்கிணைக்கவும் செய்தனர். பொது மக்களையும் தங்களது போராட்டங்களில் உடன் சேர்த்துக்கொள்ளும் பொருட்டு கிராமங்கள் தோறும் ரகசியமாக பனை ஓலைச்சுவடிகளில் செய்திகள் பரிமாறப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சின்ன மருது வெளியிட்ட பிரகடனம் திருச்சி கோட்டையில் ஒட்டப்பட்டது.

     அந்த அறிக்கையில் மேன்மை தாங்கிய நவாப் அலி ஐரோப்பியர்களிடம் அடிபணிந்து போய்விட்டார். ஐரோப்பியர்கள் தங்கள் வாக்குறுதிகளை மீறி, அவரது ஆட்சியை தங்களுடைய ஆட்சியாக பாவித்து நம் மக்களை நாயினும் கீழாக கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால், ஐரோப்பியர்களின் சூழ்ச்சியை அறியாது ஒருவருக்கொருவர் தூற்றிக்கொண்டு நாட்டையும் அன்னியரிடம் அடகு வைத்துவிட்டீர்கள்.

     மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாய் இருந்தாலும் இறுதியில் ஒருநாள் செத்துதான் போகவேண்டும். எனவே பாளையத்தில் உள்ள ஒவ்வொருவரும், நாட்டை மீட்கும் இந்த போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். இதில் சாதி, மத வேறுபாடுகள் இன்றி பங்கேற்று, இந்த ஈனர்களின் பெயர்கள்கூட இனி இந்த தேசத்தில் ஒலிக்கக்கூடாது என்ற உறுதி ஏற்கவேண்டும்..எனதொடரும் அக்கடிதத்தின் பிரதிகள் திருச்சியின் கோட்டையில் ஒட்டப்பட்டன. அதுதான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட ஒலித்த முதல் கலகக்குரல்...

     மருது சகோதரர்கள் சிவகங்கை பாளையத்தை ஆண்டு வந்ததால், பிற அரசுகளோடு எளிதாக தொடர்புகள் கிடைத்தன. அதன் மூலம் இணக்கமான அரசுகளுடன் தொடர்புகள் கிடைத்தன. கேரளம், மராத்திய-கர்நாடக எல்லைப் பகுதியை ஆண்ட அரசுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தார். குறிப்பாக ஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் முனைப்பு காட்டிய துந்தாஜி வாக்-உடனான நட்பு மருது சகோதரர்களுக்கு கிடைத்தது. அவர்களோடு ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி பரஸ்பரம் குதிரைகளையும், வீரர்களையும் பரிமாற்றம் செய்து கொண்டனர். துந்தாஜி மூலம்  மராத்திய மன்னன் சிந்தியாவின் நட்பு கிடைக்கிறது. இப்படியாக காவிரிக்கரையில் துவங்கியசுதந்திரப் போர் கங்கைக்கரைக்கு மெல்ல மெல்ல பரவியது..

     மருது சகோதரர்களுக்கு சுதந்திர வேட்கை வளர்வதற்கு அவர்கள் படைத்தளபதிகளாகப் பணியாற்றிய சிவகங்கை பாளையத்தின் அரசர் முத்துவடுகரும், அவருக்குப்பின் சிவகங்கையை மீட்கப்போராடிய அவரது துணைவியார் வேலுநாச்சியாருமே காரணமாக இருந்தவர்கள்.

     முத்துவடுகநாதர் சிவகங்கையை நிர்வகித்து வந்தபோது, மதுரையை ஆண்ட விஜயகுமார நாயக்கருக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. 1752-இல் நவாப்பின் தூண்டுதலின் பேரில் அப்பொழுது இந்தியாவில் வியாபாரம் செய்து வந்த கிழக்கிந்திய கம்பெனியின் படை ஒன்று கேப்டன் கோப் தலைமையில் மதுரையை கைப்பற்றியது. முத்துவடுகநாதர் தனது நண்பரின் அரசை மீட்கும் பொருட்டு மதுரையின் மீது தனது படைகளை அனுப்பி, கம்பெனி படைகளை விரட்டிவிட்டு மீண்டும் விஜயகுமார நாயக்கரின் தலைமையின் கீழ் மதுரையை கொண்டுவந்தார். இந்த நிகழ்வு காரணமாக நவாப்புக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கும் முத்துவடுகநாதர் மீது பெரும் காழ்ப்புணர்வு இருந்து வந்தது.

     எப்படியாவது முத்து வடுகநாதரை சிவகங்கையை விட்டு விரட்டி விட்டுவிட்டு அதனை கைப்பற்ற திட்டமிட்டனர். என்றாலும் முத்துவடுகநாதரின் வசம் இருந்த படை வீரமும், விவேகமும் கொண்டதாக இருந்ததால் அவர்களது முயற்சி வெற்றி பெறுகின்ற சூழல் இல்லாமல் இருந்தது. கேப்டன் ஸ்மித் என்பவன் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியாக பொறுப்பேற்ற பின் சிவகங்கை தனது கட்டுப்பட்டுக்குள் வரவேண்டும் அல்லது கப்பம் கட்ட வேண்டும் என மிரட்டினான். ஆனால் அதற்கெல்லாம் பணிய மறுத்த முத்து வடுகநாதர் மீது படையெடுக்கப்போவதாக அறிவித்தான். அவனுக்கு துணை போக நவாப்பும் காத்திருந்தான். 1772-இல் ஆப்ரஹாம் பான்ஜோர் என்பவன் தலைமையில் ஒரு படை சிவகங்கைக்கு அருகிலுள்ள பாளையங்கள் சிலவற்றை அடிபணிய வைத்துவிட்டு சிவகங்கையை நோக்கி கிளம்பத் தயாரானது. அவனுக்குத்துணையாக நவாப்பின் மகன் உம்தத் உம்ரா என்பவனும் தனது படைகளோடு வந்தான். ஆனால் உளவுப்படைகள் மூலம் கிடைத்த தகவல்படி முத்துவடுகநாதரின் படை பலத்துக்கு இணையாக கி.இ கம்பெனி படை இல்லை என்பதையும், முத்து வேலரின் மதியூக மந்திரி தாண்டவராயன் வகுத்த  வியூகங்களை யூகிக்க முடியவில்லை என்பதையும், மருது சகோதரர்கள் என்கிற தளபதிகள் அரணாக இருக்கும் வரை முத்து வடுகநாதரை தோற்கடிப்பது சுலபமல்ல என்பதாலும் முத்து வடுகநாதருடன் சமாதானமாக போகும்படி கி.இ கம்பெனியின் தலைமையகத்திலிருந்து ஆலோசனை சொல்லப்பட்டது.

     மருது சகோதரர்கள் மனவலிமை, உடல் வலிமை, முடிவெடுக்கும் திறன், மக்கள் செல்வாக்கு என  அனைத்தையும் ஒருங்கே பெற்றவர்கள். முத்துவேலர் ஒரு முறை வேட்டைக்குச் சென்றபோது எதிர்பட்ட வேங்கையை விரட்டியடித்தவர்கள். நவாப் அவரது எல்லைக்குட்பட்ட பகுதியில் வெளியிட்ட கனத்த வெள்ளி நாணயம் ஒன்றை, சின்ன மருது தனது விரல்களாலேயே மடித்து வளைத்தவர்.  மருது சகோதரர்கள் என்கிற சிவகங்கையின் தீரமிக்க வீரர்கள் கி.இ. கம்பெனிக்கும், நவாப்புக்கும் சிம்ம சொப்பனமாகவே விளங்கினர்.

     நவாப்பினால் இந்த தோல்வியைத் தாங்கமுடியவில்லை. எனவே வஞ்சகமாக முத்துவேலரை கொல்வதற்கு கேப்டன் ஸ்மித் மற்றும் பாஞ்சோர் ஆகியோருடன் சேர்ந்து ஒரு சதித்திட்டத்தை தீட்டினான். முத்துவேலருக்கு சமாதான ஓலை அனுப்பிவிட்டு, பின் அவரை தனியே வரவழைத்து கொன்றுவிடுவது என்பதே அந்தத்திட்டம்..

     அதன்படி முத்துவேலர் தனது இஷ்ட தெய்வத்தை வணங்க காளையார் கோயிலுக்கு குறைந்த பாதுகாப்புடன் வந்த போது, அவரை பாஞ்சோர் மரியாதை நிமித்தமாக சந்திப்பதாகக்கூறி அனுமதி கேட்டான். பெருந்தன்மையுடன் நம்பி வந்த அவரையும், அவரது இரண்டாவது மனைவி கவுரி நாச்சியார் மற்றும் அவரது உறவினர்கள், பாதுகாவலர்களை நயவஞ்சகமாக சுட்டுக்கொன்றான். அத்துடன் வாரிசு இல்லாத அரசுகளை கி.இ கம்பெனி எடுத்துக்கொள்ளும் என்ற புதிய சட்டத்தை காரணம் காட்டி சிவகங்கையைக் கைப்பற்றினர்.

     செய்தி அறிந்து துடித்துப்போய் அங்குவந்த வேலு நாச்சியார், தனது கணவரின் இறந்த உடலைப் பார்த்து கதறி அழுதார். கணவரின் கொலைக்கு காரணமான ஸ்மித்தையும், பாஞ்சோரையும் பழிவாங்கியே தீருவேன் என்று உறுதியெடுத்த அவருக்கு மருது சகோதரர்களும், அமைச்சர் தாண்டவராயனும் துணை நின்று மிகபத்திரமாக ஹைதர் அலியின் ஆட்சியின் கீழ் இருந்த திண்டுக்கல் பகுதிக்கு உட்பட்ட விருப்பாட்சி கோட்டைக்கு அனுப்பி வைத்தனர்.

     வேலு நாச்சியார் விருப்பாட்சி செல்லும் வழியில், அரியாக்குறிச்சி அய்யனார் கோயில் அருகே மாடு மேய்க்கும் சிறுமி ஒருத்தியுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த யாரோ ஒரு ஆட்காட்டி அது பற்றி ஆங்கிலேய அதிகாரிகளிடம் சொல்லிவிட, வேலு நாச்சியார் சென்ற இடத்தை தெரிவிக்கும்படி அந்த சிறுமியை துன்புறுத்தினர். ஆனால் உயிர் போனாலும் தான் காட்டிக்கொடுக்கமாட்டேன் என்று உறுதியாக அந்த சிறுமி சொல்லியதால் அந்த சிறுமியின் தலையை வெட்டிக்கொன்றனர். அந்த சிறுமியின் மீது இருந்த பற்று காரணமாக வேலு நாச்சியார் தனது பெண்கள் படைக்கு உடையாள் படை  என்று அவளது பெயரை சூட்டியிருந்தார். அதோடு மட்டுமல்ல உடையாளை வணங்கும் தெய்வமாகவே கருதி கொல்லங்குடியில் ஒரு ஆலயத்தைக் கட்டினார். அந்த ஆலயம் இப்பொழுது வெட்டுடை காளியம்மன் கோயில் என்றழைக்கப்படுகிறது. அந்த ஆலயத்தில் தனது காணிக்கையாக வேலு நாச்சியார் வைத்த திருமாங்கல்யம் இன்றும் அங்கிருப்பதாக சொல்கிறார்கள்.

     வேலு நாச்சியார் இளமையிலேயே வில் பயிற்சி, குதிரையேற்றம், சிலம்பு பயிற்சி இவற்றுடன் தமிழ், தெலுங்கு, உருது, பிரெஞ்சு மொழிகளில் பேசும் திறன் ஆகியவற்றை ஒருங்கே பெற்றவராக இருந்தார். இந்த வல்லமை காரணமாக அவரால் எளிதாக ஹைதர் அலியின் ஆதரவை பெற முடிந்தது.

     தாண்டவராயன்தான் முதன்முதலாக பொதுமக்களையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயர்களுடன் போராடவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தவர். ஆங்கிலேயருக்கு எதிராக வாள் படைக்கு சின்ன மருதுவும், வளரிப்படைக்கு பெரிய மருதுவும், பெண்களை உள்ளடக்கிய உடையாள் படைக்கு குயிலி என்ற பெண்ணையும், மக்களை ஒன்றுபடுத்த தாண்டவராயனும் தலைமை வகித்தனர்.

     குயிலி என்ற அருந்ததியர் இனத்துப் பெண் வேலு நாச்சியார் அன்பையும், ஆதரவையும் பெற்றதற்குப்பின்னணியில் நீண்ட வரலாறு இருக்கிறது. வேலு நாச்சியாருக்கு சிறுவயதில் சிலம்பம் கற்றுத்தந்தவர் வெற்றிவேல் என்பவர். வேலுநாச்சியாருக்கு அவர் பாதுகாவலரும் கூட. முத்துவேலருடன் வேலுநாச்சியாருக்குத் திருமணம் முடிந்து அவர்கள் தேனிலவுக்குச் சென்றபோது கூட அவர்களுக்கு பாதுகாவலராகச் சென்றவர் வெற்றிவேல். அந்த அளவுக்கு அவர்களது நம்பிக்கையை பெற்றிருந்த அவர், பின்னாளில் பணத்துக்கு ஆசைப்பட்டு வேலுநாச்சியார் விருப்பாட்சியில் இருந்தபடி ஆங்கிலேயருக்கு எதிராக படை திரட்டுவது பற்றிய தகவல்களை, எதிராளிகளுக்கு தரத்துணிந்தார். அவருக்கு பக்கத்து வீட்டிலிருந்த குயிலி தன் தாயாரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரைப்பார்க்க சிவகங்கை செல்ல கிளம்புவது அறிந்து அவரிடம் ரகசியமாக ஒரு கடிதத்தை கொடுத்து, அங்குள்ள ஆங்கிலேயரின் கையாள் மல்லாரி ராயனிடம் தருமாறு கூறினார். குயிலிக்கு எழுதப்படிக்கத்தெரியாது என்று நினைத்து, அந்த கடிதத்தில் நாச்சியாரின் திட்டங்கள், அவரை கொல்வதற்கான வாய்ப்புகள் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தை எதேச்சையாக படித்துவிட்ட குயிலி ஆவேசம் கொண்டு தனது வாளால் அவரை வெட்டிக்கொன்றுவிட்டார்.

     செய்தி அறிந்த நாச்சியார் உடனே விரைந்து வந்து அந்த கடிதத்தைக் கைப்பற்றியதுடன், குயிலியை தன்னோடு அழைத்துக்கொண்டார். அன்றிலிருந்து குயிலி அவரது மனதுக்கு இனிய தோழியாகிவிட்டார். நாச்சியாரின் மகள் வெள்ளை நாச்சியாரோடு ஒரே அறையில் தூங்கும் அளவுக்கு அவரின் மனதில் இடம் பிடித்தார் குயிலி. ஒருமுறை அப்படி உறங்கிக்கொண்டிருக்கும்போது அவர்களது அறையில் எவனோ  அடையாளம் தெரியாத ஒருவன் குறுவாளை வீசினான், அது வெள்ளை நாச்சியாரைத் தாக்கும் முன் குயிலி பாய்ந்து சென்று தன் கைகளில் தாங்கிக்கொண்டாள்.

     இந்த சம்பவம் வேலுநாச்சியார் மனதில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. மறு நாள் தனது படை வீரர்களிடையே அவர் உரையாடுகையில் இந்த கொலை முயற்சி வெள்ளை நாச்சியாரை நோக்கியா அல்லது குயிலியை குறிவைத்தா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எவரது திட்டமும் தன்னிடமிருந்து குயிலியை பிரித்துவிட முடியாது. குயிலி தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதால் அவளுக்கு நான் தரும் முக்கியத்துவத்தை, பலரும் வேறுபடுத்தி பேசுவதாக அறிகிறேன். அப்படி யாரேனும் இன்னமும் நினைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் உடனே எனது படையை விட்டு வெளியேறிடவெண்டும். சாதி, மத வேறுபாடுகளுக்கு எனது படையில் இடமில்லைஎன்று காட்டமாகக்கூறினார். அதோடு நின்றுவிடாமல் தனது பெண்கள் படைக்கு குயிலியையே தலைமைத் தாங்க வைத்தார்.

     தக்க சமயத்துக்காக காத்திருந்த நேரத்தில் தாண்டவராயன் இறந்து போனார். என்றாலும் மருது சகோதரர்கள் துணையோடும், ஹைதர் அலி அனுப்பிய ஆயிரம் படை வீரர்களோடும், ஆயிரம் குதிரைகள் மற்றும் 12 பீரங்கிகளோடும்   தனது யுத்தத்தை ஆங்கிலேய படையை எதிர்த்து 1780-ல் வேலு நாச்சியார் துவங்கினார்.

     அவரது படை திண்டுக்கல்லைக் கடந்து திருப்புவனம் வந்தபோது மல்லாரிராயன் தனது படைகளோடு அவர்களை எதிர்த்து நின்றான். அவனையும் அவனது படைகளையும் தோற்கடித்துவிட்டு, சோழவந்தான், வண்டியூர் ஆகியவற்றைக் கடந்து சிலைமான் வந்தபோது மல்லாரிராயனின் தம்பி ரங்காராயன் தனது படைகளோடு அவர்களை எதிர்த்தான் பெரிய மருது தனது வளரி என்கிற கையெறி ஆயுதத்தால் அவனைக்கொன்றார். அத்துடன் அவனது படை பின் வாங்கி ஓடியது.

     மானாமதுரையில் கர்னல் மார்ட்டிஸ், பிரைட்டன் ஆகியோர் ஒரு படையோடு வருவதை அறிந்து பெரிய மருது தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பிவைத்தார் வேலு நாச்சியார். அந்த படை கி.இ கம்பெனிப்படையை சின்னாபினமாக்கியது.

     வேலு நாச்சியாரும், சின்ன மருதுவும் தலைமை தாங்கிய படை திருப்பாச்சேத்தி வழியாக முத்தனேந்தல் வந்தடைந்தது. சிவகங்கையில் பாஞ்சோர் நாச்சியாரின் படைக்கு அஞ்சி அடிக்கொரு வீரரை நிறுத்தி வைத்திருப்பதாக செய்தி கிடைத்து, அதனை எப்படி எதிர்கொள்வது என்ற ஆலோசனை நடத்தினார் நாச்சியார். அப்பொழுது அந்த அவைக்குள் நுழைந்த மூதாட்டி ஒருவர் ஆண்டு தோறும் விஜய தசமி அன்று, சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை வணங்க பெண்களை மட்டும் அனுமதிப்பதால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெண்கள்படையை அவர்களோடு ஊடுருவி அனுப்பிவிட்டால் எளிதாகத் தாக்கிவிடலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவ முற்பட்டார்.

     மூதாட்டியின் யோசனை பயனுள்ளதாகப்பட்டலும், அவர் அங்கிருந்து நகர முயற்சித்த போது சந்தெகப்பட்டு சின்ன மருது அவரை வழிமறித்து நீ யார்?” என்று கேட்டார். வேறு வழியின்றி தனது வேடத்தைக்களைத்த போது அது குயிலி என்று புரிந்தது. குயிலியின் விவேகமான ஆலோசனையின் படி 1780 ஐப்பசித் திங்கள் 5-ந் தேதி ( அக்டோபர் 21) அன்று சிவகங்கை அரண்மனைக்குள் நாச்சியார் தனது பெண்கள் படையோடு உள்ளே நுழைந்தார். தீரமான உக்கிரத்துடன் பாஞ்சோர் படையுடன் உடையாள் படை போரிட்டது. அப்பொழுது அங்கிருந்த வெடி மருந்துகளுடன் கூடிய ஆயுதக்கிடங்கை குயிலி பார்த்துவிட்டார். அவளுக்குள் விரைவானத் திட்டம் ஒன்று தோன்றியது. அந்த ஆயுதக்கிடங்கை எப்படியாவது அழித்துவிட்டால், ஆங்கிலேயப்படையை தோற்கடிப்பது சுலபம் என்பதால் சற்றும் தாமதியாமல் தனது உடலில் நெய்யை ஊற்றிக்கொண்டு அதனுள் குதித்தாள். ஆயுதக்கிடங்கு பற்றிக்கொண்டு வெடித்து சிதறியது. மனரீதியாகவும், படைபல ரீதியாகவும் தளர்ந்து போன பாஞ்சோரின் படை பின்வாங்கி சிவகங்கை அரண்மனையை விட்டு வெளியேறியது. இந்திய சுதந்திரப்போரின் முதல் தற்கொலைப்போராளி குயிலிதான்.

     வேலுநாச்சியார் சிறிது காலம் சிவகங்கையை ஆண்டு வந்தார். அவரது பேத்தியின் எதிர்பாராத மரணம் காரணமாக விரக்தியடைந்த வேலு நாச்சியார் சிவகங்கை நிர்வாகத்தை மருது சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, திண்டுக்கல் அரண்மனையில் கடைசி காலத்தை கழித்துவிட்டு பின் மரணமுற்றார்.

     மருது சகோதரர்கள் ஆட்சியில் சிவகங்கை செழித்து வளர்ந்தது. தமிழ்ச்சங்கம் ஒன்றை ஏற்படுத்தி பல தமிழ் நூல்களை அரங்கேற்றினர். ஆலயங்கள், சாலைகள் சீர்படுத்தப்பட்டன. மத நல்லிணக்கத்துடன் சருகணியில் ஒரு மசூதியையும் , மாதாக்கோயில் ஒன்றையும் கட்டித்தந்தனர். காளையார் கோயில் கோபுரத்தை கட்டினர். கூடவே ஆங்கிலேயர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் செய்து வந்தனர்.

     கட்டபொம்மனின் மரணத்துக்குப்பின் அவனது தம்பி ஊமைத்துரை என்றழைக்கப்பட்ட குமாரசாமிக்கும், மற்றொரு தம்பி சிவத்தையாவுக்கும் அடைக்கலம் தந்து அவர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட துணை நின்றார்கள். இராமநாதபுரத்தை ஆண்ட மைலப்பனை கைது செய்ய கி.இ கம்பெனி துடித்தபோது, அவருக்கும் அடைக்கலம் தந்து காப்பாற்றினார்கள். தொடர்ந்து வெள்ளையர்களுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டதால், கொதித்துப்போன ஆங்கிலேஎயர்கள் பிரித்தாலும் நோக்கோடு மருதிருவர்கள் அரச பரம்பரை அல்ல. வெறும் படைத்தளபதிகள்தான். அவர்கள் ஆல்வது மற்ற பாளையத்தார்களுக்கு இழுக்குஎன்று கர்னல் அக்னியூ என்பவன் தூபம்போட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டான்.அந்த அறிக்கைக்குப் பதிலாகத்தான் தனது பிரசித்திப்பெற்ற திருச்சி பிரகடனத்தை சின்ன மருது வெளியிட்டார்.

     மருதிருவர்களைத் தோற்கடிக்கவே கூடுதல் படைகளை வரவழைத்த ஆங்கிலேயப்படை தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் பலதுரோகிகளை உருவாக்கியது. பல நவீன ஆயுதங்கள், பல ஆயிரம் பேர் கொண்ட படைகள், துரோகிகளின் தொடர் வஞ்சகங்கள் இவற்றின் உதவியால் சிவகங்கையை தாக்கியது. ஆங்கிலேயப்படை அரண்மனையை கைப்பற்றினாலும் மருதிருவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அவர்கள் உயிராக மதித்த காளையார் கோயிலை இடிக்கப்போவதாக அறிவித்தனர். தங்களால் கோயில் சிதைந்துவிடக்கூடாது என்பதால் தாங்களாகவே ஆங்கிலேயர் முன்வந்தனர்.

     1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ந்தேதி இரண்டு மருதுகளையும் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். கொலை வெறி அடங்காமல் சின்ன மருதுவின் தலையை கொய்து நட்டு வைத்தனர். ஊமைத்துரையும், சிவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டனர். 1802 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சின்ன மருதுவின் மகன் 15 வயது துரைச்சாமி, வேலு நாச்சியாரின் மருமகன் பெரிய வேங்கடத்தேவர், ஆகியோர் உட்பட 73 பேர் மலேசியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். பின் அங்கேயே இறந்தும் போயினர்.துரோகங்களால்தான் அன்றிலிருந்து இன்று வரை வீழ்ந்து வருகிறது தமிழ் இனம். இன்னமும் தொடர்கிறது நம்மை பிரித்தாளும் சூழ்ச்சிகள்.. தேசமும் தன்மானமும் இன்னுயிர் என்று கருதியவர்களுக்கு இந்த உடலும், உடல் சார்ந்த மூச்சுவிடுதலும் ஒரு பொருட்டில்லை என்பதை உடையாள், குயிலி, மருது சகோதரர்கள். ஊமைத்துரை, சிவத்தய்யா ஆகியோர் நிரூபித்து விட்டனர். நாம் நம்மை நிரூபிக்க கிடைத்த சந்தர்ப்பங்களை வெற்று கூச்சல்களாலும், வறட்டு தர்க்கங்களாலும் இழந்துவிட்டோம்...

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...