ஞாயிறு, 24 ஜூன், 2012

மடல் அவிழ் பொழுது

(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. )
அன்புள்ள பாரதிகுமார் அவர்களுக்கு,

       தங்கள் கடிதம் கிடைத்தது. நட்புடனும் உரிமையுடனும் தாங்கள் எழுதியதைக் கண்டேன்.
          தமிழில் இலக்கிய வாதிகளைக் கூர்ந்து கவனித்தால் ஏறத்தாழ 45 வயதில் அவர்களுக்கு பெரிய தேக்கமொன்று நிகழ்வதைக் காணலாம். அந்த ‘கண்டத்தை' தாண்டி எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு. நா. பிச்சமூர்த்தி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற சிலரே திரும்பி வந்தனர். பிறர் அப்படியே நின்றுவிட்டனர். பிடிவாதமாக எழுதிய சிலரோ தங்களையே பிரதியெடுத்தனர், ஒப்புக்கு எழுதி நீர்த்துப் போயினர். இது தமிழில் உள்ள தவிர்க்க இயலாத இரும்புவிதி ஒன்றையே காட்டுகிறது.
நான் முன்னரே அதைப் பற்றி சிந்தனை செய்துள்ளேன். பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அவ்வயதில் அவர்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகமாகிறது. குழந்தைகள் உயர்நிலைப்பள்ளி தாண்டுகிறார்கள். பணச்செலவு கூடுகிறது. இரண்டு, அலுவலகத்தில் முதல் பதவி உயர்வு கிடைக்கிறது. புதிய வேலையும் புதிய பொறுப்புகளும் வந்து சூழ்கின்றன. இதையொட்டி குடும்பத்தின் அழுத்தம் அவன் மீது ஏறுகிறது. வாசிக்க, எழுத, பயணம் செய்ய நேரமும் மனநிலையும் கூடுவதில்லை. மன எழுச்சிகள் நிகழ்வதில்லை.
         இவை புறக் காரணங்கள். இலக்கியம் சார்ந்தும், சில காரணங்கள் இருக்கலாம். ஒன்று, எல்லா எழுத்தாளர்களும் இளமைப் பருவம் தொடங்கி வாலிபப் பருவம் வரை சுற்றியலைந்து அறிந்தவற்றை எழுதுகிறார்கள். பதினைந்து வருடங்களுக்குள் அவை எழுதி எழுதிக் காலியாகிவிடுகின்றன. இரண்டு, அவனது எழுத்தைச் சுற்றி ஒரு எதிர்பார்ப்பு வளையம் உருவாகிவிடுகிறது. அவன் என்ன எழுதுவதென்பது அவ்வாறாகத் தீர்மானமாகி விடுகிறது. அதைத் தாண்ட முடிவதில்லை. மூன்று, அவனைச் சுற்றிய கோபதாபங்களின் வலையில் அவனுடைய உணர்ச்சிகளும் சிக்கிக் கொள்கின்றன. அவற்றுக்குத் தன்னை அறியாமலேயே எதிர்வினையாற்றி அவன் ஒரு குறிப்பிட்ட மனநிலையில் தேங்கி விடுகிறான்.
          மேலும் முக்கியமான ஒரு சிக்கல் உள்ளது. அது ஆன்மீகமானது. எழுத்தாளனை இப்படி வகைப்படுத்திக் கொள்ளலாம். அவன் உலகியல் சார்ந்த தளத்துக்கும் அதைத் தாண்டிய ஓர் ஆன்மீகத் தளத்திற்கும் இடையே ஆடும் ஊசல். இங்கிருந்து அங்கு நோக்கி எழுகிறான். அங்கே நின்றபடி இந்த தளத்தை மதிப்பிடுகிறான். இதில் ஏதேனும் ஒரு தளத்தை முற்றாகச் சாரும்போது அவனுடைய எழுத்து நின்றுவிடுகிறது. தல்ஸ்தோய் ஆன்மீகம் நோக்கி நகர்ந்தவர். நம் எழுத்தாளர்கள் உலகியல் நோக்கிச் செல்கிறார்கள்.
          உலகியலில் ஆழ்ந்த பற்று எழுத்தாளர்களின் வரமும் சுமையுமாகும். அறவுணர்வு, அழகுணர்வு என்னும் இரு தளங்களில் அவனில் இது வெளிப்படுகிறது. அதுவே அவன் ஆக்கங்களின் சாரம். ஆனால் அது அவனைக் கட்டிப் போடுகிறது. ஏதோவொரு கட்டத்தில் உலகியல் பல மடங்கு விசை கொண்டு அவனை இழுத்து மேலெழாது செய்துவிடுகிறது. ஆகவே தான் துறவிகளுக்கு இணையாகவே எழுத்தாளனுக்கும் நிலையின்மை நெறியாக வகுக்கப்பட்டுள்ளது. அவன் அலைய வேண்டும், ஓடியபடியே இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
          புதிய நிலக் காட்சிகள் புதிய மனிதர்கள் வழியாக சென்றபடியே இருப்பது எழுத்தாளனுடைய கற்பனைக்கு உரமூட்டுவது. அறிந்த வாழ்க்கை, பழக்கத்தின் களிம்பால் மூடப்பட்டுள்ளது. புதிய நிலம், புதிய மனிதர்கள் அவன் முன் புதிதாகப் பிறந்து எழுகிறார்கள். ஆகவே தான் துறவி மூன்று நாட்களுக்கு மேல் ஓர் ஊரில் தங்கலாகாது என வகுத்தது மரபு. பாவலர் பரிசில் வாழ்க்கையை தேர்ந்தனர். கம்பனும் காளிதாசனும் அப்படித்தான் வாழ்ந்தனர். நாமறியும் எல்லா ஐரோப்பிய படைப்பாளிகளும் அப்படித்தான் வாழ்கிறார்கள். தமிழ் எழுத்தாளனுக்கு அந்த வாய்ப்பே இல்லை.  மாறாக, அவனுக்கு விதிக்கப்பட்ட எளிய வாழ்வின் ஓயாத லெளகீகப் போராட்டத்தில் அவன் தன் நேரத்தையெல்லாம் இழக்கிறான். உள்ளத்து ஆற்றலை சிதறடிக்கிறான். சில துளிகளை எப்படியோ மீட்டுக் கொண்டு சிலவற்றை எழுதுகிறான்.
நான் நிறைய எழுதினேன் என்றால் அதற்கு இரு புறக்காரணங்கள் உள்ளன. ஒன்று, என் வழி எழுத்துதான் என முடிவு செய்துகொண்டு பிற அனைத்தையும் விலக்கினேன். பதவி உயர்வோ பிற உலகியல் வெற்றிகளோ வேண்டாமென மறுத்துக் கொண்டேன். அதற்கேற்ப தனிப்பட்ட தேவைகளை சுருக்கிக் கொண்டேன். இரண்டு, என் குடும்பமும் வேலையும் எனக்கு நேரமும் மனநிலையும் அளிக்கக் கூடியனவாக அமைந்தன. ஓரளவு பயணங்களும் வாய்த்தன.
         இப்போது என் 44வது வயதில் என் வாழ்க்கையில் ஒரு தேக்கத்தை நானே உணர்கிறேன். மாறாத அலுவலக வாழ்க்கை சலிப்பு அளிக்கிறது. வீடு-அலுவலகம்-வீடு என என் அகநிலக்காட்சிகள் எல்லை கொள்கின்றனவா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. பயணங்களுக்காக, புதியனவற்றுக்காக அகம் ஏங்குகிறது. தமிழில் எழுதி இதிலிருந்து நான் விடுதலை பெற இயலாது. எழுதி நான் பயணங்களுக்காக பொருளீட்ட இயலாது. (இப்போது கிடைக்கும் மிக சொற்பத் தொகையைக் கண்டே இலக்கிய வணிகம் என்று இகழ ஆளிருக்கிறது)
          இத்தருணத்தில் ஒரு முக்கியமான வாய்ப்பு எனக்கு வந்துள்ளது. வரவிருக்கும் பாலாவின் திரைப்படம். அதிகமில்லையேனும் பொருட்படுத்தத் தக்க அப்பணம் எனக்கு ஏராளமான பயண  வாய்ப்புகளை அளிக்கிறது. முழுக்க முழுக்க சுற்றியலைந்து அதை செலவிட எண்ணியுள்ளேன். என் இருபது வயதில் இருந்த அதே வேகத்துடன் அலைய வேண்டுமென்ற கனவு. அமர கால் தரிக்கவில்லை. வீட்டில், அலுவலகத்தில், எங்கும்.
         திரைப்படச் செயல்பாடு சார்ந்து எனக்கு எவ்விதமான கனவுகளும் எதிர்பார்ப்புகளுமில்லை. உண்மையில் திரைப்படத்தையே நான் ஒரு பொருட்படுத்தத் தக்க கலைவடிவமாகக் கருதவில்லை. ஆனால் அதன்மீது நன்றியுடனிருக்கிறேன். என்னை இவ்வயதுக்குரிய தேக்கத்திலிருந்து மீட்பது அது அளிக்கும் பணம்தான்.
         எழுதுவதை மீண்டும் தோன்றினாலொழிய தொடர்வதில்லை என்று முடிவு செய்ய பல உடனடிக் காரணங்கள் இருக்கலாம். சுந்தர ராமசாமியின் மரணம் முதல் உருவானதொரு மீள் நோக்கு ஒன்று. அதுவொரு அதிர்ச்சிதான். கோபங்கள் மோதல்கள் மூலம் நீளும் விவாதங்களைப் பற்றிய ஒரு ஐயம் ஆழமாக எழுந்துவிட்டது. இன்னொன்று, ‘கொற்றவை'. நான் இப்போதிருக்கும் சிறகுகளால் பறக்க சாத்தியமான உச்சகட்ட உயரமிதுவே. இனி இதை பிரதி செய்ய முயலக்கூடாது. மீண்டும் கூடிருந்து புதிய சிறகடைய வேண்டும்.
இன்னொரு எண்ணம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிராக கூடிய கும்பலின் வேகத்தைக் கண்ணுற்றதும் எழுந்தது. குட்டி ரேவதி, பிரபஞ்சன், வெளி.ரங்கராஜன், பா.செயப்பிரகாசம், அ. மார்க்ஸ் எத்தனை தரப்புகள் அதில். அந்த ஒற்றுமை! அது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிரான கோபமல்ல. எந்த சிக்கலிலும் மாட்டாத எம்.யுவனுக்கு எதிராக எல்லா படைப்பிலக்கியவாதிகளுக்கும் எதிராக நிகழ்ந்த வன்முறை. தொடர்பே இல்லை என்றாலும் ‘பரீக் ஷா  ஞாநி' என்னையும் வசைபாடினார். அது அவர்களால் புரிந்து கொள்ள முடியாத படைப்புத் திறன் என்ற ஒன்றுக்கு எதிரான சினம். ஆனால் அது உண்மையான ஆங்காரம்தான். ஒரு முறையேனும் ஒரு எழுத்தாளனையேனும் பாராட்டாதவர்கள் வசைபாட மட்டும் ஒன்று திரண்டெழுகிறார்கள். எழுத்தாளனே தமிழ்நாட்டின் ஆகப்பெரிய நசிவு சக்தி என்கிறார்கள் இவர்கள். ஒழித்துக் கட்டுவோம் என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
          எப்போதுமே நான் இவர்களை இம்மி கூடப் பொருட்படுத்தியதில்லை. இப்போதும் அப்படித்தான். ஆனால் ஒரு கணத்தில் அது தமிழ்ச் சமூகத்தின் ஒரு பெரும்பான்மையின் குரலாகக் கேட்டது. படைப்பு சக்திக்கு தடைபோடுவதையே அது எக்காலமும் செய்து வந்துள்ளது. இதனுடன் போராடித்தான் கம்பன் எழுதினான், பாரதி எழுதினான், புதுமைப்பித்தன் எழுதினான். இன்று படைப்பூக்கத்துடன் எழுதும் ஒவ்வொருவரும் எழுதுகிறார்கள். ஒருபோதும் இக்கும்பலால் படைப்பு சக்தியை தடுக்க, வெல்ல இயலாது. ஆனால் ஒருகணம் தோன்றியது, சரி கொஞ்ச நாள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று அவர்களிடம் சொல்ல. ஒரு தற்காலிக வெற்றியை அவர்களுக்கு தரலாமே. சரி, ஒருவனை ஒழித்து விட்டோம் என அவர்கள் விட்டு விடட்டுமே. இவர்களிடமிருந்து துண்டித்து ஓடிவிட வேண்டும் என்று ஒரு தருணத்தில் பட்டது. இவர்களை நினைப்பது கூட எப்படியோ என் ஆழத்தை தூர்க்கச் செய்துவிடும். கொஞ்ச நாள் மேலும் வசை. மேலும் அவதூறு. அவ்வளவுதான். அந்த அவகாசத்தில் என் ஊற்றை வேறு எங்கோ நானே தேடிக் கண்டடைகிறேன்.
**

         இந்நாட்களில் மீண்டும் பயணம் செய்தபடி இருக்கிறேன். மண்ணில், மதநூல்களில். இருபது வயதில் நான் பேரிலக்கியங்களில் அலைந்தேன். இவ்வயது மதம் நோக்கி செலுத்துகிறது. பைபிள் (1995ல் புதுத் தமிழாக்கம் செய்யப்பட்ட கத்தோலிக்க பைபிள் ஒரு பேரிலக்கிய ஆக்கம்) வேதங்கள், உபநிடதங்கள், சமண நூல்கள்...
         இவ்வருடம் முழுக்க சமணத் தலங்களுக்குச் செல்ல திட்டம். தமிழக சமணக் கோயில்களுக்கு சென்று மீண்டபின் சிரவண பெலகொலா சென்று கர்நாடக மாநிலச் சமணத் தலங்களில் நீண்ட பயணம் மேற்கொண்டு இப்போதுதான் திரும்பினேன். உடனே மீண்டும் கிளம்பவிருக்கிறேன்.
மீண்டும் எழுதலாம். எங்கோ அதன் விதை ஈரம் காத்துப் புதைந்திருக்கிறது. பார்ப்போம்.

அன்புடன்,
ஜெயமோகன்,
28/02/2006.

ஞாயிறு, 3 ஜூன், 2012

பாலை என்றொரு பசுமை



               

        திரைப்படங்களும் தமிழர் வாழ்வும் பின்னிப் பிணைந்திருப்பவை. அதனால் விளைந்த நன்மைகளும் தீமைகளும் வெவ்வேறு அளவுகளால் மதிப்பிடப்பட வேண்டியவை. உலக வரலாற்றில் திரைப்படமென்கிற கலைச்சாதனம் தோன்றிய சில வருடங்களிலேயே தமிழரொருவரால் (வின்செண்ட் சின்னதுரை) அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப்பிறகு தமிழர் வாழ்வின் சகல பகுதிகளிலும் இன்றுவரை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவை திரைப்படங்களே. ஆனால், உலகத் திரைப்படங்களின் பாய்ச்சலோடு ஒப்பிட்டால் நமது திரைப்படங்களின் போக்கும் நோக்கும் மிகப் பின் தங்கியிருக்கின்றன. இந்த மதிப்பீடு தமிழர்களின் திறமை மற்றும் ரசனை சார்ந்தவையல்ல. திரைப்படத் துறையில் நுழைந்த அரசியலும், திரைப்படங்கள் அரசியலில் நுழைந்ததும் தான் காரணம்.
       உலகத் தரத்தில் திரைப்படமென்பது, தொழில்நுட்ப பிரம்மாண்டங்களை கணக்கிட்டே நம் மனம் பழகிவிட்டது. ஹீரோயிசம் விரவிக் கிடக்கும் திரைப்படச் சூழலில், உலகளவில் தரப்படும் திரைப்பட விருதுகளையும், ஏதேனுமொரு கதாநாயகன் வென்றெடுத்து வருவான் என்கிற மனோபாவம் பெருகிவிட்டது.
        உலகத்தரமென்பது கதாநாயகர்களின் அசாத்தியத் திறன்களை முன்னிறுத்துவதாலோ, கருவிகளின் அதிநுட்ப வெளிப்பாடுகளாலோ நிர்ணயிக்கப் படுவதில்லை. உலகின் மிகச் சிறந்த திரைப்படங்கள் உன்னத இலக்கியப் பிரதிகளின் காட்சி வடிவமாகவோ, வரலாற்றைப் பதிவு செய்யும் அக்கறையை அடிப்படையாகக் கொண்டவை என்பது உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் அறிவர்.

இந்த சூழலில் சமீபத்தில் ‘செம்மை வெளியீட்டகம்' சார்பில் தயாரிக்கப்பட்டு வெளிவந்திருக்கும் ‘பாலை' திரைப்படம் பல்வேறு வகைகளில் தமிழ்த் திரைப்படத்தை நகர்த்திச்செல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

      
         தமிழ்த்திரையுலகம் இதுவரை பதிவு செய்யாத வரலாறு என்பதோடு எவரும் துணிந்திராத முயற்சி ‘பாலை'. மற்ற விமர்சனங்களைப் போல இது இந்தத் திரைப்படத்தின் கதை பற்றிப் பகிரும் போக்கில் எழுதப்பட்ட கட்டுரையல்ல. திட்டமிட்டு வேண்டுமென்றே கவனிக்கப் படாத ஒரு திரைப்படம் பற்றிய குமுறல்.
        பாலை ஒரு இனத்தின் வரலாற்றை பதிவு செய்யும் ஆவணம் மட்டுமல்ல. வந்தேறிகளால் இன்னும் சிதைந்து கொண்டிருக்கும் நம் இனம் பற்றிய எச்சரிக்கையும் கூட. தமிழ், தமிழ் சமூகம், இன வரலாறு பற்றிப் பேசுவது இன்றைக்கு அறிவுஜீவித் தனமில்லை என்ற பிற்போக்கான மனப்போக்கு நிலவுகிறது. அழித்தொழிப்பு சகல வழிகளிலும் நிகழ்கிற போது 'கள்ள மெளனம்' சாதிக்கும் மெத்தப் படித்தவர்கள்,' வலி'யால் துடித்துக் குரலெழுப்பும் போது ஆவேசமாக நம் குரல்வளையை நெரிக்கும்  அராஜகம், மனிதத் தன்மையற்ற மற்றொரு படையெடுப்பாகவே கருதமுடியும். எனவே தான், 'பாலை' ஒரு பதிவு மட்டுமல்ல. அவசியமான 'கலை போரும்' கூட.
       
           இயக்குநர் செந்தமிழன் வணிக நோக்கோடு திரையுலகுக்கு வந்த வியாபாரியல்ல. தஞ்சையைச் சார்ந்த இயற்கை வேளாண் விவசாயி, நல்ல கவிஞர், தமிழிய ஆய்வாளர், பத்திரிகையாளர். அவரது 'பாலை', மேலோட்டமாகப் பார்த்து விட்டுக் கடந்துவிடக் கூடிய படைப்பு அல்ல. மிகச் சரியாக அடையாளப்படுத்தப் படவேண்டிய திரைப்படம்.
        வந்தேறிகளால் ஆயக்குடியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் தமிழ் சமூகம் ஒரு பாலை நிலத்தை முல்லைக் குடியாக மாற்றியதோடு, இழந்த ஆயக்குடியை மீட்டெடுக்கும் போருக்கு தள்ளப்பட்டனர் என்பதுதான் பாலையின் ‘ஒருவரி'க்கதை.
        ஆனால், பாலையின் உள்ளீடாக செந்தமிழன் முன்வைக்கும் பல செய்திகள் தமிழ்ச் சமூகம் அறிந்து விடாமலிருக்க, மிகச் சாமர்த்தியமாக புறக்கணிக்கப் படுகிறது.
        சிந்துவெளிச் சமூகமென்பது தமிழ்ச் சமூகமே என்பதை செந்தமிழன் தனது கட்டுரைகள் வழி பல சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார். பாலைத் திரைப்படத்தில் காட்சிகள் வழி அதனை உறுதி செய்கிறார்.
         ஆதிதமிழர்களிடையே வேள்விகளில்லை. சடங்குகளில்லை. மத நம்பிக்கைகளில்லை. அதுபோல தமிழர்களுக்கென்று மிகச் சிறந்த பண்பாடு, கலாச்சாரம் இருந்தது. எனவே, அதனைக் கட்டிக் காக்க வேண்டிய கடப்பாடு இருந்ததால், தமிழர்களின் போர்முறையென்பது தற்காப்பதாகவே இருந்ததே ஒழிய, அழித்தொழிப்பாக இருந்ததில்லை. அத்துடன், பெண்கள் எல்லா நிலைகளிலும் சமமாக நடத்தப் பட்டனர். தமிழர்களின் இயற்கை சார்ந்த அறிவும், சமயோசித புத்தியும் பறந்துபட்டது என்பது மறுக்க முடியாது.
        பாலைத் திரைப்படத்தில் வரும் காட்சிகள், தமிழ்ச் சமூகத்தின் ஆதிகால வாழ்வை அழகாகப் பதிவு செய்திருக்கின்றன.
        முல்லைக்குடி நிலப் பகுதியில் மீன் வளம் பெருக, இயற்கை அன்னையை வழிபடும் காட்சியும், வலன் - காயாம்பு திருமணக் காட்சியும், வேள்விகளும் சடங்குகளும் பிற்காலத்தில் புகுத்தப் பட்டவை என்பதை உணர்த்துகின்றன. செந்தமிழன் வெறும் கேள்விஞானத்தில் இந்தக் காட்சிகளை வைக்கவில்லை. தனது கட்டுரையொன்றில் (‘காட்சி' இணையதளம்) வைகை ஆற்றங்கரையில் அந்தணர்கள் வளர்க்கும் வேள்வித் தீயில், ஆற்றில் குளித்து விளையாடிய இளம் தமிழ்ப் பெண்கள் தங்கள் ஆடைகளை உலர்த்தியதாக பரிபாடலின் பாடலொன்றைக் குறிப்பிடுகிறார்  செந்தமிழன்.
          “விரிநூல் அந்தணர் விழவுத் தொடங்கப்
           புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப...”
                                                                  -பரிபாடல் - 11
         வேள்வித் தீயென்பது ஆதிகால தமிழ்ச் சமூகத்தில் கேலிக்குரிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.
        போர் குறித்து முதுவனும், விருத்திரனும் உரையாடும் காட்சி மிக முக்கியமான காட்சி. 'போரென்பது என்ன?' என்று முதுவன் கேட்கும் போது, விருத்திரன், 'எதிரியைத் தாக்குவது' என்று பதிலளிக்கிறார். இது தமிழரின் மனப்போக்கில் வெளியாகும் இயல்பான பதில். ஏனெனில், தமிழர்களைப் பொறுத்தவரை போரென்பது தங்களைத் தாக்க வரும்போது மட்டும் திருப்பித் தாக்குவது. எனவேதான், முதுவன் திருத்துகிறார்: 'எதிரியைத் தாக்குவதல்ல; வீழ்த்துவது' என்று முதுவனின் அடுத்த கேள்வியான 'போரில் ஆயுதங்கள் எதற்கு?' என்பதற்கு விருத்திரன், 'தற்காப்புக்கு' என்று பதிலளிக்கிறார். மறுபடியும் முதுவன் திருத்துகிறார்... 'தற்காப்புக்கல்ல; அழிப்பதற்கு' என்று.
        தமிழ்ச்சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அடிமை முறை இல்லை. என்பதை பின்னணிக் குரல் மூலம் வலியுறுத்தும் செந்தமிழன், காட்சிகள் வழியிலும் இதைப் பதிவு செய்திருக்கிறார். வந்தேறிகள் முல்லைக் குடி மீது வன்மம் தீர்க்க, வலனைக் கடத்திச் சென்று அடிமையாக வைத்திருக்கின்றனர். ஆனால், வலனை மீட்க, முல்லைக்குடி மறவர்கள் ‘ஆநிரை கவர்தல்' (பசுக்களைக் கவர்தல்) உத்தியைப் பின்பற்றுவதோடு, அவைகளை பாதுகாக்கவும் செய்கின்றனர்.
        அதுபோல வந்தேறிகளின் உற்பத்தித் தொழிலென்பது மேய்த்தலாக இருக்கிறது. குடியிருக்க வீடு கட்டத் தெரியாத, கூடாரம் அமைத்து தங்கும் கூட்டமாகவும், மாட்டை அறுத்துத் தின்னும் வழக்கமும் கொண்டவர்கள் என்பதைக் காட்சிப் படுத்தும் செந்தமிழன், முல்லைக்குடி மக்கள் குடியிருக்க வீடு கட்டும் அறிவும், வேளாண் தொழில் செய்து உண்ணும் பழக்கமும் (பாலை வந்தால் திங்க சோறு இருக்காது, குடிக்க தண்ணீர் இருக்காது என்று முதுவன் ஒரு காட்சியில் எச்சரிக்கிறார்) உடையவர்களென்பதைத் தெளிவுபடுத்துகிறார். கூடாரம் அமைத்து வாழ்பவர்கள் என்பதால் போரென்று வந்தால், வந்தேறிகள் எதையும் கட்டிக் காக்கவேண்டிய நிர்பந்தமில்லாமல் அழித்தொழிக்கும் உத்தியைக் கையாள்கிறவர்கள் என்பது மறைமுகமான மற்றொரு செய்தி.
        என்றாலும், போரென்று வந்துவிட்டால், தமிழர்கள் பின்பற்றும் உத்திகள் யுத்த தந்திரத்தின் உச்சங்கள் என்று புலப்படுத்தும் காட்சியையும் வைத்துள்ளார். புகைவழி செய்தி பரிமாற்றம், காலடித் தடம் மூலம் திசை திருப்பல், தேளையும் ஆயுதமாகப் பயன்படுத்தல், நெருப்புக் கணைகளை எறியும் திறன் என்று பல விதத்தில் ஆரவாரமில்லாமல் எளிமையாக அடையாளப் படுத்தியிருக்கிறார்.
         ஈழப் போரில், தனியொருவனாக மாட்டிய சிறுவனொருவன், தன்னைச் சுற்றி வளைத்த எதிரிகளை திசைதிருப்ப தன்னை சுற்றிலும் ஆயுதங்களை மட்டும் வைத்துவிட்டு (பல வீரர்கள் தன்னுடன் இருப்பது போல் பொய்யாக உருவகித்து) அவர்களை அச்சத்தின் வழி ஓட வைத்ததாக ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன். செந்தமிழன் பாலை திரைப்படத்தில் சமயோசிதமாக இப்படியொரு காட்சியை வைத்துள்ளார்.
         பெண்களின் நிலை அன்றைய கால கட்டத்தில் மேம்பட்டதாக இருந்தது என்பதை உணர்த்தும் விதமாக, போர் செய்யும் பயிற்சி எடுத்தலையும், ஆண்களை தோழர்களாக பாவிக்கும் வழக்கத்தையும், கள்ளருந்துதலையும், உடன்போக்கு என்னும் புரிந்துணர்வு காதலையும், மன்றக் கூட்டங்களில் பங்கேற்று கருத்துக்களை பகிரும் சமநிலை ஆகியவற்றையும் காட்சிப் படுத்தியிருக்கிறார் செந்தமிழன்.
 பாத்திரங்களுக்கான பெயர் சூட்டலில், ஒரு தேர்ந்த படைப்பாளியாக நான் செந்தமிழனைக் காண்கிறேன். சிந்துவெளித் தமிழர்கள் தங்கள் தலைவனாக இருப்பவனை ‘விருத்திரன்' என்றழைப்பது தான் வரலாறு. நீர்நிலை காப்பவன் ‘அகி'. வந்தேறிகள் முதலில் கொல்வது ‘அகி' என்ற முல்லைக்குடி வீரனைத்தான். வந்தேறிகளின் பழக்கம் முதலில் எதிரியின் நீர்நிலையை அழிப்பது என்பது இதன்மூலம் சொல்லாமல் சொல்லப்பட்ட தகவல்.
          ஆனால் வந்தேறிகள் தங்கள் தலைவனை ‘இந்திரன்' என்றே குறிப்பிடுவர். செந்தமிழனோ அவனுக்கு ‘அரிமாவன்' என்று பெயரிட்டிருக்கிறார். திரைக்கதையாளர் செந்தமிழன் ஏன் அவனது பெயரை மாற்றினார் என்பது படம் பார்த்து முடித்தபிறகு எல்லோருக்கும் புரிந்துவிடும். அதுபோலவே அரிமாவன் தமிழ் உச்சரிப்பு, தமிழல்லாத பிறமொழியினர் பேசுவது போல அமைத்திருப்பது இயக்குநர் செந்தமிழனின் சாமர்த்தியம்!
         
        முதுமக்கள் தாழி, தமிழ் எண்கள், இயற்கையை வைத்துக் குறிசொல்லல் எனப் பல தகவல்களை போகிற போக்கில் செந்தமிழன் காட்சிப்படுத்தியுள்ளார்.
          செந்தமிழனின் படக்குழு செம்மையான குழுவாக அமைந்திருப்பது தமிழ்த்திரையுலகுக்கு நல்ல செய்தி. அபிநந்தனின் ஒளிப்பதிவு, படம் துவங்கிய காட்சியிலிருந்து இறுதி வரை நெஞ்சை அள்ளுகிறது. ‘கொல்லேறே' பாடலில் பாத்திரங்களோடு குதியாட்டம் போட்டு கூடவே ஓடும் கேமரா, மன்றக் கூட்டத்தில்  பல்வேறு அண்மைக் காட்சிகள் மூலம் முதுவனின் உணர்வுகளைப் பதிவு செய்கிறது.  பல சமயங்களில் பயிர்களின் ஊடே சென்று காட்சியை பசுமையாகப் பதிவு செய்திருக்கிறார்.
 வேதிசங்கரின் பின்னணி இசையும் செந்தமிழனின் பாடல்வரிகளும் படத்திற்கு மிகப் பெரிய பலம். ‘கொல்லேறே', ‘யாதோ யாதோ' பாடல்கள் படமாக்கப் பட்ட விதமும் இசையும் கண்களை உறுத்தாத செவிகளைக் கெடுக்காத இனிமை.
       முதுவனாக வரும் பேராசிரியர் வை. நடராசன், காயாம்பூவாக வரும் ஷம்மு, விருத்திரனாக வரும் இளையராஜா ஆகியோர் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக வை.நடராசனின் முகபாவங்களும், உடல்மொழியும் ஒரு தேர்ந்த கலைஞனின் வெளிப்பாடுகளுக்கு இணையானது.
        திரைப்படத்தில் ஒரு சிலர் இயல்பாக நடிக்க முடியாமல் சிரமப்படுவதும், ஒலிப்பதிவில் சில தடுமாற்றங்களும் சிறு குறைகளாகத் தெரிந்தாலும் தமிழ் என்றொரு இனத்தின் வரலாற்றை  பதிவு செய்த விதத்தில் உலகத் தரத்திலொரு தமிழ்த்திரைப்படம் என்று ‘பாலை'யைக் கொண்டாடலாம்.
         செந்தமிழன் ‘நமது மரணம் குறித்து...' என்ற கவிதையில்,
              “இனம், மொழி, போர் ஆகியவை
               விஷம் தடவிய சிறு முட்களை
               உங்கள் முதுகில் குத்துவது போல
               வலிகொடுத்துக் கொல்லும்...” என்று எழுதியிருப்பார்.
         சமகால சூழலில் தமிழினத்துக்கு எதிரான நிகழ்வுகள் அன்றாடம் நம்மைக் கொன்றபடியிருக்கின்றன. ஆறாத காயங்களோடு அழுகிறது மனம். என்று ஆறுமோ... மாறுமோ... என்று தெரியாவிட்டாலும் ‘பாலை' மருந்திட்டிருக்கிறது

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...